அரசு அலுவலரான எனக்கு போன மாதம் பணி மாறுதல். அதுவும் இந்த
கிராமத்திற்கு. ஒரு வருடத்துக்குள் திரும்ப பழைய அலுவலகத்திற்கே போய்விடலாம்.
அதுவரை இங்கே காலத்தை ஓட்டியாக வேண்டும். நகரவாசியான எனக்கு கிராமம் புதிது.
ஆனால் நான் தங்கியிருந்த கிராமத்தில்
எல்லா வசதிகளும் இருந்தது. முக்கிய சாலைகள் இரண்டு, மூன்று மட்டும் இருந்தாலும்
அந்த சாலைகளிலேயே பணம் எடுக்கும் வசதி, பெட்ரோல் நிரப்புமிடம், சின்ன மருந்துக்கடை
போன்ற அத்தியாவசிய கடைகளும், நகரத்தில் இருப்பதைப் போலவே விளம்பர பதாகைகள், நிறைய
இருசக்கர வாகனங்கள், விதவிதமான கோழி இறைச்சி வகைகளுடன் உணவகங்கள், இன்னும் பிற
அனாவசியமான கடைகளும் இருந்தன. நகரத்தின் சாயல்,அந்த சாலைகளில் தெரிந்தது.
விவசாய நிலங்களும், ஆறுகளும்
அதிலிருந்து பிரியும் வாய்க்கால்களும், கண்மாயும், எங்கும் நிறைந்து இருந்த பெரிய
சிறிய மரங்களும், பறவைகளும் மட்டும் தான் இது கிராமம் என அடையாளப்படுத்தியது.
நான் தங்கியிருந்த வாடகை வீடு, ஐந்தாறு
மரங்களுக்கு நடுவே நிறைய வெளி இடத்துடன் இருந்தது. வீடு சிறியது என்ற உணர்வே
வரவில்லை. தூங்குவது, சாப்பிடுவதை தவிர எல்லாம் வெளி புழக்கம் தான்.
வீட்டை விட்டு வெளியில் வந்தால் சற்று
தூரத்தில் ஆறும், அதிலிருந்து பிரிந்து வரும் நீண்ட வாய்க்கால் ஒரு
இடத்தில் சரெலென்று திரும்பி செல்லும். அதன் அருகிலேயே பெரிய புளிய மரம்
ஒன்றும், புங்கை மரம் ஒன்றும் இருக்கும். நிறைய புற்கள் நிறைந்த மிக அழகான இடம்
அது.
தினமும் மாலை அலுவலக நேரம்
முடிந்தவுடன் அங்கு போய் உட்கார்ந்து கொள்வேன். அந்த நீண்ட கால்வாயின் மற்ற எல்லா
இடங்களிலும், மக்கள் நடமாட்டம் மிக அதிகமாக இருக்கும். ஏனோ தெரியவில்லை இங்கு
மட்டும் யாரும் வருவதேயில்லை.
அந்த அமைதி, தனிமை விரும்பியாகிய
எனக்கு ஒரு வரமாகவே தெரிந்து. இருட்டும் வரை உட்கார்ந்து, உறவினர்கள், நண்பர்கள்
என அனைவரிடமும் தொலைபேசியில் காற்றாட பேசிவிட்டு தான் வீட்டுக்கு வருவேன்.
நகரத்தில் வீட்டு குளியலறையில் கதவை
பூட்டி, வாளிகளில் தண்ணீர் பிடித்து வைத்து விட்டு, அந்த அளவுக்குள் குளித்து
பழக்கப்பட்ட எனக்கு ஆரம்பத்தில், அந்த வாய்க்காலில் குளிக்க அவ்வளவாக மனம்
வரவில்லை. தண்ணீர் உடம்புக்கு சேருமோ, சேராதோ என்ற பயம் வேறு.
ஒரு தடவை என் மனைவியிடம்
வாய்க்காலில் குளிக்கவா? என்று கேட்டதற்கு “சனி ஞாயிறு வீட்டுக்கு வரும் பொழுது
தலைவலி ஜலதோஷம் என்று எதையும் கொண்டு வந்துடாதீங்க!! இந்த வாரம் என் தங்கை வீட்டு விசேசத்திற்கு வேறு
போகனும். தினமும் அடுப்பில் சூடு தண்ணீர் வைத்தே குளியுங்கள்” என்றார் சற்று
சலிப்பான, எச்சரிக்கும் குரலில்.
இரண்டு நாட்களுக்கு முன், மரத்தடியில்
அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவன், சரி குளித்து பார்க்கலாமே என்ற
ஆசை வர, மிக எச்சரிக்கையாக படிக்கட்டில் இறங்கி குளிக்க ஆரம்பித்தேன். ஆழம் இல்லை.
ஷட்டர் வைத்து அடைத்து விட்டதால் வேகமும் இல்லை. இடுப்பு வரைதான் தண்ணீர்.
ஓடும் நீரில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி, தலை மூழ்கி, மூழ்கி குளித்தது ஆனந்தமாக
இருந்தது.
குளித்து விட்டு, வீட்டுக்கு வரும்
வழியில், ஊரில் இருந்த சிறுசு, பெருசு எல்லாம் என்னை புதிதாய், ஏதோ வித்தியாசமாக
பார்ப்பதுபோல் இருந்தது. ஏதோ அமானுஷ்ய சக்தியை பார்ப்பது போல், கண்களில் ஒரு வித
மிரட்சியுடன் பார்த்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
இரண்டு நாட்கள் ஆகியும், நான் பயந்தது
போல ஜலதோஷம், தலைவலி என்று ஒன்றும் செய்ய வில்லை. எனவே இன்றும் அதே ஆற்றில், அதே
இடத்தில் குளிக்க வேண்டும் போல் இருந்தது. மாலை அலுவலகம் முடிந்து வந்தவுடன்
துண்டு, சோப்பை எடுத்துக் கொண்டு வாய்க்காலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
போகும் வழி எல்லாம்
ஊர்க்காரர்கள் எல்லாம் என்னை இன்னும் ஆச்சரியமாக, வித்தியாசமாக பார்த்தார்கள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. வந்து சில நாட்களே ஆனதால், யாரிடமும் காரணம்
கேட்பதற்குதற்கு தயக்கமாக இருந்தது.
அலுவலகத்தில் பணிபுரியும் உள்ளூர்
நண்பர் வினோத்தின் வீட்டிற்கு சென்று இது பற்றி பேசலாம் என்று நினைத்தவன்,
வேண்டாம் நாளை நேரில் பேசலாம் என முடிவெடுத்தேன்.
மறுநாள் அலுவலகம் செல்லும் வழியில், அதே
நிலைதான். எல்லோரும் பார்த்தார்கள். அவர்களுக்குள் குசுகுசுவென பேசிக்கொண்டார்கள்.
ஒரே குழப்பமாக இருந்தது எனக்கு. முதலில் வினோத்திடம் சென்று இது பற்றி பேசி, ஒரு
முடிவு காண வேண்டும் என்றெண்ணிய படி விரைந்து அலுவலகம் நோக்கி நடந்தேன்.
அலுவலக வாசலிலேயே உள்ளூர் நண்பர்
வினோத், என்னை எதிர்பார்த்திருந்தைப்போலவே நின்று கொண்டிருந்தார். நான் பேசுவதற்கு
முன்பே அவர், ”கையை கொடுங்கள் சார்! ஊரில்
எல்லாம் உங்களைப் பற்றி, உங்கள் தைரியத்தை பற்றித்தான் பேச்சு.” என்றார். “வினோத்,
என்னக்கு ஒன்றும் புரியல” என்று ஆரம்பித்தவனை மடக்கிய வினோத்” பின்ன என்ன சார்!
நீங்க குளிக்கிற இடத்தில் போன வருடம் ஒரு சின்ன பொம்பள பிள்ளை குளிக்கும்
போது, வலிப்பு வந்து காப்பாற்ற ஆள் இல்லாமல் செத்தே போயிருச்சு. பிணம்
அங்கிருக்கும் ஷட்டரில் மாட்டி, மறுநாள் தான் எடுத்தார்கள்.
அன்றிலிருந்து அந்த புளியமரத்து
பக்கத்தில், சிரிப்பு சத்தம் கேட்குது, அழுகை சத்தம் கேட்குதுன்னு யாரும் அந்த
பக்கமே போறதில்லை. அதையும் மீறி குளிக்க போன ஒரு பிள்ளைக்கு பேய் பிடிச்சிருச்சுனு
ஊரெல்லாம் ஒரே பேச்சு. இது நடந்தது உங்க வீட்டுக்கு பக்கத்துல. இது பற்றி
நீங்க நிச்சயம் கேள்விப்பட்டு இருப்பீங்க. ஆனா, நீங்க என்னடானா!! வந்த ஒரு
மாதத்திலேயே தினமும் இருட்டும் வரை அங்கேயே இருந்தது மட்டுமில்லாம, இப்ப அங்கயே
குளிச்சு உங்க தைரியத்தை நிருபிச்சு, ஊர் பயத்தையும் போக்கிட்டீங்க சார்!
போங்கிட்டீஙக!! என்ன தான் இருந்தாலும், படித்தவர் படித்தவர்தான் சார்” என்று அவர் பாராட்டி
பேச பேச, இது பற்றி எதுவும் தெரியாத எனக்கு மேற்கொண்டு அவர் பேசியது எதுவும்
காதில் விழவில்லை. எனக்கு காய்ச்சல் வருவது போலிருந்தது. எப்படியே சமாளித்து
இருக்கையில் போய் பட்டென்று அமர்ந்தேன்.
அடுத்த இரண்டொரு நாட்களில் ஒருவர் பின்
ஒருவராக நிறைய பேர் அந்த இடத்தில் குளிக்க ஆரம்பித்தார்கள். பெண்கள்
துவைத்தார்கள். பேசினார்கள். சிரித்தார்கள். எனக்குத்தான் ஏனோ, அதன் பின் அங்கு
செல்ல தைரியம் வரவில்லை.


