ஒரு ஊர்ல மாணிக்கம்ன்னு ஒருத்தரு இருந்தாரு…
அவர் கோழிக்கறி வெட்டும் கடை வச்சுருந்தாரு…
அவருடன் மனைவி, மற்றும் ஆறு வயது மகளும் வாழ்ந்து வந்தாங்க.
மாணிக்கம் வார வாரம் சந்தைக்கு போவது வழக்கம். அப்படி போய் வரும்போது
ரெண்டு முயல் குட்டிங்கள தூக்கி வந்து வீட்டில வச்சிருந்தாரு.
பள்ளி முடிஞ்சு வீடு திரும்பிய மகள் ஸ்ரீதேவி அந்த முயல் குட்டிகள
பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதிச்சா. எப்போ பள்ளி முடிஞ்சு வீடு
திரும்பினாலும் அந்த முயல் குட்டிகளிடம் விளையாடிகிட்டே இருந்தா…
மாணிக்கம் காலையில தொழிலுக்கு போனா சாயந்திரம் தான் வீடு திரும்புவாரு. மாணிக்கம்
மனைவிக்கு வீட்டு வேலையே சரியாக இருந்தது.
இப்படி இருக்கையில…
ஒரு நாள் மாணிக்கத்தின் மச்சான் (மனைவியின் அண்ணன்) வீட்டிற்கு
வந்திருந்தாரு. தனது அண்ணனுக்காக முயல் கறி செய்து தருமாறு கணவனிடம்
கேட்டுக்க்கிட்டா மனைவி. மனைவியின் விருப்பப்படியே வீட்டில் உள்ள அந்த முயல்களை
கறியாக்கி அவளிடம் கொடுக்க, அவள் அதை ஆசையாக சமைத்து தனது அண்ணனுக்கு பரிமாறினாள்.
மாணிக்கத்தின் மச்சான் அதை ருசித்து சாப்பிட்டு முடிக்க… மாலை அவரை
வழியனுப்ப சென்றார் மாணிக்கம்.
வழக்கம்போல பள்ளியில இருந்து திரும்பி வந்த ஸ்ரீதேவி முயல் கூண்டில் சென்று
பார்த்த போது அங்கே முயல்கள் இல்லாமல் அதிர்ச்சியடைந்தாள்.
தனது அம்மாவிடம் வந்து அதை பற்றி கேட்க, உன் மாமா ஊர்ல இருந்து வந்ததால
அவருக்கு அதை சமைச்சு கொடுத்துட்டேன்மா என்று சொன்னாள். அதைக் கேட்டு ஓ என்று அழுதாள்.
அந்தக் கூண்டை பார்த்து பார்த்து அழுது கொண்டே இருந்தாள்.
மாணிக்கம் வீடு திரும்பினார்.
நடந்த விஷயத்தை மனைவி கூற, மாணிக்கம் மகளிடம் வந்து “இங்க பாருமா ஸ்ரீதேவி
நீ சின்ன பொண்ணு தான் இருந்தாலும் உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்றேன். ஏதோ ஒரு
ஆசையில நாங்க தெரியாம செஞ்சி இருந்தாலும் இது எல்லாம் கர்மா உடைய செயல். எந்த ஒரு
உயிர் யார் மூலமாக பிரியுதோ அந்த உயிரோட அத்தனை பாவ புண்ணியங்களையும் அவங்க
ஏத்துகிட்டதுக்கு சமம்… இது எல்லா உயிருங்களுக்கும் பொருந்தும். சொர்க்கம் நரகம்
பாவம் புண்ணியம் இதெல்லாம் நாம வாழும் காலத்திலேயே கழியுது. எப்போ ஒரு உயிர் உடலை
விட்டு பிரியுதோ அப்போதான் அந்த உடலுக்கும் உயிருக்கும் முழுமையான சுதந்திரம்
கிடைக்குது. நீ வளர்த்த அந்த முயலுங்க இப்போ சுதந்திரமான ஆத்மாவாக பறந்துகிட்டிருக்கும்.
இதை நீ புரிஞ்சிக்கிட்டா இனி இப்படி நீ அழ மாட்ட…” என்றார்.
அழுது கொண்டே இருந்த அவள், “நான் ஆசையா வளர்த்த முயலுங்கள கொன்னுட்டு
அதுக்கு ஒரு காரணக் கதை வேற சொல்றியாப்பா” என்றாள்.
பெருமூச்சு விட்ட மாணிக்கம் செய்வது அறியாமல் எழுந்து வெளியே சென்று தேடி
அலைந்து அதே போன்று இரண்டு முயல் குட்டிகளை வாங்கி வந்து அவளிடம் கொடுத்தார்.
அதைப் பார்த்து அழுது கொண்டே, “போப்பா அந்த முயல் குட்டிங்க மேல எவ்வளவு
பாசமா இருந்தேன் தெரியுமா…? அதுவும் என்கிட்ட எவ்வளவு அன்பா இருந்துச்சு. இதுங்க
மேல நான் பாசம் வச்சா நாளைக்கு இதையும் கொன்னிடுவீங்க… அது எங்க இருந்துச்சோ
அங்கேயே கொண்டு போய் விட்டுடுப்பா” என்றாள்.
அத்தனையும் அறிந்த மாணிக்கத்திற்கு தனது மகளுக்கான பதிலை கொடுக்க முடியவில்லை.
குற்ற உணர்ச்சியில் தலை குனிந்து நின்றார்.
முயல் குட்டிகள் கூண்டில் விளையாடிக் கொண்டே இருந்தன…


