காலாவதி
–
இரா. தங்கப்பாண்டியன்,
–
கடமலைக்குண்டு
காளியம்மன் கோயிலுக்கு வருசா வருசம்
தீச்சட்டி எடுக்கும்
கவிதா மதினிக்கு
மாலை வாங்கிப் போடுவதே
செந்திலண்ணாவின் வேலை.
கல்யாணம் முடிச்சு
வெளியூர் போனாலும்
தீச்சட்டி எடுக்க
உள்ளூர் வரும்
மதினியை எதிர்பார்த்தே
நாடக மேடையில்
செந்திலண்ணா தவமிருக்கும்.
மதினியோடு
முப்பது வருசமா பேச்சுவார்த்தையில்லை.
அண்ணனுக்கும் சொல்லும்படியான
வருமானமில்லை.
மதினிக்கும் வயசாகிப்
போனது….
இருந்தாலும்
எதிர்பார்த்தே செந்திலண்ணா
காத்திருக்கும்.
மேலத்தெருவிலிருந்து
கொட்டுமேளம் முழங்க
தீச்சட்டி தூக்கி
ஆவேசமாக ஆடிக்கொண்டே
வந்த மதினிக்கு…
கடன் வாங்கி மாலை
போட்ட
செந்திலண்ணாவைப் பார்த்து
நாக்கைத் துருத்தி
“என்ன வேணும்?”
எனக்கேட்ட மதினியைப் பார்த்து
கையெடுத்துக் கும்பிட்டு
ஒதுங்கினார்….
வரங்களேயானாலும்
காலங்கடந்து கிடைத்தால்
காலாவதிதானே.


