புரோவிஷனல் ஸ்டோர்ஸ் வந்தவன், சுலோ சொன்ன பொருட்களையெல்லாம் கொண்டுவந்த பையில் போட்டுக்கொண்டு வீடு திரும்பினான்.
சாமான்களையெல்லாம் சுலோவிடம் கொடுத்தபின், சோபாவில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.
அவனது பார்வை விட்டத்தில் மாட்டியிருந்த மின்விசிறியை நோக்கியிருந்தது. மின்விசிறி சுழன்றதால் அவன் சிறிது நேரத்தில் கண்களை மூடினான். அவனது நினைவு பின்னோக்கிச் சென்றது.
“ஹலோ ரமேஷ், குட் மார்னிங்.”
“குட் மார்னிங் சார்” என்றான் ரமேஷ் அவனது மேலாளரிடத்தில்.
“ரமேஷ், கொஞ்சம் இன்றைய புரொடக்ஷன் பிளானைக் கொண்டு வாயேன்! அதைக் கொஞ்சம் பார்க்கணும். இன்னும் ஒரு மணி நேரத்தில் சேர்மனுடன் மீட்டிங் இருக்கு.”
“சார், ஒரு பத்து நிமிஷம் கொடுங்க, எல்லாத்தையும் பிரிண்ட் எடுத்துத் தரேன்.”
“சரி, உடனே எடுப்பா! ஏதாவது திருத்தம் இருந்தால் செய்யணும் இல்ல.”
“இதோ உடனே எடுக்கிறேன் சார்.”
ரமேஷ் கார் உதிரி பாகம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணிபுரிகிறான். அந்த உதிரி பாக உற்பத்தி நிறுவனத்தில் சுமார் 300லிருந்து 350 நபர்கள் சுழற்சி முறையில் காலை, மதியம் மற்றும் இரவு என்று ஷிஃப்ட் பேசிஸில் வருவதுண்டு. சுமார் நூறிலிருந்து நூற்றுப் பதினைந்து நபர்கள் ஒரு ஷிஃப்ட்டுக்கு வருவதுண்டு. ரமேஷ் முழு புரொடக்ஷன் மேற்பார்வையைப் பார்த்துவந்தான்.
சரியான ஆட்களைத் தேர்ந்தெடுத்து அந்தந்த மெஷினிங் ஏரியாவில் கொடுப்பது, புதிய நபர்கள் என்றால், அவர்களுக்கு சூப்பர்வைசர் மூலம் தகுந்த டிரெய்னிங் கொடுப்பது.
தினம் புரொடக்ஷன் அவுட்புட்டை சரிபார்ப்பது, எங்காவது அவுட்புட் குறைவாக இருந்தாலோ இல்ல அதிக நபர்கள் தேவையாக இருந்தாலோ அதையும் ரமேஷ்தான் பார்க்க வேண்டும். இதுமட்டுமில்ல, கஸ்டமர் கிட்ட இருந்து ஏதாவது கம்ப்ளெய்ன்ட் வந்தா, அது திரும்பவும் நடக்காம இருக்க, கஸ்டமருக்கு எழுத்துப்பூர்வமா சொல்றதுன்னு, அவனுக்குப் பல பொறுப்புகளை அந்த நிறுவனம் கொடுத்திருந்துச்சு.
ஆக மொத்தத்தில், புரொடக்ஷன் நல்ல விதமாக வந்துவிட்டால், அவன் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடுவான். அப்படி அவன் எண்ணிய மாதிரி புரொடக்ஷன் அவுட்புட் வரவில்லை என்றால், அவனே நேராக அந்தப் பகுதிக்குச் சென்று குறை ஏதேனும் உள்ளதா என்று பார்ப்பது தொடங்கி, அவனே ஒரு ஆபரேட்டராக மாறிவிடுவான். ஏனென்றால், வேலைப் பளுவை அவர்களுக்குச் சற்றுக் குறைக்க அவன் உதவியும் செய்வான். இவன் அந்த ஆபரேட்டரிடம் கேட்டால், “ஆமாம் சார், ரெண்டு மூணு மெஷின் ஓட்ட வேண்டியதிருக்கு. இந்த மெஷின் ஆபரேட்டர் இன்று வரவில்லை, புதிய நபர்தான் இருக்கிறான், அவனிடத்தில் இந்த வேலையை ஒப்படைக்க முடியாது. அவனால் இப்போதைக்கு என்ன முடியுமோ, அதை கொடுத்திருக்கிறேன்,” என்பான். இதனாலேயே ரமேஷ் அந்த மாதிரி தருணங்களில் ஒரு வேலையாளாக மாறிவிடுவான்.
பெயர்தான் பன்னாட்டு நிறுவனம். ஆனால், நன்றாக வேலை செய்பவர்களைச் சக்கையாகப் பிழிந்து வேலை வாங்கத் தெரிந்த மேலதிகாரிகள், அவர்களுடைய நாட்டிலிருந்து இங்கு வந்து நம்மை ஒரு கைப்பாவையாகவே மாற்றிவிடுகின்றனர். அவர்கள் சொன்னால் சரி என்று சொல்ல வேண்டும். வெள்ளைக் காக்கை பறக்கிறது என்றால், நாம் ‘ஆம்’ என்றுதான் பதில் கூற வேண்டும். வேலை ஒப்பந்தப் படிவத்தில் எட்டு மணி நேரம் என்றுதான் எழுதியிருக்கும். ஆனால், அங்கு எழுதப்படாத சட்டம் என்னவென்றால், பன்னிரண்டு மணி நேரக் கட்டாய வேலை. அவரவர் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள, கண்டிப்பாகப் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்தே ஆகவேண்டும்.
இந்த பன்னிரண்டு மணி நேர வேலையால் ரமேஷால் குடும்பத்துடன் நேரம் ஒதுக்க முடியவில்லை. வாரத்திற்குச் சில சமயம் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தமும் நிலவும். இல்லையென்றால் வேலையில் சாதகமான நிலை ஏற்படாது. அவனது குழந்தை அவனைப் பார்ப்பது வாரத்திற்கு ஒரு நாள்தான். அதிலும் பாதி நேரம் அவன் தூங்கிக்கொண்டுதான் இருப்பான். தினம் ரமேஷ் காலையில் கம்பெனி வண்டியைப் பிடிக்க வேண்டுமென்றால், சுமார் ஐந்தேகால் மணிக்கெல்லாம் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும். அப்போதுதான் நிறுவனத்தின் வண்டியைப் பிடிக்க முடியும். ரமேஷ் கிளம்பும் சமயம் அவனது குழந்தை தூங்கிக்கொண்டிருக்கும். பின் அவன் வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பி வரும் போதும் குழந்தை தூங்கிக்கொண்டுதான் இருக்கும். அவன் சுமார் ஒன்பதிலிருந்து பத்து மணியளவில்தான் வீட்டிற்கே வருவான்.
வந்தவுடன் கை, கால், முகம் எல்லாம் அலம்பியவுடன், சுலோ உணவைப் பரிமாறுவாள். பத்திலிருந்து பதினைந்து நிமிஷம் வேகவேகமாக உணவைச் சாப்பிடுவான்.
அதைப் பார்த்த சுலோ அவனிடம், “ஏங்க இவ்வளவு அவசரம்! கொஞ்சம் பொறுமையாகச் சாப்பிட்டா என்ன?” என்பாள்.
“இல்ல டீ.. கம்பெனியில இப்படி வேகவேகமாச் சாப்பிடப் பழகியாச்சு, அதை மாத்த முடியல.”
“பார்த்துச் சாப்பிடுங்க, எங்காவது தொண்டைக்குழியில் மாட்டிக்கப் போகுது.”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, நீ கவலைப்படாதே!”
“நம்ம பாப்பா தூங்கிட்டாளா?”
“ஆமா, மணி எவ்வளவு ஆகுது, இப்ப வந்து கேட்குறீங்க?”
“சரிம்மா, இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வீட்டில்தான் இருக்கப் போறேன். அவளுடன் ஞாயிறு முழுவதும் நேரம் போக்கலாம்.”
“ஆமா, இப்படித்தான் சொல்லுவீங்க. ஆனா சனிக்கிழமை வந்தா போதும், ‘அம்மா, நாளைக்கு வேலை இருக்கு, கொஞ்சம் மன்னிச்சுக்கோ’ என்பீங்க.”
“சுலோ, அப்படியெல்லாம் இந்த வாரம் நடக்காது. கட்டாயம் நாம எங்காவது வெளியே போகலாம்,” என்றான் ரமேஷ்.
இவை அனைத்தும் அவனது நினைவில் கடல் அலையைப் போல கரையைத் தொட்டு மீண்டும் கடலுக்கே போவது போல் அவனது பழைய நினைவுகள் எல்லாம் மீண்டும் மீண்டும் வந்து போயின. விழிப்பு தட்டவே கண்களைத் திறந்து பார்த்தான். கீர்த்தனா அவளது பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள்.
கீர்த்தனாவின் கையில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை இருந்தது, அதை வைத்துக்கொண்டுதான் அவள் விளையாடிக்கொண்டிருந்தாள். ரமேஷ் அந்த பொம்மையையே பார்த்தபடி தனது மனதில் எண்ணத் தொடங்கினான். மெத்தப் படித்த இளைஞர்களும், இளைஞிகளும் கூட தங்கள் குடும்ப சூழலுக்காக கம்பெனியுடைய கைப்பாவையாக ஒரு தலையாட்டி பொம்மையாகவே மாறிவிடுகின்றனர்.
நம் நாடு முன்னேறி வருகின்ற இந்த சமயத்தில் பொருளாதாரமும் சற்று உயர வேண்டும். ஆனால் அது அப்படி நடப்பதில்லையே. வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து கம்பெனி தொடங்கி அவர்கள் நல்லவிதமாக பிராஃபிட் பார்க்கிறார்கள். கம்பெனி இருக்கும் ஸ்டேட்டுடைய சப்சிடியைப் பெறுகிறார்கள். ஆனால் வேலைக்கு சேரும் நபர்களுக்கு தகுந்த சம்பளமும் மரியாதையும் கிடைக்கிறதா என்றால் இல்லை எனக் கூறலாம்.
“ஏங்க சமையல் தயார், வாங்க சாப்பிடலாம்” என்றாள் சுலோ.
ரமேஷ் சுய நினைவிற்கு மீண்டும் வந்தான். “இதோ வந்துடுறேன்மா.. ஒரு நிமிஷம் கை அலம்பிட்டு வந்துடுறேன்” என்றான் ரமேஷ்.
சாப்பாட்டுத் தட்டை எடுத்து வைத்தாள். பொரியல், கூட்டு எல்லாத்தையும் தனியா ஒரு சின்ன தட்டில் வைத்து பெரிய தட்டில் சாதத்தையும் சாம்பாரையும் ஊற்றினாள். ரமேஷ் சாம்பாரை சாதத்துடன் பிசைய ஆரம்பித்தவன் பிசைந்துகொண்டே இருந்தான்.
இதை பார்த்த சுலோச்சனா, “ஏங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” எவ்வளவு நேரமா சாதத்தை பிசைஞ்சுகிட்டே இருப்பீங்க, எடுத்து வாயில் போட வேண்டியதுதானே! என்ன ஆச்சு உங்களுக்கு? அப்பவே பாப்பாவை கடைக்கு கூட்டிக்கிட்டு போகும் போது கவனிச்சேன், கேட்கவும் முற்பட்டேன். ஒண்ணும் இல்லேனு சொல்லிட்டீங்க. இப்ப என்னவாம்? ஏன் எதையோ பறிகொடுத்தாற்போல இருக்கீங்க. சொன்னால்தானே தெரியும். இப்ப சொல்லப்போறீங்களா இல்ல நான் எழுந்து போகவா!”
“ஏய்! சுலோ அதெல்லாம் ஒண்ணுமில்ல.”
“இல்ல ஏதோ இருக்கு, அதை என்னிடம் மறைக்கிறீங்க. சொல்லணும்னா சொல்லுங்க இல்ல அப்படியே இருங்க.”
“அதுவா சுலோச்சனா, கடந்த ஒரு வாரமா கம்பெனியில ஒரே பிரச்சனை.”
“என்னவாம்?”
“நானும் இந்தக் கம்பெனியில பத்து வருஷமா வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். உனக்கே தெரியுமில்ல நான் யாரிடமும் வீண் வம்புக்கோ அல்லது வாக்குவாதமோ செய்யமாட்டேன் என்று.”
“ஆமாம், அதற்கென்ன இப்போ?”
“பத்து வருஷமா என்னைப் பார்த்துக்கிட்டு இருந்த மேலாளர்… இப்ப எனக்கும் அவருக்கும் சின்ன மனஸ்தாபம். அதனால் மேலாளர் எப்ப பார்த்தாலும் ஏதாவது சொல்லிட்டே இருக்காரு. நல்லா சரியா வேலை செய்தாலும் தேவையில்லாம தப்புன்னு சொல்லித் திட்டிக்கிட்டே இருக்காரு. எனக்கு என்ன செய்வது எனத் தெரியல.”
அவள் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நான் ஒண்ணு சொன்னா கத்தமாட்டீயே!”
“இல்ல சொல்லுங்க.”
“பாப்பாவைக் கடைக்கு கூட்டிக்கிட்டு போகும் முன்னர், படுக்கை அறையில்தான் இருந்தேன்.”
“அதான் எனக்குத் தெரியுமே, மேல சொல்லுங்க.”
“அது வந்து.. வந்து..”
“என்ன நீட்டி முழக்குறீங்க, சொல்ல வந்ததைச் சொல்ல வேண்டியதுதானே.”
“பதற்றப்படாத, நான்.. பாப்பா வரலேனா என் கதை முடிந்திருக்கும்.”
“என்ன சொல்றீங்க புரியலையே.”
“அதான் போய் சேர்ந்திருப்பேன் உங்களை விட்டுட்டு.”
“இது என்ன பைத்தியக்காரத்தனம், குத்துக்கல்லு மாதிரி நான் இருக்கேன். நம்ம சந்தோஷத்திற்கு பாப்பா இருக்கா. எப்படி உங்களுக்கு மனசு வந்தது அந்த பைத்தியக்காரச் செயலைச் செய்வதற்கு? கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தீங்களா? நீங்க இல்லேனா நாங்க எப்படி வாழப்போறோம்?”
இப்போது அவன் பேசாதிருந்தான்.
“ஏங்க இந்தப் பிரச்சனைக்கு சாவுதான் ஒரே முடிவுன்னா! இந்த உலகத்துல பாதிப் பேர் சாக வேண்டியதுதான். எந்தக் கம்பெனியில நடக்காதது உங்க கம்பெனியில நடந்திருச்சு. ஏன் எல்லாத்தையும் மனசுக்குக் கொண்டு போறீங்க. அதான் மெத்தப் படித்தவர்கள் எல்லாம் அவரவர் மேலாளரிடம் ஒரு தலையாட்டி பொம்மை மாதிரிதான் இருக்கீங்க, பிறகு என்னவாம்? இன்னைக்கு திட்டுறவன் நாளைக்குப் பாராட்டுவான் அப்ப என்ன பண்ணுவீங்க. நீங்க உயிருடன் இருந்தால்தானே அந்தப் பாராட்டைப் பெற முடியும். கொஞ்சம்கூட யோசிக்காம அப்ப இந்த முடிவெடுத்த மாதிரி இனி எடுக்காதீங்க.”
அமைதியாய் இருந்தான்.
“நாங்க ரெண்டு பேரும் இருக்கோம் உங்களுக்கு. இந்த வேலை போனாப் போகுது, வேறு வேலை பார்த்துக்கலாம். அதற்காக மனம் உடைஞ்சு இப்படித் தப்பான முடிவெல்லாம் எடுக்கக் கூடாது.”
அவன் தலையாட்டினான்.
“எனக்கு சத்தியம் பண்ணிக்கொடுங்க இனி இது போன்று தப்பான முடிவெல்லாம் எடுக்க மாட்டேன்னு. கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன் இந்த இடத்தில்.”
“என்ன சொல்லு சுலோச்சனா?”
“தலையாட்டி பொம்மையா இருக்கிறது பிடிக்கவில்லை என்றால் விட்டுடுங்க, வேறு வேலை பார்த்துக்கலாம். அதை விட்டுட்டு இப்படித் தப்புத் தப்பா யோசிச்சு முடிவெடுத்து எங்களையும் தனியா விட்டுட்டுப் போயிடாதீங்க.”
“சத்தியம் பண்ணுங்க இப்பவே.”
“சத்தியமா சொல்றேன் சுலோச்சனா, இனி இது போல தப்பான முடிவெடுக்க மாட்டேன். இந்த வேலை இல்லேன்னா வேற வேலை. எவ்வளவு காலம்தான் நாம் தலையாட்டி பொம்மை போல அவனுக்குக் கீழ வேலை செஞ்சுகிட்டு இருக்கிறது. கஞ்சியோ கூழோ இனி நம் சொந்தமா சம்பாதிக்க வேண்டியதுதான்.”
“அப்படிச் சொல்லுங்க. நம் நம்பிக்கையை எப்போதும் தளரவிடக் கூடாதுங்க. முயற்சி செய்தால் வெற்றி நமக்கே.”


