மம்முட்டி வில்லனாகவும் விநாயகன் கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் இது. கொலையாளி இவன்தான் என்பதை ஆரம்பக் காட்சியிலேயே காட்டிவிட்டு அதன் பிறகு அவனுக்கும் காவல்துறைக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தை, படத்தின் இறுதிவரை பரபரப்பாய் நம் கண் முன்னே காட்சிகளாய் விரித்திருக்கிறார்கள்.
ஆசை வலை வீசி பெண்களைக் கவர்ந்து அவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதுடன் கொல்லவும் செய்யும் மனிதாபிமானமற்ற கொலைகாரனாக மம்முட்டி, ஆரம்பக் காட்சியில் தன்னுடன் இருக்கும் பெண் தொலைக்காட்சியில் வரும் கொலை தொடர்பான செய்தி குறித்துப் பேசும் போது மம்முட்டி சிகரெட்டை ஊதியபடி ஒரு உயிரைக் கொலை செய்வதில் அப்படி என்ன சுகம் இருக்கிறது என்பதை கண்கள் பிரகாசிக்கச் சொல்லிக் கொண்டே வருவார். அப்படிச் சொல்லும் போது மற்ற உயிர்களைக் கொல்வதை விட ஒரு மனிதனைக் கொல்வதில்தான் சுகம் அதிகம் என்று சொல்லியபடி அந்தப் பெண்ணைக் கொல்வார். அப்போதே இந்த மனிதனுக்குள் எவ்வளவு குரூரம் இருக்கிறது என்ற எண்ணத்தைப் பார்வையாளர்கள் மனதில் விதைத்து அதைப் படம் முழுவதும் கொஞ்சம் கூட குறையவிடாமல் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இது கர்நாடக மாநிலத்தை உலுக்கிய கொலையாளி சயனைடு மோகனின் கதையாம். அவன் பெண்களின் உடலுக்காக ஆசைப்பட்டு கடத்திக் கொல்லவில்லையாம், நகைக்காகவே கடத்திக் கொன்றானாம். இதில் உடலுக்காகவே கடத்திக் கொல்லப்படுகிறார்கள். அதுவும் முதிர்கன்னிகள், விவாகரத்துப் பெற்றவர்கள், விதவைகள் போன்றோரை மட்டுமே தேடித்தேடி தன் வலையில் விழ வைத்து கழுத்தை இறுக்கி, சயனைடு கலந்த மாத்திரைகள் கொடுத்து, விஷ ஊசி போட்டு எனக் கொலைகளைத் தொடர்கிறார்.
இந்த வழக்கு விநாயகனின் கைக்கு வரும் போது பதிமூன்று பெண்களுக்கு மேல் கொல்லப்பட்டிருப்பார்கள். விசாரிக்கப் போகுமிடங்களில் எல்லாம் அவ ஒரு மாசம் முன்னாடி ஓடிப் பொயிட்டா, ஒரு வாரம் முன்னாடி ஓடிப்பொயிட்டா என்ற செய்திகள் மட்டுமே வரும். அந்தப் பெண்கள் இறந்த விவரம் கூட வீட்டாருக்குத் தெரிந்திருக்காது. பெண்களை மட்டுமில்லாமல் இவர்களால் தனக்குப் பிரச்சினை வரலாம் என்பதால் மனநோயாளி பிச்சைக்காரர் ஒருவரையும், சக போலீஸ்காரர் ஒருவரையும் கூட கொலை செய்திருப்பார்.
படத்தின் ஆரம்பத்திலேயே இவன்தான் வில்லன் எனக் காட்டி விடுவார்கள். இவனை எப்படி, எப்போது பிடிப்பார்கள் என்பதுதான் கதையாய் நகரும். போலீஸ் உடுப்பு இல்லாமல் சாதாரண உடையில் வரும் விநாயகன், போலீஸ்காரருக்கான மிடுக்கை தனது உடல்மொழி வழி அழகாகக் கடத்தியிருக்கிறார்.
படத்தின் கதைக்களம் நாகர்கோவில் மற்றும் கேரள எல்லைப் பகுதி என்பதாலும், காணாமல் போன தமிழகப் பெண்கள் கேரளாவில் கொல்லப்படுவதும், கேரளப் பெண்கள் தமிழகத்தில் கொல்லப்படுவதுமாய் மாறி மாறி நிகழ்வதால் இரு மாநில காவல்துறையும் சேர்ந்து கொலையாளியைத் தேட வேண்டிய சூழல். நாகர்கோவிலுக்கு வரும் விநாயகனுக்கு உதவியாய் ஒரு போலீஸ் ஆபீசரைக் கொடுக்கிறார்கள், அவர்தான் மம்முட்டி.
வில்லன் ஒரு பக்கம், போலீஸ் ஒரு பக்கம் எனப் பயணிக்கும் கதை ஒரு புள்ளியில் இருவரும் ஒன்றாக இணைந்து வில்லனைத் தேடுவதாய் மாறும் போது வேகம் கூடுகிறது. விநாயகனும் மம்முட்டியும் நரியும் புலியுமாக மாறி மாறிப் பயணிக்கிறார்கள். வழக்கு முடிந்தது என்று நினைக்கும் போது ரஜிஷாவால் மீண்டும் உயிர் பெற்று, கொலையாளியை நெருங்கி, அவனும் இப்போது உயிருடன் இல்லை என்பதாய் நகர்ந்து, இறுதிக் காட்சியில் விநாயகனின் பொறியில் மம்முட்டி மாட்டுவது வரை பரபரப்பு.
கதை நடப்பது 2005. சாதாரண செல்போன்கள் பயன்படுத்தப்பட்ட, சிசிடிவி கேமரா பரவலாக இல்லாத காலகட்டம் என்பதால் கொலையாளியை அவ்வளவு எளிதாய் நெருங்கிவிட முடியாது என்று காட்டியிருக்கிறார்கள். அழகான குடும்பம் இருந்தாலும் மம்முட்டிக்கு தான் தேர்வு செய்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, கொலை செய்வதில் அப்படி ஒரு ஆனந்தம். மனுசன் குரூரமாய் சிரித்தபடி, சிகரெட் புகையை வளையம் வளையமாக விட்டபடி தனது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். விநாயகனும் அவர் கூடவே வரும் அந்த போலீஸ்காரரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவன் கொலைகாரன், அவ்வளவுதான். எப்படி இப்படியானான்? இவன் இப்படி ஆனதற்கு காரணம் என்ன? என்றெல்லாம் பார்வையாளனிடம் சொல்லவில்லை. அவன் எதனாலோ இப்படி ஆகியிருக்கட்டும், இப்போது எப்படி இருக்கிறான் என்பதை மட்டும் பாருங்கள் போதும் என்பதாய் காட்டியிருப்பதுதான்.
மம்முட்டி ஏற்றிருக்கும் இந்தப் பாத்திரத்தை கமலால் கூட செய்ய முடியாது என்று பலரும், அதான் சிவப்பு ரோஜாவில் செய்துட்டாரே என்று சிலரும், அதுல கூட கமல் ஏன் இப்படி மாறினார் என்பதைச் சொல்லி அவரை நல்லவனாக்கிருவாங்க என்று சிலரும், மம்முட்டி மாதிரி வேடத்தை கமல் செய்யமாட்டார் என்று சிலரும் பக்கம் பக்கமாய் எழுதுகிறார்கள். இவன் இப்படித்தான் மாறினான்… இவர்களால்தான் மாறினான் என்ற காட்சி வைத்திருந்தாலும் கொலைகாரனாய் கமல் அந்த வயதிலேயே நடித்து இருக்கிறாரா இல்லையா..? கமலை அரசியல்வாதியாய் நமக்குப் பிடிக்கவில்லை என்பதால் ஒட்டு மொத்தமாய் அவருக்கு நடிக்கவே தெரியாதுன்னு சொல்வதையெல்லாம் நினைத்து சிரிக்கத்தான் வேண்டும். ஆனால் மம்முட்டி எப்படிக் கதாபாத்திரம் என்றாலும் மிகச் சிறப்பாக நடிப்பார், அதுவும் சமீபத்திய படங்களில் அவரின் கதாபாத்திரங்கள் எல்லாமே சிறப்பு.
படத்தில் முக்கியமான இடம் விநாயகனும் அவரின் மகளும் பேசும் இடம்தான். அந்தப் பேச்சுக்குப் பின்தான் விநாயகன் தீவிரமாக, சற்றே விசாரணையை மாற்றிக் கொலையாளியை நெருங்குகிறார்.
மம்முட்டியிடமிருந்து ரஜிஷா விஜயன் தப்பித்திருக்கிறார், அவர் தப்பித்த விவரம் கொலைகாரனுக்குத் தெரியாது. அவரைப் போலீஸ் கண்டடையும் போதே இவர் மூலமாக கொலையாளியை நெருங்கி விடுவார்கள் என்று நினைக்கும் போது கதை மாறி, மாறிப் பயணிப்பது சிறப்பு.
காயத்ரி அருண், ஸ்ருதி இராமச்சந்திரன், மாளவிகா மேனன் என நிறைய நாயகிகள் என்றாலும் எல்லாருமே கொஞ்ச நேரம் மட்டுமே வருகிறார்கள்.
மம்முட்டி கம்பெனி தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் மூலம் துல்கர் சல்மான் நடித்த ‘குரூப்’ படத்தின் திரைக்கதை எழுத்தாளர் ஜித்தின் கே ஜோஸ் இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் முஜீத் மஜீத்தின் பின்னணி இசையும் பாடல்களும், பிரவீன் பிரபாகரின் படத்தொகுப்பும், பைசல் அலியின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பெரும் பலம்.
இந்த வாரத்தில் ‘த அய்ஸ் ஆப் மை மதர்’ங்கிற படத்தைப் பார்த்தேன். அதிலும் இப்படித்தான் அம்மாவின் கொலையைப் பார்த்த பெண், அப்பா, அம்மாவைக் கொன்றவன், பார்த்துப் பழகிய பெண், தனக்கு உதவி செய்த பெண் என எல்லோரையும் கொல்கிறாள். அவளும் கொலை செய்வதில் ஒரு ஆனந்தம் இருப்பதாகவே சொல்வாள். அப்போது எனக்கு களம்காவல்தான் ஞாபகத்துக்கு வந்தது.
மம்முட்டியின் நடிப்பு சிறப்பு என்றாலும் அவர் பெண்களை மயக்கும் விதங்களும், அவரின் வயதான தோற்றமும் கொஞ்சம் அலுப்பாகத்தான் இருக்கிறது. உடலைச் சிறப்பாக வைத்திருப்பார் என்றாலும் வயது முகத்தில் காட்டிக் கொடுக்கத்தான் செய்யும். எல்லோரும் புகழ்வது போல் ‘ஆஹா… ஓஹோ… அடிபொலி…’ என்றெல்லாம் சொல்ல முடியாது. அதற்காக படம் சுத்தமா நல்லாயில்லை என்றும் சொல்ல முடியாது.
மம்முட்டி + விநாயகனின் நடிப்பு மற்றும் பரபரப்பாக நகரும் கதைக்காக படத்தைப் பார்க்கலாம்.


