அன்றும் வழமைப் போலவே தபாற்காரனின் சைக்கிள் மணியோசை கேட்கிறது. பிரவீனிடமிருந்து லெட்டர் வந்திருக்கும்.
பகலுணவைச் சாப்பிட்டு கொண்டிருந்தவள் அவசரமாக ஓடிப்போய் தபாற்காரனிடமிருந்து கடிதத்தை கையில் வாங்கிக் கொண்டேன் . “பிரியா யாருக்கு லெட்டர் வந்திருக்கு….” என்றார் அப்பா. சற்றும் தாமதியாமல் “லலிதாவிடமிருந்து அப்பா…” என்றேன்.
காரணம் லலிதா என் உயிர்தோழி, அவளிடம் இருந்து தான் எனக்கு கடிதம் வாரதா அப்பா நம்பிட்டு இருக்கார். அவள் வேற்றூரில் ஒரு ஆசிரியராக பணிபுரிகிறாள். ஆனால் நானோ காலேஜ் எல்லாம் முடித்துவிட்டு காதல் எனும் மாயைக்குள் சிக்கித் தவிக்கிறேன்.
லலிதா கடிதம் அனுப்பி ஐஞ்சு வருஷமாச்சு. தபாற்காரர் ஒருவிதமாய் புன்னகைத்தார். எனக்கு வெட்கமாய் போச்சு. எனக்கு பிரவீனிடமிருந்து கடந்த மூனு வருஷமாய் லெட்டர் வருவதை அவர் அறிந்தமையே அந்த புன்னகைக்கு காரணம்.
தபாற்காரர் போனதும் அவசரமாய் கேட்டை இழுத்து மூடி விட்டு மாடிப்படிகளில் ஏறியோடினேன்.
“மெதுவா போ பிரியா. விழுந்துட போற” என அம்மா கத்தினாள். இருப்பினும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பீரவீனின் காதல் கடிதத்தைப் படிக்கும் ஆர்வத்தில் புள்ளிமானாய் துள்ளியோடினேன்.
சாப்பிடவும் மறந்து போனேன்.
‘அன்புக் காதலி பிரியாவுக்கு அன்புக்காதலன் எழுதுவது…’
அவன் பெயர் பிரவீன் என்பதை முதல் கடிதத்தில் எழுதியிருந்தான்.
பிரவீன் என் அப்பாவை சந்திக்க வீட்டிற்கு வந்திருந்தான். என் அப்பா ஒய்வுபெற்ற ஓர் இராணுவ அதிகாரி. அவனும் ஒரு இராணுவ வீரன் என்பதை அவன் ஆர்மி சீருடை எடுத்துக்காட்டியது. வேலை விஷயமாகப் பேச வந்திருந்தான்.
பெண்ணழகில் ஆண்கள் விழுவது தான் வழமை, ஆனால் அன்று நிலைமை தலைகீழானது. அவன் இளநீலகண்கள் என்னை கட்டிப்போட்டன. அதிசயமாய் அவன் கண்களை பார்த்தேன். மாடியில் இருந்தவாறு அவனை நான் ரசிப்பதை கண்டுவிட்டானோ என்னவோ பிரவீன் என்னை பார்த்து அவன் தெத்துப்பற்கள் வெளியே தெரியச் சிரித்தான்.
பிரவீன் எங்கள் தூரத்து உறவும் கூட என்பதை என் அப்பாவின் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன். தான் வெளிநாட்டில் நடக்கவிருக்கின்ற போருக்குச் செல்ல இருப்பதாகவும் தனக்கு ஏதாச்சும் நடந்துவிட்டால் தன் தாயைக் கவனித்துக் கொள்ளும்படியும் சொன்னான்.
அவனைக் கண்டமாத்திரத்திலே காதல் கொண்டுவிட்டதால் அவன் போருக்குப் போகிறான் என்ற செய்தி என்னை வதைத்தது. சில மாதங்களுக்கு பின் பிரவீனிடமிருந்து அப்பாக்கு ஒரு லெட்டர் வர அதை படித்தபோதுதான் புரிந்தது அது அவன் எனக்கு அனுப்பிய கடிதம் என்று… அதில் அவன் எனக்காக எழுதிய முதல் கவிதை நினைவில் வந்து போனது.
‘உன் அழகிய புன்னகைக்கு
அடிமையானது (என்) தவறா?
இல்லை புன்னகைத்த (உன்)
இதழ்களின் தவறா?‘
அலமாரி கண்ணாடி பார்க்கிறேன். புன்னகைத்தபடி என்னை நானே ரசிக்கிறேன்.
இவ்வாறு பல கவிதைகளுடன் எம் காதல் பயணம் கடிதம் வழி தொடர்ந்தது. ஆனால் கடந்த ஆறுமாதங்களாக அவன் கடிதம் வரவில்லை. அவன் இரண்டாவது முறையாக வெளிநாட்டிற்கு போய் வந்த பிறகுதான் கடிதம் வருவது முற்றாக நின்றவிட்டது. எத்தனையோ கடிதங்கள் இதுவரை அனுப்பிவிட்டேன். இப்போது ஒரு பதில் கடிதம் அனுப்பி இருக்கிறான்.
ஆவலாய் பிரித்துப் பார்க்கிறேன். அவன் கடிதம் சொன்னவைகளை என்னால் ஜீரணிக்க இயலவில்லை.
அன்பு காதலி பிரியாவுக்கு,
நான் இதுவரை உன்னை விரும்பியது உண்மை, ஆனால் இதற்கு பிறகு உன் நம்பிக்கையை வளர்க்க எனக்குச் சத்தியில்லை. என்னை மன்னித்து மறந்து விடு. காரணம் கேட்காதே. எல்லா காதலும் ஜெயிப்பது இல்லை. நானோ ஒரு இராணுவன்… என் உயிருக்கு உத்தரவாதமில்லை. அப்படியே நான் உன்னை திருமணம் செய்யச் சம்மதித்தாலும் நீ சம்மதிக்க மாட்டாய். வாழ்க்கை சிலசமயம் ஏற்றுக் கொள்ள முடியாத திருப்பங்களைத் தருகின்றபோது அதை ஏற்றுக் கடந்தேதான் ஆகவேண்டும்.
என் நாடிநரம்புகள் இயங்க மறுத்தன. விதையாய் இருந்த என் காதலை விருட்சமாய் மாறவிட்டு வெட்டி வீழ்த்திட சொல்கிறாய். உன்னால் எப்படி இதை எழுத முடிகிறது பிரவீன். மீண்டும் மீண்டும் அதை வாசித்துப் பார்க்கிறேன்.
“பிரியா … இன்னும் சாப்பிடாம என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என அம்மா அறை கதவைத் தட்டுகிறாள்.
சிவந்து போயிருந்த என் கண்களைக் கண்ணாடியில் பார்க்கிறேன். அவன் அனுப்பிய அத்தனை கவிதைகளும் என்னைப் பார்த்து நக்கலாய் சிரிப்பதாய் தோன்றுகிறது.
கதவைத் திறந்தேன். அம்மா அறைவாசலில் நிற்கிறாள். எனக்கு அழுகை வருகிறது. அடக்கிக் கொள்கிறேன்.
“உனக்கு யாரு கடிதம் போடுறது?”
“என்னம்மா கேக்குற…” எனத் தடுமாறுகிறேன்.
“இன்றைக்கு லலிதா வந்திச்சு”
என் கையில் இருந்த கடிதத்தை மறைத்துக் கொண்டேன்.
“எப்போம்மா… வந்தாள்..?”
“நீ இன்ன காலையிலே கடைக்குப் போனதுக்கு அப்பறமா…” என்றதும் என்னால் பேசமுடியவில்லை. காரணம் லலிதாவுக்கு நான் வெகுநாட்களாக லெட்டர் போடுவதில்லை என்பதை அவள் சொல்லியிருப்பாள்.
அதற்கு பின் அம்மாவிடம் என்னால் ஒன்றும் மறைக்க முடியவில்லை. நடந்ததை அப்படியே சொன்னேன்.
அம்மாவுக்கும் ஏற்கனவே பிரவீனை தெரியும் என்பதால் என்னவோ அப்பாவிடம் சொல்லி என்னை பெண் பார்க்க வரும்படி சொல்லி விட்டாள்.
எனக்கு கொள்ளை சந்தோஷம். ஆனால் பிரவீன் என்னை ஏன் புறந்தள்ளுகிறான் என்பதை அறிய முடியவில்லை. தான் ஒரு இராணுவன் என்பதை காரணமாய்ச் சொன்னாலும் அதை என்னால் ஏற்க முடியாது.
‘என் அப்பா கூட எங்கம்மா சந்தோஷமா வாழவில்லையா’
அப்பா அழைத்தின் பெயரில் இன்று வீட்டுக்கு வருவதாக லெட்டர் போட்டிருந்தான். என்னை நானே அலங்கரித்துக் கொண்டேன்.
“எப்படி இருக்கேன்ம்மா”
“லட்சணமா இருக்க” என்றபடி என்னை உச்சி முகர்ந்தாள் அம்மா.
‘கிறீச் ….’ என்ற சத்தத்துடன் கேட் திறக்கிறது. உள்ளே ஒரு கறுப்பு கார் நுழைய அப்பா சிரித்தபடி நின்றிருந்தார்.
“அம்மா பிரவீன் வந்துட்டான்” என்கிறேன்.
“கொஞ்சம் பொறு. வீட்டுக்குள்ள வரட்டுமே” என்று அம்மா சிரித்தாள்.
பிரவீனின் தரிசனத்தை ஆவலோடு எதிர்ப்பார்த்து வண்ணம் அந்த கறுப்புகாரை பார்த்தேன். காரிலிருந்து ஒரு வயோதிப பெண்மணி இறங்கினாள்.
அது பிரவீனின் அம்மாவாக இருக்க வேண்டும். “இறங்கு பிரவீன் …” என்றபடி கார் முன்புறமாகச் சென்று கதவைத் திறந்து விட்டாள் .
அக்காட்சியை கண்ட கணமே தலை சுற்றியது.
காரணம் ஒருகாலை இழந்த நிலையில் ஊன்று கோல் உதவியுடனும் அவன் தன் தாயின் கைதாங்கலாலும் எழுந்து நின்றான்.
அதற்குள்ளே அப்பா “பிரவீன்…” என சத்தமாய் கத்தியபடியே அவனருகே போய்விட்டார்.
வாழ்க்கை தரும் சில எதிர்பாராத திருப்பங்களை ஏற்று கடந்தேயாக வேண்டும். லெட்டரில் மறைமுகமாக இதனைத்தானா குறிப்பிட்டான் என என் மனம் கேட்டது.
என் பிரவீனால் இந்த ஜென்மத்தில் இழந்த காலை திரும்ப பெறமுடியாது.
‘எம் காதல் ஜெயிக்குமா இல்லை ஒரு இழப்புக்காகத் தோற்றுபோகுமா?’ என்னை நானே கேட்கிறேன்.
உண்மைக்காதல் தோற்பதில்லை.
என்ன கஷ்டமாக இருந்தாலும் என் அழைப்பிற்கு மதிப்பளித்து வீட்டுக்கு வந்திருக்கிறான். அவன் இளநீலவிழிகள் அங்குமிங்குமாக எதை தேடுகின்றன. அவன் முன் தரிசனமானேன். தெத்துப்பற்கள் வெளியே தெரிய அவன் இதழ்கள் சிரிக்கின்றன. நானும் பதிலாய் புன்னகை பூக்கிறேன்.
தன் நாட்டுக்காக தன் உறுப்பொன்றையே இழந்து தியாகம் செய்த தியாகி அவனை பார்த்து சல்யூட் அடிக்கத் தோன்றியது.
இவனை வாழ்க்கை துணையாக ஏற்பது ஒன்றும் என் பெரிய தியாகமல்ல.
“பிரியா… வாழ்க்கை பூரா நீ கஷ்டப்படனும் வேணாம் இந்த சம்மதம்” என்றாள் என் அம்மா.
“நான் பிரவீனைத் தவிர வேறு ஒருத்தனை மனசிலையும் நினைக்க மாட்டேன். நாங்க கல்யாணமான பிறகு இப்படி நடந்திருந்தால் ஏற்றுக் கொள்ளதானே வேணும்…” என்றேன்.
அம்மா மெளனமாக இருந்தாள். அப்பாவோ ‘உன் இஷ்டம்’ என்று சொல்லிவிட்டார்.
சில வருடங்களுக்கு பிறகு, “அப்பா.. காலத் தூக்கி அடிக்க முடியாட்டி கைகளால போடுங்க” என்றபடி பிரவீனின் கைகளில் பந்தை திணிக்கிறான் என் நான்கு வயது மகன் கவின்.
பிரவீன் செட்டியில் உட்கார்ந்தவாறே பந்தை கவினுக்கு போடுகிறான். “அவன் அம்மா பையன் பிரியா. உன்னபோலவே யோசிக்கிறான். இருக்கிற விஷயத்ததான் பார்க்கிறான். அவன் கண்கள் நிறைவையே பார்க்குது…” என்கிறான் பிரவீன்.
நான் புன்னகைத்தபடி தந்தையும் மகனும் விளையாடுவதை தூரத்திலிருந்து ரசிக்கிறேன்.
இன்னும் என் மனம் அவனை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
கவினின் நீலவிழிகள் ஜொலிக்கின்றன பிரவீனின் கண்கள் போலவே….


