தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
– என்கிறது குறள்.
ஒரு வாசகனாய் நாம் இன்புறுவது கண்டு வாசிப்பை நேசிக்கும் உலகோர் அனைவரும் இன்புறுகிறார்கள். மகிழ்ச்சியில் சிறந்தது பிறர் மகிழக் காணல். இதற்கு நாம் ஆனந்தப்படாமல் என்ன செய்யமுடியும்..?
எனது புரிதலின்படி,
வாசிப்பை நேசிப்பவர்கள் – வாசகர்கள்
வாசிப்பையே சுவாசிப்பவர்கள் – வாசக எழுத்தாளர்கள்
நமது கேலக்ஸி வாசகர் வட்ட நூல் வெளியீட்டு விழா வாசிப்பவர்களுக்கும், வாசிப்பை நேசிப்பவர்களுக்குமான சொந்தக்களமாக அமைந்து மனநிறைவை ஏற்படுத்தியிருந்தது.
புதிய புதிய தொழில்நுட்பங்கள், அறிவியல் வளர்ச்சி சமூக சூழல்கள் காரணமாக இன்றைய இளையோர்களிடையே வாசிப்பு மிக மிகக் குறைந்துள்ளது. முகநூலும், பகிரியுமே வாசிப்புக்கான வாழ்வாகிப்போன இந்தக் காலகட்டத்தில் அன்பிற்கினிய நண்பர் பாலாஜி பாஸ்கரனின் தொடர் இலக்கிய பயணத்தினாலும் முயற்சியாலும் கடந்த 2022 ஜூன் 18ல் தொடங்கி இந்தக்குறுகிய கால இலக்கியப் பயணத்தில் 70க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டு தமிழால் நாம் பெற்றதை / கற்றதை உலகுக்குக் கொடுக்கும் உன்னத நோக்குடன் தமிழுக்குச் செய்யும் சேவையாய்த் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறது நமது கேலக்ஸி.
மேலும், மாதாந்திர கேலக்ஸி மின்னிதழ், வருடாந்திர சிறுகதைப் போட்டிகள் மூலம் புத்தம் புதிய எழுத்தாளர்களையும் அவர்கள் சிந்தனைகளையும் உலகிற்கு அறிமுகம் செய்வதில் பெரும்பங்காற்றுகிறது நமது கேலக்ஸி. எனக்கு சிறுவயதில் நான் வாசித்து மகிழ்ந்த தாயின் கருவறை குறித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
“அங்கே
இருட்டுதான்
ஆனால் அந்த இடம்
பரிசுத்தம்…
இங்கே
ஏய்ப்பவர்களும் இல்லை
ஏமாற்றுபவர்களும் இல்லை…
என் கண்கள் இங்கிருந்தவரை
கண்ணீரைக் கண்டதில்லை…
என்னைச் சுற்றிலும்
ரத்த ஆறுகள்தான் – ஆனால்
கத்தியும், கலவரமும்
காணவேயில்லை…
அங்கே இருட்டுதான்
ஆனால் அந்த இடம்
பரிசுத்தம்…”
ஒரு நூல் படைப்பது, வெளிவருவது என்பது ஒரு தாயின் கருவறையிலிருந்து பிறக்கும் மழலை போன்றது. ஒவ்வொரு நூலும் அந்த எழுத்தாளரின் எண்ணக் கருவறையிலிருந்து பிறக்கும் குழந்தைகள். இவ்வாறு தன் எழுத்துக்களை, சிந்தனைகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல நினைக்கும் புத்தம்புது எழுத்தாளர்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்வதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நூலையும் உலகோர் அனைவருக்கும் கொண்டு சென்று சேர்க்க தினம் ஒரு நூல், ஒரு கட்டுரை என வலையொளிகளில் நூல்களின் சிறப்பு குறித்துப் பேசி காணொளிகளாய்ப் பரப்பி வருகிறது கேலக்ஸி.
இத்தகைய பெரும்பயணத்தின் சிறிய பகுதியாக கடந்த 08/11/2025 அன்று நமது கேலக்ஸி வாசகர் வட்டம் தனது அடுத்த குறுநடையாக மதுரையில் ஏழு நூல்களை அறிமுகம் செய்து வெளியிட்டது.
இந்தக் கட்டுரையை இரண்டு பகுதிகளாகப் பிரித்து எழுதுவது சிறப்பு என நினைக்கிறேன். அதன்படி,
அ) விழாவிற்கு முன்னான நிகழ்வுகள்:
கடந்த அக்டோபர் 11ம் தேதி நமது கேலக்ஸி மதுரை வாசகர் வட்ட கதைப்போமா நிகழ்வின் தொடர்ச்சியாக ஒரு சின்னஞ்சிறு உரையாடல்…
பாலாஜி : சுப்பு, செழியன்
சுப்பு : எஸ் பாஸ்
செழியன் : சொல்லுங்க நண்பா
பாலாஜி : நான் அடுத்த மாதம்
சுப்பு : எஸ் பாஸ்
செழியன் : சொல்லுங்க நண்பா
பாலாஜி : ஊருக்கு வர்றேன்
சுப்பு : எஸ் பாஸ்
செழியன் : சொல்லுங்க நண்பா
பாலாஜி : அட இருங்கப்பா.. சொல்லி முடிச்சுக்கிறேன்.. (சற்று விரைவாக..) வர்ற நவம்பர் 8ம் தேதி மதுரைல நூல் வெளியீட்டு விழா நடத்தனும். நான் தொடர்ந்து பயணத்தில் இருப்பதால விழா ஏற்பாடுகளை என்னால கவனிக்க இயலாது. மதுரை வாசகர் வட்ட நண்பர்கள் எல்லோரையும் வைத்து செய்து முடிக்கணும்.
சுப்பு : பாத்துக்கலாம் பாஸ்
செழியன் : சரிங்க நண்பா…
அதிலிருந்து ஓரிரு நாட்களில் இரு முழுமையான ஆளுமைகளின் கீழ் நான் இருப்பதை என்னால் உணரமுடிந்தது.
ஆளுமை 1 – பாலாஜி பாஸ்கரன்:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
இந்தக்குறளுக்கு விளக்கம் கூற வேண்டியதில்லை. நான் அரங்கத்திலேயே கூறியபடி இவரது ஆளுமை இவர் என்ன கூறினாலும் செய்து முடிக்க அவருக்கென அமைந்துள்ள நட்புகள் / உறவுகள். அத்தகு ஒத்த இணையான அலைவரிசையைக் கொண்டது அவருக்கும் அவருடைய தோழமைகளுக்குமான உறவு.
அதற்கும் காரணம் தேடும்போது அரங்கிலேயே பலரும் பாராட்டியபடி அனைவரும் வியக்கும்படியான மதிநுட்பமும் நூலறிவும் கொண்டவர் பாலாஜி பாஸ்கரன்.
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
இப்பொழுது பாருங்கள். மேற்கண்ட இரண்டு குறள்களும் அவருக்கென்றே கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. (ஒருவேளை வள்ளுவரும் இவர் நண்பராக இருப்பாரோ…?).
ஆளுமை 2 – மதுரை சுப்பு:
இவர் எஸ்.எஸ்.எஸ் பைனான்சியல் சொலுசன்ஸ் உரிமையாளர், மிகச்சிறந்த நண்பர் – நட்பு என்றால் சுப்பு என்று பாலாஜி அடிக்கடி கூறுவார். நிகழ்வு மேலாண்மையில் முனைவர் பட்டமே கொடுக்கலாம் எனும் அளவிற்கு மிகச்சிறந்த ஏற்பாட்டாளர். திட்டமிடல், ஒருங்கிணைப்பு, செலவு, அவை ஒழுங்கமைப்பு மற்றும் ஒப்பனை, நேர மேலாண்மை என இவர் திறமைகளை நேரில் காணும் வாய்ப்பை இந்த விழா எனக்கு அளித்திருந்தது. இவர் குறிப்பிட்டிருந்த கால அளவீட்டின்படிதான் இந்த விழா குறித்த நேரத்தில் தொடங்கி மிகச்சரியா அச்சுபிசகாமல் குறித்த நேரத்தில் முடிந்திருந்ததுகூட என்னை ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்
இந்தக் குறள் இவரது மேலாண்மை ஆதிக்கத்திற்கு மிகவும் பொருந்தும்.
மம்மது அய்யவுடன் இனிய சந்திப்பு:
நானும் சுப்புவும் அழைப்பிதழ் வழங்குவதற்காக தம் வாழ்நாளில் பெரும்பகுதியை தமிழிசை ஆய்விற்கென செலவழித்த, தமிழிசை ஆய்வாளர் அன்பிற்கினிய மம்மது அய்யாவை நேரில் சந்தித்தோம். அவரோடு உரையாற்றியதில் உலகின் மூத்த இசை தமிழிசை என்பதை அறிந்துகொண்டதோடு, அதற்கென அவர் செய்த ஆய்வுகள், சங்க இலக்கிய வரைவுகள், சான்றுகள் என பலவற்றை அறிந்துகொண்டோம்.
இசைக்கருவிகள், இசைக்குண்டான விதிகள் பற்றி தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் விரிவாக விளக்கியிருப்பதையும், சிலப்பதிகாரம் கூறும் தமிழ் இசை, பக்தி இலக்கியங்கள் முதல் நாட்டுப்புற இலக்கியங்கள் வரையிலான தமிழ் இசையின் பயணம் குறித்து தெள்ளத்தெளிவாக விவரித்தார். அவர் விவரிக்க விவரிக்க எங்கள் கண்கள் அகல விரிந்தன ஆச்சர்யத்திலும் பெருமிதத்திலும். யாம் பெற்றதை அவையோர் பெறவேண்டுமென விழாவிற்கு அழைத்திருந்தோம். ஆனால் மருத்துவ காரணங்களால் அவரால் பங்குபெற இயலவில்லை என்பது வருந்தத் தக்கதே.
ஆ) விழா நிகழ்வுகள்:
சரியாக 03.40க்–கு அரங்கிற்குள் நுழைந்தேன். தங்கை ரேஷ்மா கூறியதைப் போல மதுரை சுப்பு தலைமையில் நண்பர்கள் சுரேஷ், முத்து இளங்கோவன், சதாம் ஹுசேன் ஆகியோர் வெறும் அரங்கை விழா அரங்காக மாற்றி வைத்திருந்தனர் .
விருந்தினர்கள் ஒவ்வொருவராக அரங்கிற்கு வரவர விழாமேடை அழகுபெறத் தொடங்கியிருந்தது.
நிகழ்ச்சித் தொகுப்புரையின் முதன்மையுரையாகப் பரிபாடலில் கூறப்பட்ட மதுரையின் சிறப்பு பற்றியும், புலம்பெயர்ந்த தமிழர்கள் செல்லுமிடமெல்லாம் மதுரை போன்றதொரு தமிழ் பேசும் நல்லுலகை உருவாக்கியிருக்கிறார்கள் என்றும் தொடங்கி நமது கேலக்ஸியின் உருவாக்கத்தை அண்டங்களின் உருவாக்கத்தோடு ஒப்பிட்டு தங்குதடையற்ற பேச்சால் அவையோரைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தார் அன்புத் தங்கை ரேஷ்மா சதாம் ஹுசேன்.
தொடர்ந்து பேச வந்த நான் கூட்டத்தைக் கண்ட பிரம்மிப்பில் மனதிலுள்ளதைப் பேசாமல் சற்று சமாளித்து வந்ததைப் பேசி வரவேற்புரையை முடித்திருந்தேன்.
”இனி வேறு வழியில்லை வெளியிடப்படும் எல்லா நூல்களையும் நான் தான் வாசித்திருக்கிறேன். எல்லா நூல்களையும் வரிவரியாகச் சரிபார்த்திருக்கிறேன்.” என்று தொடங்கியவர் தம் முழுமையான ஆளுமை மூலம் அரங்கையே தன் கட்டுக்குள் மீட்டுக்கொண்டுவந்திருந்தார் பாலாஜி பாஸ்கரன்.
பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக ஏழு நூல்களும் அறிமுக உரையுடன் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் தெரிசை சிவா எழுதிய ‘அயலோன்‘ நூலைப் பற்றிய அறிமுக உரையை பாலாஜி பாஸ்கரன் நிகழ்த்த, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை இணைப் பேராசிரியர் சௌ. வீரலட்சுமி வெளியிட, கேலக்ஸி வாசகர் வட்டத்தின் சதாம் ஹுசேன் பெற்றுக் கொண்டார்.
எழுத்தாளர் பரிவை சே.குமார் எழுதிய ‘உன்மத்தம்‘ நூலைப் பற்றிய அறிமுக உரையை சதாம் ஹுசேன் நிகழ்த்த, கேலக்ஸி பதிப்பக உரிமையாளர் பாலாஜி பாஸ்கரன் வெளியிட, கேலக்ஸி வாசகர் வட்டத்தின் மதுரை சுப்பு பெற்றுக் கொண்டார்.
எழுத்தாளர் ரிம்சா ஃபாசீன் எழுதிய ‘The Silent Thunder’ நூலைப் பற்றிய அறிமுக உரையை பாலாஜி பாஸ்கரன் நிகழ்த்த, TVS Sensing Solutions Pvt Ltd-ன் துணைப் பொது மேலாளர் சபிதா முரளிதரன் பெற்றுக் கொண்டார். எழுத்தாளரின் சார்பாக திரு.பக்கீர் முகம்மது ஏற்புரை வழங்கினார்.
எழுத்தாளர் வசந்தி முனீஸ் எழுதிய ‘விக்டோரியா‘ நூலைப் பற்றிய அறிமுக உரையை கேலக்ஸி வாசகர் வட்டத்தின் செழியன் நிகழ்த்த, வாஹித்தியார் வெளியிட, கேலக்ஸி வாசகர் வட்டத்தின் முருகேசன் பெற்றுக் கொண்டார். இந்நூலின் ஆசிரியர் வசந்தி முனீஸ் ஏற்புரை வழங்கினார்.
எழுத்தாளர் ‘காப்பியக்கோ‘ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய ‘இம்மைத் துறக்கம் எழில்மிகு துபை‘ நூலின் அறிமுக உரையை பாலாஜி பாஸ்கரன் நிகழ்த்த, கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பக உரிமையாளர் தசரதன் வெளியிட, டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி மேனாள் ஆசிரியரும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருமான முரளிதரன் பெற்றுக் கொண்டார்.
எழுத்தாளர் ந. அரவிந்த் எழுதிய ‘உடல், குறள், உறைவிடம்’ நூலின் அறிமுக உரையை நான் (செழியன்) நிகழ்த்த, பாலாஜி பாஸ்கரனின் தந்தை பாஸ்கரன் சேதுராமன் வெளியிட, மதுரை சௌராஸ்ட்டிரா பள்ளி ஆசிரியர் (ஓய்வு) D.சுந்தரவேல் அவர்கள் பெற்றுக் கொண்டு ஏற்புரை வழங்கினார்.
கேலக்ஸி சிறுகதைப்போட்டியில் பங்கேற்ற சிறந்த 10 சிறுகதைகள் தொகுப்பான ‘பிணையல்‘ நூலின் அறிமுக உரையை பாலாஜி பாஸ்கரன் நிகழ்த்தி வெளியிட, வெற்றி பெற்றவர்களில் ஒருவரான எழுத்தாளர் அரி கார்த்திக், பதிப்பாளர் சரவண ஜோதி, எழுத்தாளரும் பதிப்பாளருமான ஆமினா முகம்மது, எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான கண்மணி ராஜா முகம்மது, பிலிப்பினியன், அசோக்குமார் மற்றும் மதுரை கேலக்ஸி வாசகர் வட்ட நண்பர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
மேற்காணும் ஏழு நூல்களின் வெளியீட்டினிடையே நடந்த நிகழ்வுகளின் துளிகள்:
v எழுத்தாளர் தெரிசை சிவா எழுதிய அறிவியல் புனைவு நூலான ’அயலோன்’ குறித்த செய்திகளை பாலாஜி பாஸ்கரன் வழங்கினார். தமிழில் அறிவியல் சார்ந்த புனைவுக்கதைகள் மிக மிகக் குறைவு.
v எழுத்தாளர் பரிவை சே.குமார் எழுதிய உன்மத்தம் – உன்மத்தம் என்பது கலைமேல் கொண்ட வெறியா? ஒரு பரவச நிலையா? – சதாம் உசேனின் அறிமுக உரை சிறப்பானதாய் அமைந்தது.
v பாலாஜி பாஸ்கரன் அறிமுகம் செய்த வெறும் 11 வயதே நிரம்பிய எழுத்தாளர் ரிம்சா ஃபாசீன் எழுதிய “The Silent Thunder” – (அம்புலிமாமா போன்ற மழலைக்கதை அல்ல நண்பர்களே..) மொழியும் ஆன்மீகமும் சொல்லும் அறிவியல் உண்மைகளைக் கொண்ட ஆய்வு – நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. ஏற்புரை வழங்கிய திரு. பக்கீர் முகம்மது இவ்வளவு சிறிய வயதில் ஆய்வு ஞானத்துடன் நூலாக்கம் செய்துள்ள தம் மருமகள் குறித்து பெருமிதம் கொண்டார். நமக்கும் ஆச்சரியம்தான்.
v எழுத்தாளர் வசந்தி முனீஸ் எழுதிய சிறுகதைத் தொகுப்பு விக்டோரியா – திருநெல்வேலி மண்ணின் வட்டார வழக்குமொழியில் எழுதப்பட்ட நடப்பு சமூகம் பற்றிப் பேசும் நூல். எழுத்தாளருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார் நண்பர் பாலாஜி பாஸ்கரன். ஏற்புரையாற்றிய எழுத்தாளர் முனீஸ் – இதை நெகிழ்ச்சிமிகு தருணமாக விவரித்தார்.
v காப்பியக்கோ எழுதிய இம்மைத் துறக்கம் எழில்மிகு துபை – துபையின் அழகு, மண்ணின் மக்கள், வாழ்க்கை முறை, நிர்வாகம் என அனைத்தையும் கூறும் வெண்பா–விருத்தப்பாக்களால் உருவான காப்பியம் – கண்களை அகல விரிக்கும்படிக்கு மேலும் வியப்பூட்டுகிறது.
v எழுத்தாளர் ந. அரவிந்த் எழுதிய உடல், குறள், உறைவிடம் – கட்டுமானப் பொறியியலில் தமிழ் நூல். ஒரு வீடு கட்டுவதற்கு இடத் தேர்வுமுதல் இயற்கைச் சூழல், காற்றோட்டம், கட்டிட நுணுக்கம் எனத் தொடர்ந்து வர்ணம் பூசுதல் வரை திருக்குறளோடு ஒப்பிட்டு எழுத்தப்பட்ட கட்டடக்கலையின் இலக்கணம். ஏற்புரை வழங்கிய D.சுந்தரவேல், தமிழில் பொறியல் நூல் என்பது வரம் என்றும் கேலக்ஸி ஊக்குவிப்பு குறித்தும் நெகிழ்ந்து பேசினார்.
v கேலக்ஸி சிறுகதைப்போட்டியில் பங்கேற்ற சிறந்த 10 சிறுகதைகள் தொகுப்பான ’பிணையல்’ – நிகழ்ச்சியில் எழுத்தாளர் அரி கார்த்திக் மற்றும் தசரதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். எழுத்தாளருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார் நம் பாலாஜி பாஸ்கரன்.
நினைவுப்பரிசுகள்:
எதிர்பாரா நிகழ்வாக நூல் வெளியீடு முடிந்தபின் தினம் ஒரு நூல், கட்டுரை என அனுதினமும் காணொளி வாயிலாக தமிழ்த்தொண்டாற்றும் பாலாஜி பாஸ்கரனுக்கு வக்போர்டு கல்லூரி இமாம். அப்துல் அஸீஸ் வகைதி மற்றும் எழுத்தாளர் கண்மணி ராஜா முகம்மது ஆகியோர் இணைந்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர். “ஏய் இது எப்புடி நடந்தது…?” என்று ஆச்சர்யத்துடன் பாலாஜி பாஸ்கரன் பெற்றுக்கொண்டார்.
விழாவின் முக்கிய சிறப்பு நிகழ்வாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் இல்லம் தேடிக் கல்வி என மாணாக்கர்களின் நலன் கருதி கல்வித் தொண்டாற்றி அகில இந்திய அளவில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் திரு. முரளிதரன் அவர்களுக்கு பொன்னடை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி பெருமைப்படுத்தினார் பாலாஜி பாஸ்கரன் அவர்கள். உடன் நம் மதுரை கேலக்ஸி உறவுகள் இணைந்து அகமகிழ்ந்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் உரை குறித்த துணுக்குகள்:
Ø தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர் முரளிதரன் அவர்கள் இன்றைய பயிற்று முறையும், மாணாக்கர்களைத் தயார்படுத்தும் முறைமை குறித்தும் எடுத்தியம்பினார். கொரோனா பெருந்தொற்றுகாலம் ஒரு பயிற்சி காலம் – அது மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களான எங்களுக்கும் என்று தொடங்கியவர் எங்களது வேண்டுகோளுக்கிணங்க விரைவில் அனைவரும் பயன் பெறுவகையில் நூலாகப் படைத்து வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.
Ø TVS-ன் துணைப் பொது மேலாளர் சபிதா முரளிதரன் அவர்கள் படிக்கும் காலத்திலிருந்து அன்பு நண்பர் பாலாஜி பாஸ்கரனின் ஆளுமைத்திறன்கள் குறித்து பேசியவர், அமீரக உறவுகள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் படிப்பிக்க இயலாத சூழலில் நமது கேலக்ஸி நிகழ்த்தும் மாதாந்திர கதைப்போமா நிகழ்வின் மூலம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மழலைகள் மத்தியில் தமிழை விதைப்பதை எடுத்தியம்பி நண்பர் பாலாஜி பாஸ்கரனின் அயராத முயற்சியை வாழ்த்தினார்.
Ø ஏற்கனவே ஆச்சர்யங்களில் விழிபிதுங்கியிருந்த நம்மை பேராசிரியர் சௌ.வீரலட்சுமி அவர்கள் மேலும் ஆச்சர்யப்படுத்தினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலையில் மட்டும் 25 வகையான தமிழ்சார்ந்த/தமிழிலேயே படிக்கக்கூடிய படிப்புகள் இருப்பதையும், அதில் அறிவியல் தொழிநுட்பம் சார்ந்த படிப்புகளும் அடக்கம் என்றும், தனக்கு தமிழ்மீதான நெருக்கத்தையும் தமிழால் தாம் பெற்ற பயனையும் தெளிவாக விவரித்தார். வணிகமயமான உலகில் தமிழ் நோக்கி நகரும் நம் முயற்சியைப் பாராட்டினார். மேலும் குழந்தை வளர்ப்பில்கூட வணிகமயம் இருக்கிறது, குழந்தைக்குப் பிடித்ததை படித்தறிய ஒரு பெற்றோராக நாம் வழிவகை செய்து கொடுக்கவேண்டும் என்று கூறியவர் பட்டிணப்பாலைப் பாடலை மேற்கோள்காட்டி சங்க காலத்தில் பெண்களின் ஆளுமை குறித்து அழகாய் எடுத்துரைத்தார்.
Ø நேர மேலாண்மையால் குறைவாகப் பேசிய கலக்கல் டிரீம்ஸ் பதிப்பாளர் தசரதன் அவர்கள் பாலாஜி பாஸ்கரனுடனான நீண்டகால நட்பை எடுத்துரைத்தார். அதேபோல் பேராசிரியர் கிரிஸ்டோபர் அவர்களும் நட்பு பாராட்டி முடித்துக்கொண்டார்.
Ø பேராசிரியர் சரவணஜோதி சங்ககாலம் மட்டுமல்ல தற்காலத்திலும் பெண்களின் ஆளுமை குறித்து நகைச்சுவையுடன் பேசி மகிழ்வித்தார். மேலும் பாலாஜி பாஸ்கரனின் சொல்வண்மை குறித்தும் நகைச்சுவை கலந்து பாராட்டினார்.
Ø வக்பு கல்லூரி இமாம் அப்துல் அஸீஸ் வகைதி அவர்கள் ஆற்றிய உரையில் கடந்தகால மற்றும் தற்கால மாணவர்களின் அறிவு மற்றும் ஒழுக்க நிலைகளை விளக்கி, மாணவச் செல்வங்களின் எதிர்கால வாழ்வே ஆசிரியர்கள் கைகளில்தான் உள்ளது என்னும் எதார்த்தத்தைப் பதிவுசெய்தார். மேலும் நிகழ்கால வாழ்வில் பெண்ணிற்கான ஆளுமைத் தன்மையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
Ø திரைக்கதை ஆசிரியர், கவிஞர், கண்மணி ராஜா முகம்மது அவர்கள் வீட்டில் மனைவியின் ஆளுமைதான் நம்மை ஆளாக்குகிறது என்று நகைபடப் பேசி மகிழ்வித்தார்.
Ø நெகிழ்ச்சியின் உச்சத்திலிருந்த பாலாஜி பாஸ்கரன் வரப்போகும் நன்றியுரைக்கு முன்னுரையாக நிகழ்வை வழங்கிய, வருகை தந்து சிறப்பித்த, சிறப்புரையாற்றிய அனைவருக்கும் நன்றி கூறி அகமகிழ்ந்தார்.
பின்னர் எஸ்.எஸ்.எஸ். பைனான்சியல் சொலுசன்ஸ் உரிமையாளர் அன்பிற்கினிய நண்பர் மதுரை சுப்பு என்றழைக்கப்படும் சுப்புரமணி அவர்கள் சுருக்கமாகவும் இனிமையாகவும் வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறி முடித்தார்.
இறுதியாக, தன் கடமையிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து முதலில் சின்னஞ்சிறு உதவிகளுக்கு முரண்பட்டு சலனம் ஏற்படுத்திய அரங்கு ஊழியர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் விழா முடியும் நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு “அய்யா நான் இங்கு தினந்தோரும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அரங்க ஊழியராகப் பணியாற்றியிருக்கிறேன். எந்நிகழ்ச்சியும் இந்நிகழ்ச்சிபோல் இனிதாய் நான் கண்டதில்லை…” என்று அகமகிழ்ந்து நம்மிடம் கூறியபோது பெருமிதம் நெஞ்சில் கூடி மனமகிழ்வை ஏற்டுத்தியது.
ஆமாம். வாசிப்பை நேசிப்பவர்களுக்கும் வாசிப்பையே சுவாசிப்பவர்களுக்குமான யுத்தகளமாய் விளங்கிய இந்த நூல் வெளியீட்டு விழா இரு தரப்பிற்கும் வெற்றியுடன் இனிதே நிறைவடைந்தது.


