நான் பயணித்துக் கொண்டிருந்த பஸ் திடீரென நின்றது, காரணம் இளம்பெண்ணொருத்தி விபத்துக்குள்ளாகியிருந்தாள்.
வீதியெங்கும் இரத்தவெள்ளம். எல்லாரையும் போல் நானும் யன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்தேன். அவள் முகத்தை பார்த்ததும் தான் தாமதம் பஸ்ஸிலிருந்து பாய்ந்து இறங்கி ஓடினேன் அவளுக்கருகில்… உள்ளம் பதறியது.
“எம்பூலன்ஸ்க்கு யாராவது போன் பண்ணுங்களேன்” என கத்தியப்படி அவளைத் தூக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி.
அவள் ஆனந்தி.
என் ஆபீஸில் பணிபுரிபவள்.
“கலை சார் மலருக்கு ஆக்சிடண்ட் ஆயிடுச்சி…” பயத்தில் அவள் குரல் நடுங்கியது.
நான் எதுவுமே பேசாமல் மலரைத் தூக்கி அருகில் நின்ற ஆட்டோவில் ஏற்றினேன்.
ஆட்டோ ஹோஸ்பிட்டலை நோக்கி விரைந்தது.
ஆட்டோக்குள் ஆனந்தியும் இருந்தாள்.
‘…மலர்… மலர்… எழுந்திரு…’வென என் கரங்களிலிருந்த மலரின் கன்னங்களைத் தட்டிக்கொண்டே வந்தாள். மலர் முற்றிலும் மயங்கியிருந்தாள்.
மலர் என் தாய்மாமன் மகள். மாமா இறந்து போயி மூன்று வருஷமாயிடுச்சு. மலருக்கு எல்லாமே அவள் தாய் பாமா தான். அவளும் என் அலுவலகத்தில்தான் பணிபுரிகிறாள்.
அவளின் அழகும் குணமும் என் அம்மாவை கட்டிப்போட்டிருந்தன. அதனால் அவளையே கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று விடாப்பிடியாக இருக்கிறாள்.
மலரை அட்மிட் பண்ணிவிட்டு நானும் ஆனந்தியும் வெளியே காத்துக் கொண்டிருந்தோம்.
எனக்கருகில் அமர்ந்திருந்த ஆனந்தி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
“என்ன அவசரமாய் பேச்சு இவளுக்கு… கவனமாக வரத்தெரியாது…” என முணுமுணுத்தப்படி இருந்தேன்.
அது ஆனந்திக்கு கேட்டிருக்க வேண்டும் என்னை திரும்பி பார்த்தவள், “கலை சார்… அவள் உங்களைப் பார்க்கத்தான் வந்தாள்” என்றாள்.
நான் ஒரு கணம் திகைத்தேன்.
பின் அலட்சியமாக “ஏன் என்னைப் பார்க்க வரணும். நான் அன்றைக்கே சொல்லிட்டன்… மலர கல்யாணம் பண்ணிக்க சம்மதம் இல்லன்னு.. அதை பற்றி பேச வந்திருப்பாள்…” என்றேன் காரமாக..
“அது இல்ல சேர்” என்றவாறு அங்குமிங்குமாக ஏதோ தேடினாள்.
ஆனந்தி மலரின் பைக்குள் இருந்து ஒரு பொதியை கையில் தந்துவிட்டு “சேர் மலர் இன்றைக்கு லீவு எடுக்கிறதா என்னட்ட சொன்னாள். ஆனா நீங்க டிபன் பாக்சை வைச்சிட்டு போயிட்டதா உங்கம்மா போன் பண்ணி சொல்லவும், சீக்கிரமா டிபனை ரெடி பண்ணி நீங்க வந்த பஸ் பக்கமா ஓடி வரும்போது ஆட்டோல பட்டு ஆக்சிடண்ட் ஆகிடுச்சு”.
நான் சற்று தடுமாறினேன்.
அதை காட்டிக்கொள்ளாமல் “எனக்கு நேரமாயிடுச்சு. ஆபீஸுக்கு போகணும். மலர் முழிச்சதுக்கு அப்பறம் ஒரு போன் பண்ணுங்க ஆனந்தி” என்றுவிட்டு அவள் பதிலுக்கு கார்த்திராமல் வெளியேறி, பஸ் ஏறி மின்னல் வேகத்தில் ஆபீஸை அடைந்தேன்.
இன்று காலையிலும் கூட மலர் போன் பண்ணியிருந்தாள்.
“ஹலோ… கலை கொஞ்சம் உங்களோட பேசணும்” என்றாள்.
“எனக்கு நேரமில்ல மலர். நான் ஆபீசுக்கு கிளம்பிட்டு இருக்கன் ” என அவள் அழைப்பைத் துண்டித்தேன்.
மீண்டும் போன் சிணுங்க “என்ன” என்றேன் அலட்சியமாக.
“பிளீஸ் கலை அஞ்சு நிமிஷம்…. எதுக்காக இன்னும்கூட கோவிச்சுட்டு இருக்க. நீங்க உங்க மனசுக்கு புடிச்ச பொண்ணா பார்த்து கட்டிக்கங்க… ஆனா இந்த மலர வெறுக்காதீங்க” எனும் போதே போனை கட் பண்ணி பாக்கெட்ல போட்டுக்கொண்டேன்.
“கலை இந்த பைலை சீக்கிரமா ரெடி பண்ணி கொடு” என் மேஜை மேல் பைல் கட்டோன்றை வைத்தார் மேனேஜர். நான் தலையசைத்தேன். அவர் போய் விட்டார்.
மலர் நிஜமாவே பூ போன்று மென்மையானவள். என்னிடம் ஒருமுறைகூட காரமாக பேசியதில்லை. நா அவளை வெறுக்கவில்லை. ஆனால் ஒரு சிறு சம்பவத்தை சாட்டாக வைத்துக்கொண்டு என் மனம் அவளை புறக்கணிக்கிறது.
காரணம்….
அது அவள் பத்தாம் வகுப்பில் படித்த காலம். அன்று அவளின் சக வகுப்பு மாணவன் வரண் ஏதோ ஒரு காகிதத்தை அவளிடம் கொடுத்தபோது அவள் அதை சிரித்தப்படி வாங்கிக்கொண்டாள்.
என் மனம் அக்காட்சியை சந்தேகக் கண்கொண்டு பார்த்தது. அவளோ “அது என்ட கணக்கு பேப்பர் கலை. நா மறந்து வைச்சிட்டு வந்ததால வரண் கொண்டு வந்து கொடுத்தான்” என அவள் விளக்கம் கொடுத்தும் என் மனம் அவளை வேண்டுமென்றே புறக்கணித்தது.
இச்சம்பவத்திற்கு பின் மலர் மன்னிப்பு கேட்பதும் நான் நிராகரிப்பதும் வழமை.
மேனேஜர் கொடுத்த வேலையை அவசரமாக முடிக்க முயன்று கொண்டிருந்தேன்.
கடந்த காலத்தை ஒருமுறை மீட்டிப்பார்த்தது என் உள்ளம்…
அது எவ்வளவு இன்பமான காலம் . நானும் மலரும் பட்டாம் பூச்சிகளாய் எம் தோட்டத்தை சுற்றி திரிந்த அழகிய காலமது. பதின்ம வயது தாண்டியதும் தான் நாங்கள் இருவரும் தனித்தனியானோம் .
மீண்டும் இந்த இருபத்தைந்து வயதில் அவளுடன் தோட்டம் சுற்றினாலென்ன… . இருவரும் ஓர் உலகமானால் தான் என்ன … ஆழ்மனம் சொல்லியது.
என் இதயகண்ணில் மலர் வந்துப்போனாள் .
மலர் எவ்வளவு அழகான பெண். படித்த பெண்னும் கூட…. அவள் எனக்காக இன்று வந்திருக்கிறாள் என்றால் அதற்கு என் மீது அவளுக்கு இருக்கும் தனி அன்புதான் காரணம் .
என் இதயம் இளகிப்போனது . அவள் மீது எனக்கு இப்போது காதல் மலர் பூத்தது .
“கலை பிளீல் அஞ்சு நிமிஷம்” அவளின் குரல் இப்போதும் என் காதருகில் ரீங்காரிக்கிறது.
ஆபீஸ் முடிந்து மலரை பார்க்க ஹோஸ்பிட்டல் போகணும். என் கரங்கள் வேகமாய் இயங்கின.
என் இதயம் முழுக்க அவள் எண்ணங்களால் நிறைத்தேன்.
என்றுமில்லாதவாறு தனியே புன்னகைத்தப்படி என் மேஜை மேல் பேனாவால் கிறுக்கிக்கொண்டிருந்தபோது அந்த போன் வந்தது.
அழைப்பில் ஆனந்தி. “சொல்லுங்க ஆனந்தி… மலர் முழிச்சிக்கிட்டாளா?…” என்றேன் அவசரமாக.
ஆனந்தி பேசினாள்.
என் உதிரம் ஒருகணம் உறைந்து போனது.
அவள் சொன்னது.
மலரின் மரணச்செய்தி..
என் பேனா நழுவியது.


