தமிழக அரசின் ‘கணியன் பூங்குன்றனார்’ விருது பெற்ற அதீப் குழுமத் தலைவர் டாக்டர். அன்சாரி அவர்களுக்கு கேலக்ஸி நடத்திய பாராட்டு விழாவும், புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவும் பிப்ரவரி 1-ம் தேதி அதீப் அலுவலக உள்ளரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வினை திரு. பிலால் அலியார் அவர்கள் தொகுத்து வழங்க, அமீரக தேசிய கீதம், நமது தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது. வரவேற்புரையை திரு. சதீஷ் குமார் அவர்கள் வழங்கினார். திரு. அன்சாரி அவர்களைக் குறித்த தொகுப்பு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் செந்தில் குமார் ராஜசேகரன் (Former Dean – Kalifa Medical university), திரு. ஜெயபாலன் (Philontehrapist – UK), திரு. முபாரக் முஸ்தபா (Former President ISC Al Ain), திரு. சிவகுமார் (President, அபுதாபி தமிழ் மக்கள் மன்றம்), டாக்டர் சிவராமன் (Senior surgeon – burjeel hospital, President – பாரதி நட்புக்காக), திரு.முகமது அலி (Baniyas Building Materials), திரு. குருசங்கர் (Al Attar General Contracting), திரு. இளஞ்செழியன் (MD, Switch Gear), திரு.ஜமால் (தலைவர், ஐமான் சங்கம்), திருமதி.உமா புகழேந்தி, திருமதி. ஸ்ரீதேவி (புதுமைத் தமிழச்சி), திரு. வசீர் (Adeeb Group), கேலக்ஸியின் திருமதி ஜெஸிலா, திரு.பிரதோஷ் பாஷா, திரு. பாலாஜி பாஸ்கரன் மற்றும் இந்தியத் தூதரகத்தின் சார்பில் திருமதி. அமுதா இராஜாமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் அன்சாரி அவர்களின் சகோதரி திருமிகு. ரூபி அவர்கள் தனது தம்பி குறித்துப் பேசியது நிகழ்வுக்கு கூடுதல் மெருகூட்டியது என்றால் மிகையில்லை. அவரின் பேச்சில் ‘எங்களை எல்லாம் எங்க தம்பி அரவணைத்துக் கொண்டு செல்கிறார். என்னை மட்டுமல்ல என் பேரப்பிள்ளைகள் வரை அவர்தான் பார்க்கிறார். என் தம்பிகள் எங்க அம்மா மீது அதீத பாசம் வைத்திருக்கிறார்கள். அதுவும் அன்சாரி காலையில் எழுந்ததும் எங்க அம்மாவின் அறைக்குத்தான் வருவார். எங்க அம்மாவுடன் நேரம் செலவழிப்பார், எங்க தம்பிகள் அம்மாவை அப்படிப் பார்த்துக் கொள்கிறார்கள். என்னை என் தம்பிகள் அக்கா என்று அழைப்பதில்லை மம்மி என்றுதான் கூப்பிடுவார்கள். நானும் அன்சாரியை எனது வாப்பாவாகத்தான் பார்க்கிறேன். எங்க வாப்பா இடத்தில் இருந்து அவர்தான் எங்களை வழி நடத்திச் செல்கிறார். அவருக்கு நீண்ட ஆயுளை இறைவன் கொடுக்கட்டும். அவர் இன்னும் நிறைய விருதுகளை வாங்க வேண்டும்’ என்றார்.
திரு. அன்சாரி அவர்கள் தனது ஏற்புரையில், ‘எங்க வாப்பா பேனாதான் விற்றார்கள். அவர் யாருக்காக இருந்தாலும் பேனாவைத்தான் பரிசாகக் கொடுப்பார். அதைப் பார்த்து வளர்ந்ததால் நானும் எல்லாருக்கும் பேனாவையே பரிசாகக் கொடுப்பேன். எங்க ஊர்ல ஒரு இல்லம் இருந்தது. அந்த இல்லத்துல தினமும் யாராவது ஒருவர் சாப்பாடு கொடுப்பார்கள். யாரும் கொடுக்காத அன்னைக்கு என்னிடம் சொல்லுங்கள் நான் தருகிறேன் என்று எங்க வாப்பா சொல்லி வைத்திருந்தார். அப்போது அவருக்கு அதிக வருமானம் எல்லாம் இல்லை என்றாலும் பிறருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற குணம் இருந்தது. அந்த இல்லத்தின் நிர்வாகி, எங்க இல்லத்துக்கு எல்லா நாளும் சாப்பாடு கொடுக்கும் கொடையாளிகள் உண்டு. அதான் யாருமில்லை என்றால் உங்க வாப்பா கொடுத்துடுவாரே என்று சொல்வார். எங்க அப்பாவின் அந்தக் குணம் எங்களிடமும் இருப்பது சந்தோசமே’.
‘எங்க அக்காவை நாங்க மம்மின்னுதான் சொல்வோம், எங்களுக்கு அவங்க அம்மாதான். எங்க வேலையைப் பொறுத்தவரை என்னோட அண்ணன் தொழில் சம்பந்தப்பட்ட சட்ட அலுவல்கள் அனைத்தும் பார்த்துக் கொள்வார், தம்பி வசீர் அலுவலக விசயங்கள் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வார் என்பதால் நான் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் வீட்டுக்குப் போய் அம்மாவுடன் நேரத்தைச் செலவழிப்பேன். வசீரை நான் தொழில் சம்பந்தமாகச் செல்லும் எந்த இடத்திலும் தம்பி என்று சொல்வதில்லை, அவரும் அப்படியே நடந்து கொள்வார். பதினைந்து வருடத்துக்குப் பிறகுதான் தொடர்ந்து நாங்கள் மீட்டிங்கிற்குச் செல்லும் ஒரு கம்பெனியில் அவர் என் தம்பி என்பதைக் கண்டுபிடித்தார்கள். நாங்க எல்லாரும் ஒன்றாக இருக்கக் காரணம் எங்க வீட்டுப் பெண்கள்தான். அவர்கள் எந்த விசயத்திலும் தலையிடுவதில்லை. வீட்டில் கூட அலுவலகம் தொடர்பாக காரசாரமாகப் பேசிக் கொள்வோம், அவர்கள் ஏன்..? எதற்காகச் சண்டையிடுகிறீர்கள்..? என்று கேட்பதே இல்லை. குறிப்பாக வசீரின் மனைவியை நீங்கள் எல்லாம் சந்திக்க வேண்டும். அவர் ரொம்ப அருமையான பெண். ‘நான் கோபமே படமாட்டேன் என்று சொன்னார்கள், எனக்கும் கோபம் வரும். வசீருக்கு கோபமெல்லாம் வராது, அவரும் நானும் ஒருமுறை காரில் செல்லும்போது ஏதோ ஒரு விசயத்தில் முட்டிக் கொள்ள, என்னை இறக்கிவிடு நான் டாக்ஸியில் வந்து கொள்கிறேன் எனச் சத்தமிட்டு, அவர் எவ்வளவோ சொல்லியும் இறங்கிவிட்டேன், ஆனால் அவர் அங்கிருந்து போகாமல் நின்று என்னைச் சமாதானப்படுத்தி கூட்டிக் கொண்டுதான் போனார்’.
‘என்னை எங்க வாப்பா படிக்க வைத்தார், அவரோட விருப்பமே நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதுதான் அதனால்தான் நானும் படிப்பதில் ஆர்வம் காட்டினேன். என்னாலான உதவிகளை படிப்பவர்களுக்குச் செய்கிறேன், நமக்கு இறைவன் கொடுக்கிறான் என்றால் இல்லாதவர்களுக்கு செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே. எங்க அக்கா என்னை வாப்பா என்று சொல்வதாகச் சொன்னார். எங்க வீட்டுல எல்லாரும் என்னைய நீ வாப்பா மாதிரி இருக்கே, அவர் மாதிரி உன்னோட குணம் இருக்குன்னு சொல்லச் சொல்ல நானும் வாப்பா ஆயிட்டேன். என்னைப் பொறுத்தவரை தினமும் காலையில் எனது அறையைச் சுத்தம் செய்து மேசையில் எல்லாவற்றையும் ஒழுங்காக எடுத்து வைக்கும் அலுவலக உதவியாளர் முக்கியமானவர்தானே, ஆமாம் நான் ஆபீஸ் பாய் என்று சொல்வதில்லை அவர்களை அலுவலக உதவியாளர் என்றுதான் சொல்வேன். எங்களது லைப்ரரியில் இருக்கும் புத்தகத்தை அலுவலக ஊழியர்கள் எடுத்துப் படிக்க விரும்பினால் அலுவலக நேரத்திலேயே வாசிக்கச் சொல்வேன். எனது ஊழியர்களை நான் எப்போதும் வேலை செய்யும் ஆட்களாக மட்டுமே பார்ப்பதில்லை, அவர்களும் என் குடும்பத்தில் ஒருத்தர்தான். நான் மாதமாதம் சிறந்த தொழிலாளியைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுவதாகச் சொன்னார்கள், அதெல்லாம் செய்வதால்தான் இப்போது இந்த இடத்தில் இருக்கிறோம்’ என்று மிகவும் சரளமாக, சிறப்பாக, மகிழ்வோடு பேசினார்.
திரு. அன்சாரி அவர்களுக்கு கேலக்ஸி சார்பில் பொன்னாடை போர்த்தப்பட்டது. நினைவுப்பரிசாக கேடயமும் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
பாராட்டு விழாவைத் தொடர்ந்து கேலக்ஸியின் புத்த வெளியீடு நடைபெற்றது. நூல்கள் பற்றிய அறிமுகத்தை கேலக்ஸியின் பாலாஜி பாஸ்கரன் அவர்கள் வழங்கினார். சென்ற ஆண்டு கேலக்ஸி நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற கதைகளின் தொகுப்பான ‘பிணையல்’ புத்தகத்தின் முதல் பிரதியை அன்சாரி அவர்கள் வெளியிட, பரிவை சே.குமாரும், இராஜாராமும் இணைந்து பெற்றுக் கொண்டார்கள். இரண்டாவது பிரதியை பரிவை சே.குமார் வெளியிட அன்சாரி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் கண்மணி ராஜா முகம்மது அவர்களின் ‘பாதாள கரண்டி’ என்னும் சிறுகதைத் தொகுப்பினை முபாரக் முஸ்தபா அவர்கள் வெளியிட, முதல் பிரதியை ஜெயபாலன் அவர்களும் இரண்டாவது பிரதியை ஜமால் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
எழுத்தாளர் தெரிசை சிவாவின் ‘அயலோன்’ நாவலை மருத்துவர். சிவராமன் வெளியிட முதல் பிரதியை உமா புகழேந்தி அவர்களும் இரண்டாவது பிரதியை மருத்துவர். செந்தில் குமார் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
திருமதி. ரூபி, திரு. வசீர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் திரு. அன்சாரி அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தினார்கள். அதீப் அலுவலக நூலகத்துக்கு கேலக்ஸியின் சார்பாக புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. இரவு விருந்துடன் விழா மிகச் சிறப்பாக நிறைவடைந்தது.


