வணக்கம்.
கேலக்ஸி பதிப்பகத்தின் ஐந்தாம் ஆண்டு , விண்மீன் மின்னிதழின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் இரண்டு புத்தக வெளியீடுகள் என சென்ற சனிக்கிழமை (20/06/2026) மாலையை சிறப்பாக்கிய நிகழ்வு துபையில் ஜெசிலா மேடத்தின் ‘Proactive Excel Safety Consultancy’ நிறுவனத்தில் நடைபெற்றது.
நம் மனசுக்குப் பிடித்த, நெருக்கமான, நாமும் சேர்ந்து பயணிக்கக் கூடிய ஒரு நிறுவனத்தின் நிகழ்வு என்பது எப்போதும் மகிழ்ச்சி தரக்கூடியது அல்லவா..? அந்தச் சந்தோஷத்துக்கு நிகரான சந்தோஷம் வேறு ஏது? கலந்து கொண்ட அனைவரும் நம் விழா என்ற மகிழ்வோடு விழாவினை நிறைவு செய்தோம்.
கேலக்ஸியின் நிகழ்வினை எப்போதும் போல் தனது நகைச்சுவைப் பேச்சோடு தொகுத்து வழங்கினார் கலைஞன் நாஷ். அரசியல் நகைச்சுவைகளை ஆங்காங்கே தூவினாலும் அது முழுக்க முழுக்க வஞ்சப்புகழ்ச்சிதான் என்றாலும் அதையும் தாண்டி ரசிக்க முடிந்தது. ஒவ்வொருவரையும் அழைக்கும் போது சின்னச் சின்ன நகைச்சுவையைத் தூவுவதில் கில்லாடி. எண்பதைக் கடந்த காப்பியக்கோ அவர்களை அண்ணன் என்றழைத்ததுடன் அவரின் திருமதியை அண்ணி எனச் சொல்லி அவையை மகிழ்வித்தார்.
எப்பவும் போல் தனது பேச்சால் எல்லோரையும் மகிழ்வித்து, வரவேற்றார் திராவிடப் போர்வாள் பிலால் அலியார். மாதரசியை மதராசி என வாசித்ததாய்ச் சொல்லி அரங்கை சிரிக்க வைத்தார். ஒவ்வொருவரையும் வரவேற்ற விதமும் சிறப்பு.
கேலக்ஸியின் ஐந்தாம் ஆண்டு பயணத்துக்கு தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட சகோதரர் அபுல் பைஸ், கதை பேசலாம் வாங்க எனத் தாங்கள் வார இறுதியில் கூடிப் பேசியதன் மூலம் அதிகம் வாசிக்க முடிந்தது என்று சொன்னார்.
எழுத்தாளர் மதுமிதா அவர்கள் எழுதிய ‘கை தொழும் தேவதை’ என்னும் நூலினைப் பற்றிய அறிமுக உரையை பாலாஜி பாஸ்கரன் மிகச் சிறப்பாகச் செய்தார். முதல் பிரதியை எழுத்தாளர் ஜெசிலா வெளியிட தொழிலதிபர் அபுதாஹிர் அவர்களும், இரண்டாம் பிரதியை திலீப் வெளியிட குழந்தைகள் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் பெனடிக்ட் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள். இந்தப் புத்தகத்தில் மூன்று சிறப்பான குறுநாவல்கள் இருக்கின்றன. மூன்றுமே அம்மாவைப் பேசுவதாய் இருப்பது மேலும் சிறப்பு.
நான் எழுதிய ‘மாதரசி’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்கான அறிமுக உரையை எழுத்தாளர் ஜெசிலா வழங்கினார். எல்லாக் கதைகளையும் உள்வாங்கிப் படித்து மிகச் சிறப்பான உரையைக் கொடுத்தார். முதல் பிரதியை இலங்கையின் மிகச் சிறந்த மூத்த எழுத்தாளர், ஐயா காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் வெளியிட, திருமதி. தேவதர்ஷினி பாலாஜி அவர்களும், இராஜாராம் வெளியிட தொழிலதிபர் அபுதாஹிர் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள். இந்தத் தொகுப்பில் இருக்கும் பனிரெண்டு கதைகளும் பெண்களின் பெயரில் இருக்கும் என்றாலும் பெரும்பாலும் அப்பெண்களைப் பற்றி ஆண்கள் பேசுவதாய்த்தான் கதை நகரும்.
இந்நிகழ்வுக்குப் பின் உரை நிகழ்த்திய தொழிலதிபர் அபுதாஹிர், தனக்கு இருந்த மன அழுத்தத்துக்கு மருந்தாய் அமைந்தது, ஞாயிறு மாலையில் நடக்கும் ‘கதை பேசலாம் வாங்க’ நிகழ்வில் கலந்துக்கங்க என்று சொன்னார். தான் எப்படி அங்கு வந்து கதை சொல்ல ஆரம்பித்தேன் என்பதையும் எழுத்தாளர் சல்மாவின் கதைகள் எதனால் தன்னை ஈர்க்கின்றன என்பதையும் சொன்னார்.
அதைத் தொடர்ந்து 2023 முதல் கேலக்ஸி வழங்கி வரும் வட்டார வழக்கில் எழுதும் எழுத்தாளருக்கான விண்மீன் இலக்கிய விருது – சென்றாண்டு வரை பாண்டியன் பொற்கிழி விருது – எழுத்தாளர் மலர்வதி அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை பாலாஜி பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் அபுதாஹிர் ஆகியோர் இணைந்து அறிவித்தார்கள்.
அவரைத் தொடர்ந்து கேலக்ஸி மற்றும் விண்மீன் குறித்து நான் பேசினேன். அதன் பின்னர் ராஜாராம், பால்கரசு, பிர்தோஷ் பாஷா, செந்தில் குமார், நூருல் இர்பான், நூர் பாத்திமா மற்றும் தேவதர்ஷினி பாலாஜி ஆகியோர் கேலக்ஸியின் வளர்ச்சி குறித்தும் அதனுடனான தங்கள் பயணம் குறித்தும் மகிழ்வுடன் பேசி, வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
ஐயா ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் ஒரு சிறப்பான உரையை வழங்கினார். அம்மாவைப் பற்றிச் சொன்னபோது அவரின் இறப்புக்கு முன் அவர் தனது கவிதையில் ‘தேவைப்பட்டால் உயிரையும் தருவாள்’ என எழுதிய வரி குறித்தும், அம்மாவின் இறப்புக்குப் பின் அவருக்கு நெருக்கமான ஒருவர் ‘நீங்கள் அறம் பாடிவிட்டீர்கள்’ எனச் சொன்னதைக் குறித்தும் பேசும்போது கண் கலங்கி, மனம் உடைந்தார்… தாய்ப்பாசத்திற்கு வயது நிர்ணயம் இல்லைதானே… அதன்பின் கேலக்ஸியில் புத்தகம் கொண்டு வந்தபோது எழுத்துபிழை திருத்ததில் பாலாஜி பாஸ்கரன் என்ன செய்தார் என நகைச்சுவையாகப் பேசினார். மேலும், தனது மனைவி குறித்தும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வில் மிகச் சிறப்பான பேச்சு என்றால் ஐயாவின் பேச்சுத்தான்.
மருத்துவர் பெனடிக்ட் அவர்கள் பேசும் போது டைனோசரை வைத்து தான் எழுதியிருக்கும் குட்டிக்குட்டியான இருபத்தைந்து கதைகள் குறித்துச் சொன்னார். இக்கதைகளை தனது பேத்திக்குச் சொல்வதற்காகவே எழுதியதாகவும், இதை தமிழ், ஆங்கிலம் மற்றும் அரபி என மூன்று மொழிகளில் ஒரே புத்தகத்தில் கொண்டு வர இருப்பதாகவும் சொன்னார். மேலும், எழுத்தின் மாத்திரைகளின் அளவின்படி நாம் வாசிக்க ஏதுவாய் தான் உருவாக்க நினைக்கும் எழுத்துரு குறித்துச் சொல்லி, அதை உருவாக்க அனைவரும் சேர்ந்து செயல்படுவோம் என்றும் பேசினார்.
பாலாஜி பாஸ்கரன் நன்றியுரை சொல்ல வந்தாலும் கேலக்ஸி, விண்மீன், வெளியிட்ட புத்தகங்கள், அறம் பேசுதல் மற்றும் பாடுதல், அபுதாஹிர் முதன் முதலில் கதை பேசலாம் வாங்கவில் சொன்ன கதை குறித்தும் அதற்குப் பேர் வைத்தது குறித்தும் சிறப்பான உரை நிகழ்த்தி, அனைவருக்கும் நன்றி சொன்னார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் ‘கை தொழும் தேவதை’ மற்றும் ‘மாதரசி’ புத்தகங்கள் வழங்கப்பட்டன.
எப்பவும் பால்கரசு சிறப்பாக போட்டோக்களை எடுத்திருந்தார். குறிப்பாக, எல்லோரையும் தனித்தனியே அழகாக எடுத்திருந்தது சிறப்பு.
சிறப்பான இரவு உணவுடன் நிகழ்வு நிறைவுற்றது. மனதுக்கு நிறைவான ஒரு சிறப்பான நிகழ்வு சனிக்கிழமை மாலையைத் தனதாக்கிக் கொண்டது.
கலந்து கொண்ட, சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.
*****


