அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
உலக மனித வாழ்வியல் வரலாற்றில் பல கூறுகளை ஆய்வு செய்யும்போது, வாழும் கலையாக மானுடம் கைக்கொண்ட வழிமுறைகளில் காதல், அழகு, கவர்ச்சி, உணர்ச்சி, காமம் என்று தொடங்கித் தொடரும் இல்லறத்தின் அழகியல் பேசும் முயற்சியின் முன்னெடுப்பு இதோ….!!
தான்பட்ட அனுபவத்தில் இருந்து பண்பட்ட மானுடம், இனப்பெருக்க காரணம் கடந்து, தேடல் தொடங்கிய காலம் தொட்டு, ஆண் பெண் மீதான ஈர்ப்பில் திளைக்கத் தொடங்கி, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தொடர்ந்து ஈர்த்து ஈர்த்து நெருக்கம் காட்டத் தொடங்கிய காலம்தான் அநேகமாக காதல் பிறந்த காலமாக இருக்க வேண்டும்.
காதல்தான் மானுடம் கொண்ட முதல் அழகியல் உணர்வு. அது மேலிட மேலிட ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு பிறக்கிறது. உறவு பிறந்த பின் ஒருவர் மீது ஒருவருக்கு உரிமை பிறக்கிறது. உறவும், உரிமையும் வாழ்க்கையை பொறுப்புமிக்கதாக மாற்றுகின்றன. பொறுப்பு என்பதன் முதல் படி பாதுகாப்பு உணர்வாக வெளிப்படுகிறது. பொறுப்பும், பாதுகாப்பு உணர்வும் மனிதனை சமூகமாக வாழ வழிக்காட்டுகின்றன.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
சமூகம் என்ற அமைப்பின் முதல் அடிப்படை அலகாக குடும்பம் இருக்கிறது. குடும்பத்தின் அடிப்படை அலகாக குழந்தைகள் இருக்கிறார்கள். ஆணும், பெண்ணும் நிலைத்த அன்பில், நீடித்த உறவைத் தொடரும் போது, உயிரின் தொடர் நீட்சியாய் குழந்தைகள் பிறக்க, குடும்பம் என்ற சமூக அலகு உருவாகிறது. நிலைத்த வாழ்வுக்கான முதல்படியை மனிதன் கண்டது குடும்பம் என்ற அலகில் இருந்துதான்.
ஆசைகள், அத்துமீறல்கள், கைப்பற்றிக்கொள்ளுதல் போன்ற பேராசைகளின் வெறிச்செயல்கள் மானிடத்தை போராடத் தூண்டியது. உரிமை மீறல்களின் மீதான போராட்டங்களும், பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்த போராட்டங்களும், மனிதனை மனிதத்தன்மையை இழக்க செய்தன. பெண்ணில் அல்லது ஆணில் தொடங்கி பொருள்கள் மீதான ஆதிக்க குணம் அதிகரிக்க அதிகரிக்க, சமூகம் பிளவுப்பட தொடங்கி, வாழும் இடங்களை மாற்றி மாற்றி, இனக்குழுக்களாக பிரிந்து, செயல்படத் தொடங்கிய காலம் தொட்டு….!, மாந்த இனத்தில் எம் தமிழினம் எவ்வகையில் வாழ்ந்து, உயர்ந்து, சிறந்து நிற்கிறது என்பதை காண்போம் வாருங்கள்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
உலகில் தான்தோன்றித்தனமாக சுற்றிக்கொண்டிருந்த மானுடத்தில், தான் தோன்றிய நிலத்தையும், தோன்றிய காலத்தையும், வாழ்ந்த களத்தினையும்,செய்த தொழிலையும், தொழிலுக்கு உதவிய கருவியையும், உயிர்களையும் உருப்பொருளாக்கி, வாழ்வின் கருப்பொருளை வகையாய் வகைப்படுத்திய உலகின் ஒரே மாந்த இனம் தமிழினம்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என மனித வாழ்வியலில் வளர்ந்து பண்பட்ட இனமாக வாழும் கலைக்கு இலக்கணம், இலக்கியம் என சான்று பகன்று நிற்கும் இனம் எம் தமிழினம். மற்ற இனங்களில் நம்மிடம் இருக்கும் பண்புகள், பழக்கவழக்கங்கள் சில பொதுவாக காணப்படினும், செம்மைப்படுத்தியும், செழுமைப்படுத்தியும், தொடர்ந்து இயற்கையை கற்று, அனுபவத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்துதலின் மூலம், இயல்பான மொழியும், இயல்பான குணமும், இயற்கையோடு இணைந்த வாழ்வும் தமிழருக்கே உரிய உயர்ந்த பண்புகளாயின காண்க.
”யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”, ”யாதும் ஊரே யாவரும் கேளீர்”, ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, “ஒன்றே குலம், ஒருவனே தேவன்”, ”வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன்”, போன்ற சொற்றொடர்கள் இவ்வுலகின் வேறு எந்த இனத்திலும் பேசப்படாத மொழிகளாக உள்ளதை பார்க்கும் போது, தமிழினத்தின் தனித்தன்மை ”உள்ளங்கை நெல்லிக்கனி” என விளங்கும்.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
தன்னுயிர் போல் பிற உயிரையும் எண்ணல் வேண்டும், தன் துன்பம் போல் பிறர் துன்பம் கருதுதல் வேண்டும் என்று ஆகச்சிறந்த படிப்பினை பண்பாடாக்கி, அதையே பாடமாக்கி தன் வழித்தோன்றல்களுக்கு தந்த ஒப்புயர்வற்ற இனமாக தமிழினம் விளங்க, அதன் அடிப்படை அலகாக இல்லறம் என்ற நல்லறத்தை பேணி பாதுகாக்கும் குடும்பமே விளங்குகிறது.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
உலகில் அழிந்துபட்ட பல மானிட இனத்தில், அழிவில்லாத இனமாக தொடர்ந்துக் கொண்டிருக்கும் இனமாக தமிழினம் இருக்க காரணம், அதன் சமூக அமைப்புதான். வழிவழியாய் வாழ்ந்து, வகைதொகையாய் வகுத்துக்கொண்ட வாழ்வியல் பாடங்களை மரபுகளாக்கி, மரபுகளை பல தலைமுறைகளுக்கு கடத்திக் கடத்தி, காலம் கடந்து நிற்கும் உண்மைகளை உணர்ந்து தெளிந்து, அதை நூலாக்கி, அதையே தம்பிள்ளைக்கு அறிவுப்பாலாக்கி, இனம் வளர ஏணிப்படியாய் வாழ்ந்த நம் முன்னோர் வாழிய..!! வாழியவே…!!
மனிதனாய் இருந்தவன் காதலுற்றதும் தலைவன் ஆகிறான், அவளோ தலைவி ஆகிறாள், இந்த தலைவன் – தலைவி என்ற சொற்களே அவர்களின் பொறுப்பை வெளிப்படுத்தும் கருவிகளாகின்றன. இல்லறத்தின் மீதான பொறுப்பும், கடமையும் கைக்கொள்ளும் அதே சமயம், சமூகப் பொறுப்பும், கடமையும் உடன் வந்து தானாக ஒட்டிக்கொள்கின்றன. அதை ஒட்ட வைக்கும் வேலையை உறவுகள் செய்கின்றன. அதைப் பற்ற வைக்கும் வேலையை பாட்டன் – பாட்டி செய்கிறார்கள். தான் வளர்ந்து, பின் தான் பெற்றதையும் வளர்த்து, உணவூட்டும்போதே அறிவையும் ஊட்டி வளர்க்கும் அற்புதம் நிகழ்த்தும் இனமாக மானுடம் இருக்க, அதில் தமிழினம் சிறந்து விளங்குகிறது.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று
”ஒருவனுக்கு ஒருத்தி” என்ற உயர்ந்த பண்பினை ஓங்கி ஒலிக்கும் சொல்லே “தலைவன் – தலைவி” என்பது. சங்ககால இலக்கியத்தில் கணவன் – மனைவி என்ற காரணப் பெயர்கள் காணக்கிடைப்பதில்லை. காலவெள்ளத்தில் இடப்பெயர்வுகளை அடைந்தாலும், தமிழினம் காதல் வெள்ளத்தில் மூழ்கியே கிடந்திருக்கிறது. தன் குணத்தை இனத்தின் வேர்களாக்கி, இறுகப்பற்றி இம்மண்ணில் ஊன்றி நின்றிருக்கிறது. இன்றுவரை நிலைத்திருக்கிறது. பாடிய பண்ணிலும், படைத்த இலக்கியத்திலும் அதனை சான்றளித்திருக்கிறது. நடன நளினத்தில் அதன் அசைவை வெளிப்படுத்தி இருக்கிறது.
குமரிக்கண்டம் தொட்டே குமரியோடு கூடிக்குலாவி கொஞ்சி மகிழ்ந்து, நெஞ்சம் நெகிழ்ந்த எம்முன்னோர் கண்டு காட்டியது காதல்வழி மணம். பிற்காலத்தில் பிண்ணிப்பிணைந்த பிற்சேர்க்கையே இக்கால திருமணம். ஆடலும், பாடலும், கூடலும், ஊடலும் இல்லறத்தின் இன்பங்கள் ஆகின. வாழ்வியல் தேடலும், பொருள் நாடலும் சமூக கடமையாகி கைக்கொள்ளப்பட்டன. வாழ்வை செம்மையாக்கவும், முழுமையாக்கவும் அரும்பாடுபட்ட இனம், பெரும்பாடுபட்ட வரலாற்றை கட்டுரைக்கிறேன் கேள் தமிழினமே…!!
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
எது சிறந்த வாழ்வு? என்ற கேள்வியை எம்மினம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. ஒன்றுடன் ஒன்றாய் உறவுகளை சேர்க்கும் குடும்பம் என்ற அலகே மனிதனை மனிதனோடு கட்டிவைக்கும் காலப்பாலம் என்பதை உணர்ந்து கண்ட இல்லறம் தான் சிறந்தது என்பதை வாழ்ந்துக்காட்டி, வாழ்ந்துகாட்டி சொல்லிக்கொண்டே வந்திருக்கிறது. தன்னையும் காத்து, தன்னை கொண்டவளையும், கொண்டவனையும் காத்து, தான் பெற்றதைக் காத்து, தான் பெற்றது பெற்றதையும் சேர்த்துக் காத்து, தன்னை நாடியவரையும், வாடியவரையும், வறியவரையும், வழிப்போக்கரையும் காத்து, பெரும்பணி செய்யும் பெருமக்கள் இல்லறம் பேணும் நன்மக்களே..!!
தமிழினத்தின் அச்சாணியாக இருக்கும் இல்லறம், காலவோட்டத்தில் காதல் மணம் கடந்தும், சமூகம் நடத்தி வைக்கும் ”சடங்கியல்” என்ற வைபோகத் திருமணங்கள் உருவாகின. பெண் தேடலில் தொடங்கி, திருமணம் வரை, பல மனிதர்களின் தலையீடுகள், குறுக்கீடுகள், வழிகாட்டல்கள் என நீண்ட முயற்சிகளும், பாரம்பரியம், பரம்பரை போன்ற சமூகக் காரணிகளும், சாதி, மதம் என்ற சமூகக் கூறுகளும் இடைமறித்து நிற்கின்றன. தன் குடும்பத் தேவைகள், தொழில் போன்ற கூடுதல் காரணங்களும் கருத்தில் கொள்ளப்படுகிறது. தமிழினத்தில் பெண்ணுக்கு ஈடாக பொன் கொடுத்து, மாப்பிள்ளை வீட்டார் ”அச்சாரம்” (அச்சு+ஆரம்) அச்சு – உறுதி, ஆரம் – பொன்னால் ஆன ஆபரணம் கொடுத்து திருமணப் பெண்ணை உறுதி செய்து கொள்வது வழக்கம். தாம்பூலத்தட்டு மாற்றிக் கொள்ளும் பழக்கம் மிகவும் பிற்காலத்தில் வந்தது.
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு
பண்டைய காலத்தில் இயற்கையாய் இயற்கையை ஒட்டி வாழ்ந்த மக்கள் மலர் மாலைகளை மாற்றி அணிந்து இல்லறத்தை ஏற்றார்கள். இக்காலத்தில் பொன்னும், பூணும் அணிந்து இல்லறம் ஏற்கிறார்கள். இடையில் மன்னர்கள் காலத்தில் போட்டியில் வெற்றிப் பெற்று பெண்ணை மணந்துகொள்ளும் முறையும் இருந்து வந்துள்ளது. பிற இனக்கலப்பு ஏற்படாத காலம் வரை, தமிழர்கள் தங்கள் வாழ்வியலில் சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றை கைக்கொள்ளவில்லை. மணமக்கள் விருப்பம், அவர்தம் பெற்றோர் சம்மதம் மட்டுமே இலக்கியங்களில் பேசப்படுகிறது. பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் தன்மையும், தலைவனை தேர்வு செய்யும் பழக்கமும் இருந்துள்ளது. அற இலக்கியங்கள், சொல்லாடல்கள், பாடல்கள், கதைகள் மூலம் அறிவுறுத்தல்களும், வலியுறுத்தல்களும் தொடர்ந்து நடந்துக்கொண்டிருந்தன. நீதி நூல்கள் உயிர்த்திருந்தன. ஒருவனுக்கு ஒருத்தி என்பது வாழ்வியலாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
மரவுரி தரித்த காலம்தொட்டு, பட்டாடை உடுத்தும் காலம்வரை பண்பட்டுக்கொண்டே, பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம். எல்லா மனிதரையும், உயிர்களையும் போற்றிப் பாதுக்காக்கும் மிகச்சிறந்த அறம் இதில் இருக்கிறது. உலகில் வாழ்வியலுக்கு இலக்கணம் கண்ட இனமும், வாழ்வின் பொருள் சொன்ன இனமும் இந்த தமிழினம்தான். கருப்பொருளைக் காப்பாற்றி வைத்துக்கொள்ளும் இலக்கியங்களின் வகைகள் வேறாயினும், காலம், வடிவம் வேறாயினும் பொருள் மாறாது தன்னுள் பொதித்து வைத்துக்கொண்ட இரத்தினச்சுரங்கங்கள் அவை.
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்
காதல் கரும்பில் காமம் பிழிந்து வாழ்வை அருந்தும் வழிகண்ட தமிழர் தம் வாழ்வில் பிரிவில்லை; தாழ்வில்லை; உயர்வில்லை; தம் மக்கள் முன்னேற்றம் தவிர வேறில்லை. நிலமும், நீரும் ஆளும் குணமும் கொண்டதால், வானும் மண்ணும் வாழ்வில் தரும் இன்பம் தாமே கண்டனர். அறிவும் ஆய்வும், கோளும் அதன் குறியும், குறிப்பால் கண்டனர். இல்லறமல்லது நல்லறமன்று எனத் தெளிந்து தேடல் நீண்ட தமிழர்தம் வாழ்வியல் இல்லறம் வையத்தை வாழவைக்கும்.
இன்றைய இளம் தலைமுறைகள் இதன் பொருள் புரிந்து, இனம் காத்து, குணம் காத்து, தன்மானம் காத்து, பிரிவில்லா பெருவாழ்வு வாழ்ந்து, தரணி எங்கும் தமிழ் சிறக்க, தமிழர் செழிக்க வழியும், வகையும் கண்டு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் இம்மண்ணில் நிலைத்து செழித்திருக்க பிரிவில்லாத இல்லறம் கண்டு நல்லறம் காண வேண்டும். தலைமுறைகள் கடந்தும் தமிழும், தமிழர் பண்பும், உயிராய் சுமந்து உயிரில் கலந்து, காலம் கடந்து புவி உள்ளவரை தமிழ் இருக்க, தமிழர் இருக்க வேண்டும். தமிழர் இருக்க அறம் வேண்டும். அந்த அறமும் இல்லறமாய் அமைய வேண்டும். வாழ்க இல்லறம்.


