ஆறறிவு..?!
-தமிழ்க்காதலன்
ஆணும் பெண்ணும் ஆக்கிய அழகிய உலகில்- உமக்கு
ஆனதுதான் என்ன? ஆகப்போவது தான் என்ன? – நமக்கு
புரிந்ததுதான் என்ன? புத்தியில் உறைந்தது தான் என்ன?
அறிந்ததுதான் என்ன? அனுபவம் நிறைந்தது தான் என்ன?
கற்காலம் இருந்தவன் கல்வி கற்காதவன் ஓரிடம் நிற்காதவன்
கற்களை ஆயுதம் ஆக்கியவன் சொற்களை ஆயுதம் ஆக்காதவன்
புற்கள் புழுதியில் பொழுதுகள் போக்கிய அப்பழுக்கு இல்லாதவன்
பற்கள் ஆயுதம் ஆனபோதும் பாலியல் வன்முறை செய்யாதவன்
செம்புடன் சேர்ந்துதன் தெம்புடன் வாழ்வியல் செதுக்கிய மானுடன்
அன்புடன் சேர்த்ததன் அழகியல் போக்குடன் ஆக்கிய மாண்புடன்
கம்புடன் சேர்த்துசெய் கருவிகள் கல்லிலும் செம்பிலும் கலப்புடன்
அம்புடன் வில்லும் அன்பினில் வெல்லும் ஆயக்கலை சொல்லும்
தங்கம் சேர்நகை அங்கம் போர்த்த அணிந்து திரிந்தவன்
தங்கை தாயென மங்கை பார்த்து பணிந்து தொழுதவன்
அங்கம் சேர்ந்தவள் செம்மை காதலில் உண்மை வாழ்வினன்
பங்கம்நேரா பண்புடன் பல்லுயிர் போற்றும் பழக்கம் ஆனவன்
வெள்ளிச் செம்புடன் வெள்ளை மனதுடன் சுற்றம் சூழ்ந்தவன்
சொல்லி சொல்லி சொற்களை அள்ளி மொழியை கண்டவன்
அல்லி முல்லை கொடியென மடியினில் ஏந்திழை கொண்டவன்
பள்ளிக்கொள் பெண்மனம் புண்பட மென்னுடல் துன்புற செய்யாதவன்
இன்பம் உய்ப்பதில் இலக்கணம் பேசும் இன்சுவை பொழுதுகள்
இன்புற செய்வதில் இசைபட வாழ்வதில் இசையில் தொழுகைகள்
பொன்னும் மணியும் போர்த்திய மேனியில் மனிதனின் அழகியல்
பொய்யும் புரட்டும் பெரும்பகை கொள்ளா உயிர்களின் உலகியல்
ஆடையற்று அலைந்த காலத்திலும் அவனும் அவளும் அழகுதான்
ஆடைக்கட்டி திரிந்த பிற்காலமும் ஆண்பெண் உறவில் மகிழ்வுதான்
கல்வியில் தான்கொண்ட கலவியில் பாலினம் தோற்காத நிகழ்வுதான்
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.!! கலவியில் இன்று ஏன்தகராறு..??
விலங்கிடம் இல்லா செயல் விழிப்புற்ற சமூகத்திடம் ஏன்..?
வியப்புற மாண்பினில் சிறந்தவன் தீவினை தீயால் வீழ்ந்தனன்
எக்காலமும் இல்லா பழக்கம் இக்காலம் எல்லாமும் புழக்கம்
ஏலனமாய் தெருவில் வீழ்ந்திட ஏதுமறியா உணர்வும் அறிவும்
உண்மை அறிவுதான் நமக்கு உண்டென உரைப்பது எங்ஙனம்..??
உம்மிடம் செறிவுற இருக்கும் சான்றுஏதென வினவும் உலகு..!!
பள்ளிப் பிள்ளைகள் இன்று பாலியல் தொல்லையில் அழுகிட
பாட்டியும் பேத்தியும் பருவம் உருவம் பேதமிலா பாலுறவு
இரும்பு கண்ட பின்தான் இவ்வுலகின் தலைகீழ் மாற்றம்
இருக்கும் பொறிகள் யாவிலும் இம்மானுடம் கண்டது ஏற்றம்
இரும்பென இறுகிய மனமும் குணமும் எப்போது வந்தது..??
இளகிய மனம்தான் மானுட இலக்கணம் இன்னுமா தலைக்கணம்..?
கொள்ளும் குணம் நீக்கி கொல்லும் குணம் கொண்டதேன்..?
தள்ளுவன தள்ளாமை தள்ளாடும் வரை கல்லாமை ஏன்..?
கள்ளுண்ணா ஆண்கள் காண்பது எப்போது..? பெண்கள் நெகிழ
கணவன் ஆவது எப்போது..?? காவலன் ஆவது எப்போது..?
படித்தவன் உலவும் நாடாயீது..?? பாரடா இதுதான் தமிழ்நாடடா
குடித்தவன் உலவும் சுடுகாட்டுப் பேய்களிடம் பெண்கள் படும்பாடு
பண்பற்றவன் பரந்து திரியும் பகலும் இரவும் தந்தவன்யார்..??
புண்பட்டவள் புழுதியில் அல்லது கொடும் தீயில் எறிந்தார்பார்
பதினைந்தாண்டு படிப்பில் கற்காத படிப்பினை பண்பினை வாழ்வில்
பள்ளி முதல் கல்லூரிவரை பக்கத்தில் இருந்தவளை பலியாக்கும்
பாலுறவு வன்புணர்வு வாத்தியாரும் மாணவரும் வாய்த்த நாடு
ஆறறிவு உண்டென்றால் யார் நம்புவார்..?? ஆறறிவார் ஆறறிவார்..??
*****


