“வரலாறு முக்கியம் அமைச்சரே” என்ற 23 ம் புலிகேசியின் வசனம் நகைச்சுவையுலகில் ஒரு மாணிக்கமாய் ஒளிர்ந்தாலும் நிஸ்வா நகரத்திற்கு அதன் வரலாறும் பழமையும் தானே பெருமை? என்னதான் புராதனமான கோட்டையும், பாரம்பரிய கால் நடை சந்தையும், அல் அக்கர் என்ற புதுப்பிக்கப்பட்ட மதிற்சுவரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுத்தாலும் இவற்றை மட்டுமே வைத்து ஓட்டிக் கொண்டிருந்தால் “நீங்கள் என்னத்தைக் கிழித்தீர்கள்?” என எதிர்காலத் தலைமுறையினர் கேட்க இடம் கொடுத்து விடக் கூடாதல்லவா?
அதனால் தான் 80 கோடி ஆண்டுகளாக ஒமான் என்ற நிலப்பரப்பு அடைந்த மாற்றங்களையும், இத்தேசத்தின் மானுட, சமூக மற்றும் அரசியல் வரலாற்றையும், அதன் பாரம்பரியத்தையும், எதிர்வரும் தலைமுறையினரும் கண்டு, ரசித்துப் கற்றுக் கொண்டு சிலாகிக்கும் வகையில் ஓமானின் மிகப்பெரிய அருங்காட்சியகமான “ஓமான் அக்ராஸ் ஏஜஸ் மியூசியம்“ என்ற கனவிற்கு 2014
ஆம் ஆண்டு, ஓமானிகளின் பேரன்பிற்குப் பாத்திரமான காலஞ்சென்ற மன்னர் மாண்புமிகு சுல்தான் காபூஸ் பின் சையது அல் சையதால் பிள்ளையார் சுழி போடப்பட்டது. கிட்டத்தட்ட நான்காயிரத்தைனூறு கோடி ரூபாய் செலவில் 2023ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்ட, மூன்று லட்சம் சதுர மீட்டர்கள் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த அருங்காட்சியகம் மத்தியக் கிழக்கில் உள்ள மிகப்பெரிய வளாகங்களில் ஒன்று. இதனுடைய நிரந்தரக் காட்சியகம் மட்டும் 9000
சதுர மீட்டர்கள் பரப்பளவுடையது. இங்கு காட்சிப் படுத்தப் பட்டிருக்கும் அத்தனை விடயங்களையும் ஒரே நாளில் கண்டு வாசித்து அறிந்து கொள்வது இயலாத காரியம். அதனால் ஓமானில் வசிப்போர் வருடத்தில் ஓரிரு முறையாவது தங்கள் குழந்தைகளுடன் இந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று வரலாம். சுற்றுலாப் பயணிகள் குறைந்த பட்சம் மூன்று முதல் ஐந்து மணி நேரங்களையாவது இதனைச் சுற்றிப் பார்க்க ஒதுக்குதல் அவசியம்.
இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு அருங்காட்சியகங்களுக்கு பொது மக்களிடையே ஒரு மதிப்பு இருந்தது. ஆனால் யூட்யூப் மற்றும் சமூக ஊடகப் பெரு வெடிப்பின் காரணமாக எதைப் பற்றியும் எக்கணத்திலும் விரல் நுனியில் தட்டி முப்பரிமாண வடிவில் மெய்நிகர் உண்மையாகக் கண்டு ரசித்துக் கற்றுக் கொள்ளக் கூடிய இந்தக் காலகட்டத்திலும் மக்களை தங்கள் அலைபேசிகளிடம் இருந்து பல மணி நேரம் தங்கள் கால் வலி தெரியாத அளவுக்கு நடக்க வைக்க வேண்டுமெனில் எத்தனை ப்ரயத்தனப் பட வேண்டும்? அந்த நோக்கத்தை நிறைவேற்றத் தேவையான அத்தனை உழைப்பையும் அதற்கு மேலும் கொட்டி பார்த்துப் பார்த்து இழைத்திருக்கும் புத்தாயிரத்தாண்டின் இப்புது வரவு நிஸ்வாவிற்கு மட்டுமின்றி ஓமானுக்கே பெருமை.
மஸ்கட்டில் இருந்து நிஸ்வா வரும் போது “சமைல்” என்ற ஊரைத் தொட்டவுடன் தொலைவில் உங்களோடு வந்து கொண்டிருந்த மேற்கு ஹஜர் மலைத்தொடர் மிக நெருங்கிவந்து உங்களுக்கு அருகாமையில் பயணிக்கத் துவங்கும். அதன் பிரம்மாண்டமும், வண்ணங்களும், அதன் பல வகையான மடிப்புகளும் உங்கள் மனதில் பச்சக்கெனக் கெட்டியாகப் பசை போட்டு ஒட்டிக் கொள்வது உறுதி. பெரும் கழுகு ஒன்றின் கூரிய அலகுகளை அடுத்தடுத்து அடுக்கி வைத்தாற் போன்றோ, அல்லது ப்ரம்மாண்டமான கூரிய பாறைகள் செதில் செதிலாகக் கிளர்ந்து எழுந்து விண்ணை முட்டிப் பிளந்து விடும் ஆக்ரோஷத்துடன் திமிறிக் கொண்டிருப்பது போலவும் இருக்கும் அச்சிகரங்கள் பத்து ஆண்டுகள் கழிந்தும் இன்று வரை ஒவ்வொரு முறை அவற்றைக் கடக்கும் போகும் எனது கருத்தைக் கவர்ந்து…. “ப்பா எப்டி இருக்கு பாருங்களேன்… சான்ஸே இல்லல்ல. . என்னா அழகு??” என என்னுடன் பயணிப்போரிடம் வாய்விட்டுக் கூவச் செய்கின்றன.
நிஸ்வாவில் இருந்து சலாலா செல்லும் சாலையில் பதினைந்து நிமிடம் சென்றால், இடது புறம் வெண்ணிறத்தில் பாலை மண்ணைப் பிளந்து கொண்டு திமிறிக் கிளர்ந்து நிற்கும் பிரம்மாண்டமான ஓமான் அக்ராஸ் ஏஜஸ் அருங்காட்சியகம் அந்த அழகிய மாபெரும் ஹஜர் மலைத்தொடரை நமது கண் முன் கொணர்ந்து நிறுத்துகிறது.
இக்கட்டிடம் ஓமானின் கரடு முரடான மலைத் தொடர்களையும், கணவாய்களையும் பிரதிபலிக்கும் வகையிலேயே வடிவமைக்கப் பட்டிருக்கிறது. பாலை நிலமான நிஸ்வாவின் தென் பகுதியில் இருந்து கிளர்ந்து எழுந்த மலைத்தொடர் வடக்கு நோக்கி நீள்வதைப் போல இதனை வடிவமைத்துள்ளனர்.
இதன் கட்டுமானப் பணிக்காக ஒரு லட்சத்து முப்பதாயிரம் சதுர மீட்டர்கள் பரப்பளவிற்கான உயர்தர ஓமானி கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு அல் பத்தினா மாகாணத்தில் இருந்து தருவிக்கப்பட்ட இக்கற்களே இதன் உள்ளும் புறமும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது. இது கடும் கோடை காலத்திலும் அருங்காட்சியகத்தின் உள்ளே சூடு இறங்காமல் பாதுகாக்கிறது. இங்கு வெட்டிப் பயன்படுத்தப் பட்ட கற்கள் போக சிதறிய எச்சங்கள் எதனையும் வீணாகக் குப்பையாகத் தூக்கிக் கொட்டி நிலத்தை மாசு படுத்தாமல் மிகக் கவனமாக அருங்காட்சியகத்தின் வெளிப்புறம் உள்ள பூங்காவை வடிவமைக்கப் பயன் படுத்திக் கொண்டனர்.
இந்த அழகிய பூங்கா ஓமானில் நாம் இயற்கையாகக் காணக்கூடிய தாவரங்களை மட்டுமே கொண்டுள்ளது. அது மட்டுமின்றி பூங்கா நெடுகவும் குறுக்கு மறுக்காக ஃபலஜ் (Afalaj ) எனப்படும் சிறிய வாய்க்கால் ஓடுவதைப் போல வடிவமைக்கப் பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக ஓமானிகளின் வாழ்விலும் புவியியலிலும் ஃபலஜ்ஜுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அருங்காட்சியகத்தின் வெளிப்புறம் சில இடங்களில் முழுக்க முழுக்கக் கண்ணாடிகளால் ஆனது. அருங்காட்சியகத்தின் முன்பகுதி கிட்டத்தட்ட 25 மீட்டர் உயரம் கொண்டது. நுழைவாயிலில் கால் வைத்தவுடன் விண்ணை முட்டும் கூரையுடன் பரந்து கிடக்கும் ஒரு பெருவெளியின் பிரம்மாண்டம் நமது முகத்தில் அறைந்து நம்மை பிரம்மிக்கச் செய்யும்.
அதனை அடுத்திருக்கும் திறந்த வெளி முற்றத்தின் மையத்தில் ஒரு அழகிய இலைகளற்ற மரத்தின் நவீன சிற்பம் நிறுவப் பட்டிருக்கிறது. அது Frankincense (ஃப்ராங்கின்சென்ஸ்) என்ற சாம்பிராணி மரத்தின் குறியீடாக இருக்கக் கூடும். ஓமானின் சாம்பிராணி மரங்களில் இருந்து எடுக்கப்பட்ட பிசின் உலர வைக்கப்பட்டுப் பல நூற்றாண்டுகளாக கப்பல் கப்பலாக ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அந்த நவீன சிற்பத்தைச் சுற்றிலும் எப்போதும் நீர் தேங்கி நிற்பதைப் போல வடிவமைத்திருக்கின்றனர். அதற்குக் கண்ணாடிக் குளம்
(Mirror Pool) எனப் பெயர். எந்நேரமும் மேலே நகரும் மேகங்களையும், நிலையாக நிற்கும் அச்சிற்பத்தையும் ஒன்றாகப் பாவித்து அலையாடிக் கொண்டிருக்கும் அக்குளத்தைக் காணும் போதெல்லாம் எனக்கு அது ஓமானிகளின் சலனமற்ற அமைதியான இயல்பைப் பிரதிபலிப்பதாகவே தோன்றும்.
அடுத்ததாக நமது கவனத்தை ஈர்ப்பது அருங்காட்சியக அரங்கங்களின் வாயிலில் நிறுவப்பட்டுள்ள மிகப்பெரிய தேசிய தின LED திரை. 18 மீட்டர் அகலமும் 11 மீட்டர் உயரமும் கொண்ட 198 சதுர மீட்டர் பரப்பளவுடைய பிரம்மாண்டமான அந்தத் திரைக்கு முன் நின்று அண்ணாந்து பார்த்தால் நமது கழுத்து சுளுக்கிக் கொள்ளும்.
இந்த அருங்காட்சியகத்தின் நிரந்தர அரங்கங்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. முதலாவது வரலாற்றுக் காட்சியகம். அங்கு 80 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த நிலப்பரப்பு எப்படி இருந்தது என்பது துவங்கி அல் புசைடி என்ற அரச வம்சம் தலையெடுத்தது வரையிலான நிகழ்வுகளை மிக நேர்த்தியாகக் காட்சிப் படுத்தியுள்ளனர். காட்சியகத்தின் சுவர்களும், கூரையும், தரையும் கூட நமக்குக் கதைகளைச் சொல்கின்றன. மிக நேர்த்தியான ஒளியமைப்பும், முப்பரிமாண வடிவங்களைத் தோற்றுவிக்கும் காணொளியரங்குகளும் நமக்கு அவர்கள் சொல்ல வரும் விடயங்களை எளிதில் உள் வாங்கிக் கொள்ள வழி கோலுகின்றன. வாசிப்பு, காணொளி, செயல்முறை என அடுத்தடுத்த அரங்கங்களில் வெவ்வேறு முறைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அம்சங்கள் நம்மைச் சோர்வடைய விடாது பார்த்துக் கொள்கின்றன.
அருங்காட்சியகத்தின் முதற்பகுதியான வரலாற்றுப் பிரிவில் ஒன்பது அரங்குகள் உள்ளன.
நிலவமைப்பு: இப்பகுதி ஓமானின் தனித்துவமான புவியியல் எப்படி உருவானது என்பதை விளக்குகிறது. ஒமானின் பாறைகள், மலைகள், கணவாய்கள், நிலப்பரப்பு என ஒவ்வொன்றின் பின் இருக்கும் பல கோடிக்கணக்கான ஆண்டு கால வரலாற்றை அறிவியல் பூர்வகமாக விளக்குகின்றனர்.
ஆதி மனிதர்கள்: இந்த அரங்கு வேட்டையாடி, பொறுக்கித் தின்று வாழ்ந்து வந்த பேலியோ லித்திக் எனப்படும் கற்கால மனித சமூகத்தில் இருந்து ஓரிடத்தில் குடிசை கட்டி வாழ ஆரம்பித்த நியோலித்திக் எனப்படும் புதிய கற்கால மனித இனத்தின் வரையிலான பரிணாம வளர்ச்சியை அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு காட்சிப் படுத்தியுள்ளது. என்னளவில் இதுதான் இந்த அருங்காட்சியகத்தின் மிக முக்கியமான அரங்கு. இங்குள்ள தொல்பொருட்களுக்கு விலை வைக்க முடியாது.
மாகன் நாகரீகம்: இன்றைய ஓமான் மற்றும் ஐக்கிய ஆமீரக நாடுகள் இருக்கும் நிலப்பரப்பில் கிறித்து பிறப்பதற்கு சுமார் 3500
ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வெண்கலத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அந்த கால கட்டத்திற்கு வெண்கலக் காலம் என்று பெயர். ஓமானில் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் மாகன் அல்லது மஜான் என்றழைக்கப் பட்டனர். இப்பகுதி அம்மக்களின் வாழ்வியலைக் காட்சிப் படுத்துகிறது.
கடற் பாரம்பரியம்: ஓமானிகள் மிச்சிறந்த கடலோடிகள். கடல் வழி அவர்கள் மேற்கொண்ட வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் குறித்து இப்பகுதியில் அறிந்து கொள்ள முடியும்.
ஃபலஜ்: ஃபலஜ் என்ற பாரம்பரிய ஓமானின் நீர் பாசன முறையே இன்று வரை வழக்கில் இருக்கிறது. அந்தச் சிறப்பான கட்டமைப்பையும் அதன் வரலாறு குறித்தும் புரிந்து கொள்ள இந்த அரங்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஓமானிய அரசு : முதன் முதலில் ஓமான் என்ற பெயர் பெற்ற வரலாறு இங்கு குறிப்பிடப் பட்டுள்ளது. வெண்கல காலத்திற்குப் பிந்தைய இரும்பு கால வரலாறெனவும் இதனைக் கருதலாம். ஓமானிகள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு அவர்களுக்கு இருந்த இறை நம்பிக்கை குறித்தும் இப்பகுதி ஆவணப்படுத்தியிருக்கிறது.
இஸ்லாமிய காலகட்டம் : இந்தப் பகுதியில் ஓமானிகள் இஸ்லாத்தைத் தழுவிய வரலாறு ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில், அந்தக் காலகட்டத்தின் கல்வி வளர்ச்சி, அறிஞர்கள், கடல்வழிப் பயணங்கள் குறித்த தகவல்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
அல் யரூபி வம்சம்: கி.பி.
1624 ஆம் ஆண்டு ஓமானில் அல் யரூபி வம்சத்தின் ஆட்சி நிலை பெற்றது. அந்த அரச வம்சம் மற்றும் ஓமானுக்கு யரூபிகள் அளித்த பங்களிப்புகள் குறித்து இப்பகுதியில் அறிந்து கொள்ளலாம்.
அல் புசைடி வம்சம் : இப்பகுதி அல் புசைடி வம்சம் எப்படி ஆட்சியைக் கைப்பற்றி தனது எல்லைகளை விரிவுபடுத்தியது முதல் இன்று வரை எப்படி ஓமானை வழிநடத்தி வருகிறது என்ற வரலாற்றைப் பேசுகிறது.
இந்த அருங்காட்சியகத்தின் Renaissance எனப்படும் மறுமலர்ச்சி அரங்கில் மொத்தம் பன்னிரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இப்பகுதி 1970
ல் மறைந்த முன்னாள் அரசர் சுல்தான் காபூஸ் அரியணை ஏறிய பிறகு செயல்படுத்திய சீர்திருத்தங்களையும், நாடு எப்படி அரசியல், சமூக, பொருளாதார மற்றும் தொழில் துறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வளர்ச்சிப் பாதையில் வீறு நடை போட்டது என்பதையும் விளக்குகிறது.
இந்த நவீன அருங்காட்சியகத்தில் 80 க்கும் மேற்பட்ட புராதான பொருட்கள் மிக நேர்த்தியாகக் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. 310 காணொளிக் காட்சிகள், 1200 உரையாடத் தக்க அம்சங்கள் (Interactive panels) என இங்கு கண்டு களிப்பதற்கும் கற்றுக் கொள்வதற்கும் ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.
இந்த அருங்காட்சியகத்திற்கு நான் சென்று பல மாதங்கள் ஆகின்றன. இருந்தும் அதன் பெருமைகளாக நான் கருதும் அனைத்தும் எனது மனதில் அழியாச் சித்திரங்களாகப் பதிந்துள்ளன. அரங்குகளைப் பற்றிய விவரங்களுக்காகவும், துல்லியமான எண்ணிக்கைகளுக்காகவும் மட்டும் இணையத்தை நாட வேண்டியிருந்தது.
ஆனால் உங்களுக்காக மீண்டும் ஒரு முறை அனைத்து விவரங்களையும் வாசித்துத் தொகுத்து எழுதியதில் எனக்கு இந்தப் பெரும் அருங்காட்சியகத்தை முழுவதுமாகச் சுற்றி வந்த திருப்தி ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் இந்தக் கட்டுரையை வாசித்து விட்டுக் காலை உணவை முடித்துக் கொண்டு காத்திருங்கள் நான் வந்து உங்களை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். உள்ளே நுழைந்த பின்பு எனது புலன்கள் அனைத்தும் காட்சிப் படுத்தப் பட்டுள்ள ஆவணங்களில் மட்டுமே குவிந்திருக்கும். அதனால் தான் எனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் உங்களுக்கு எழுத்தில் வடித்துக் கொடுத்து விட்டேன். இந்தக் கட்டுரை உங்களை ஒரு நல்ல நண்பனைப் போல உங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு வழி நடத்தும்.
அனைத்து அரங்குகளையும், வெளிப்புறப் பூங்காவையும் சுற்றிப் பார்த்துக் களைத்த பிறகு நீங்களாகப் “பார்த்தது போதுமப்பா, நடையைக் கட்டுவோம்” என என்னைத் தர தர வென இழுத்தாலொழிய நான் வெளியே வர மாட்டேன்.
அப்படி நீங்கள் என்னை வெளியே தள்ளிக் கொண்டு வந்த பிறகு நான் உங்களை வேறொரு இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன். சரியா? அதுவரை வரலாற்றின் நினைவலைகளில் புரண்டு கொண்டிருங்கள் நண்பர்களே…
(தொடரும்)


