அப்பா, அப்பா என்றவாறே ஓடிவந்தாள் கண்மணி. விவேகிடம், கண்மணி, கொஞ்சம் வெளியில நில்லுமா, நான் இப்ப வந்துடுறேன். தரையைத் துடைச்சுட்டு இருக்கேன், தாத்தா நேத்து சாப்பிட்ட சாப்பாட்டை எல்லாம் தரையில் சிந்தியிருக்காரு. அதுமட்டுமில்லாம, அவருக்குத் துணிமணியெல்லாம் மாத்திவிடணும்” என்ற பதிலைக் கேட்டவுடன் கண்மணியின் முகம் மாறியது. ஆசையாக ஓடிவந்த அவளுக்கு, அந்த பதில் ஒரு முட்டுக்கட்டையாகத் தெரிந்தது. நல்ல தாகத்தில் இருக்கும் ஒருவனுக்குத் தூரத்தில் கானல்நீர் தெரிவது போல, அவளுக்குத் தன் ஆசையானது அந்தக் கானல்நீர் போலத்தான் இருக்கப்போகிறது என்ற மனச்சோர்வுடன், தன் தலையைக் குனிந்தவாறு கதவுக்கு அந்தப் பக்கம் அப்பாவுக்காக ஒரு சிறிய நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு விவேக் வெளியே வந்தவுடன், கண்மணி விவேக்கிடம்… “நீ இப்ப உடனே கிளம்புற!” என்றாள். “எங்கடா தங்கம்?” என்றான் விவேக். “இப்ப எங்கேன்னு சொன்னாதான் கிளம்புவியா?” “இல்லம்மா, திடீர்னு வந்து கிளம்புன்னா என்னன்னு நினைக்கத் தோணுது. அதான் உடனே எங்கேன்னு கேட்டேன்.” தன் முகத்தில் ஆச்சரியத்தை வைத்துக்கொண்டு… “அது ஒண்ணுமில்லப்பா, நான், அம்மா, தம்பி, நீ எல்லாரும் இன்னைக்கு வெளியே சினிமாவுக்குப் போகலாம். நான் அம்மாக்கிட்ட சம்மதம் வாங்கிட்டேன். அதான் உன்னைக் கூப்பிட வந்தேன்,” என்றாள் கண்மணி. “ஏம்மா கண்ணு, இதை நீ ஏற்கெனவே தீர்மானிச்சிருந்தா நேத்தே சொல்லியிருந்தா ஏதாவது செஞ்சிருக்கலாம். தன் கையைப் பிசைந்துகொண்டு, முகத்திலிருந்த ஆச்சரியத்தைத் தொலைத்தவராக, தன் மகளிடம் பதிலை தெரியப்படுத்திய விவேக்! “இப்ப என்ன செய்ய முடியும்?”
“அப்பா, இப்பெல்லாம் நீ கூப்பிட்டாக்கூட எங்கேயும் வர மாட்டேங்கிற. என்னாச்சுப்பா உனக்கு?” “நீ முன்னெல்லாம் இப்படி இல்லையே! எங்களுக்கு ஒண்ணும் புரியல. கொஞ்ச வருஷம் முன்னாடி நீ இப்படி இல்லை. எங்காவது போகலாம்னு சொன்னா, ‘சரி‘ன்னு மறுப்பு தெரிவிக்காம எங்களோட கிளம்புவ. ஆனா, இப்ப இந்த மூணு வருஷமா நீ எங்களுக்கு ஒதுக்கிற நேரமே ரொம்பக் கம்மியா இருக்கு. இது எங்களுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறியா? இல்லை, உனக்குத்தான் புரியாத மாதிரி நடிக்கிறியா? நீயே சொல்லு.”
“ஆமாண்டி, நீ சொல்றது உண்மைதான். நான் ஒத்துக்கிறேன். இது எனக்கே தெரியுது. ஆனா, நான் இப்ப இருக்குற சூழ்நிலை அப்படி. என்னை என்ன பண்ணச் சொல்ற?” “என்ன பொல்லாத நிலைமை? முன்னாடி நாம நாலு பேர் இருந்தோம். இப்ப அவரும், அதான் தாத்தாவும் கூட இருக்காரு. அதுக்கென்ன இப்போ?”
“அதைத்தான் நானும் சொல்ல வர்றேன். மூணு வருஷம் முன்னாடி நாம மட்டும்தான், இப்ப நம்மோட தாத்தாவும் இருக்காரு. அதான் இங்க இருக்குற வேறுபாடே. முன்ன மாதிரி எல்லாத்தையும் உடனுக்குடன் தீர்மானிக்க முடியாது. எல்லாத்தையும் அனுசரிச்சுதான் செய்ய வேண்டியதா இருக்கு. எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. நீங்க கூப்பிட்டு என்னால வர முடியலையேன்னு எண்ணும்போது, “அம்மாடி, கூண்டுக் கிளி இருக்கில்ல, அந்த மாதிரி ஆயிட்டேன். கண்மணி தன் அப்பாவைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, விவேக் மீண்டும் பேச ஆரம்பித்தார். குறிப்பா உங்க தாத்தா இந்த பதிலை அடிக்கடி சொல்லுவாரு, ‘வானத்தில் சிறகடித்துப் பறந்துகிட்டு இருந்தேன் உன் அம்மா என்னோட இருந்தப்ப. ஆனா இப்ப என் நிலைமையைப் பார்த்தியா? ஒரு கூண்டுக் கிளி மாதிரி ஒரே இடத்துல இருக்கேன். ஒரு ஜெயில் மாதிரி இருக்குப்பா எனக்கு‘ என்று என்னிடம் அவர் சொல்லும்போது, அப்படியே நெஞ்சில் ஆணி அடித்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும்,’ என்று அவர் சொன்னதைக் கேட்டு, தன் அப்பாவின் உண்மையான நிலையையும் கண்டு கண்மணியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது. அதே சமயம், ‘மனதிற்குள் எவ்வளவு பாரம் இருந்தால், தன் உள்ளக்குமுறலை இப்படிப் போட்டு உடைப்பார்?’ என்று அவள் ஒரு பக்கம் யோசிக்கத் தொடங்கினாள். மேலும் விவேக் அவளிடத்தில், நம்ம எப்படித்தான் பார்த்துப் பார்த்துக் கவனிச்சாலும், அம்மா இல்லாத ஒரு வாழ்க்கையை அவரால ஏத்துக்கவே முடியல. ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருக்காரு.
அம்மா கண்மணி, நீ வளர்ந்துட்ட, அதான் உன்கிட்ட ஒண்ணு சொல்லுறேன். எனக்கு ஒண்ணு புரியல. பல வீடுகள்ல அப்பா இல்ல, ஆனா அம்மா தன் குழந்தைகளோட, பேரன் பேத்திகளோட நல்லா பாசமா விளையாடுறாங்க. ஆனா இந்த ஆண் வர்க்கம்தான் இப்படிப் புலம்புறாங்க. நல்லா யோசிச்சுப் பார்த்தா, ஆண் வர்க்கத்தினர் வீட்டு வேலையைச் செய்யுறதில்லை. அதனாலேயே ஒரு இடைவெளி விழுந்து போச்சு. வெளி வேலையை மட்டும் பார்த்துட்டு, வீட்டு வேலை என்றால் அது பெண்களுடையது என்று எண்ணுறதாலதான் இந்தத் தனிமையை அவங்க உணர்றாங்க. இல்லையென்றால், தனியா இந்த அறைக்குள்ள உட்கார்ந்துகிட்டு இருக்கிறதைவிட, நம்மோட பேசிச் சிரிச்சு அவரால முடிஞ்ச வேலையைச் செஞ்சுகிட்டு இருந்தாருன்னா, அவருக்கும் பொழுது போகும், நமக்கும் ஒத்தாசையா இருக்கும். ஆனா பல ஆண்கள் அந்தக் காலத்து மனுஷங்களாகவே இருக்காங்க. அந்த மாதிரி இருக்குறவங்களுக்கு யாராவது உதவி செஞ்சுகிட்டே இருக்கத்தான் வேண்டும். என்னதான் இருந்தாலும், நம்ம அப்பா ஆச்சே.”
உள்ளேயும் சரி வெளியேயும் சரி, அவ்வளவு கோபம் வருது. அதை நான் பலமுறை உன்கிட்டயும், உங்க அம்மாக்கிட்டயும் காட்டியிருக்கேன். இது என்னோட கையறுநிலையை நல்லாவே குறிக்குது. பல நேரங்கள்ல என்னை நானே திட்டிக்கிறேன், கத்துறேன், எதையாவது போட்டு உடைக்கிறேன்.” “ஆனா, ஒரு அரை மணி நேரம் நான் அமைதியா ரூம்ல இருந்தேன்னா, நான் செஞ்ச தப்பை நானே உணர்றேன். கண் கெட்ட பிறகு எதுக்கு சூரிய நமஸ்காரம்? அதுபோலத்தான் பல நேரங்கள்ல என்னுடைய நிலைமை.” “கண்மணி, நான் உன்னையோ லீலாவையோ ஒருபோதும் குத்தம் சொல்லல. இது எல்லாமே முழுக்க முழுக்க என் தரப்புல இருக்குற ஒரு இயலாமைதான்.” “கண்ணு, நீயே சொல்லு. இவரை அந்த நிலைமையில விட்டுட்டு நான் எப்படி உங்களோட சினிமாவுக்கு வர்றது?”
“ஏம்மா, நீயே சொல்லு. நாம இப்ப சினிமாவுக்குப் போறோம்னு வெச்சுக்கோ. சினிமா முடிஞ்சவுடன் அப்படியே ஹோட்டலுக்குப் போகலாம்னு சொல்லுவீங்க. நானும் சரின்னு சொல்லுவேன். நாம எல்லோரும் ராத்திரி சாப்பாடு சாப்பிட்டுட்டு, வீட்டுக்குத் திரும்புறதுக்கே சுமார் பதினோரு மணி ஆகிடும். இப்ப நீயே சொல்லு, அதுவரைக்கும் உங்க தாத்தா சாப்பிடாம அப்படியே இருப்பாரு. அவரோட வயசுக்கு அவ்வளவு நேரம் சாப்பிடாம இருந்தா நல்லா இருக்குமா? அதனாலதான் என்னால எங்கேயும் உடனே உங்களோட வர முடியல. இப்பெல்லாம் உங்க மூனு பேத்தையும் நானே பல நேரம் வெளியில அனுப்பி வைக்கிறேன். நானே வீட்ல இருந்துக்கிறேன்.” “எனக்கு சங்கடமாத்தான் இருக்கு, உங்களோட வர முடியலையேன்னு. ஆனா என்ன செய்யச் சொல்ற? இப்ப புரியுதா அப்பாவோட நிலைமை?”
“அப்ப இனிமே நாங்க கூப்பிட்டா நீ வர மாட்ட, அப்படித்தானே!” என்றாள் கண்மணி. விவேக் வாய் திறக்கிறதுக்கு முன்னாடி, லீலா, “என்னடி கண்மணி, ரொம்பத்தான் ஓவராப் பேசுற. கொஞ்சமாவது அப்பான்னு மரியாதை இருக்கா? நீ பாட்டுக்கு வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக்கிட்டே இருக்க. யாருகிட்ட இருந்து கத்துக்கிட்ட இதெல்லாம்?” “இல்லம்மா, வந்து…” “என்ன வந்து போயினு இழுக்கிற? சினிமாவுக்கு இன்னைக்குப் போகலைன்னா, பிறகு அப்புறம் போயிக்கலாம். என்ன இப்போ? ஒரு பத்து நாள் கழிச்சு அதே படம் ஓ.டி.டி–யிலேயே (OTT) வரப்போகுது. அப்பக்கூட பாத்துக்கலாம். என்ன குடிமுழுகிப் போச்சு? ஏன் இவ்வளவு பிடிவாதமா நிக்கிற?”
அவ கிடக்கிறா, வாங்க நீங்க, வந்து இந்த காபியைக் குடிங்க. அப்புறம் நாம பேசிக்கலாம். வாம்மா கண்மணி, அம்மா சொல்றால, வா வந்து காபி குடி. நாம ஒரு நல்ல முடிவை எடுக்கலாம்.
ஏம்பா, இந்த மூணு வருஷத்துல நீங்க மொத்தமா மாறிட்டீங்கப்பா. இது நல்லாவே தெரியுது. எதையாவது கேள்வி கேட்டா சப்பைக்கட்டு கட்டுவீங்க. ஏம்பா, நாங்களும் முக்கியம்தானே? ஏன்டி அவரை நீ இப்ப வம்புக்கு இழுக்கிற? உங்க அப்பா என்னடி குறை வச்சாரு? நீ கேட்டு என்ன வாங்கித் தரல? கேட்கிறத எல்லாத்தையும்தான் அந்த மனுஷன் வாங்கித் தராரு. என்னைக்காவது அவரோட அந்த ஓட்டை பீரோவுல போய்ப் பார்த்திருக்கியா! உன்னோட பீரோவுல நீ வித விதமா துணிமணிகளை அடுக்கி வச்சிருக்கிற மாதிரி, அவரோட பீரோவில் இருக்கா? மொத்தமே பத்து சட்டை, பத்து பேன்ட் இருந்தாலே பெருசு. ஆனா உன்னோடதுலயும் சரி, என்னோடதுலயும் சரி எவ்வளவு இருக்கும்னு நீயே சொல்லு.
ஏம்மா அவளைத் திட்டுற? பாவம்… அவ என் மேல இருக்குற பாசத்தினாலயும், நான் அவளுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுக்கத் தவறிட்டதாலும்தான் அப்படி இருக்கா. அந்த விதத்தில் அவ சொல்றது நியாயமாத்தான் இருக்கு. ஊர்ல, உலகத்துல நடக்காததையா அவ நம்மகிட்ட சொல்லிட்டா? இல்லையே. எல்லாத்துக்கும் காரணம் நம்ம நிலைமைதான். அம்மாடி கண்மணி, அந்த டிராயர்ல மளிகைப் பில் இருக்கும் பாரு, அதை இங்கே கொண்டு வர முடியுமா?” என்றவுடன், கண்மணி அப்பா கேட்ட பில்லைக் கொண்டு வந்து நீட்டினாள். அதை வாங்கிப் பார்த்த அப்பா, ஒரு வினாடி உறைந்து போனார்.அந்த வீட்டோட கடன், வண்டியோட கடன், வீட்டுச் செலவு, மருத்துவச் செலவு, இதையெல்லாம் தாண்டி அவளோட படிப்புச் செலவு… இவ்வளவையும் சரி செய்யணும்னா, எதையும் பார்க்காம ஓடிக்கிட்டே இருக்க வேண்டியதா இருக்கு. இப்பெல்லாம் நான் அடிக்கடி வெளியே போயிடுறேன். ஏன்னா, வெளியில போனாதான் கொஞ்சம் பணத்தைப் பார்க்க முடியுது. இந்தச் செலவையெல்லாம் ஓரளவுக்குப் பார்த்துக்க முடியுது. அப்படி இருக்குறப்போ, என்னைக்காவது நான் வீட்ல இருக்குற சமயத்துல அவ இப்படி நடந்துக்கறதுல தப்பு இல்ல. ஆனா, என்னை என்ன செய்யச் சொல்ற? என்னோட நிலைமை இப்படி இருக்கே. ஒண்ணு உங்களுக்குப் புரியுதா? நான் வீட்ல இல்லாத சமயம் நீங்கதானே அவரைப் பார்த்துக்கிறீங்க. அப்படி இருக்குறப்போ, நான் வீட்ல இருக்குற சமயத்துலயாவது நான் அவரைப் பார்த்துக்கிறேனே. நீங்க கொஞ்சமாவது நிதானமா எங்கேயாச்சும் வெளிய போயிட்டு வரலாம்ல? அதனாலதான், நான் வீட்ல இருக்குற சமயத்துல உங்க மூணு பேரையும் தனியா வெளியில போயிட்டு வரச் சொல்றேன். உங்களுக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்ல.
“அப்பா, எல்லாம் புரிஞ்சுதான் நாங்க எல்லோரும் நடந்துக்கிறோம். எங்களையும் நீங்க புரிஞ்சுக்கணும். எப்பவுமே எதையாவது நாங்க கேட்டுக்கிட்டே இருக்கோமா? இல்லையே? அப்படி இருக்க, நீங்க கொஞ்சம் எங்க தரப்பிலிருந்தும் யோசிக்கணும்.”
“சரிம்மா, நான் கட்டாயம் உங்க பக்கம் யோசிக்கிறேன். இந்த மாதிரி வெளியில போற பிளான் எல்லாம் நாம வாரக்கடைசியில, அதாவது ஞாயிறு மதியம் மாத்திக்கலாம். நாமளும் மதியம் சாப்பிடலாம், அவரையும் சாப்பிட வச்சுடலாம்.”
“ஏண்டி, அப்பா சொல்றது சரிதானே? நம்மோட நோக்கம் என்ன, சினிமாவுக்குப் போகணும். அது எப்போ போனா என்ன? சாயந்திரம் போனாதான் சினிமா பார்க்க முடியுமா? இல்லைல்ல, அப்புறம் என்ன?”
“கண்மணி, உனக்கும் உன் தம்பிக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன். என்னோட கஸ்டமர் இடத்தில்கூட, ‘ஏன் விவேக், அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னா வெளியில வச்சு பார்த்துக்கலாமில்ல?’ என்று சொன்னதுக்கு, உன் அப்பா, ‘அதெல்லாம் எனக்கு உடன்பாடில்லை சார். இப்ப நாம எப்படி இருக்கிறோம்கிறதை நம்ம பிள்ளைகள் பார்க்கத்தான் செய்கிறார்கள். அவர்களும் நிறைய செய்திகளைக் கேள்விப்படுகிறார்கள். பல இடங்களில் வயதானவங்களை ஹோம்ல விடுற பிள்ளைகள்தான் அதிகமாக உள்ளனர். அப்படி ஹோம்ல உள்ள பெரியவர்கள் எவ்வளவு பாசத்திற்கு ஏங்குகிறார்கள் என்று நாம் தினமும் டிவியில பார்க்கிறோம். குழந்தைகளுக்கும் புரிகிறது. நாமும் பத்தோடு பதினொண்ணா இருப்பது தவறுதானே? இன்று நாம் நமது பெற்றோரை வெளியில் விட்டோமென்றால், நம்மை நம் பிள்ளைகள் வெளியில் விட அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.’ ‘என்ன நிதர்சனம் என்றால், சின்னச் சின்ன பிரச்சினையெல்லாம் தினம்தினம் வருது. தேவையில்லாம இரத்த அழுத்தம் உண்டாகுது. என்னதான் கத்தினாலும் அவர் என்ன ‘அப்பா இல்லை‘ன்னு ஆயிடுமா? இல்லை ‘என் குழந்தைகளுக்கு தாத்தா இல்லை‘ன்னு போயிடுமா? இந்த சங்கடங்களைத் தவிர்க்கலாம்னு நிறைய நபர்கள் தங்களது பெற்றோரை ஹோம்ல விடுறாங்க. ஆனால் நான் அப்படி இல்லை. என்னதான் திட்டினாலும் பேசினாலும் அவர் என் அப்பா. அவரை அப்படி விட்டுவிட முடியாது,’ என்று அவர்களிடம் சொன்னேன். அவர்களும் என்னை மரியாதையுடன் பார்த்துப் புன்னகைத்தனர்.”


