“இன்னும் எவ்வளோ நேரம் ஆகும்? சீக்கிரம் லக்ஷ்மியை கண்ணுல காட்டுங்க. அப்படியே அவ கண்ணுக்கு மை கொஞ்சம் அதிகமா போடுங்க. அது அவளுக்கு இன்னும் அழகா இருக்கும்” என்றேன் லக்ஷ்மி இருக்கும் அறை கதவை தட்டியபடி. நான் சொன்னதற்கு உள்ளே ஒரே சிரிப்பு சத்தம்.
“மாப்பிள்ளை சார், பொண்ண நாங்க தயார் பண்ணதும் கூட்டிட்டு வரோம். மணமகன் அறைல போய் உக்காருங்க” என்று உஷா சொல்ல, உள்ளே மீண்டும் சிரிப்பு சத்தம். அவர்களையெல்லாம் “சிரிக்காதீங்கடீ” என்று லக்ஷ்மி செல்லமாக அதட்டும் குரல் கேட்டது.
என் லக்ஷ்மி. எப்போதும் என்னை விட்டுக் கொடுக்காத என் லக்ஷ்மி.
நான் கீழே சென்றேன். வீடு முழுவதும் உறவினர்கள், நண்பர்கள். இத்தனை பேர் என்னை சூழ்ந்திருந்த போதிலும் லக்ஷ்மியையே என் விழிகள் தேடியது. அதிலும் அவளுக்கென்று நான் பல கடைகள் ஏறி இறங்கி தேர்ந்தெடுத்த மயில் நீல பட்டுப் புடவையில் எப்படி இருப்பாள் என்று காண ஆவல் கூடியது. குறைந்தது ஆயிரம் முறையாவது அந்த புடவையில் அவளை எண்ணிப் பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் அவளின் அழகு முன்பை விட அதிகாமாகவே இருந்தது. நான் அவளைப் பற்றி நினைக்கும்போதே அவளும் கீழே வந்தாள்.
என்ன?! என் லக்ஷ்மியை இவ்வளவு தான் எனக்கு தெரியுமா? நான் நினைத்ததை விட நூறு மடங்கு.. இல்லை, இல்லை.. ஆயிரம் மடங்கு அழகாக இருந்தாள்.
“ரவி தாத்தா. ரொம்ப வழியிறீங்க. தொடச்சுக்கோங்க” என்று என்னிடம் வாண்டுகள் சொல்லிவிட்டு ஓடினர்.
அடி படவா! இந்த காலத்து பிள்ளைகள்!!
என்ன அப்படி பார்க்கிறீர்கள்?!
ஆமாம். நான் தாத்தா தான். எனக்கும் லட்சுமிக்கும் இன்று சதாபிஷேகம், எண்பதாம் திருமணம். எத்தனை வருடங்கள் ஆனாலும் அவள் என் லக்ஷ்மி தானே. ஆயிரம் பிறைகள் நான் கண்டபோதும், என் வாழ்க்கையை பரிபூரணமாக்கியது இந்த பௌர்ணமி நிலவு தானே. அவளை நான் ரசிக்காமல் வேறு யார் ரசிக்க முடியும்?
அவளை பார்த்ததும் எனக்கு அவளை முத்தமிட தோன்றியது. ஆனால் எப்பொழுதும் நான் தானே தருவேன். இன்று அவள் தரட்டும். கஞ்சக்காரி! எத்தனை முறை கேட்டாலும் அவளுக்கு தோன்றினால் மட்டும் தான் கொடுப்பாள். ஆனால் என்னிடமிருந்து மட்டும் தினமும் பெற்று கொள்வாள். நான் அவள் ஆசைப்படியே உறவினர்களை அழைத்து சதாபிஷேகத்தை கொண்டாடுவதைக் காரணம் காட்டியாவது இன்றிரவு அவளிடமிருந்து ஒரு முத்தம் பெற வேண்டும்.
இரவு பாரதியார் பாட்டை கேட்டுக் கொண்டே எங்கள் அறையில் நான் படுத்திருந்தேன். லக்ஷ்மி உள்ளே வந்து அன்று நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டு, “ரொம்ப களைப்பா இருக்கு. நான் தூங்குறேன்” என்று படுத்து உறங்கிவிட்டாள்.
கல்நெஞ்சக்காரி! என் கண் அசைவை வைத்தே என் மன ஓட்டத்தை புரிந்துகொள்ளும் அவளுக்கு இப்போது என் ஆசை புரியவில்லையா என்ன? நடிக்கிறாள். நானும் கண்களை மூடிக்கொண்டு உறங்க தயாரானேன். வேறு வழி!
அப்போது என் அருகில் வந்து “ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன்” என்று மெதுவாக காதோரம் சொல்லிவிட்டு, என் கன்னத்தில் முத்தமிட்டாள்.
‘கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி‘ என்று பாரதியார் பாடல் வரிகள் மெல்ல ஒலிக்க, மின்விசிறியின் காற்று தென்றலாய் தலை கோத, என்னவளின் தித்திப்பான முத்தத்தை ரசித்தபடியே உறங்கினேன்.


