கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
ஸ்ரீராம்
இங்கிருந்து நேராக கல்யாண மண்டபத்துக்குதான் போகப்போகிறோம் என்று தோன்றி விட்டது அவருக்கு.
வினோத்துடனும் ரவியுடனும் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் ரேணு.
நீ எப்பம்மா வைத்தியநாதன் மாமாவைப் பார்த்தே…? உனக்கெப்படி தெரியும்?”
“கேள்வியே தேவை இல்லையே அங்கிள்… வினோத் சொன்னான். போய்ப் பார்த்துட்டு வந்துட்டேன்.”
“இப்போ அடுத்தது அவர் எண்ட்ரியா?”
“அய்… அஸ்கு புஸ்கு… அவர் எவ்வளவு பெரியவர்… நாமதான் அவர் இருக்கற இடத்துக்குப் போகணும்…”
அது என்றைக்குப் போகணும்? அதையும் நீயே சொல்லிடு… அவர் கிட்ட சொல்லி வச்சிருப்பே… தெரியும்… எனக்கும் சொன்னாதானே தயாராய் இருக்க முடியும்?”
“என்றைக்கா… அப்படி எல்லாம் இனி தள்ளிப் போடமுடியாது அங்கிள்… வாங்க போகலாம்…”
வினோவும் வினோத்தும் எழுந்து முன்னால் நடக்க, பாலாஜி மூர்த்திக்காகவும் ரேணுவுக்காகவும் காத்திருந்து சேர்ந்து நடந்தார். மூர்த்திக்கு ஆச்சர்யங்கள் அலுத்துப்போயிருந்தன. ரவி தயக்கத்துடன் சந்தியாவுடன் சேர்ந்து வந்தான். முன்னால் வினோத்-வினோ, பின்னால் ரவி-சந்தியா ஜோடியைக் கண்ட மூர்த்தி “திருடனுங்க” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். அடுத்து எங்கே போகவேண்டுமோ என்று அவர்களுடன் மெல்ல நடந்தார்.
வாசலை நோக்கி நடந்த மூர்த்தி ரேணுவை, பாலாஜி கவனம் திருப்பி வினோ ஜோடியை நோக்கிக் கைகாட்டினார். அவர்கள் இதே போல பக்கத்தில் இருந்த இன்னொரு ஏ ஸி ஹாலுக்குள் அழைத்துச் செல்ல, அங்கே அமர்ந்திருந்தார் வைத்தி மாமா!
“எனக்கு ரொம்ப நேரமா காத்திருந்ததா தோணினாலும் இது ரொம்ப ரொம்ப சீக்கிரம் வினோதா…” என்றார் வைத்தி மாமா.
“நீங்களுமா வைத்தி மாமா?” என்றார் மூர்த்தி.
“நல்ல விஷயம்தானே மூர்த்தி? ஒண்ணு தெரியுமோ… குழந்தைகள் மூணு வாரமா பிளான் பண்ணினதுகள்… போன வாரம் வினோத்தையும், ரவியையும் நீ அம்பத்தூர் அனுப்பிட்டே… இல்லாட்டா போனவாரமே கூட முடிஞ்சிருக்கும்… உனக்கேத்த மருமகள்… எனக்கு உன் சின்ன வயசு ஞாபகம் வர்றது…” என்றார் வைத்தி மாமா.
“சொல்லுங்க… என்ன சாப்பிடறீங்க…?”
“அட போப்பா… எனக்குப் பிடிச்ச ரவா தோசை ரெண்டு வாட்டி சாப்பிட்டுட்டு ரெண்டு காஃபி குடிச்சுட்டேன். யதேஷ்டம்…”
“நீங்களா நாள் குறிச்சு கொடுத்துருக்கீங்க?”
“ஆமாம்… அதுல எந்த நாள் சிலாக்கியம்னு வினோ சொல்லி இருப்பாளே… போகப்போக அவளே உனக்கு எல்லா சந்தேகத்துக்கு பதில் சொல்லிடுவாப்பா… கெட்டிக்காரி…”
மூர்த்தி வினோவைப் பார்த்தார். “எந்த மண்டபம் பிக்ஸ் பண்ணியிருக்கே?”
“முதலில் தேதி… அதில் நாலாவதா இருக்கற தேதி ஓக்கேன்னு நினைக்கறேன் அங்கிள்… வாரக் கடைசியில் வருவதால் வருபவர்களுக்கும் வசதி. ஆனால்… அங்கிள், நான் ஒண்ணு சொல்வேன்… யோசிச்சுப் பாருங்க… கோவிச்சுக்கக் கூடாது… “வினோ சற்றே தயங்கி நிறுத்தி இடைவெளி விட்டாள்.
பாலாஜி குறுக்கிட்டார்.
“சம்பந்தி… இப்போ சொல்லப்போகும் யோசனை என்னோடது இல்ல… எனக்கு விருப்பமும் இல்ல…”
சம்பந்தியா? மூர்த்தி வியந்து கொண்டார். எவ்வளவு வேகமாக ஏற்பட்டு விட்ட உறவுகள்!
“அப்பா… பயப்படாத… அங்கிள் உங்களை தப்பா நினைக்க மாட்டார். அது மட்டும் இல்ல… நான் உன்னை அப்படி எல்லாம் விட்டுடவும் மாட்டேன்…”
“புதிர்போடாம சொல்றியாம்மா…?
“அங்கிள்… கல்யாணத்துல நாம அதிகமா காசு செலவு செய்யப்போறதில்ல… என் அப்பாவுக்காக, சந்தியா அப்பாவுக்காக நான் இதைச் சொல்லல… பொண்ணு வீட்டு சைடாவே பேசல… ஒருவாட்டி வினோத் நீங்க கூட இந்தக் கருத்தைப் பேசிக்கிட்டிருந்ததா சொன்னான். எனக்கு அது பிடிச்சுப்போயி அப்புறமா தோணின ஐடியாதான் இது…”
பாலாஜி சங்கடத்துடன் மூர்த்தியைப் பார்த்தார். மூர்த்தி விநோதினியையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“சொல்லு…”
“முதல்ல ஏதாவது கோவில்ல தாலி கட்டிடறதுன்னு யோசிச்சோம். அப்புறம் அதென்ன ஏதாவது ஒரு கோவில்? குலதெய்வம் கோவில்ல தாலி கட்டிடறது… அப்புறம் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம். அப்புறம் ஒரு ஹோட்டல்ல ரிஸப்ஷன். ஏன், வீட்டுல பெரியவங்க முன்னால தாலி கட்டிட்டு ரெஜிஸ்டர் ஆபீஸ் போயிடலாம்னு கூட யோசிச்சோம். அனாவசியமான ஜவுளிகள், மிச்ச செலவுகள் எல்லாம் கட் பண்ணிட்டு, அந்தப் பணத்தை அப்படியே பொண்ணு பேர்ல டெபாசிட் பண்ணிடறது… இதைதான் அப்பா கிட்ட நீ தப்பிக்க முடியாதுன்னு சொன்னேன்…”
“இது அவ யோசனைதான் சம்பந்தி… நீங்க வேற மாதிரி அபிப்ராயப்பட்டீங்கன்னா கல்யாணம் நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி செய்துடலாம்…” பாலாஜி அவசரமாக இடைபேசினார்.
வைத்தி புன்னகைத்தார். ‘மூர்த்திக்கேற்ற மருமகள். இவன் அநேகமாக ஆல்ரெடி ஓகே சொல்ல முடிவு செஞ்சிருப்பான்… மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க டிலே பண்றான்… அவ கிட்ட இதுக்கு அவன் கட்டாயம் ஒத்துப்பான்னு சொல்லி வச்சிருக்கேன்.’
மூர்த்தி எல்லோரையும் பார்த்தார். ரேணுவைப் பார்த்தார். ரேணுவுக்கு இதில் பெரிய சம்மதம் இருக்காது. ஆனால் எல்லோரும் சொன்னால் முணுமுணுத்தாலும் ஏற்றுக்கொண்டு விடுவாள். பொண்ணு வீட்டு ஸைட் பற்றிக் கவலை இல்லை. அவர்கள் இதற்கு சரி என்று சொல்லத் தயாராய் இருப்பார்கள். வினோத் தான் எதற்கெடுத்தாலும் எதிர்வாதம் செய்பவன்… காசு பெரிசு இல்லை என்பவன்…
“வினோத்… நீ என்ன சொல்றே?”
“நீ சொல்றதுதான்ப்பா… எனக்கு ஓகே… ஆனா உன்னோட, அம்மாவோட ரெண்டு பேரோட சம்மதம் முக்கியம்… மாமாவையும் கேட்டுடுவோம்… அம்மா?”
“அப்பா சொன்னா சரி…”
வைத்தியைப் பார்த்தார் மூர்த்தி. அவர் கண்களாலேயே சம்மதம் சொன்னார்.
“என்னைப் பொறுத்தவரையும் ஓகே. வேறு யாருக்கானும் ஏதாவது தோணினா சொல்லலாம்…” சந்தியாவைப் பார்த்தார்.
சந்தியா தலையாட்டினாள். “நாங்க எல்லாம் முன்னாலேயே கன்வின்ஸ் ஆயிட்டோம் மாமா…”
“அப்போ… எந்த ஹோட்டல்ல ஹால் மாதிரி கிடைக்குதுன்னு கேட்டுடலாம். இப்போவே ஆரம்பிச்சாதான் சரியா இருக்கும்… இன்னும் ஒன்றரை மாசம்தான் இருக்கா? இந்த ஹோட்டல்ல அப்படி ஏதாவது இருக்கோ?” மூர்த்தி திரும்பி ஹோட்டல் மேனேஜரை இங்கிருந்தே அளவெடுப்பபது போல பார்த்தார்.
“இருக்குப்பா… செகண்ட் ப்ளோர்… நம்ம சர்வர் மூலம் அதையும் பேசி ரிஸர்வ் பண்ணி வச்சிருக்கேன்…” என்றாள் வினோதினி.
புன்னகைத்தார் மூர்த்தி.
“அம்மா வினோதினி… நான் அசந்து போயிருக்கேன். என்ன மாதிரி பொண்ணும்மா நீ… வினோத் கவலை இனி எங்களுக்குத் தீர்ந்துடும். சந்தியாதான் சந்தேகமா இருக்கு. பதட்டமாவே இருக்கா…”
“அங்கிள்… இனி நானும் உங்களை மாமான்னே கூப்பிடறேன். மாமா… அவளும் லேசுப்பட்ட பொண்ணு இல்ல… அவகிட்ட ஒரு வீக்னஸ் இருந்ததால அடக்கி வாசிக்கறா… ரவி பத்தின கவலையையும் விடுங்க…”
ரவி சொன்னான். “அண்ணி ரொம்ப ஃபாஸ்ட். பயங்கரமா பிளான் பண்ணினா… இதெல்லாம் வொர்க்கவுட் ஆகுமான்னு எங்களுக்கெல்லாம் சந்தேகம். அப்பா எந்த நேரமும் சட்டென எழுந்து போயிடுவார்னு வினோத் பயமுறுத்தி வச்சிருந்தான்….”
அண்ணி! ஹூம்…
“நம்பிக்கைதான். மாமா எழுந்து போயிருந்தால் கதை அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தொடரும். சிக்கனக் கல்யாணத்துக்கு மாமா ஒத்துக்கலைன்னா செலவு பண்ணி கல்யாணம் செய்யவும் தயாரா இருந்தோம். சேலையூர் தாண்டி ஒரு மண்டபம் பார்த்து வச்சிருந்தேன். ரொம்ப தூரம் அது. வர்றவங்களுக்கு கஷ்டம். இல்லைன்னா தேதியையே மாற்ற வேண்டியதிருந்திருக்கும். ஆனா வைத்தி மாமா தைரியம் கொடுத்தார்”
“நீங்க எப்படி இங்கே?” மூர்த்தி வைத்தியைப் பார்த்து கேட்டார்.
“அதுவா? போன வாரம், இல்லை அதற்கு முந்தின வாரம் இந்த சம்பவம் நடந்திருந்தா நீங்க எல்லோரும் வினோவோட கார்ல எங்க வீட்டுக்கு டிரைவ் பண்ணிக்கிட்டு வந்திருக்கணும்… இந்த வாரம் எனக்கு இந்த ஏரியால ஒரு வேலை வந்தது. என் ஸ்கூல் ஃபிரெண்டு சுந்தரராஜன்… உனக்குத்தான் தெரியுமே …. அவன் தன் மகன் வீட்டுல வந்து தங்கிட்டு என்னை இங்கு வரமுடியுமான்னு கூப்பிட்டான். அவனே ஊபர் புக் பண்ணிக் கொடுத்தான். சரின்னு வந்தேன். வினோ கிட்டயும் சொன்னேன். அவ இந்த வாரம் எப்படியும் முடிச்சுடறேன்னு சொன்னா”
“இந்த வினோத்தான் அவர் ‘மூடை’க் கெடுத்து அனுப்பி வச்சான். அது கொஞ்சம் பயமா இருந்தது. நல்லவேளை… எல்லாம் சுபம்!” சிரித்தாள் வினோதினி.
“மாமா… கோபம் இல்லையே…”
“இல்லை” என்று தலையாட்டினார் மூர்த்தி. “நீ விரிவா செஞ்சு வச்சுருக்கற ஏற்பாட்டுல ஆடிப்போயிருக்கேன்மா நான்… ரொம்ப சந்தோஷம்…”
ரவி வினோத்தைப் பார்த்தான். “பார்றா… உன்னையோ, என்னையோ அப்பா எப்பவாவது இப்படி எல்லாம் பாராட்டி இருக்காரா?”
“அப்படி நீங்க நடந்துக்கலையேடா…”
“இப்போ அடுத்தது என்ன? ரேணு கேட்டாள்.
“அத்தை… நைட் ஆகாரம் இங்கேயே கிட்டத்தட்ட முடிஞ்சுடுச்சு. வீட்டுக்குப்போய் தூங்கறோம்… நாளைலேருந்து ஆகவேண்டிய வேலைகளைப் பார்க்கறோம். மாமா… நாளைக்கு அல்லது நாளை மறுநாள் சாயங்காலம் நான் உங்க வீட்டுக்கு வந்து உங்களையும் அழைச்சுக்கிட்டு வைத்தி மாமா வீட்டுக்குப் போறோம்… பத்திரிகை மாடல் வச்சிருக்கேன்… அதை முடிச்சிடலாம்…”
“அதுல என்ன புதுமை வச்சிருக்கியோ…”
மூர்த்தி வாழ்வில் இதுவரை இல்லாத திருப்தியுடன் முன்னே நடந்தார். சட்டென பல தளைகளிலிருந்து விடுதலை போல இருந்தது அவருக்கு.
[நிறைந்தது]


