இத்தனை நாட்களாக உங்களை அழைத்துக் கொண்டு நிஸ்வாவின் பெருமையான வரலாற்றுச் சின்னங்களையும் கலாச்சாரப் பெருமைகளையும் சுற்றிக் காட்டியதெல்லாம் கால் தூசுக்குக் கூடப் பெறாது என கால் வைத்த கணம் “தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்” என மனம் உற்சாகத்தில் பாட்டுப் பாடத் துவங்கி விடும் இடம் “வாதி முஹைதீன்”.
ஓமான் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு சொர்க்க பூமி. இங்கு அழகிய கடற்கரைகள் உண்டு; ஒங்கியுயர்ந்த கரடு முரடான மலைத் தொடர்கள் உண்டு, பரந்து விரிந்த பாலை நிலமும், மணற் குன்றுகளும் உண்டு ஆனால் இவையனைத்தையும் விட இங்குள்ள நெடிந்துயர்ந்த நம்மை மலைக்க வைக்கும், “வாதி” என்றழைக்கப்படும் கணவாய்களே என் மனம் கவர்ந்தவை.
இங்குள்ள ஒவ்வொரு கணவாயும் தனித்தன்மையானவை. அவற்றின் பிரம்மாண்டம் மயிர்கூச்சரியச் செய்யக் கூடியது. எத்தனை முறை சென்றாலும் இரு புறமும் ஓங்கியுயர்ந்து, வளைந்து நெளிந்து செல்லும் கணவாய்களும், அண்ணாந்து பார்த்தால் பளிச்சென்ற நீல நிறத்தில் கண்ணைப் பறிக்கும் வானும் ஆங்காங்கே தென்படும் பேரீட்சை, வாழை, மா, எலுமிச்சை மற்றும் இலந்தை மரங்களும், பெரும் பெரும் பாறைகளும், பளிங்கு போன்ற நீரோடைகளும், மரகதப் பச்சை அல்லது துத்தநாக ஊதா நிறக் குளங்களும் அவற்றின் ஆழத்தில் கிடக்கும் கூழாங் கற்களும், நீந்திக் கொண்டிருக்கும் சிறு சிறு மீன்களும் நம் விழிகளை விரிய வைப்பன.
நிஸ்வாவில் நாங்கள் வசிக்கும் கல்லூரி வளாகத்தில் இருந்து பதினைந்தே நிமிடத் தொலைவில் இருக்கும் “வாதி முஹைதீன்” என்ற கணவாய்க்குள் தான் நான் இன்று உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன். கடந்த அத்தியாயத்தில் நாம் கண்டு ரசித்த “அல் கத்மீன்” ஃபலஜ்ஜில் இருந்து “ஜபல் அக்தர்” என்ற மலைப் பிரதேசத்திற்குச் செல்லும் சாலையில் மூன்று கி.மீ தூரம் சென்ற பிறகு இடது புறம் இறங்கினால் அந்தக் கணவாய்க்குள் செல்லும் மண் சாலையைக் காண முடியும்.
கரடு முரடான அந்தப் பாதையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு செல்லும் ஒரிரு வாகனங்களின் பின்ணணியில் நீல வானம் வரை நெடிந்துயர்ந்து நின்று மிரட்டும் மலை முகடுகள் இயற்கையின் முன் நாம் எவ்வளவு அற்பமானவர்கள் என்பதை உணர்த்தும். ஆங்கில எழுத்தான V போலத் தோன்றும் கணவாயின் அகன்ற முகப்பு நாம் உள்ளே செல்லச் செல்ல மேலும் மேலும் அகன்று நம்மை ஒரே சமயத்தில் திகைப்பிற்குள்ளும், ஆச்சரியத்திற்குள்ளும் ஆழ்த்தும்.
பல இடங்களில் நாம் காணும் அழகிய பாறை மடிப்புகளின் நிழல் அப்படியே பாயை விரித்துப் போட்டுப் படுத்துக் கொள்ளலாம், வேறு எங்கும் செல்ல வேண்டாம் எனச் சுண்டி இழுக்கும். காலை, மாலை, இரவு, நண்பகல் என எந்த நேரத்தில் சென்றாலும் சூழல் அவ்வளவு ரம்யமாகவும், நிசப்தமாகவும் இருக்கும்.
சாலையின் முடிவில் தோப்புகளும், ஒரு சில வீடுகளும் இருக்கின்றன. மீறிப் போனால் பத்துப் பதினைந்து குடும்பங்கள் வாழக் கூடும். ஆடு மேய்ப்பதும், பேரிட்சை மரங்களைப் பர்த்துக் கொள்வதும் அவர்களது பிரதான தொழில்.
ஒரு கட்டத்திற்கு மேல் சிறிய செடான் கார்களை உள்ளே ஓட்டிச் செல்ல முடியாது. அதனால் தோப்புகள் இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டுக் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடக்க வேண்டும். இதுவே ப்ராடோ அல்லது லேண்ட் க்ரூசர் போன்ற கனமான 4 x 4 வாகனங்களில் வருவோர் கடைசி வரை காரிலேயே செல்ல முடியும். இடைப்பட்ட ரகமான நமது வாகனம் செடான் கார்களை விட ஐநூறு மீட்டர் தூரம் உள்ளே செல்லும்.
பழங்கள், நொறுக்குத் தீனிகள், பானங்கள், மாற்றுடைகள், பிரித்துப் போட்டு அமர்வதற்குத் தேவையான பாய்கள், தரைவிரிப்புகள் என தேவையான பொருட்களை ஆளுக்கொன்றாகத் தூக்கிக் கொண்டு வளைந்து நெளிந்து செல்லும் வாய்க்கால் மீதே நடந்து செல்வது முதல் முறை செல்வோருக்கு ஒரு திகிலான அனுபவத்தை வழங்கும்.
தரையில் இருந்து பத்தடி உயரத்தில் ஒரு சிறு வாய்க்காலின் மீது நடப்பது சிலருக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடுமென்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
‘வாதி முஹைதீன்’ ஆண்டு முழுவதும் வற்றாத நீரோடைகளையும், பளிங்கு போன்ற குளங்களையும் கொண்டது. நாம் நடந்து செல்லும் வாய்க்கால் வாதியின் நீராதாரத்தோடு இணைவதை இங்கு வெகு எளிதாகக் காண முடியும். பல வாதிகளில் இந்த வாய்க்கால்கள் தோப்புகள் வழி வெகுதூரம் உள்ளே செல்லும். அவற்றின் துவக்கப் புள்ளியைக் கண்டறிவது கடினம். ஆனால் இங்கு அதனை வெகு எளிதாகக் காண முடியும்.
இந்த வாதி அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றது. அதிக தொலைவு நடக்க முடியாதோர், பெரியவர்கள், அச்ச உணர்வுடையோர் துவக்கத்தில் இருக்கும் குளத்திலேயே நீந்தி மகிழலாம். தனிமையும் ஆழமான நீண்ட குளங்களையும் விரும்பும் உடல் வலுவும் துணிச்சலும் கொண்டோர் தொடர்ந்து முன்னேறலாம். கயிறுகளைக் கட்டி மலையேறும் பயிற்சியும், உடல் வலுவும் கொண்டோர் இந்த வாதியின் வழியாகவே ஜபல் அக்தரில் இருந்து பிர்கித் அல் மெளஸிற்கு இறங்க முடியும். அப்படி ஒரு குழுவினரோடு இறங்கியபோதுதான் இந்த வாதிக்குள் நுழையும் வழியை அறிந்து கொண்டேன்.
நீரோடைகளின் வழியே உருண்டு கிடக்கும் பெரும் பாறைகள் மீது தாவி ஏறியும், தாண்டியும் செல்வது குழந்தைகளுக்குப் பெரு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். செல்போன்களில் இருந்தும், கணிணித் திரைகளிலிருந்தும் கண்களை அகற்ற மறுக்கும் குழந்தைகளை இது போன்ற இயற்கை எழில் கொஞ்சம் இடங்களுக்கு அழைத்துச் சென்றால் நாள் முழுவதும் குதூகலமாக விளையாடிக் கொண்டிருப்பர்
இந்தக் கணவாயின் வலது புறம் மேலேறினால் பழைய இடிபாடுகளைக் காண முடியும். சிதிலமடைந்து கிடக்கும் மக்கள் வாழ்ந்த பழைய மண் வீடுகளைப் புனரமைத்தால் மிக அற்புதமான தங்கும் விடுதிகளாக மாறி வருமானத்தைக் கொட்டிக் கொடுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஏராளமான ஓமானி கிராமங்களும், நகரங்களின் சிதிலமடைந்த கைவிடப் பட்ட பழைய குடியிருப்புப் பகுதிகளும் இது போல புரைமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன.
ஐம்பது டிகிரி வெயில் கொளுத்தும் கோடையின் உச்சமான ஜுலை ஆகஸ்டு மாதங்களிலும் இது போன்ற வாதிகளுக்குள் நுழைந்தால் அங்குள்ள குளிர்ந்த நீரோடைகளிலும் சிறு சிறு குளங்களிலும் நேரம் போவது தெரியாமல் ஊறிக் கொண்டிருக்கலாம். வாதி முஹைதீனின் குளங்கள் நீந்தத் தெரியாதவர்களுக்கும், குழந்தைகளுக்குமானவை. மற்ற புகழ்பெற்ற வாதிகளைப் போல அளவில் பெரிய ஆழமான நீச்சல் தெரியாது கடக்க முடியாத நீளமான குளங்கள் இந்த வாதியில் கிடையாது.
இக்கணவாய்க்குச் செல்லும் தொண்ணூறு சதவிகித மக்கள் நுழை வாயிலில் இருக்கும் ஒரு சில குளங்களோடு நின்று விடுவர். அப்படியே தொடர்ந்து நீண்ட, ஆழமான குளங்களை நாடி வெகு தூரம் உள்ளே செல்லும் கொஞ்சநஞ்ச சாகசக் காரர்களும் தவற விடும் ஒரு ரகசியக் குளம் இங்கு இருக்கிறது. அதுவும் 20 நிமிடங்களில் அடைந்து விடக் கூடிய தொலைவில் இருக்கும் அந்தக் குளம் ஓமானின் மிகச் சிறந்த பத்து இயற்கைக் குளங்களில் ஒன்று என என்னால் அடித்துச் சொல்ல முடியும்.
கணவாயின் இடது புறம் மூன்று மிகப் பெரிய பாறைகளால் சூழப்பட்டு ஒரு அழகிய நீர் சுழித்து ஓடும் இயற்கையான ஜக்கூஸி போல இருக்கும். ‘“வாதி ஷாப்”, “வாதி பாணி காலித்” போன்ற ஓமானின் மிகப் புகழ் பெற்ற கணவாய்கள் அளவிற்கு வாதி முஹைதீன் கவர்ச்சிகரமானதல்ல. ஆனால் அதன் காரணமாகவே இந்தக் கணவாய்க்குள் இன்று வரை வத வத வெனக் கூட்டம் இறங்காமல் இருக்கிறது. அது மட்டுமின்றி நான் குறிப்பிடும் இந்த ரகசியக் குளம் இது வரை பிரபலமடையாததும் எங்களைப் போன்ற உள்ளூர் வாசிகளுக்குப் பெரிய அனுகூலம்.
‘“குணா” திரைப்படத்தில் உலக நாயகன் தனது காதலி குளிக்க வேண்டும் எனக் கேட்டவுடன் ஒரு அழகிய குளத்திற்கு அழைத்துச் செல்வாரில்லையா?, அதற்கொப்பான சொல்லப் போனால் அதை விட அழகான குளமிது. உங்கள் மனதிற்குப் பிரியமானவர்களை அசத்த வேண்டுமென நினைத்தால் அவர்களை இந்தக் குளத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்யுங்கள். அப்படிச் செய்தால் அவர்களிடம் நீங்கள் வேண்டும் வரமனைத்தும் போதும் போதுமெனத் திகட்டத் திகட்டக் கிடைக்கும்.
இப்படி வாதி முஹைதீனின் தெளிந்த நீரோடைகளில் வேண்டிய மட்டும் ஆட்டம் போட்டுக் களைத்த பின்னர் வண்டியேறி இசை ஞானியின் இசையின் துணையோடு மெல்ல ஜபல் அக்தர் மலையேறலாம். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் வருவதைப் போன்ற அற்புதமான மலைப் பாதை. 2000 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஜபல் அக்தர் என்ற மலைப் பகுதியில் நிறைய சிறு சிறு கிராமங்கள் இருக்கின்றன.
ஆயிரத்து நூறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம் மலைப் பகுதியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறு சிறு கிராமங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட “அல் சோவ்க்ரா” (Al Sowgra) என்ற ஒரு அழகிய சிறு மலைக்கிராமத்திற்குத் தான் உங்களை அழைத்துச் செல்வதாகத் திட்டம். அக்கிராமத்தில் மொத்தமே ஐந்து குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றன. அங்குள்ள ஒரு புகழ் பெற்ற “தி க்ளிஃப்” (The Cliff) என்ற விடுதியில் ஓரிரவு உங்களைத் தங்க வைத்துக் களிப்படையச் செய்ய விரும்புகிறேன்.
கணவாய்ப் பயணத்தில் கால்களுக்கும், உடலுக்கும் ஏற்பட்ட களைப்பிற்கு அழகிய மலைப் பாதையும், மனதை வருடும் இனிய இசையும் மருந்தாகட்டும். மதிய உணவிற்கு நாம் அந்த ஸ்வாக்ரா கிராமத்தைச் சென்றடைந்து விடலாம்.
அந்தக் கிராமம் குறித்தும் ஜபல் அக்தரின் பிற சிறப்புகள் குறித்தும் அடுத்த முறை விண்மீன் உதிக்கும் போது கதைக்கிறேன்.


