ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில், குறிப்பாக முஸ்லிம் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு என்பது வெறும் எழுத்துக்களால் ஆனது மட்டுமல்ல அது சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாகவும், பெண் மனங்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் திகழ்கிறது. அந்த வகையில், கடல் அலையும் கைத்தறியும் கானம் இசைக்கும் மருதமுனை மண்ணிலிருந்து புறப்பட்டு, இன்று நவீன கவிதை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்திருப்பவர் கவிதாயினி சிரேஷ்ட ஆசிரியை பாத்திமா ஸுபா தல்ஹா அவர்கள்.
பாத்திமா ஸுபா தல்ஹா அவர்களின் இலக்கிய ஆர்வம் என்பது தற்செயலாக நிகழ்ந்த ஒன்றல்ல சிறுவயதிலிருந்தே வாசிப்பின் மீது அவர் கொண்டிருந்த தீராத தாகமே அவரை ஒரு சிறந்த படைப்பாளியாக வார்ப்பெடுத்தது பாடசாலைக் காலங்களிலேயே கவிதை மற்றும் சிறுகதை எழுதுவதில் அதீத ஆர்வமும் தேர்ச்சியும் காட்டியவர்.
இவரது இலக்கியப் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது இவரது உயர்தரக் கல்விக்காலம் அக்காலத்தில் இவர் எழுதிய சிறுகதை ஒன்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது ஒரு வாசகராக இருந்தவர், ஒரு சிறந்த எழுத்தாளராகப் பரிணமிக்க அந்த அங்கீகாரம் பெரும் ஊக்கியாக அமைந்தது.
பாத்திமா ஸுபா தல்ஹா அவர்களின் கவிதைகள் எதார்த்தமான வார்த்தைக் கோர்வைகளால் ஆனவை. கடினமான சொற்களைக் கொண்டு வாசகர்களைத் திகைக்க வைக்காமல், எளிமையான ஆனால் ஆழமான உண்மைகளைப் பேசும் வரிகளைப் படைப்பதில் அவர் கைதேர்ந்தவர்.
கவித்துவ சிந்தனையுடன் படிம முறையைப் கையாள்வதில் இவர் கொண்டுள்ள நேர்த்தி பாராட்டுக்குரியது , வெறும் எழுத்துடன் நின்றுவிடாமல், அபிநயம் மற்றும் ரசனை போன்ற கலை அம்சங்களை உள்ளடக்கிய பாடவிதானச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவது இவரது கலையுணர்விற்குச் சான்றாகும்.
ஈழத்து இலக்கியப் பரப்பில் பெண் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில், பாத்திமா ஸூபா தல்ஹா அவர்களின் குரல் மிக முக்கியமானது அது போக பெண்ணியமும் சமூக விழுமியங்களும் நிறைந்த இவரது எழுத்துக்கள் எல்லை மீறாத கலை உணர்வு என்பதே சிறப்பியல்பாகும் பெண்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் பெண் விடுதலை சார்ந்த விடயங்களில் இவரது எழுத்துக்கள் தீர்க்கமானவை.
ஆசிரியை பாத்திமா ஸுபா தல்ஹா மாறிவரும் சமூகச் சூழலில், மருகி வருகின்ற சமூக விழுமியங்களையும் மத நம்பிக்கைகளையும் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் உயிர்ப்பிப்பதில் அலாதியான ஆர்வம் கொண்டவர் அல்லாது இயற்கையை தன் உற்ற நேசனாக கொண்டிருக்கும் இவர் பூக்கள் மரம் செடிகளோடு மிக அதிகமாக உறவாடிக் கொள்வதை அவதானிக்கலாம்.
ஒரு படைப்பாளியாகத் தன்னை மட்டும் வளர்த்துக் கொள்ளாமல், பிற பெண்களையும் இலக்கியப் பாதைக்கு அழைத்து வருவதில் இவர் காட்டும் அக்கறை போற்றுதலுக்குரியது. “மருதமுனை நாணல் கலை இலக்கிய வட்டத்தை” நிறுவி, ஆற்றல் மிக்க பெண்களை இனம் கண்டு அவர்களுக்கு முறையான களம் அமைத்துக் கொடுத்து வருகிறார் அவர்களின் ஆக்கங்களை மதித்து ஊக்குவிப்பதன் மூலம், ஒரு புதிய தலைமுறை பெண் படைப்பாளிகளை உருவாக்கி வரும் ஆளுமையாகத் திகழ்கிறார்.
பாத்திமா ஸுபா தல்ஹா தனது வெற்றிக்குத் தனது தாயே பெரும் தூணாக இருப்பதாகப் பல இடங்களில் பதிவு செய்துள்ளார் தான் எழுதும் ஒவ்வொரு படைப்பையும் முதலில் தனது தாயிடமே வாசித்துக் காட்டுவதையும், தனது கவிதைகளின் முதல் ரசிகையாகத் தாயை முன்னிறுத்துவதும் இவரது மனிதநேய பண்பை வெளிப்படுத்துகிறது.
இவரது கவித்துவ ஆற்றலையும் எழுத்தின் வலிமையையும் இலங்கையின் தேசியப் பத்திரிகைகளும் இலக்கியச் சஞ்சிகைகளும் இனம் கண்டுள்ளன பல முன்னணி இதழ்கள் இவரை நேர்காணல் செய்து கௌரவித்துள்ளன குறிப்பாக, அண்மையில் ‘துணிந்தெழு‘ சஞ்சிகையில் வெளிவந்த இவரது நேர்காணல் இவரது இலக்கியப் பங்களிப்பை ஆவணப்படுத்தும் ஒரு முக்கிய பதிவாகும்.
இவரது முதலாவது கவிதைப் தொகுதியான “சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்” இன்றும் வாசகர்களால் பெரிதும் சிலாகிக்கப்படும் ஒரு படைப்பாகும் அதில் இடம்பெற்றுள்ள கவிதைகளின் பொருட்செறிவும், துல்லியமான தெளிவான வார்த்தைப் பிரயோகங்களும் இவரை ஒரு முதிர்ச்சியடைந்த கவிஞராக அடையாளப்படுத்தின.
வட கிழக்கு இலக்கியப் பரப்பின் பெண் ஆளுமைகளுக்கென்று தனித்துவமான
அடையாளம் இருக்கிறது இது அண்மையில்
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட உண்மை நிலை
அதில் முன் வரிசையில் முதல் நிலையில் சூபா தல்ஹா வீற்றிருப்பார் என்பதில் ஐயமில்லை,
அண்மையில் இவரது இரண்டாவது நூலான “உயிர்த்தெழும் சருகுகள்” மருதமுனை மண்ணில் மிகச் சிறப்பாக வெளியீடு செய்யப்பட்டது. இந்த நூல் இவரது இலக்கிய வளர்ச்சியின் அடுத்த கட்டத்தையும், சமூகத்தை நோக்கிய இவரது பார்வையின் வீரியத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அன்பு அரண் காதல் தெய்வீகம் தனிமை என பல்வேறு உணர்வுகளை கொட்டி தீர்க்கும் இவரது கவிதைகளின் பொதுப்படையான பண்பு படிமம் நிறைந்தவையாக இருப்பது ஒரு வாசகனாக தரும் வாக்குமூலம்.
இவரின் எழுத்துக்கள் நன்கு எனக்கு பரிச்சயமானவை இவர் எழுத்தாளர் என் செல்வதை விட நான் நல்லதொரு வாசகராக இவரை காண்கிறேன் அவரின் வாசிப்பின் நிமித்தம் சொற்களை இவர் கோர்வை செய்திருக்கும் விதம் மெய்சிலிர்க்கத்தக்கது,
மரத்தில் இலையாகி பின்பு சருகாகி எவருக்கும் எவ்விதத்திலும் பிரயோசனம் இல்லாமல் மண்ணில் உக்கி மறைந்து போகும் சருகொன்று காற்றின் லீலைகளில் தான் சருகு என்பதை மறந்து மீண்டும் உயிர் பெறும் தருணமாக எழுத்துக்களின் வடிவான சொற்களை வெறும் காற்றோடு எழுத்துக்களின் உச்சரிப்பாக விட்டு விடாமல் அவைகளுக்கு உயிர் கொடுத்து அழகு பார்க்கும் ஒரு தாய்மையை இவரின் கவிதைகளுக்குள் வடிகட்டிக் கொண்டேன்.
அவரது உயிர்த்தெழும் சருகுகள் கவிதை பிறவிக்குள் என் வாசிப்பின் உத்வேகங்களை செலுத்தி ஒரு வாசிப்பாக அல்லது ஒரு ஆய்வாக அலசி ஆராய்கின்றபோது பல்வேறு இலக்கியக் கூறுகள் வெளிப்படுகின்றன.
அவ்வப்போது பின் நவீனத்துவத்தின் சாயலில் வந்து செல்லும் இவரது கவிதைகளின் நேர்கோட்டு வரைபடம் செங்குத்தாகவும் கிடையாது பல்வேறு நிதர்சனங்களை சமூக மயப்படுத்துவதை அவதானிக்கலாம்.
100 பக்கங்களில் 49 கவிதைகள் உள்ளடங்கலாக இவரது கவிதைகளை புத்தகத்தில் காணக் கிடைத்தது.
“மடல் மா ஏறிடவா” என முதல் பக்கத்தில் பழைய மரபையும் புதிய உணர்ச்சியையும் இணைக்கும் ஒரு பாலம் இத்தலைப்பை பயன்படுத்தி அதன் கீழே சில வரிகளை எழுதுகிறார்.
மடல் மா ஏறிடவா?’ என்ற தலைப்பு சங்க காலத்தின் ‘மடல் ஊர்தல்‘ என்ற மரபைக் குறிக்கிறது. ஒரு தலைவன் தன் காதலைப் புரிய வைக்கப் பனை மடல் குதிரையில் ஏறி ஊர் ஊராகச் செல்வது சங்க இலக்கிய மரபு. இங்கு கவிஞர் அந்த மரபை நவீன காலத்திற்கு ஏற்ப, தன் இலக்கியக் காதலைச் சொல்லப் பயன்படுத்தியுள்ளார்.
காதலின் ஆழத்தைப் பேசும் விதம் அருமை, ஆனால் அதைத் தாண்டி நவீன காலத்திற்குப் பொருந்தாத சில பழைய பழக்கங்களை அப்படியே தூக்கிப் பிடிக்காமல் உணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு.
“அகத்திணை மரபு” என்ற வரியின் ஊடாக தொன்மையான அந்த இலக்கணத்தை மீண்டும் ஒருமுறை புதிதாக எழுத ஆசைப்படுகிறார் தொடர்ந்து “சங்கக் கவிஞனைச் சந்தித்தல்” என்பது இது ஒரு கவிஞனின் ஆகச்சிறந்த கற்பனை தனக்கு முன்னால் வாழ்ந்த பெரும் புலவர்களிடம் சென்று அனுமதி கேட்கும் அந்தத் துணிச்சல் பாராட்டத்தக்கது.
காதல் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல அது இலக்கியத்தின் வழியாக உயிர்த்தெழும் ஒன்று என்பதை இந்த முழு கவிதையின் ஊடாக புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தக் கவிதை, மரபார்ந்த தமிழ் இலக்கியத்தின் செழுமையை உள்வாங்கிக் கொண்டு, அதைத் தற்கால உணர்வுகளோடு பிணைக்கும் ஒரு பாலமாகத் திகழ்கிறது. கவிஞரின் மொழிநடை எளிமையாகவும் அதே சமயம் செழுமையாகவும் இருக்கிறது.
நூலின் பிரிதோர் இடத்தில் என்னுயிரே என விழிப்பது வாசகனை நோக்கி மிக வேகமாக அன்பு கலந்த தாய்மையின் அரவணைப்பு நிகழ்வதை உணர்த்துகிறது
என்னுயிரே என்றவுடன் வாசகன் தற்செயலாக திரும்பிப் பார்க்க ஒரு மகளின் கோணத்தில் இருந்து தனது தாய்க்குச் செலுத்தப்படும் நன்றியறிதலாகவும், ஆத்மார்த்தமான சமர்ப்பணமாகவும் அமைந்துள்ளது.
“விடியாத இரவில் நிழலாக வருமென்று காத்திருப்பவர் மத்தியிலே…” என்ற வரிகள், உலகம் குழப்பத்தில் இருக்கும்போது ஒரு நிலையான பிடிப்பாகத் தாய் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது இதனால் ஒரு தாயின் தியாகம் இங்கு காட்டப்படுகிறது.
கொடி போன்ற மென்மையானவள் (தாய்) வாடி நிற்கும் போது, அவளுக்கு ஊன்றுகோலாய் (கொழு கொம்பாய்) நீ இருந்தாய் என்று கவிஞர் குறிப்பிடுவது, கஷ்ட காலங்களில் தாய் கொடுத்த மனவலிமையை அழகாகச் சித்தரித்து எழுதப்பட்டுள்ளது.
முதல் பிள்ளை மகளென்று நீ கேட்ட தவம் பொய்யாகிடக் கூடாதென்று பிறந்தவள் நான்” என்ற வரிகள் மிகவும் உணர்ச்சிகரமானவை. ஒரு தாய் தன் மகளின் வருகைக்காகச் செய்த தவத்தையும், அந்தத் தவத்தின் பலனாகத் தான் பிறந்ததையும் எண்ணி மகள் பெருமிதம் கொள்கிறாள் இது தாய்,மகள் உறவின் புனிதத்தை மெருகூட்டுகிறது இதனால் இங்கு பிறப்பின் நோக்கம் என்ன என்பது சித்தரிக்கப்படுகிறது.
கவிதையின் மொழி நடை மிக எளிமையாகவும், அதே சமயம் உணர்வுகளை நேரடியாக இதயத்திற்குச் செல்வது போலவும் அமைந்துள்ளது. சொற்களின் தேர்வு உதாரணமாக கொடியிடையாள், கொழுகொம்பு, தவம் கவிதைக்கு ஒரு மரபார்ந்த அழகைக் கொடுக்கிறது.
இது ஒரு தாயின் அன்பிற்குக் கைம்மாறாக ஒரு மகள் செய்யும் கவிதை அஞ்சலி. மகளின் வெற்றியில் தாயின் பங்கை விட, மகளின் இருப்பே தாயின் பிரார்த்தனைக்குக் கிடைத்த வெற்றி என்பதை இக்கவிதை அழகாகப் பதிவு செய்கிறது.
இன்னொரு கவிதையில் நூலாசிரியர் முழுக்க முழுக்க படிமம் நிறைந்த கவிதையை பதிவு செய்திருப்பது அவரின் இத்தொகுதியில் கனதியை மெருகூட்டுகின்ற மிக கனவியான படைப்பன்று ஒரு கருதுகோளை உருவாக்க ஏதுவாக அமைகிறது.
தென்றல் என்பது மென்மையான மெதுவான ஒன்று அதை “திமிர் பிடித்த தென்றல்” என்று அவர் வர்ணிப்பதினூடாக என்ன சொல்ல முனைகிறார் என்பதை நோக்கலாம் இந்தக் கவிதை தனிமை, அனுபவம் மற்றும் கடந்த காலத்தின் ஏக்கம் ஆகியவற்றை மிக மென்மையாக, அதே சமயம் அழுத்தமான படிமங்கள் மூலம் விவரிக்கிறது.
“நானறிந்து எவருமங்கே குடியிருப்பாதாய்த் தெரியவில்லை” என்ற வரிகள் ஒரு மனிதனின் அக உலகத் தனிமையைக் குறிப்பதாகத் தோன்றுகிறது. ஆள் அரவமற்ற அந்த வெற்றிடத்தில் மனிதர்களுக்குப் பதிலாக ‘நிசப்தங்கள்‘ குடிபுகுவதாகக் கவிஞர் கூறுவது சிறப்பு. அமைதி என்பது வெறும் சூனியமல்ல, அது அனுபவங்களின் உறைவிடம் என்பதை இது உணர்த்துகிறது.
கவிஞர் பயன்படுத்தியுள்ள இரு படிமங்கள் கவிதையின் தரத்தையும் நூலின் கனதியையும் உயர்த்துகின்றன அனுபவங்கள் இருட்டு வனாந்தரத்தில் குருட்டு வௌவாலாக அலைமோதுவதாகக் கூறுவது, தெளிவற்ற ஆனால் விடாத கடந்த கால நினைவுகளைக் குறிக்கிறது.
இளமைக் காலத்தை (சிறு பராயங்கள்) பட்டாம்பூச்சியின் சிறகடிப்போடு ஒப்பிடுவது, அதன் அழகையும் அதே சமயம் அது நிலையற்றது என்பதையும் அழகாகக் காட்டுகிறது.
கவிதையின் இறுதி வரிகள் ஒருவிதமான சோகத்தை மீட்டிச் செல்கின்றன “வாழ்க்கைக் கனவுகளில் தொலைந்த வாலிபங்கள்” என்பது ஓயாத ஓட்டத்தில் நாம் எதையெல்லாம் இழந்துவிட்டோம் என்ற ஒரு சுயபரிசோதனையை வாசகனுக்குள் தூண்டுகிறது.
இந்தக் கவிதை ஒரு மனிதனின் முதிர்ச்சியையும், அவன் கடந்து வந்த காலத்தின் மீதான ஒரு ஏக்கத்தையும் பதிவு செய்கிறது. தலைப்பில் உள்ள ‘தென்றல்‘ மென்மையானது என்றாலும், அது சுமந்து வரும் நினைவுகள் ‘திமிர் பிடித்தவை‘ (அதாவது அடக்க முடியாதவை) என்பதை கவிதை நுட்பமாக உணர்த்துகிறது.
இதுபோன்று இப்படியாக இன்னும் பல கவிதைகளும் அதற்கான சரியான காரணங்களும் சொற்பிரயோகங்களும் வாசகப் பதிவுகளும் வரையறையற்ற நியாயங்களும் நிறைந்துள்ளன இவரது நூலில்.
மருதமுனை மண்ணின் அடையாளமாகத் திகழும் பாத்திமா ஸுபா தல்ஹா அவர்கள், கவிதையுலகில் தொடர்ந்து ஆளுமையுடன் பயணிப்பவர். எதார்த்தம், பெண்ணியம் மற்றும் சமூக அக்கறை ஆகியவற்றைத் தனது கவிதைகளில் இழையோடச் செய்யும் இவரின் எழுத்துப் பணி இன்னும் பல சிகரங்களைத் தொட வேண்டும் என்பதே இலக்கிய ஆர்வலர்களின் விருப்பமாகும்.
விமர்சனம்:
ஜவ்சன் அஹமட்
(மருதமுனையூரான்)
துணிந்தெழு சஞ்சிகை இணை ஆசிரியர்


