தண்டகாரண்யம் என்பது அடர்ந்த காட்டுப்பகுதி, தண்டனைக்குரியவர்கள் வசிக்கும் காடே தண்டகாரண்டம் எனப்படும். இந்தப் படத்தில் யார் தண்டனைக்கு உரியவர்கள், ஆனால் யார் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.
தமிழ் சினிமா போதை மற்றும் சாதியை மையப்படுத்தியே படங்களை எடுத்து வருவதால் பல படங்களை பார்க்க வேண்டுமா என்ற யோசனை வர ஆரம்பித்துவிட்டது. அப்படித்தான் தண்டகாரண்யத்தையும் கிடப்பில் வைத்திருந்தேன். பின்னர் சரி பார்ப்போம், எப்பவும் போல் படம் பயணித்தால் பாதியில் நிறுத்திவிடலாம் என நினைத்தே பார்க்க ஆரம்பித்தேன்.
கதை வித்தியாசமாய் பயணித்தது. இசைஞானியின் கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தின் ‘மனிதா… மனிதா…’, இதயத்தை திருடாதே படத்தின் ‘ஓ ப்ரியா… ப்ரியா…’ பாடலும் படத்தில் மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருந்தது. அதுவும் ஓ ப்ரியா… ப்ரியா… சான்ஸே இல்லை, செம.
வன அலுவலகத்தின் வேலை செய்யும் பழங்குடி இனத்து இளைஞனாக கலையரசன், அவரின் அண்ணனாக அட்டக்கத்தி… ரப்பர் பந்து… இல்லையில்லை ‘கெத்து‘ தினேஷ். அண்ணனுக்கும் வனத்துறை அதிகாரிக்கும் உள்ளூர் அரசியல் தலைகளுக்கும் எப்பவும் மோதல் என்பதால், அண்ணன் செய்யும் ஒரு காரியத்தால் தம்பியின் வேலை போவதுடன் அத்தனை வருடம் வேலை பார்த்ததற்கான எந்த அத்தாட்சியும் இல்லாமல் அழிக்கப்பட்டு வாழ்வு சூன்யமாகிறது.
அப்போதுதான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத்திய அரசால் நடத்தப்படும் நக்கல் ஒழிப்பு மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம், இந்த துணை ராணுவ வீரனாகி மாதம் இருபதாயிரம் சம்பாரிக்கலாம் என ஒருவர் சொல்வதைக் கேட்டு, இருந்த ஒரு விவசாய நிலத்தையும் விற்று தம்பியை அனுப்பி வைக்கிறார் தினேஷ். அங்கு செல்லும் தம்பிக்கு என்ன ஆகிறது..? ஊரில் இருக்கும் அண்ணன் என்னவாகிறார் என்பதைத்தான் பேசுகிறது இந்தப்படம்.
பயிற்சிக்குச் செல்லுமிடத்தில் நக்கச்சல்கள் சரணடைந்ததாய் சொல்லி, போட்டோ எடுத்து அதை நாடெங்கும் பத்திரிக்கைகள் வாயிலாக பரப்பித்தான் பயிற்சிக்கு எடுத்துக் கொள்கிறார்கள் அல்லது கொல்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஆம் நாம் வீரப்பன் வேட்டையில் சரணடைந்தவர்கள்… சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என அப்பாவிகளின் போட்டோக்களைப் போட்டு அரசியல் செய்ததைப் போல் இதில் நக்சலைட்டுகள் எனச் சொல்லி, அப்பாவி ஏழைகளைக் காவு வாங்குகிறார்கள்.
வீரப்பன் வேட்டையை நினைக்கும் போது வழக்கறிஞர் ச.பாலமுருகனின் சோளகர்தொட்டி நாவல் ஞாபகத்தில் வருகிறது. அதை வாசித்தபின் பல நாட்கள் மனதை என்னவோ செய்தது. காவல்துறை அவ்வளவு அட்டகாசம் செய்திருக்கும். அந்த நாவலை நாம் கொண்டாட அல்லது கொண்டு சேர்க்க தவறிவிட்டோம் என்பதுதான் உண்மை.
இந்தப் படத்தின் கதை கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதி, மலைப்பகுதியில் பயணித்து ஜார்கண்ட் பயிற்சி முகாம் என நகர்கிறது. முகாமில் நடக்கும் கொடுமைகள், கொடுக்கப்படும் தண்டனைகள் என எல்லாவற்றையும் தத்ரூபமாகப் படமாக்கியிருக்கிறார்கள். கலையரசன் மிகச் சிறந்த நடிகர் என்பதால் பல இடங்களில் அடித்து ஆடியிருக்கிறார், சில இடங்களில் சோடை போய்விட்டார்.
தினேஷ் போராளியாக வருகிறார். படத்தில் பலரைக் கொல்கிறார். தம்பியை இந்திய ராணுவ அதிகாரியாகப் பார்க்க ஆசைப்படுகிறார். முடிவில் தமிழகத்தில் இருந்து ஜார்கண்ட் வரை போகும் நக்சலாக மாறிப் போகிறார். லப்பர் பந்து கெத்து காட்டிய கெத்தில் பாதிகூட இதில் இல்லை என்பதே உண்மை.
நக்சல்கள் எனச் சொல்லி பயிற்சிக்குப் போனதால் அவர்களின் குடும்பங்கள் படும் இன்னலைச் சொல்லியிருப்பது சிறப்பு. அதிலும் கலையரசனின் அப்பாவாக நடித்தவர் அடிபடும் போதும் மிதிபடும் போதும் மனசு வலிக்கிறது. அதேபோல்தான் பயிற்சி முகாமில் ஆரம்பத்தில் கலையரசனுடன் மோதி, பின் நட்பாகி, தனது குடும்பத்தின் தற்போதைய நிலையைச் சொல்லி, மகளை நினைத்து உருகும் ஷபீரின் முடிவும் மனதைக் கனக்க வைக்கிறது. முகாமில் கலையரசனைவிட ஷபீர் கல்லரக்கல் அடித்து ஆடியிருக்கிறார்.
தினேஷின் மனைவியாக வரும் ரித்விகாவுக்கு அவ்வளவாக வேலை இல்லை, தினேசுக்கே அப்படித்தான். கலையரசனின் காதலியாக வரும் வின்சு சாம் தனது கதாபாத்திரத்துக்கு சிறப்பு செய்திருக்கிறார். பால சரவணன் கேம்பில் கலையரசனுக்கு நட்பாகிறார். இவரின் செயல்கள் சிரிப்பை எல்லாம் வரவைத்து விடவில்லை, இறுதியில் புலம்புவதும், கதறுவதும் சிறப்பு.
படத்தில் இப்படி ஒரு முகாம் இருப்பதே வெளியில் தெரியாமலேயே இருப்பது போல் சொல்வது, பழங்குடி இனத்து மக்கள் தவிர படத்தில் வரும் மற்ற எல்லாருமே வில்லன்கள் எனக் காட்டுவது, ஜார்கண்ட் போய் தினேஷ் பலி தீர்ப்பது, ஆரம்பத்தில் இந்தியில் பேசும் ஷபீர் பாதிப் படத்தில் தமிழில் பேச ஆரம்பிப்பது என சிலவற்றை ஏற்றுக் கொள்ள முடியாதுதான் என்றாலும் வீரப்பன் வேட்டையில் இருந்த உண்மையை நாம் அறிந்திருப்பதால் இப்படித்தான் நக்சல்கள் என்ற போர்வையில் அப்பாவிகளைக் கொல்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.
போதை, மாஸ் என வானவேடிக்கை நிகழ்த்தாமல் சாதி, பாதிப்பு என திருவிழா நடத்தாமல் ஒரு கதையை – அதுவும் உண்மையில் நிகழ்ந்ததாம் – படமாக்கிய இயக்குநர் அதியன் ஆதிரைக்கு வாழ்த்துகள்.
பிரதீப்பின் ஒளிப்பதிவு அருமை, அதுவும் காடு சம்பந்தப்பட்ட காட்சிகள் வெகு சிறப்பு. ஜஸ்டின் பிரபாகரனின் இசை, குறிப்பாக பின்னணி இசை படத்துக்குப் பெரும் பலம். செல்வா ஆர்.கேயின் படத்தொகுப்பு சிறப்பு. நீலம் புரடெக்சனுக்காக பா.ரஞ்சித், சாய் தேவானந், சாய் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
இராணுவத்தில் சேர நினைத்தவனை போராடவும், ஊரில் தன் மக்களுக்காக குரல் கொடுத்தவனை நக்சலாகவும் மாற்றி விடுகிறது காலம். அரசு நினைத்தால் எதையும் செய்யும் என்பதை வடநாட்டு அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள் எனக் கதை சொல்லியிருக்கிறாரகள்.
தண்டகாரண்யம் ஒருமுறை பார்க்கலாம்.


