நீதிமன்ற வளாகத்தில் கார்த்திக் காத்திருந்தான். அவன் யாருக்காகக் காத்திருக்கிறான் என்றால்… அவனது தாலி கட்டிய மனைவிக்காகத்தான். ஆம், அவன் கீதாவிற்காகத்தான் காத்திருந்தான். இன்று இருவருக்கும் கோர்ட்டிலிருந்து ஆஜராகச் சொல்லி மனு வந்ததின் அடிப்படையில், இருவரும் தனித்தனியாகக் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
ரெண்டு வருடம் முன்னர் இருவரும் எண்ணிப் பார்த்திருப்பார்களா இப்படி கோர்ட் வாசலை மிதிப்போம் என்று. ஆனால், தற்போது இருவரும் கோர்ட்டை நாடியிருக்கின்றனர். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையை இருவரும் நீதிமன்றத்தில் வைத்ததன் பேரில், இன்று அவர்கள் இருவரும் ஆறு மாத காலமாக வீட்டிற்கும் கோர்ட்டிற்கும் நடையாய் நடந்துகொண்டிருக்கிறார்கள்.
அவரவர் வக்கீல் வந்தவுடன் வளாகத்திலிருந்து நீதிமன்றத்திற்குள் நுழைந்து நீதியரசருக்காக (ஜட்ஜுக்காக) காத்திருந்தனர். வழக்கு கொடுத்தவரிடம் மனுவை ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு சம்மன் எதிர் தரப்பினருக்கு அனுப்பப்படும். அந்த வகையில வழக்கை தொடுத்தவர் கீதா எதிர் தரப்பில் இருப்பவர் கார்த்திக், அதனால் சம்மன் பெற்றவுடன் ஆஜர் ஆகிவிட்டான்.
ஜட்ஜ் வந்தவுடன் அந்த இடமே நிசப்தமானது. கூடியிருந்த அனைவரும் எழுந்து மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்ததும், வழக்கு எண் அறிவிக்கப்பட்டது. ஜட்ஜ், எதிர் தரப்பினர் பிரிவில் நின்றிருக்கும் கார்த்திக்கைப் பார்த்து, “மனுதாரர் உங்களிடமிருந்து விவாகரத்து கோருகிறார். உங்களுக்குச் சம்மதமா?” என்றார்.
“ஐயா, நாங்க இருவரும் இப்படி நிகழும் என்று எதிர்பார்க்கவில்லை” என்றான்.
“அதுதான் இப்போது நிகழ்ந்துவிட்டதே, என்ன செய்யச் சொல்றீங்க? ஆரம்பத்திலேயே நான் கவுன்சிலிங்கிற்குப் பரிந்துரைத்தேன். கவுன்சிலிங் பிரிவிலும் இருவரும் ஒருவருக்கொருவர் மாறாமல் பிடிவாதமாக இருந்துவிட்டீர்கள். இப்ப என்ன புதிதாகத் தோணுதா?”
கடந்த ஆறு மாத காலமாக இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இருவரும் சமரசமாகி விவாகரத்துக்குச் சம்மதித்தால், உடனே இருவருக்கும் விடுதலை கிடைத்துவிடும். இல்லையென்றால், இருவரில் யாரேனும் ஒருவர் இதில் விருப்பம் தெரிவிக்கவில்லையென்றால் இன்னும் குறைந்தது பதினெட்டு மாதங்கள் இந்த வழக்கு நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.
“ரெண்டே ரெண்டு விஷயம்தான். ஒன்று, நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்திடணும், மறுபடியும் உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கணும். இல்லை, சமரசமாகப் பிரியணும். என்ன சொல்றீங்க கார்த்திக், கீதா?” என்று கேள்வியை எழுப்பினார் ஜட்ஜ்.
மௌனமாக…. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்,
“கோர்ட் நேரத்தை வீணடிக்காமல் கொஞ்சம் முடிவைச் சொன்னால் நல்லாயிருக்கும்.”
“உங்க கேஸ் மட்டுமல்ல, இங்கே வேறு பல கேஸும் உள்ளது. அதைப் பார்க்கணும்,” என்றார் ஜட்ஜ்.
தீர்மானிக்க முடியாமல் இருவரும் அமைதியாக இருந்ததின் காரணத்தால் ஜட்ஜ் இதைக் கூறினார்.
“நீங்க இருவரும் மீண்டும் ஒரு நல்ல முடிவாக யோசிச்சு வந்து சொல்லுங்க, அதுவரையிலும் நான் இந்த கேஸை வருகிற இருபதாம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்,” என்று கூறி அடுத்த நடவடிக்கைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.
இருவரது மௌனத்திற்கும் காரணம், ஒரு வினாடி இருவருமே தங்களது பழைய நினைவுகளில் மூழ்கியதுதான். அதனால் அவர்களால் எதுவும் பேச முடியவில்லை. கீதாவின் மன ஓட்டத்தில், கார்த்திக் பெண் பார்க்க வந்தது நினைவிற்கு வந்து போனது. அதே சமயம் கார்த்திக்கோ, தங்களது திருமண நாட்களையும் அதன் பிறகு அவர்கள் கழித்த நாட்களையும் எண்ணிப் பார்க்க, அந்த நினைவுகள் மனதில் ஊஞ்சல் போல முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்ததால் அவனாலும் எதுவும் பேச முடியவில்லை.
கார்த்திக்கும் கீதாவும் கோர்ட் வளாகத்திலிருந்து திரும்பித் தங்களது வீட்டிற்கு வந்தனர். கார்த்திக்கின் அம்மா, அப்பா அவனிடம், “ஏன்டா கார்த்திக், என்ன ஆச்சு? ஜட்ஜ் என்ன சொன்னாரு? டேய், அவரு சொல்றது இருக்கட்டும், நாங்க சொல்றத கொஞ்சம் கேளுடா! ஏன்டா பிடிவாதம் பிடிக்கிற? பெண் பார்த்து உடனே பிடித்துப் போய்த்தானே திருமணமெல்லாம் செஞ்சது? இப்ப என்னடா… ரெண்டே வருஷத்துல வேண்டாம்னு முடிவெடுத்திருக்க?”
“அம்மா, சும்மா அதையே சொல்லிட்டு இருக்காத. பெண் பார்த்தப்ப அவளது குணாதிசயங்களெல்லாம் தெரிஞ்சுக்க முடியுமா சொல்லு? இல்லை. பிறகு எப்படி அவளைப் புரிஞ்சுக்கிறது? பார்த்தவுடனே பிடிச்சிருச்சு, சரின்னு சொல்லிட்டேன்.”
ஒருவேளை அவள் இப்படித்தான் யோசித்து இருப்பாளோ என்னவோ! யார் கண்டா! நெருங்க நெருங்கப் பழகத்தான் எங்களிடம் இருக்கும் நிறை குறைகளெல்லாம் இருவருக்கும் தெரிய வருகிறது.
“ஏன்டா, சரி சொல்லு, அப்படி என்னத்த குறைய அவளிடம் நீ பார்த்த?”
“அம்மா… எல்லாத்தையும் உன்னிடத்தில் சொல்ல முடியாதும்மா. புரிஞ்சுக்கோ.”
“ஏன்டா, எங்களுக்கு ஏதும் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா? நாங்களும் உன்னோட நடவடிக்கைகளையெல்லாம் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோம். ஏன்டா, இந்த ரெண்டு வருஷத்துல எத்தனை நாள் வீட்டில் இருந்திருப்ப, ஒரு எட்டு மாசம்?”
அவன் பதில் பேசாமல் இருக்க, “எப்பப் பார்த்தாலும் ஆபீஸ்ல அங்க போகச் சொன்னாங்க, இங்க போகச் சொன்னாங்கன்னு எங்காவது ஊருக்குப் போயிடுவ. அவளும் வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தா, எங்ககிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு, உன்னோட அறைக்குப் போயிட்டா அவ்வளவுதான். புறா, கூண்டுக்குள்ள அடைபட்டுக் கிடக்கிற மாதிரிதான் தனிமையில இருக்கா” என்றாள் அம்மாவை ஏறிட்டுப் பார்த்துவிட்டு தலையைத் தாழ்த்திக் கொண்டான்.
“ஒரு நாள் அப்படித்தான், ஆபீஸுல இருந்து வந்ததும் எங்களுடன் கொஞ்ச நேரம் பேசிட்டு, காபி குடிச்சிட்டு அவ அறைக்குப் போயிட்டா. சரி, நாங்களும் அவ அசதியா இருப்பா போலன்னு விட்டுட்டோம். பின் நேரம் ஆக ஆகத்தான், ‘அவ ஏன் இன்னும் வெளிய வரல’ன்னு எங்களுக்கும் தோணுச்சு. உடனே அவ அறைக்குப் போய்ப் பார்த்தேன். படுக்கையின் குறுக்குவாக்குல ஒரு பக்கம் தலை தொங்கிய நிலையில, மறுபக்கம் கால்கள் தொங்கிய நிலையிலுமா இருந்தா. எனக்குப் பதட்டமாயிடுச்சு. உடனே உள்ள ஓடிப்போய், கீதா… அம்மாடி கீதான்னு கூப்பிட்டேன். ஆனா பதில் இல்லை. மேஜை மேல இருந்த தண்ணியை எடுத்து அவ முகத்துல தெளிச்சேன். அப்பதான் அவ சுயநினைவுக்கே வர்ற மாதிரி இருந்துச்சு. எனக்குக் கொஞ்சம் பதட்டம் குறைஞ்சது. நிஜமா சொல்லு, அடிக்கடி உங்க ஆபீஸ்ல வெளியில போகச் சொல்றாங்களா? எங்களுக்கே அந்த டவுட் இருக்கு, அப்புறம் அவளுக்கு இருக்காதா?”
அவன் பதில் எதுவும் சொல்லவில்லை.
“ஏண்டா, நாங்க பெரியவங்க சொல்றோம், கொஞ்சம் காது கொடுத்து கேளு. உன்னோட நடவடிக்கையில ஒரு மாற்றம் தெரியுது. அதை நீயே சரி செஞ்சுகிட்டீனா நல்லது. இல்லன்னா, ரெண்டு பேருக்கும் அது பாதகமாகத்தான் முடியும். ஏன்டா கார்த்திக், உன்னை நம்பி வந்தவடா அவ. அவளை அப்படியே நட்டாத்துல விடுறதுக்கு எப்படிடா மனசு வந்துச்சு?”
“ம்மா.. சும்மா கத்திக்கிட்டே இருக்காத, இப்ப என்ன ஆயிடுச்சு இவ்வளவு சத்தமா கேள்வி கேட்கிற?”
“என்ன ஆகணும்டா! அதான் டைவர்ஸ் வரைக்கும் போயிடுச்சே. ஒண்ணே ஒண்ணு நானும் உன் அப்பாவும் சொல்லிக்க விரும்புறோம். டேய்.. அவரும் ஓர் ஆபீஸ்ல வேலை செய்தவர்தான். தான் உண்டு, தன் வேலை உண்டுண்ணு இருப்பார். உன்ன மாதிரி திரியல”.
“ம்மா.. நீ இப்ப என்ன சொல்ல வர, நான் ஊரு சுத்துறேன்னு சொல்லுறியா?”
“ஆமான்டா, நீ ஊருச் சுத்துறதான். அதுதான் பார்த்தாலே தெரியுதே. மொச புடிக்கிற நாய் மூஞ்சிய பார்த்தா தெரியாது! அது போல உன்னோட நடவடிக்கைகளைப் பார்த்தாலே தெரிஞ்சுக்கலாம்.”
“ஆமாம் என்ன பண்ணச் சொல்லுற? எனக்கு இன்னொரு பெண்ணோட பழக்கம் இருக்கு. இது எப்படி உங்ககிட்ட, அவகிட்ட எல்லாம் சொல்லுறது. அதனால்தான் ஏதும் சொல்லல.”
“ஏன்டா வீணாப்போனவனே, இதெல்லாம் கெட்ட பழக்கமுண்ணு தெரியலையாடா உனக்கு. டேய் விட்டொழியடா இந்த பழக்கத்தை. நல்லா கிளி போல இருக்காளேடா உன்னோட பொண்டாட்டி. அவளுக்குப் போய் துரோகம் செய்யுறியே, இது நியாயமா, அடுக்குமா!”
“ம்மா.. எனக்கு அவளுக்கும் தான் ஒத்துவரலண்ணு முடிவாகிடுச்சு, பிறகு எப்படி ஒண்ணா வாழச் சொல்லுற.”
“அடேய், யாரு வீட்ல மனக்கசப்பு இல்லாம இருக்கு சொல்லு, எல்லோரும் உன்னை மாதிரியா ஊரு மேயிறாங்களா?”
“அம்மா, கவனமாப் பேசு. அம்மாவாச்சேன்னு பொறுத்து போயிட்டு இருக்கேன். என் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.”
“அடேய் என்னடா பண்ணுவ, அடிப்பியா? அடிடா, அது ஒண்ணுதான் இந்த வீட்டில நடக்கல. மத்த எல்லாத்தையும் தான் நீ செஞ்சுட்டயே. ஏண்டா, யாரு சொன்னா எங்களுக்கு தெரியாதுண்ணு! கீதாவுக்கு எப்பவோ தெரிஞ்சுப்போச்சு உன்னோட பித்தலாட்ட வேலையெல்லாம். முதல்ல அவ என்கிட்ட வந்துதான் அழுதா. நான் கூட முதல்ல நம்பல, கார்த்தி அப்படிச் செய்யமாட்டான் என்றுதான் சொன்னேன்.”
தெரியும் என்றதும் அவனது கண்கள் நிலம் பார்த்தன.
“அதுக்கப்புறம் தான் மெல்லமெல்ல உன்னோட நடவடிக்கைய கவனிக்க ஆரம்பிச்சேன். உனக்குன்னு ஒரு குழந்தை இருக்கிறப்ப எப்படிடா உனக்கு மனசு வந்தது? யாரோ ஒருத்தியோட குடும்பம் நடத்துற. கீதாவையும் உன்னோட கைக்குழந்தையையும் நினைச்சுப் பார்த்தியா? அவ, பாவம்டா. அந்தப் பாவமெல்லாம் சும்மா விடாதுடா. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’னு கேள்விப்பட்டிருப்பியே. அவ்வளவுதான் வாழ்க்கை. போயும் போயும் படுகுழியில் விழப் போறயே. விட்டுட்டு கீதாவோட குடும்பத்தை நடத்தப் பாருடா.”
“ம்மா, எனக்குத் தெரியும் என்ன செய்யணும்னு. நீ போய் படு, இப்ப சும்மா புலம்பாம,” என்றான் கார்த்திக்.
இவனை எப்படித் திருத்துவது? கீதாவும் இப்போது வீட்டில் இல்லை, அவளுடைய அம்மா வீட்டுக்குப் போய்விட்டாள். இவன் இப்படிப் பிடிவாதமாக இருக்கிறானே! கடவுள்தான் அனுக்கிரகித்து, இவனுக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டும் பெருமாளே! என வேண்டிக் கொண்டாள் கார்த்திக்கின் அம்மா.
கீதா தனது குழந்தையுடன் பெற்றோருடன் இருந்து வருகிறாள். தற்சமயம் இருவரும் கார்த்திக் வீட்டில் ஒண்ணா இல்லை, கேஸ் நடப்பதால். ஆனால், வாரம் ஒரு தடவை மாமனார் வீட்டுக்கு தன் குழந்தையுடன் வந்து பார்த்துவிட்டுப் போவாள், அதுவும் கார்த்திக் வீட்டில் இல்லாத சமயம் பார்த்துத்தான் வருவாள்.
ஒரு நாள் கீதாவுடைய மாமியார், அதாவது கார்த்திக்கின் அம்மா, அவளிடம் கேட்டார்.
“ஏம்மா, ஏதாவது பரிசீலிக்க முடியுமா?”
“எதைப் பற்றி அத்தை?” என்றாள் கீதா.
“அதான்மா, உங்க இருவரது வாழ்க்கைப் பற்றித்தான்.”
“எப்படி அத்தை மீண்டும் பரிசீலிக்கிறது? கொஞ்சமாவது மனசாட்சி இருந்தா அவர் இந்தச் செயலைச் செய்வாரா? எவ்வளவு பிடிவாதமா விவாகரத்துக்குப் போயிருக்கார். அவர் என்ன விவாகரத்து கேட்குறது? தப்பு செஞ்சதே அவர்தான், அப்படி இருக்கறப்போ அவர் எப்படி விவாகரத்து கேட்கலாம்? அதான் நானே கோர்ட்ல விவாகரத்து வேணும்னு கேட்டேன். என்னை விடுங்க, ஏதோ கருத்து வேறுபாடு இருக்கிறதால ஒழுங்காப் பேசலை. ஆனா, எங்க குழந்தை என்ன செஞ்சது? அதோட முகத்தைப் பார்த்தாலாவது அவருக்கு வேற நினைப்பு எப்படி வருது சொல்லுங்க?”
“சரிதான்மா… நீ சொல்றது சரிதான். அவன்தான் புத்தி பேதலிச்சுப் போயி இப்படி நடந்துக்கிறான்.”
“இல்லை அத்தை. அவர் தான் என்ன பண்றோம்னு நல்லா தெரிஞ்சுதான் செய்றாரு.”
“ஏம்மா அப்ப உறுதியாதான் இருக்கியா? எப்படி குழந்தைய வச்சுக்கிட்டு சமாளிப்ப?”
“நீங்க அதைப்பத்தி கவலைப்படாதீங்க. அதான் என் தலையில் எழுதியிருக்குன்னா, யாரால என்ன பண்ண முடியும்? சமாளிச்சுத்தான் ஆகணும்.”
“அம்மாடி, நான் ஒண்ணு உங்கிட்ட தெரிவிச்சுக்கிறேன், அவன் உன்னை விவாகரத்து செய்துட்டான்னா, பிறகு அவனுக்கு இந்த வீட்டுல இடமில்ல. நிஜமாத்தான் சொல்றேன்.”
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க. ஏதோ நீங்க ரெண்டு பேரும் இருக்கிறதால கொஞ்சம் அடக்க ஒடுக்கமா வாழுறாரு. நீங்களும் தண்ணி தெளிச்சு விட்டுட்டீங்கன்னா, பிறகு அவரோட கதி அதோகதிதான். நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க, இப்ப வந்து பார்க்கிற மாதிரி, என் கடைசி காலம் வரைக்கும் நான் வந்து என் குழந்தையோட உங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டுப் போறேன்.”
“சரிமா, கடவுள் உன்னை நல்லா வச்சிருப்பார். நீயும் மனசைப் போட்டு உடைக்காம ஸ்திரமா முடிவெடு. நாங்க உன் பக்கம்தான். புரியுதுல்ல? எந்த முடிவா இருந்தாலும் நாங்க உன் பக்கம்தான். என் மகன்தான் தறுதலையா போயிட்டான். எங்களுக்கு ஒரு மகள் இருக்கான்னு நினைச்சுக்கிறோம். நீ விரும்பினா உன் மறுவாழ்வு பத்தி சிந்திச்சுப் பாரு, நாங்க உன் பக்கம்தான்,” என்றாள் கார்த்திக்கின் அம்மா.
கீதாவின் கண்களிலிருந்து கண்ணீர் பீறிட்டுக்கொண்டு வழிந்தது, மனதளவில் மற்றுமொரு அம்மா, அப்பா கிடைத்ததில்.


