பூக்கள் வரையத் தெரியுமா..?
என்று கேட்கும் மகளிடம்
”ம்” என்று
செடியையை வரைந்து நீட்டுகிறேன்
இதுவா செடியென்று
சிரித்தபடியே
ஓடிக்கொண்டிருக்கும்
மகளின் மேனியிலிருந்து உதிர்கிறது
வளர்ந்த செடியில்
பூத்திருந்த பூக்களின் இதழ்கள் நூறு
*
யாரேனும் ஒருவராவது
வந்து பேசுவார்களென்றே
கனவுக்குள் இறங்குகிறேன்
நிறைய பேர் வந்து பேசிவிட்டு
போய்க்கொண்டிருக்கிறார்கள்
நான் தான் பேசாமலே
தூங்கிக் கொண்டிருக்கிறேன்
எனக்குள் இறங்கிய கனவுக்குள்ளிலிருந்து
வெளியேற முடியாமல்
*
பள்ளிக்கு போகிற வழியில்
நேற்று ஒரு பறவையை கண்டேன்
நீ எப்படி பறக்கிறாய் யென்று கேட்க
தன் சிறகுகளிலிருந்து
சில இறகுகளை
என் கைகளில் வீசியெறிந்து விட்டு வனத்தை நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது
வீசியெறிந்த இறகுகளை
கைகளில் பொருத்திக் கொண்டு
நானும் ஒரு பறவையாக மாறி
வானத்தை நோக்கியே
பறந்து கீழ் நோக்கி வனம் பார்க்கிறேன்
வனம் முழுவதும்
இறந்து கிடக்கிறது
பல பறவைகளின் இறகுகள்,
*
யாரோ ஒருவர்
என்னை அழைக்கிறாரென்று
திரும்பி பார்க்கிறேன்
பின்னால் யாருமில்லை
ஆம் என்னையே
நான் முன்னால்
அழைத்துக்கொண்டு போயிக்கொண்டிருக்கிறேன்
பள்ளிக்கூட நூலகத்திற்குள்
*
நான் அவர்களை
போல அல்ல
புத்தகங்களோடு பேசுவேன்
சிரிப்பேன்
அழுவேன்
தூங்கவும்
மற்றவர்களை
தூங்கவிடாமலும் செய்வேன்
*
வெகுண்டெழுந்துவிட்டார்கள்
என் மக்கள்
கையில் கத்தி இல்லை
கடப்பாரை இல்லை
அதைவிட கூர்மையான
ஆயுதமாய் புத்தகங்கள் இருக்கின்றன கைகளில்
*
நகரத்தின் மையப்பகுதி
நான்கு முனை சந்திப்பு
மேற்கு பக்கமாய் ஓர் தள்ளுவண்டிக்கடை
இன்று ஞாயிற்றுகிழமை
எண்ணிலடங்கா கூட்டம்
மாட்டு முட்டி எலும்புகளை
சூப்பி இழுக்கும் இளவட்டங்கள்
சாதி மதம் பார்ப்பதில்லை நகரங்கள்
இன்னும் கொஞ்சம்
ஊத்துயா என்றொரு குரல்
கொஞ்சம் பொறுத்துக்குங்க
செட்டியார் என்றார் கடைக்காரர்
*
நெடுந்தொலைவு பயணம்
நேரம் தெரியவில்லை
சலிப்பேதுமில்லை
தனிமை இனிமையானது
எங்களுடனே
எங்களுக்காக பாடிக்கொண்டிருக்கிறார்
இசைஞானி இளையராஜா
*
ரத்தம் குடிக்கும்
அப்பாவின் சூரிக் கத்தி
மாடு அறுக்கும்
ஆடு வெட்டும்
பன்றி குத்தும்
எதுவும் இல்லையென்றால்
எரவானத்தில் ஓய்வெடுக்கும்
ஒருபோதும் தன் தாகம்
தீர்க்க கேட்டதேயில்லை
மனித ரத்தங்களை
*
அவருக்கும்
எனக்குமான பழக்கம்
நெடுநாள் தொடர்பு
ஊர் பெயர் கேட்டதில்லை
சாதி கேட்டதில்லை
மதம் கேட்டதில்லை
அவ்வபோது கேட்பேன்
என்ன புத்தகங்கள்
படிக்கீறீர்கள் என்று
*
ச. சக்தி


