இந்த முறை இரண்டு மலையாளச் சினிமாக்களைப் பற்றிப் பார்க்கலாம்ன்னு தோணுது.
இப்போது எந்த மொழிச் சினிமா என்றாலும் ரத்தம் தெறிக்க, வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மதுவும் கஞ்சாவும் இல்லாத கதைகளை சினிமா சொல்ல விரும்பாத காலகட்டமாக இருக்கிறது. அப்படிப்பட்ட நேரத்தில் ரத்த வாசனை இல்லாமல் சில சினிமாக்கள் வரும்போது, அதுவும் நம் மனதைக் கவரும் கதைக்களமாக இருக்கும் போது ரசித்துப் பார்ப்பதில் தப்பில்லைதானே. அப்படித்தான் சமீபத்தில் பார்த்த சில படங்களில் மிகவும் ரசித்த படமாக ‘சர்வம் மாயா’ மற்றும் ‘இத்திரி ராத்திரி’.
சர்வம் மாயா – கிடார் இசைக் கலைக் கலைஞராக ஆசைப்படும் புரோகிதர் வீட்டுப் பையனான நிவின் பாலி, காலத்தின் கட்டாயத்தில் புரோகிதம் செய்ய வேண்டிய நிலைக்குப் போக வேண்டிய சூழல். அப்படி ஒருமுறை ஒரு பேயை விரட்டப் போக, அந்தப் பேயோ அவருடன் அவர் வீட்டுக்கே வந்து விடுவதை உணர்கிறார். அதன்பின் அவருக்கும் அந்த அன்பான, அழகான, சுட்டித்தனம் நிறைந்த பெண் பேய்க்கும் – ரியா ஷிபு – ஏற்படும் அழகான நட்பு காட்சியாக விரிகிறது.
நிவின் பாலி எங்கு சென்றாலும் அவருடனே பயணிக்கிறார் ரியா. ஒரு திரைப்படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்புக் கிடைப்பதற்கும் ரியாவே காரணமாக இருக்கிறார். அதற்காக மும்பை செல்லும் நிவின் பாலியுடம் பயணிக்கும் ரியா, அங்கே ப்ரீத்தி முகுந்தனுடன் நெருக்கமாகிறார் நிவின். அதனால் ரியா கோபமாகிறார். அதன் பின் அவர்களுக்குள் பிரச்சினை வருவதும், ரியா காதாலைச் சொல்வதும் எனப் பயணிக்கும் கதையின் முடிவு ரொம்பவே உணர்ச்சிகரமாக இருக்கும்.
ரியா ஷிபுவோட குரலும் சுட்டித்தனமான நடிப்பும் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம். எனக்குப் பிடித்த நிவின் பாலி ரொம்பவே குண்டாகத் தெரிகிறார். நல்ல நடிகர் ஏனோ தன் உடம்பைப் பற்றி யோசிக்கவில்லை. சில இடங்களில் ரியாவுக்கு அண்ணனைப் போலத் தெரிகிறார்.
சர்வம் மாயா மிகச் சிறந்த படம். கண்டிப்பாகப் பார்க்கலாம்.
இத்திரி ராத்திரி – இது நம்ம 96 மாதிரி ஒரு படம். 96-ல் அன்பான நட்பு ஒரு இரவு முழுவதும் ஊரெல்லாம் சுற்றியபடி பேசித் திரிவதைப் போல், இந்தப் படத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் முன்னாள் காதலியோடு – ஸரீன் ஷிஹாப் – ஒரு இரவு முழுவதையும் கழிக்கிறார் நாயகன் ரோஷன் மேத்யூ.
தனது பிள்ளையின் பிறந்த நாளுக்கு நண்பர்களுக்குப் பார்ட்டி கொடுக்க வீட்டில் மனைவியிடம் அனுமதி பெற்றுச் செல்லும் ரோஷன், தனது முன்னாள் காதலியிடமிருந்து வரும் அழைப்பின் காரணமாக அவளைப் பார்க்கப் போகிறான். எட்டு ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் அவர்கள் சம்பிரதாயமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே மழை வர, ஒதுங்க இடம் பார்க்கும் போது ஒரு மதுபானக் கூடத்துக்குள் அழைத்துச் செல்கிறாள்.
ரோஷனுக்கு ஸரீன் மீது இருக்கும் காதல் இன்னும் அப்படியே இருக்கிறது என்பதால் அந்த இரவை அவளுடன் கழிக்க வேண்டிய சூழல் வந்தபோது அதை ஏற்றுக் கொண்டு அவளுடன் பயணிக்கிறான். குடிக்கிறார்கள்… வீட்டுக்குப் போகலாம் எனப் போகும் போது தாங்கள் படித்த கல்லூரி, நண்பர்களுடன் பீர் அடித்த இடம் எனக் கடக்கும் போது மீண்டும் குடியைத் தேடிப் போகிறார்கள்.
குடித்து மகிழ்ந்து வீட்டுக்குப் போகலாம் எனும் போது நாயகி தன்னிலை மறக்கும் நிலைக்குப் போகிறாள். ஆட்டோவில் பயணிக்கும் போது அவள் வாந்தி எடுத்து மயங்க பிரச்சினை உருவாகிறது. அவளது வீட்டு முகவரி தெரியாத நிலையில் எங்கு செல்வது..? என நடுரோட்டில் நிற்கும் போது நண்பர்களின் ஞாபகம் வர, அவர்கள் அறை எடுத்திருக்கும் ஹோட்டலுக்குப் போக, அங்கும் பிரச்சினை என்பதால் நண்பரின் காரில் அவளை வைத்துக் கொண்டு இரவெல்லாம் சுற்றி கன்னியாகுமரி வந்து சேர்கிறார்கள்.
அதன்பின் நடப்பது என்ன என்பதுதான் படத்தின் அருமையான முடிவு.
96 காதலை அழகாய் காட்டியது. இத்திரி ராத்திரியோ காதலை அழகாக உணர வைத்தது.


