‘கறுப்பி’யை முதலில் சிறுகதையாகத்தான் வாசித்தேன். அப்பொழுதே இது ஒரு நாவலாக வந்தால் நன்றாக இருக்கும் என்று எழுத்தளரிடம் வேண்டுகோள் வைத்தேன். அது நாவலாகி கலக்கல் ட்ரீம்ஸ் இணையத்தில் தொடராக வந்தது. இது நடந்து நான்காண்டுகளுக்குப் பிறகு நடந்து முடிந்த சென்னைப் புத்தகத் திருவிழாவில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதற்கு என்னுடைய முதற்கண் நன்றி எழுத்தாளருக்கும், பதிப்பகத்தார்க்கும்..!
எழுத்தாளர் பரிவை சே குமார் அவர்களின் நூல்களை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இந்நாவல் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். வழக்கமான கிராமத்துக் களத்தை விட்டு… இந்நாவலில் அயலக களத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஆம்! வெளிநாடு வாழ் பெண்களின் பணிச்சூழல், அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
இந்தக் கறுப்பியில் சிவா சந்தித்த பெண்கள், அவருடைய நண்பர்கள் வட்டத்தில் உள்ளவர்கள் பெண்களிடம் நடந்துகொண்ட விதம் என ஒவ்வொன்றாக நமக்கு சொல்லிக் கொண்டே வருகிறார்.
இந்நாவலில் யமுனா, லீமா, மலாமா(கறுப்பி) முக்கியமான கதாபாத்திரங்கள், லீமாவுக்கும், சிவாவுக்கும் இருக்கும் நட்பின் புரிதல், மலாமா சிவாவிடம் கண் கலங்குதல், யமுனாவின் பாலியல் தொழில் வாழ்க்கை என கதை மூன்று களத்தில் நகர்கிறது.
ஆண் எங்கெல்லாம் பெண்களை ஒரு சதைப் பிண்டமாக மட்டுமே பார்க்கிறான். என்பதை நாவலில் – அவசியம் கருதி – துகிலுரித்திருக்கிறார். கறுப்பின பெண்கள் வைத்து நடத்தும் உட்கா – ஒரு விதமான புகைப்பிடித்தல் – கடைகளில் ஆண்களின் இச்சையைப் போக்க, தன்மானம் இழந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்காகச் செய்யும் திரைமறைவு வேலைகள், அதில் வரம்பு மீறும் ஆண்கள், அதனால் கண்ணீர் வடிக்கும் கறுப்பி என விவரித்திருக்கிறார்.
இது போக இங்கே குடும்பத்தோடு இருக்கும் ஆண் மகன்களும் இது போன்ற இச்சை விளையாட்டில் இறங்குவதுதான் படு கேவலம், ஒரு இடத்தில் மலாமா சிவாவிடம் “இவனுக இவங்க வீட்டு பெண்களிடமும் இப்படித்தான் நடந்து கொள்வார்களா?” என்று கேட்டு கண் கலங்கும் இடங்கள் வருத்தமும், கோபமும் வருகிறது.
யமுனாவை (தமிழ் பொண்ணு போல) தினமும் சந்திக்கும், சிவாவிடம் தன் துயரங்களை சொல்வது மூலம், ஆறுதலடைகிறாள். சிவாவின் இடமாற்றத்திற்கு பிறகு யமுனாவின் தொடர்பு இல்லாமல் போனாலும் ஒரு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிக்குப் பிறகு யமுனாவைச் சந்திக்கிறான், அப்பொழுது யமுனாவின் முகத்தில் பழைய சோகம் இல்லாமல் சந்தோசமும், உடல் வண்ணமும் மாறி அடையாளமே தெரியாமல் இருக்கிறாள்.
இருவரும் நலன் விசாரித்துக் கொண்டு ‘எப்படி இருக்கிறாய், பார்க்கும்போதே தெரிகிறது, நன்றாகத்தான் இருக்கிறாய்ன்னு நினைக்கிறேன்’ என்கிறான் சிவா. அதற்கு யமுனா, இங்க பரவாயில்லை, ஆனால்! களம்தான் மாறி உள்ளது, போர் கிட்டதட்ட அப்படியேதான் இருக்கிறது என்பதை வேறுவிதமாக சொல்கிறாள், அதை நாவலில் வாசித்துக் கடக்கும்போது கவலை நம்மை தொற்றிக் கொள்கிறது, அதுதான் நிலவும் உண்மையும் கூட.
இதில் மிக சுவாரசியமான பாத்திரம் லீமா. இந்த நாவலில், எனக்கு மிகவும் பிடித்த பெண்ணும் அவள்தான். சிவாவின் அலுவலக தோழி, சிவாவிடம் மட்டும் நட்பாய் மிகவும் நெருங்கிப் பழகுபவர். அவரும், தன் குடும்பத்தை, அதாவது தன் கணவரையும், மூன்று குழந்தைகளையும் பிரிந்து நாட்டைவிட்டு வந்துதான் தன் வாழ்வாதாரத்திற்காக இங்கே பேச்சுலராக இருந்து பணி புரிகிறார்.
மற்றவர்கள் எப்படி? அவர்கள் எந்தவிதமாக பேசுவார்கள், தான் இருக்கும்போது எப்படி பேசுவார்கள், இல்லாவிட்டால் எப்படி பேசுவார்கள் என்பதெல்லாம் தெளிவாக பேசும் பாத்திரம். லீமாவுக்கும் கசப்பான அனுபவம் அலுவலக மேலாளரால் நடக்கிறது, அதை சிவாவிடம் சொல்லி முறையிடுவதும், அதை கடந்து போக வேண்டிய சூழலில் இருப்பது பற்றி ஒரு நல்ல நண்பனாக அவன் எடுத்து கூறும் இடங்கள், மற்றும் அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல்கள் எல்லாமே மிக அருமையாக இருக்கிறது,
கோடை விடுமுறைக்கு வந்த லீமாவின் கணவரிடம், சிவாவை அறிமுகம் செய்து வைப்பதும், அங்கே நடக்கும் கேலியான கலந்துரையாடல்கள் சிறப்பு. அதேபோல, லீமாவையும், சிவாவையும் அலுவலகத்தில் திரித்து நக்கலாக பேசும் மோசமாமான பகடியும், அதற்கு சிவா எதிர்வினையாற்றி கோபமாவதும் என நாவலின் போக்கில் இயற்கையாகவே அமைந்திருக்கிறது.
நாவலின் கதைக்காக சில இடங்கள், அந்தரங்கமாகவே செல்கிறது. அது சொல்ல வேண்டிய உண்மையும்கூட, அதை வாசிப்பவரின் காதுகளுக்கும், மனசாட்சிக்கு மட்டுமே கேட்கும்.
இதனூடாக ஆங்காங்கே தன் அறைவாசிகளின், அலப்பறைகள், அந்தரங்க தொடர்புகள், வாரயிறுதி நாள்களில் அவர்களது பொழுதுகள் எப்படிச் செல்லும் என்பதை அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
அருமையான நாவல், என்னுடைய வாசிப்பின் மூலம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது வயது வந்தோர் மட்டும் வாசியுங்கள், இருபாலரும்.
நன்றி.
————————–
கறுப்பி (நாவல்)
கலக்கல் ட்ரீம்ஸ்
விலை : ரூ. 130 /-
————————–


