காலை ஒன்பது மணிக்கு அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த நீங்கள் மூன்று அல்லது நான்கு மணி நேரம் சுற்றியலைந்து களைத்த பின்பு உங்களை மதிய உணவிற்கு எங்களது பல்கலைக் கழகத்தின் எதிரே உள்ள
“Arabian Hospitality Dinning Table Kitchen” என்ற ஒரு அருமையான உணவகத்திற்கு அழைத்துச் செல்வதே திட்டம்.
இதென்னடா ஹோட்டலுக்கு இப்படி ஒரு பெயரா என நீங்கள் வியந்து சிரிக்கக் கூடும். ஒரிரு வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வந்திருந்த ஒரு விருந்தினரை அழைத்துக் கொண்டு ‘மிஸ்ஃபாத் அல் அப்ரியீன்’ என்ற கிராமத்திற்குச் சென்று வந்தோம். வரும் வழியில் அவர்கள் ஆங்காங்கே இருக்கும் கடைகளின் பெயர்ப்பலகைகளைக் கண்டு வியந்தவாறே வந்தனர்.
ஒரு முறை யாரோ ஒரு நிருபர், நடிகர் கவுண்ட மணியின் வீட்டிற்கு சென்றிருந்திருக்கிறார். அங்கு அவருடைய வளர்ப்பு நாயைக் கண்டவர், கவுண்டரிடம் அதன் பெயரென்னெவெனக் கேட்டாராம். அதற்கு கவுண்டர், ‘“ நாய்க்கு ஒரு பேர வெச்சு அத வேற நான் ஞாவகம் வெச்சிக்கணுமாக்கும்?” அத “நாயே இங்க வான்னு கூப்புட்டா வந்துட்டுப் போகுது” எனச் சொல்லி அதிர வைத்திருக்கிறார்.
அது போல ஓமானில் உள்ள வியாபார நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் அது என்ன நிறுவனம் என்பது குறித்த விவரங்களை விளக்கமாகத் தாங்கி நிற்பது இயல்பு. உதாரணத்திற்கு காய்கனி அங்காடியெனில் Sale of Fruits and Vegetables என்ற பதாகை இருக்கும். அது போல Sale of food stuff, Sale of Building Materials, Sale of Ladies Tailoring Dress Materials என்ற பெயர்ப்பலகைகள் நீக்கமற நிறைத்திருக்கும். அதுவும் ஒரு சில வீதிகளில் தொடர்ந்து வரிசையாக அடுத்தடுத்த மகளிர் ஆடையகங்கள் இருப்பின் அனைத்திற்கும் ஒரே மாதிரியான பெயர்ப்பலகைள் இருப்பது கூடுதல் ஆச்சரியமளிக்கும். சற்றே கூர்ந்து கவனித்தால் கடையின் பெயர் ஒரு மூலையில் சிறிய எழுத்துகளில் காணக் கிடைக்கலாம்.
சரி இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். பெயர் கோக்கு மாக்காக இருந்தாலும் மதிய உணவிற்கு மந்தி பிரியாணி சாப்பிட நிஸ்வாவில் சிறந்த உணவகம் எங்கள் பல்கலைக் கழகத்திற்கெதிரே இருப்பது தான். இது காபூலி, யெமேனி, சவுதி, ஈரானி மற்றும் ஓமானி அரிசி வகைகளில் நமக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்து நல்ல சுவையான ஆடு, கோழி அல்லது மாட்டுக்கறியுடன் சேர்த்து நியாயமான விலையில் சுவைக்கச் சிறந்த இடம்.
நேற்று மதியம் கூட மஸ்கட்டில் இருந்து வந்த ஒரு நண்பர் சாப்பிடத் தோதான இடத்தைச் சுட்டச் சொல்ல நான் இந்த உணவகத்தைப் பரிந்துரைத்தேன். மாலை அழைத்து ஒரு நீண்ட புகழுரையை வாசித்தார்.
அதனால் அருங்காட்சிகத்தில் கால் நோக நடந்த களைப்புத் தீர அரேபியன் ஹாஸ்பிட்டாலிட்டி டைனிங் டேபிள் கிச்சன் உணவகத்தில் அமர்ந்து ஆற அமர அருமையான அரேபிய மந்தி உணவைச் சுவைத்த வாறே நான் ஒமானில் இன்றும் புழக்கத்தில் உள்ள ஈராயிரம் ஆண்டு புராதனமான ஃபலஜ் என்றழைக்கப் படும் நீரோடைகளின் வரலாற்றைக் கூறுகிறேன். வயிற்றிற்கீயப் படும் விருந்திற்குத் தக்க செவிக்கும் விருந்திடுவதே திட்டம்.
ஓமானின் கலாச்சாரப் பெருமைகளுள் ஒன்று இந்நிலத்தின் “அல் ஃபலஜ்” எனப்படும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையன நீர்ப்பாசன முறை. இன்று வரை சுமார் மூவாயிரத்திற்கும் சற்றதிகமான ஃபலஜ்கள் இங்கு பயன்பாட்டில் இருக்கின்றன. ஃபலஜ் (falej) என்றால் பல பகுதிகளாகப் பிரியும் என்று அர்த்தம். இதன் பன்மை அஃப்லஜ் (Aflaj). இதன் மூலம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெர்சியர்களால் உருவாக்கப்பட்ட ‘“கனாட்” (Qanat) என்ற புவி ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி நீரைப் பங்கிட்டுக் கொள்ளும் நீர்ப்பாசன முறை.
இந்தக் கலாச்சாரப் பெருமையின் தலைமையகம் என மார்தட்டிக் கொள்ளும் தகுதி நிஸ்வாவிற்குண்டு. காரணம் ஓமானில் உள்ள ஐந்து UNESCO வின் அங்கீகாரம் பெற்ற புராதனத் தளங்களில் மூன்று நிஸ்வாவில் உள்ளன.
ஃபலஜ்ஜுகள் மூன்று வகைப்படும். அவற்றில் முதலாவதும் மிகவும் வியக்க வைக்கக் கூடியதுமான வகை வாயக்கால்கள் தாவூதீ (Dawoodi ) ஃபலஜ்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த முறையில் நீரை சேகரித்துப் பாசனத்திற்குப் பயன்படுத்த மிகப் புத்திசாலித்தனமான மற்றும் துல்லியமானதொரு பொறியியல் கட்டமைப்புத் தேவை.
இதற்கு முதலில் நிலத்திற்கடியில் இருக்கும் பெரும் நீர் நிலை கண்டறியப் பட வேண்டும். பின்பு அதனை அடையும் வரை ஒரு ஆழமான கிணறு தோண்டப்பட வேண்டும். அதனையடுத்து அந்தக் கிணற்றின் அருகில் இருந்தே அதற்குச் சற்றுக் கீழாக ஒரு சுரங்கப் பாதை தோண்டப் பட வேண்டும். அப்பாதை அடுத்த ஒன்று அல்லது இரண்டு கிலோ மீட்டர்களுக்கு நீளும். ஆனால் அந்த 2000 அடி தூர நீளத்திலும் அதன் மட்டம் இரண்டு மீட்டர்கள் மட்டுமே கீழிறங்கி இருக்கும். அதாவது ஃபலஜ்ஜின் துவக்கப் புள்ளிக்கும் ஃபலஜ் பூமியினடியில் யிருந்து தரைப்பகுதியை அடையும் இடத்திற்கும் இடையேயான உயர வித்தியாசம் இரண்டு மீட்டர் மட்டுமே. இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இரண்டு மீட்டர் சரிவை மிகவும் சீரான இறக்கமாக வடிவமைத்து வாய்க்காலைக் கட்டமைப்பதில் தான் இந்தக் கட்டுமானப் பொறியாளர்களின் நிபுணத்துவம் இருக்கிறது.
இந்த ஃபலஜ்ஜுகள் தங்களது தாய்க்கிணற்றின் மட்டத்திற்குக் கீழிருந்து துவங்குவதாலும் சீராக இறங்கும்படி வடிவமைக்கப் பட்டிருப்பதாலும் வருடத்தில் 365 நாட்களும் இவற்றில் பூவியீர்ப்பு விசையின் காரணமாக நீர் சீரான வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கும். நிலத்தடியில் இருந்து மேற்பரப்பிற்கு வந்து பாசனத்திற்காக ஓடும் நீரை பொதுக் குடிநீர் மற்றும் சுகாதாரம், வக்ஃப் வாரியச் சொத்துகள், பேரீட்சை போன்ற நிரந்தரப் பயிர்ப் பாசனம் மற்றும் குறுகிய காலப் பயிர்ப் பாசனம் என்ற நான்கு வகைப் பயன்பாடுகளுக்குப் பங்கு வைத்துப் பயன்படுத்துகின்றனர்.
இந்த ஃபலஜ்ஜுகளின் கட்டுமானத்திற்கும், பராமரிப்பிற்குமான முதலீடுகளில் தாங்கள் செலுத்திய பங்களிப்பிற்குத் தக்க ஒவ்வொரு அமைப்பிற்கும், குடும்பத்திற்கும் நீர் பங்கிடப் படுகிறது. இந்த நீரோட்டத்தின் அளவு வருடம் முழுவதும் ஒரே சீராக இருப்பதால் நேரத்தை மட்டும் துல்லியமாகக் கணக்கிட்டால் சரியான நீர்ப் பங்கீடு சாத்தியம். அதாவது
நீரின் அளவு = நீரோட்டம் x நேரம்
என்பது தான் அளவைக் கணக்கிடும் சூத்திரம்.
பண்டைய காலத்தில் காலத்தைக் கணக்கிட பகலில் சூரியக் கடிகாரத்தைப் பயன்படுத்தினர். வேள்பாரி நாவலில் போரைக் கண்காணிக்கும் திசைவேழர் பயன்படுத்தும் நாழிகைக் கோல்தான் சூரியக் கடிகாரம். இதற்கு அரபியில் லமாட் என்று பெயர். லமாட் (Lamad) என்றால் நீண்ட கோல் என்று பொருள்.
இரவில் காலத்தைக் கணக்கிட அவர்கள் பயன்படுத்திய கால மாணிக்கு டாஸா என்று பெயர். டாஸா என்பது ஒரு தாமிரப் பாத்திரம். இதன் மத்தியில் ஒரு மிகச் சிறிய துளை இடப் பட்டிருக்கும். அந்தப் பாத்திரத்தை ஒரு பெரிய நீர் நிரப்பப்பட்ட அண்டாவில் மிதக்க விடுவர். அந்தப் பாத்திரத்தில் நீர் நிறைந்து மூழ்க மிகச் சரியாக 30 நிமிடங்கள் பிடிக்கும்.
வேள்பாரியில் வரும் திசைவேழரைப் போலவே ஒவ்வொரு ஊரிலும் நேரத்தை அறிவிக்கும் அறம் வழுவாத ‘ஆரிஃப்’ என்ற ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் நியமிக்கப் பட்டிருப்பார். அவர் இரவு முழுவதும் கண் விழித்து ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் நேரத்தை பெருங்குரலெடுத்து அறிவித்துக் கொண்டிருப்பார்.
இந்த பாசனம் 7 நாட்களுக்கு ஒரு முறை அல்லது 14 நாட்களுக்கு ஒரு முறை இரவிலிருந்து பகலுக்கோ அல்லது எதிர்மறையாகவோ மாறும். முப்பது நிமிட முறைக்கு அதார் (Athar) என்று பெயர். மூன்று மணி நேரத்தை ருபுவா (Rubu ‘ a) என்றும் பன்னிரெண்டு மணி நேர அரை நாள் முறையையை பத்தா (Baddah) வெனவும் இருபத்து நான்கு மணி நேரத்தை தவ்ரா (Dawra) என்றும் அழைக்கின்றனர். இதில் பத்தா என்ற அரை நாள் முறையை பகல் பத்தா (Day shift) மற்றும் இரவுப் பத்தா (Night Shift) எனப் பிரித்திருக்கின்றனர்.
நிஸ்வாவில் இருக்கும் தாவூதி ஃபலஜ்களில் ஏன் ஓமானில் உள்ள ஃபலஜ்களிலேயே மிகவும் புகழ் பெற்றது ஜபல் அக்தர் (Jabel Akthar) என்ற பச்சைமலையின் அடிவாரமான பிர்க்கத் அல் மெளஸில் இருக்கும் (Birkat Al Mouz) அல் கத்மைன் (Al Kathmainn) என்ற வாய்க்கால் தான். தரையின் ஆழத்தில் இருந்து நிலத்தின் மேற்பரப்போடு அந்தச் நீர்த்தாரைச் சுரங்கம் வந்து சேரும் இடத்தில் ஒரு கல்லால் கட்டப் பட்ட அல் யாரிபா என்ற பழங்கால மசூதி இருக்கிறது. இது ஓமானை கிபி 1624 முதல் 1744 ஆண்ட அல் யரூபிகளின் காலத்தில் கட்டப் பட்டிருக்கும் என நம்பப் படுகிறது.
கி.பி 1624 முதல் 1649 வரை ஓமானை ஆண்ட இமாம் நாசர் பின் முர்ஷித் அல் யரூபி பல்வேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஓமானின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த போர்த்துக் கீசியர்கள் மீது போர் தொடுத்தார். சொஹார் மற்றும் குரியத் போன்ற கடலோர நகரங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட போர்த்துக் கீசியர்களது ஓமானின் மீதான ஆதிக்கம் மஸ்கட் மற்றும் மத்ரா எனக் குறுக்கப்பட்டது. அவருக்கு அடுத்து முடிசூடிய வந்த இமாம் சுல்தான் பின் சைஃப் அல் யரூபி தான் 1949 ஆம் ஆண்டு இந்த யரூபி மசூதியைக் கட்டியிருக்கிறார்.
மிகச் சரியாக அந்த மசூதிக்கு முன்புறம் தான் அல் கத்மீன் என்ற ஓமானின் மிகப் புகழ்பெற்ற ஃபலக் நிலத்தின் அடியில் இந்த மேற்பரப்பிற்கு வந்து சேர்கிறது. நிலத்தடி சுரங்க நீர் மேற்பரப்பை அடைந்து வாய்க்காலாக மாறும் அந்த இடத்திற்கு ஷரியா என்று பெயர். இப்படி வெளியே வரும் நீர் மூன்று அல் கத்மீன் ஃபலஜில் கிளைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அப்படிப் பிரிக்கப் படும் இடத்தில் மூன்று பந்துகளை மிதக்கவிட்டால் அவை மூன்றும் மிகச் சரியாக மூன்று தனித்தனி வாய்க்கால்களைச் சென்றடையும் எனக் கூறுகின்றனர். இது மிகச் சரியான அளவில் நீர் பங்கிடப் படுகிறது என்பதை நிறுவ அவர்கள் பயன்படுத்திய தரக் கட்டுப்பாட்டு முறை.
17.5 மீட்டர் ஆழம் கொண்ட தாய்க் கிணற்றில் இருந்து ஷரியா உள்ள இடம் 2.45 கிலோ மீட்டர். இந்த நிலத்திற்கடியேயுள்ள சுரங்க நீர்த்தாரை தான் அல் கத்மீன் என்றழைக்கப் படுகிறது. மசூதிக்கு வரும் முன்பே இந்த நீர் பிர்கத் அல் மொளஸில் இருக்கும் கோட்டயின் பயன்பாட்டிற்குள் வந்து விடுகிறது. அங்கு வாழ்ந்த மக்களின் குடிநீர் ஆதாரம் இதுவே. அதன் பின்பு மூசூதியில் வழிபட வருபவர்கள் தங்கள் துணிமணிகளைத் துவைப்பதற்கும் உடலைச் சத்தம் செய்து கொள்வதற்கும் பயன்படுகிறது. அடுத்ததாகத் தான் அது பிர்கத் அல் மெளஸின் 72 ஏக்கர் பரப்பளவில் பரந்து கிடக்கும் சோலைகளின் நீர்ப்பாசனத்திற்குப் பிரிகிறது.
மதிய உணவிற்குப் பிறகு எங்களது பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து பதினைந்து நிமிடத் தொலைவில் இருக்கும் இந்த அல் கத்மீன் என்ற ஃபலஜ்ஜையும் அது பாயும் பிர்கத் அல் மெளஸ் என்ற சிற்றூரின் பசுமை போர்த்திய, மிகவும் ரம்யமான பேரீட்சை மரங்கள் அடர்த்த தோப்பையும் சுற்றிப் பார்ப்போம். அப்படியே காலாற அந்தத் தோப்பைச் சுற்றிப் பார்க்கும் போது ஒமானில் வேறெங்கும் காண முடியாத ரோமப் பேரசில் கட்டப்பட்ட நீர்ப் பாலங்ககளப் போன்ற தலைக்கு மேலே கிட்டத்தட்ட 3 மீட்டர் உயரத்தில் கல்லால் கட்டப்பட்ட ஊரின் மதிற் சுவர் மீது ஓடும் செல்லும் ஒரு நீர்ப்பாலத்தைக் காணலாம். அதன் மீது ஏறி நடந்து கொண்டே இரு புறமும் பரந்து கிடக்கும் பசுமையான தோப்புக்களை ரசிக்கலாம். அந்த ஊரின் பழங்காலச் சிதிலங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு
சற்றே கீழ்புறமாகப் பயணம் செய்து ஒரு சிறு குன்றின் மீதேறி உச்சியை அடைந்தால் பிர்கத் அல் மெளஸின் அழகு நமது பருந்துப் பார்வைக்குச் சிக்கும்.
அதனைச் சிறிது நேரம் ரசித்து விட்டு சூரியன் கீழிறங்கியவுடன் கிளம்பி ‘நிஸ்வா’ வில் இருந்து ‘இப்ரி’ செல்லும் சாலையின் இடது புறத்தில் இருக்கும் ‘திம்ஸா’ என்ற தொழிற் பேட்டைக்குச் செல்வோம். அங்குள்ள ஆஸ்ட்ரிச் பூங்கா நிஸ்வாவின் அடையாளங்களுள் ஒன்று. அந்தப் பூங்காவிற்குள் நுழைய பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. அந்தப் பூங்காவின் நீண்ட கம்பி வேலிக்குப் பின் நெருப்புக் கோழிகள், வரிக்குதிரைகள், மான்கள் மற்றும் ஒட்டகங்கள் அலைந்து கொண்டிருப்பதை நம்மால் வெளியில் இருந்து ரசிக்க முடியும். அப்பரந்த பூங்காவைச் சுற்றிலும் பசுமையான புல் தரையும், நிழற் கூடங்களும் அமைக்கப் பட்டுள்ளன. பொதுமக்கள் குடும்பங்களாக வந்து அங்கு பாய்விரித்தமர்ந்து பொழுது போக்குவதைக் காண முடியும்.
அந்தப் பூங்கா ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் பராமரிப்பில் இருக்கிறது. ஆனால் அந்த வளாகத்தினுள் நிகழ்வது குறித்தும் அது என்ன நிறுவனம் என்பது குறித்தும் எவருக்கும் எந்த விவரமும் தெரிவதில்லை. அந்த நிறுவனத்தின் மதிற் சுவர்களுக்குப் பின் ஏதோவொரு பெரும் ரகசியம் புதைந்து கிடக்கிறது. அந்த நிறுவன வாயிலில் Al Meshan என்ற தொரு அழகிய உணவகம் இருக்கிறது. அந்த உணவகத்தில் உங்களுக்கு இரவு உணவளித்து உங்களை மீண்டும் உங்கள் விடுதியில் கொண்டு போய் இறக்கி விடுகிறேன்.
நன்கு உறங்கி ஓய்வெடுத்தால் காலை 7 மணிக்கெல்லாம் காலை உணவை முடித்துக் கொண்டு அறையைக் காலி செய்து விட்டுக் கிளம்பலாம். அருகில் இருக்கும் ஃபலஜ் தாரிஸ் என்ற நிஸ்வாவின் புகழ் பெற்ற மற்றொரு UNESCO அங்கீகாரம் பெற்ற தாவூதி ஃபலஜைத் தரிசித்து விட்டு பிர்கத் அல் மௌஸை அடுத்திருக்கும் வாதி முஹைதீன் என்ற கணவாய்க்குள் உங்களை அழைத்துச் செல்கிறேன். அங்கு இருக்கும் அல் எய்னி (Al Aini) எனப்படும் இரண்டாவது வகை ஃபலஜைப் பற்றி விரிவாக அடுத்த விண்மீன் இதழில் விவரிக்கிறேன். ஐஸ்கட்டிகளை மிதக்கவிட்டதைப் போன்று குளிர்ந்தும், பளிங்கு போன்று தெளிந்தும் கிடக்கும் நீல நிற நீரோடையில் குறித்துக் குதியாட்டம் போட விரும்பினால் உங்கள் நீச்சல் உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு தயாராகக் காத்திருக்கவும். பூலோக சொர்க்கத்தைக் காட்டுகிறேன்.


