பால்யகால சகி குறுநாவலை வாசித்தபின் ஒரு அருமையான நாவலை வாசித்த திருப்தி கிடைத்தது! அதைவிட முக்கியமான இந்நாவலை வாசிக்கும் அனைவருக்குள்ளும் கடந்தகால நினைவுகள் சிலவற்றைக் கிளறி விடும், கடந்து வந்த வாழ்வின் வசந்தத்தையும் வலியையும் மீட்டெடுக்க உதவும். 1944-ல் முகமது பஷீர் அவர்களால் மலையாளத்தில் எழுதப்பட்ட இந்நாவலை தமிழில் குளச்சல் யூசுப் அவர்கள் மொழி பெயர்த்திருக்கிறார். இத்தனை வருடங்கள் கடந்தபோதும் இன்றும் அதே பால்யத்தையும், சோகத்தையும் தன்னடக்கி பொருத்திப் போகிறது.
நாவலில் மஜீத், ஜொஹரா இருவரும் அண்டை வீடு, ஒரே பள்ளியில் படிக்கும் பால்யகால நண்பர்கள் என்றாலும் வீட்டின் அருகே உள்ள மாமரத்தில் இருந்து விழும் மாம்பழத்தை எடுக்கும் போட்டி அவர்களுக்குள் அடிக்கடி நடக்கும், இதில் பெரும்பாலும் மஜீத்தே ஜெயிப்பதால் அந்த வயதுக்கே உரிய போட்டியால் இருவரும் எலியும், பூனையுமாக கீறிக்கொள்கிறார்கள்.
இவர்கள் இருவரைத் தவிர வேறு நட்புக்கள் இல்லாததால் காலப்போக்கில் இருவரும் சிநேகிதர்களாகிப் போகின்றனர். மஜீத் வசதியான வீட்டுப் பையன், ஜொஹராவோ எளிய குடும்பப் பின்னணியில் வளர்ந்து வருபவள். படிப்பில் மஜீத்தை விட ஜொஹரா படு கெட்டிக்காரி.
ஒருமுறை பள்ளியில் மஜீத்திடம் ‘ஒன்னும் ஒன்னும் எத்தனை?’ என்ற கேள்வியை எழுப்புகிறார் கணித ஆசிரியர், மஜீத்தோ ‘பெரிய ஒன்னு…!’ எனப் பதிலளிக்க, வகுப்பே சிரிக்கிறது, அதுவே அவனுக்கு பட்டப் பெயராகவும் ஆகிப் போகிறது.
கனக்குப் பாடம் புரியாமல், அடிக்கடி வகுப்பில் ஆசிரியரிடம் அடி வாங்குகிறான். இப்படியாக நாட்கள் நகர்கையில் ஜொஹரா, மஜீத்திற்கு கணக்குப் பாடங்களை சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறாள். அவனும் வகுப்பில் ஆசிரியரிடம் பாராட்டுப் பெற ஆரம்பிக்கிறான். இந்த சூழலில் ஜொஹராவின் தந்தை எதிர்பாராத விதமாக மரணிக்கிறார். இதனால் அவளது குடும்ப சூழலே மாறிப்போகிறது. வாழ்க்கையை நகர்த்த மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் பள்ளிப் படிப்பு முடிந்து உயர் கல்விக்காக வெளியூர் செல்லும் நிலை வரும்போது, மஜீதின் தந்தை அவனை வெளியூரில் சேர்த்து விடுகிறார். ஆனால், ஜொஹராவின் வறுமையின் காரணமாக மேல் படிப்பு படிக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்காமல் போகிறது. மஜீத் தன் தந்தையிடம் ஜொஹராவிற்கும் நாம் உதவி செய்து மேற்படிப்பு படிக்க வைக்கலாமே என்று தன் தாயின் மூலம் கேட்க வைக்கிறான். கோபக்காரரான மஜீதின் தந்தை, சம்மதிக்காமல் அவனையும், தாயையும் திட்டுகிறார். உதவிட ஏதேதோ காரணங்கள் சொல்லி மறுத்து விடுகிறார்.
நாட்கள் நகர்கிறது, மஜீத்தும், ஜொஹராவும் வளர்ந்து பருவ வயதை அடைகின்றனர். மஜீத்திற்கு காலில் சிறிய கட்டி போல வந்து வலியால் துடித்து நடக்க முடியாமல் வீட்டில் இருக்கிறான். அவ்வப்போது ஜொஹராவும் வந்து பார்த்து செல்கிறாள். கட்டி தானாக உடைந்தால் மட்டுமே வலி குறையும், என்று வைத்தியர் சொல்கிறார். வீட்டில் கட்டிலில் படுத்துக் கொண்டு சன்னல் வழி ஜொஹராவின் வீட்டையும், அந்த மாமரத்தையும் பார்த்தபடியே வலியுடன் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறான் மஜீத்.
மஜீதின் அப்பா, அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் ஏதேச்சையாய் அவனைப் பார்க்க வரும் ஜொஹரா, அவன் வலியால் துடிப்பதைப் பார்த்து, அன்போடு அணைத்து அவனின் கால்களில் முத்தமிடுகிறாள். முதல் முறையாக ஒரு பெண்ணின் ஸ்பரிசம் அவனுக்குள் புதிய உணர்வைத் தருகிறது. அடுத்த நாள் அந்த கட்டி உடைந்து வலியும் வேதனையும் குறைகிறது. அந்த நாள் அவர்களின் நட்பை மெல்லக் காதலின் பக்கம் நகர்த்துகிறது. அதன் பின் மஜீத்தும், ஜொஹராவும் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பிக்கின்றனர்,
ஒரு சமயம் நோன்பு நேரம், பெரும்பாலும் மஜீத் நோன்பு இருப்பதில்லை. இதை வீட்டிலும் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை. ஊரில் அறுவடை காலம் என்பதால் வயல் வேலைகளில் நேரத்தைச் செலவிடும் அவனின் தந்தை, ‘நீ வந்ததிற்கு பிறகு நான் நோன்பு திறக்க போக வேண்டும்’ என அவனைச் சாயங்காலம் வயலுக்கு வர சொல்லியிருப்பார். ஆனால்! அவனோ அதை மறந்து நண்பர்களுடன் விளையாடி விட்டு வீடு திரும்ப, மாலை நோன்பு திறக்க வரமுடியாத தந்தை அவனைக் கோபத்தில் திட்டியும் அடித்தும் விடுகிறார். அந்தக் கோபத்தினால் அவன் வீட்டை விட்டே வெளியேறி கால் போன போக்கில் வெகுதூரம் செல்கிறான். போவதற்கு முன்பாக ஜொஹராவிடம் சொல்லிவிட்டு போகலாம் என்று நினைத்தவன், பிறகு மனதை மாற்றிக் கொண்டு சொல்லாமலே சென்று விடுகிறான்.
சென்றவன் வீட்டிற்கு கடிதம் மூலமாகவோ அல்லது வேறு எதன் மூலமாகவோ தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் ஊரெல்லாம் சுற்றி, பல்வேறு மக்களையும், மதத்தினரையும் சந்திக்கிறான். மனிதர்களில் உடையும், மொழியும் மட்டும்தான் வித்தியாசம். மற்றபடி ஜனனம், இனப் பெருக்கம், மரணம் என எங்கும் ஒரே மாதிரியான வாழ்க்கைதான் என்பதை அவன் கண்டுணரும்போது, பத்து வருடங்கள் கடந்து விடுகின்றன.
அதன்பின் ஊருக்குத் திரும்பும் எண்ணம் தோன்றுகிறது. குறிப்பாக ஜொஹராவைத் திருமணம் முடிக்க வேண்டும் என்ற சிந்தையோடுதான் அவன் வருகிறான். ஆனால் ஊரிலோ இவன் எதிர்பாராததெல்லாம் நடந்து இருக்கிறது. வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தில் அவனது குடும்பமே வறுமையில் வாடுவதையும், தங்கைகள் இருவரும் வயது கடந்தும் திருமணம் ஆகாமலும் இருப்பதையும் கண்டு மனம் நொந்து போகிறான்; அதே நேரம் ஜொஹராவிற்கு திருமணம் முடிந்து அவள் கணவன் வீட்டிற்குச் சென்று விட்டதை அறிந்து வருந்துகிறான்.
இத்தனை ஆண்டுகள் கழித்து வந்திருக்கும் மஜீதால் அந்தக் குடும்பம் வறுமையில் இருந்து மீண்டெழும் என்று ஊரில் உள்ளோர் நினைக்கிறார்கள். ஆனால் அவனோ எல்லாமும் இழந்து சில புத்தகங்களும், பத்து ரூபாயும் மட்டும் சொத்தாகக் கொண்டு வந்திருக்கிறான் என்பது தெரிய வர, அவன் காதுபடவே இவனெல்லாம் எதற்கு இங்கே வந்தான் என்று பேச ஆரம்பிக்கிறார்கள். வீட்டிலும் சாப்பாட்டிற்கே கஷ்டமான சூழல், இந்த நிலையில் தங்கைகளின் கல்யாணத்தை எப்படி நடத்த முடியும் என யோசிக்கிறான். அவனின் தாய் மட்டுமே அவன் நிலை கண்டு வருந்துகிறாள்.
மஜீது வந்த தகவல் ஜொஹராவிற்கு தெரிந்து அவனைக் காண வருகிறாள். இந்த சூழலை வாசிக்கும்போதே கண்கள் கலங்கித்தான் போகிறது. இப்படியொரு காட்சியைத் திரையில் காணும் ஆவலையும் இந்நாவல் தந்து விடுகிறது. ஜொஹராவை பார்க்காமல் திரும்பிப் பேசிக் கொண்டிருப்பவன் அவளைப் பார்த்த பின்… அவளின் கோலம் கண்டு உடைந்து போகிறான். ஆம்… உடலெல்லாம் மெலிந்து, கழுத்து எலும்புகள் தெரிய பார்க்கவே பரிதாபமாக இருக்கிறாள்.
ஜொஹரா, தன் கணவர், அவரின் கோபம், அவரிடம் வாங்கும் அடிகள், அதனால் உடம்பில் ஏற்பட்ட ரணங்கள், உடைந்த பல் என அவளது வாழ்க்கையைப் பற்றி சொல்லச் சொல்ல… இந்த வாழ்க்கைதான் எவ்வளவு கொடுமையானது என்று மஜீத்தைப் போல வாசிக்கும் நமக்கும் நெஞ்சம் கனத்துத்தான் போகிறது.
வரதட்சனை கொடுமையால், ஜொஹரா தன் பிறந்த வீட்டில் நிரந்தரமாகத் தங்கி விடுகிறாள். ஆதனால் அவளுக்கு மஜீதை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதை அக்கம்பக்கத்தினர் வேறு விதமாக பேசுகின்றனர். இருந்தாலும், ஜொஹரா அதற்காக கவலைபடுவதாக இல்லை. போகிற போக்கில் இந்த சமூகம் வைத்திருக்கும் சம்பிரதாயங்களை எழுத்தாளர் ஒரு விளாசு விளாசுகிறார்.
மஜீத், வறுமையிலும் தனக்கு இருக்கும் கடமைகளை எப்படியாவது நிறைவேற்ற எண்ணுகிறான். தன் சகோதரிகளுக்கு கல்யாணம், வீட்டின் மீதான கடன், அதனைத் தொடந்து ஜொஹராவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றல்லாம் நினைக்கிறான். இதற்கு பணம் அவசியம் என்பதால் மீண்டும் வெளியூருக்குச் செல்கிறான்.
இந்த முறை புறப்படும் முன் ஜொஹராவிடம் தன் வீட்டு பொறுப்புகளை ஒப்படைத்து விட்டுச் செல்கிறான். அவன் கிளம்பும்போது ஜொஹரா ஏதோ சொல்ல வருவாள், ஆனால் அதற்குள் வண்டி வந்து விட்டதென அவனின் அம்மா குரல் கொடுக்க, அவள் சொல்ல வந்ததைக் கேட்காமலேயே போய் விடுகிறான்.
தன் இருப்பிடத்திலிருந்து வெகுதூரம் செல்கிறான். அலைந்து திரிந்து நல்ல வருமானம் உள்ள ஒரு வேலையில் சேர்கிறான். கஷ்டப்படுபவர்களில் ஒருசிலரைத் தவிர எல்லோரையும் விதி அரியாசனத்தில் ஏற்றி அழகு பார்ப்பதில்லை. இந்நாவலிலும் மஜீத்துக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டு அதில் ஒரு காலை இழக்கிறான், மயக்கம் தெளிந்து அவன் பார்க்கும்போது எந்த காலில் ஜொஹரா முத்தமிட்டாளோ அந்தக் கால் இனி இல்லை என்ற இடத்தில் நம் மனதிற்கு ‘யோவ் நீ எழுத்தாளன் எனும் படைப்பாளிதானே மஜீதை இவ்வளவு கஷ்டப்படுத்துவதில் உன் எழுத்துக்கு அப்படி என்ன ஆனந்தம்..?’ என்ற கோபம்தான் மேலோங்கி நின்றது.
அறுபது நாட்கள் மருத்துவமனை வாசம் முடிந்து ஊன்றுகோலுடன் வேலைக்குச் சென்றால் வேலையும் பறி போகிறது. இதனைத் தொடர்ந்து அலைந்து திரிந்ததில் ஓட்டலில் அமர்ந்து பாத்திரங்கள் கழுவும் வேலை கிடைக்கிறது. இதற்கிடையில் வீட்டிலிருந்து வந்த கடிதங்கள் மூலம் சில விவரங்களை தெரிந்து கொள்கிறான்.
அவனுக்கு ஜொஹராவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. இந்த ஒற்றைக் காலுடன் ஊருக்குப் போனால் என்னாகும் என்பதும், ஊர் என்ன சொல்லும் என்ற சிந்தனையும் அவனை வாட்டுகிறது. ஒரு மனிதனை இப்படியெல்லாம் சோதிக்கக் கூடாது என்று வாசகனை யோசிக்க வைக்கும் தருணங்களை ஆங்காங்கே எழுத்தாளர் தந்து கலங்க வைக்கிறார்.
அவன் ஊருக்குப் போனானா..?
தங்கைகளுக்குத் திருமணம் செய்தானா..?
ஜொஹராவைத் திருமணம் செய்து கொண்டானா..?
அவனின் வாழ்வு என்ன ஆனது..?
அவனின் சொல்ல நினைத்ததை அவள் சொன்னாளா..?
என்பதையெல்லாம் இந்த நாவலை வாசிக்கும் போது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
இந்த குறுநாவலை வாசிக்க வாசிக்க கண்கள் குளமாகின. ஒரு எழுத்து அதன் தாக்கத்தை வாசகனுக்கு கடத்த வேண்டும். அதை இந்நாவலின் ஆசிரியர் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
அருமையான நாவல்… அதைவிட அனைவரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நாவலும்கூட…!
குறிப்பாக அக்கால கட்டத்தில் கேரளாவில் எந்த இடத்திலும் மாமரம் இல்லை. நாவலில் மாமரத்தை வைத்துக் கற்பனையாக எழுதியிருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. எழுத்தாளரின் வீட்டில் மட்டும் அத்திபூத்தாற்போல் ஒரு மாமரம் இருந்துள்ளது. அந்த மரத்தின் கீழே இருந்துதான் இந்நாவலை எழுதியுள்ளார். அந்த மாமரம் நாவலிலும் வந்துள்ளது.
இவ்வளவு காலம் ஏன் இந்நாவலை வாசிக்காமல் இருந்தேன்..? என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்த நாவல் இது. இந்நாவலை கனத்த இதயத்துடன் நிறைந்த கண்ணீருடன் வாசித்து முடித்தேன்.
பால்யகால சகியை வாசியுங்கள். வாழ்வின் வசந்தத்தையும் வலியையும் ஒரு சேர உணர்வீர்கள்.


