தூப்புக்காரி என்ற குமரி மாவட்ட வழக்குச் சொல்லுக்கு தூய்மைப் பணியாள் என்று அர்த்தம். இந்த நாவல் முழுவதும் மலம், கழிப்பறை, சாக்கடை, குப்பை என்று பயணித்தாலும் ஒரு முழுமையான மனிதம் பேசும் நாவலாக வந்துள்ளது. இந்த நாவலை எனக்குப் பரிந்துரைத்த எழுத்தாளர் பரிவை சே.குமார் அவர்களுக்கு மிக்க நன்றி!
நாவலின் தொடக்கம் கொஞ்சம் அதிகமாகவே மூக்கைப் பிடிக்க வைத்தாலும், அந்த நாற்றம் உருவாக காரணமே நாம்தானே என்ற குற்ற உணர்வினை ஓங்கி பொட்டில் அடித்தாற்போல மாரி சொல்லும்போது அவருடன் கை குலுக்கத் தோன்றுகிறது. ஆம்! மாரி இந்த நாவலில் வரும், தூய்மைப் பணியாளன், இந்த கதையின் நாயகனும் அவனே. இந்த நாவல் தலித்தியம், பெண்ணியம், சாதியம், மனிதம், காதல், பகுத்தறிவு, பிரிவு, மற்றும் பரிவு என்று அனைத்து களத்தையும் பேசுகிறது.
தன் மகள் பூவரசிக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க நினைக்கும் தாய் கனகம், அதற்காகவும் தனது வாழ்வாதரத்திற்காகவும் தூய்மைப் பணிக்குச் சென்று கொண்டிருக்கிறாள். காலமோ அவள் மகள் பூவரசியின் கையில் தூப்பு வேலையும், சுமக்க கவலையையும் சேர்த்துக் கொடுத்து விடுகிறது. அதற்கு காரணமே இந்த வன்மம் நிறைந்த சமூகமும், பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கனகத்தையும், ரோஸ்லியையும் பாதியிலேயே எழுந்திருக்கச் சொல்லிய அவமானமும்தான்,
மனோவின் கையறுநிலையால் பூவரசியின் மீதான காதலையும், அவள் சுமந்து கொண்டிருக்கும் தன் குழந்தையையும் ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் உருவாகிறது. அதே நேரத்தில் மனோவுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமும் முடிந்து விடுகிறது. பூவரசியின் காதல் நிறைவேறாமல் போவதும், மகளின் கண்ணீரும் கனகத்தை தற்கொலைக்குத் தள்ளுகிறது. பூவரசிக்கு குழந்தையும் பிறக்கிறது.,
சுற்றியுள்ள சமூகத்தின் அவதூறுகளுக்கு இடையே, இன்றைய கால கட்டத்தில் கருத்தரிப்பு மையங்கள் மூலம் குழந்தைகள் பெற்றுக் கொள்வதைப் பெரும்பாலான ஆண்கள் விரும்புவதில்லை, ஆனால், மாரியின் செயல் போற்றுதலுக்குரியது, பூவரசியின் மீது கொண்ட காதலினால், அந்தக் குழந்தை மனோவுடையது என்று தெரிந்தும் தன் குழந்தையாக ஏற்றுக் கொள்ளும் இடம் அவனை உயர்த்திக் காட்டுகிறது.
இதுபோன்று இந்த நாவலில் மனதை நெகிழச் செய்யும் இடங்களும் சரி, இச்சமூகத்தின் மீது காட்டும் கோபத்தினால் அதன் தலையில் குட்டு வைக்கும் இடங்களும் சரி, மிகச் சிறப்பு.
மாரியும், ஒரு விபத்தில் இறந்தும் விடுகிறான், அவன் உயிருடன் இருந்த வரை, பூவரசி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயமில்லை, ஆனால் இப்போது தன் குழந்தைக்காகவும், தனக்கு இருக்கும் கடனுக்காகவும் மீண்டும் தூப்புக்காரியாக மாறுகிறாள்.
தன்னுடைய துரதிஷ்டமான விதி தன்னுடன் இருந்தவர்களெல்லாம் தன்னை விட்டு பிரித்துக் கொண்டு போய்விடுகிறதே என்று மனக்குமுறலோடு குழந்தையும் கையுமாக தூப்பு வேலை செய்கிறாள். குழந்தைக்கும் சரியான உணவினை அவளால் கொடுக்க இயலாத சூழலில்தான் வாழ்க்கை நகர்கிறது. ஒரு இடத்தில் தாயின் தோளில் கிடக்கும் குழந்தை பசியில் அழுது தாயின் வியர்வையை சுவைத்துச் சப்பி அப்படியே உறங்கி விடுகிறது. இந்த இடத்தை வறுமையின் உச்சமாக எழுத்தாளர் காட்டியிருப்பது எந்த இலக்கியத்திற்கும் குறைவில்லாதது என்று சொல்லலாம்.
இதற்கிடையே தான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் மருத்துவரின் தோழி, தனக்கு குழந்தை இல்லை என்றும், ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்றும் கூற, அந்த மருத்துவர் பூவரசியிடம், அவளது வறுமை, வயது இவற்றை காரணம் காட்டி குழந்தையை தத்து கொடுக்க கேட்கிறாள். பூவரசிக்கும் பல யோசனைகள் அவள் கண்முன்னே வந்து போகிறது.
சிறு வயதிலிருந்தே அவளுக்கு நன்றாகப் படித்து, தூப்பு வேலைக்கு, மலம், சாக்கடை இவற்றை அள்ளும் இயந்திரம் ஒன்றைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று மனதிற்குள் நிறைவேறாத ஆசை ஒன்று இருக்கும், அது அவளின் ஆசை மட்டுமின்றி மாரியின் ஆசையும் கூட. ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போனதால் தன் மகளைப் படிக்க வைத்து, அந்த இயந்திரத்தை எப்படியும் உண்டாக்கி விடவேண்டும் என்ற வைராக்கியத்தோடு வளர்க்கிறாள். இந்த சூழலில் தன் மகளைத் தத்துக் கொடுத்தால், அவளும் சந்தோசமாக இந்த தூப்புக்காரியின் மகள் என்ற அடையாளம் இல்லாமல் வாழலாம் என்று அதற்குச் சம்மதிக்கிறாள்.
மருத்துவரிடம் தன் விருப்பத்தைச் சொல்லவும், தன் தோழியை நாளை வரச் சொல்கிறேன் என்று மருத்துவரும் உறுதியளிக்கிறார். மறுநாள் அவர்கள் தாங்கள் தத்தெடுக்க இருக்கும் குழந்தைக்கு மினுமினுக்கும் புதிய ஆடை ஒன்றைக் கொண்டு வந்து, அது உடுத்தியிருந்த அழுக்கான ஆடையை கழற்றி பூவரசியிடம் கொடுத்து விட்டு புத்தாடையை அணிவிக்கிறார்கள். பழைய ஆடைகளையே அணிந்து பார்த்துப் பழக்கப்பட்ட தனது மகளுக்குப் புதிய ஆடை அணிவித்ததும் அவள் தேவதைபோல் காட்சி தருவதைப் பார்த்ததும், தன் மகள் பணக்கார வீட்டில் வாழப் போகிறாள். பட்டினியில்லா உணவும், படிப்பும் கிடைக்கப் போகிறது என்று மனதிற்குள் நினைத்து சந்தோசம் அடைகிறாள்.
கண்ணீருடன் தன் மகளை தாரை வார்த்துக் கொடுக்கும் வேளையில், இந்த வாழ்க்கையை என்னுடன் வாழ்ந்தால்தான் என் மகளுக்கு தன்னுடைய கஷ்டம், வறுமை, இந்த மக்களின் அவலம் புரியும், அதை அவள் உணர்ந்தால் மட்டுமே மலம், சாக்கடையை அள்ளும் இயந்திரத்தை அவளால் உருவாக்க முடியுமே ஒழிய, இந்த வலியையும், வாழ்க்கையையும் உணராத ஒருவரால் தர வாய்ப்பே இல்லை என நினைத்து குழந்தையை தர மறுக்கிறாள்.
மருத்துவரும் பூவரசியிடம் கோபத்துடன் வாதிட, கடைசியில் குழந்தையை தர முடியாது என பிடிவாதமாக கூறி நானே என் குழந்தையை வளர்க்கப் போகிறேன் என்று அந்த மினுமினுப்பான ஆடையக் கழற்றி அங்கிருந்த வாகனத்தில் வைத்து விட்டு தன் மகள் ஏற்கனவே அணிந்திருந்த அழுக்கு ஆடையை உடுத்தி, தன் தோளில் வைத்துக் கொண்டு எனக்கான வாழ்வை நான் வாழ, மாரி நினைத்தது போல என் மகள் பெரிய ஆளாக மாற, இவளை நானே வளர்ப்பேன் என்ற வைராக்கியத்துடன் அவள் செல்வதாக இந்நாவல் நிறைவடைகிறது.
ஒரு சிறப்பான சமூக நாவல் வாசித்த திருப்தி, விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலை மறைவின்றி சமூகத்தின் முன்னால் வைத்து, இந்நாவல் சாகித்ய அகாடமியின் யுவபரஷ்ஹார் விருதினையும் பெற்றிருக்கிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய சமூக நாவல்!
————————————–
தூப்புக்காரி (நாவல்)
மலர்வதி
கிழக்குப் பதிப்பகம்
பக்கம் : 184
விலை ரூ. 225
————————————–


