‘கண்’காட்சி
மக்களிடம் புத்தகங்களைப் பரவலாகக் கொண்டு சேர்க்கும் செயலைச் செய்வதில் புத்தகக் கண்காட்சிக்கு முக்கியமான இடம் உண்டு. முன்பெல்லாம் புத்தகக் கண்காட்சி என்பது ஏதோ ஒரு சில இடங்களில் மட்டுமே நடத்தப்படும். குறிப்பாக சென்னையில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிக்கு தென் மாவட்டங்களில் இருந்தெல்லாம் வந்து செல்வது என்பது முடியாத காரியம். அப்போது தென் மாவட்டங்களில் எல்லாம் புத்தகக் கண்காட்சி என்பது அரிதான விசயம்தான்.
இப்போது பெரும்பாலான ஊர்களில் வருடத்தின் பாதி மாதங்கள் தொடர்ந்து புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. பதிப்பாளர்களுடன் நெருக்கமான நட்பு இருப்பதாலும் நாமும் புத்தகம் போட்டிருக்கிறோம் என்பதாலும் கண்காட்சி நடக்கும் போது நண்பர்களுடன் எப்படிப் போகிறது எனக் கேட்பதுண்டு. குறிப்பாக கடந்த மூன்று வருடங்களில் பெரும்பாலான இடங்களில் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை என்பதுதான் உண்மை என்றாலும் நிகழ்வு முடிந்த பின் கோடிகளில் விற்கப்பட்டன என்ற செய்தி எல்லாப் பத்திரிக்கைகளையும் அலங்கரிக்கும். இந்தக் கோடிகள் புத்தகங்களைச் சுமந்து ஊர் ஊராய் போகும் பதிப்பகத்தாருக்கு மட்டுமே வெளிச்சம்.
தற்போது வாசிப்பு என்பது பிடிஎப் மற்றும் இணைய வழி என்றாகிவிட்ட நிலையில் இப்போதும் அதுவும் இன்னும் சுலபமாக, அதாவது நடந்து போதல், சைக்கிளில் போதல் எல்லாம் தேவையில்லை என ஆளாளுக்கு மின்சார வண்டிகளில் நின்று கொண்டே பயணிப்பது இப்போது அதிகமாகி வருவதைப் போல் ஒலி வடிவில் கதைகளை – புத்தகத்தை அப்படியே வாசிப்பது – பலர் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதைக் கேட்டு இந்த இந்தப் புத்தகத்தை எல்லாம் முடித்து விட்டேன் எனச் சொல்கிறது இப்போதைய தலைமுறை. வாசிப்பில் கிடைக்கும் மகிழ்ச்சி, கேட்பதில் கிடைத்து விடுமா என்ன..?
சரி விஷயத்துக்கு வருவோம், உள்ளூர் புத்தகக் கண்காட்சிகளிலேயே விற்பனை என்பது சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்ற நிலையில் வெளிநாடுகளில் நடக்கும் புத்தக விழாக்களில் எப்படி இருக்கும்..? வெளிநாடுகளில் இருக்கும் ஆட்களுக்கு கண்காட்சிக்குச் செல்ல, புத்தகங்களை வாங்கி வாசிக்க இங்கு நேரம் இருக்குமா..? என்பதையெல்லாம் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
சென்ற வாரத்தில் ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. 1982-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் புத்தகக் கண்காட்சி இப்போது உலகின் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக உயர்ந்திருக்கிறது. இதில் பல நாட்டுப் பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. ஒரு புத்தகக் கண்காட்சி நிகழ்வை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம். பல புத்தக வெளியீடுகள் நடக்கின்றன. எல்லாவற்றுக்கும் அரைமணி நேரம்தான் ஒதுக்கீடு, நேர மேலாண்மையை அவ்வளவு சிறப்பாக கடை பிடிப்பார்கள். நம்ம ஊரைப் போல் ஐயா வந்திருக்காங்க பேசட்டும் என்பதெல்லாம் இல்லை. எவ்வளவு பெரிய மனிதர் என்றாலும் கொடுத்த நேரத்தில் முடித்து அடுத்த நிகழ்வுக்கு அரங்கைக் கொடுத்தே ஆக வேண்டும்.
இங்கு தமிழ்ப் பதிப்பகங்கள் இல்லாதுதான் இருந்தது. சமீப வருடங்களாய்த்தான் தமிழ்ப் பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. அதிலும் சென்ற வருடம் வந்ததில் பாதி கூட இந்த வருடம் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை. மலையாள பதிப்பகங்கள்தான் அதிக இடங்களை ஆக்கிரமித்து இருக்கும். அவர்கள் குடும்பமாய் வருகிறார்கள். மொத்தமாகப் புத்தகங்களை அள்ளிச் செல்கிறார்கள் என்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.
இந்த வருடம் நாங்கள் சென்ற விடுமுறை நாளில் தமிழ்ப் பதிப்பக அரங்குகள் காற்றாடின. பெரும்பாலும் ஆட்கள் வருவது என்பது அரிதாகிவிட்டது. கிடைக்கும் விடுமுறைநாளில் இந்த போக்குவரத்து நெரிசலில் போய் வர வேண்டுமா என்ற எண்ணம் ஒரு பக்கம் இருந்தாலும் நம் அரங்கில் விற்க்கப்படும் புத்தகங்களின் விலையும் வாங்க யோசிக்க வைக்கிறது என்பதே முக்கியமான் காரணி. மலையாளிகள் சற்று குறைத்தே கொடுக்கிறார்கள் என்பதுடன் அவர்களின் அரங்குகளில் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டு வருவோரிடமெல்லாம் பேசி எப்படியும் விற்று விடுகிறார்கள். தமிழரையும் மலையாளப் புத்தகங்களை வாங்க வைத்து விடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு பதிப்பகத்தாரிடம் விலை அதிகமா இருக்கே என்று கேட்டபோது அவர் சொன்ன விசயங்கள் அந்த விலை நியாயமானதே என எண்ண வைத்தது என்றாலும் தங்களுக்கு அரசு உதவவில்லை, அப்படியே உதவினாலும் நாங்கள் செலவழித்துச் சென்ற பின்னரே கொடுப்பார்கள் என்றார். கொடுக்கிறார்கள்தானே… எப்படியும் உங்களின் செலவில் கொஞ்சமேனும் கிடைக்கும்தானே. அப்ப நீங்க கொஞ்சம் விலையைக் குறைத்து வைக்கலாமே என்ற கேள்விக்குப் பதில் இல்லை. மேலும் நமது எழுத்தாளர்கள் மலையாளிகளைப் போல அரங்கில் நின்று விற்பனை செய்ய நினைப்பதில்லை. எனது புத்தகம் இங்க இருக்கு பார்த்தியா..? எனப் போட்டு எடுத்துப் போட்டு விருப்பக்குறி வாங்குவதையே விரும்புகிறார்கள். இந்த முறை டிஸ்கவரி அரங்கில் பெண் எழுத்தாளர்கள் இருவர் நின்று விற்பனைக்கு உதவியதைப் பார்த்தபோது மகிழ்வாக இருந்தது.
இனி வரும் காலங்களில் புத்தக விலையை ஒரளவு குறைத்து, மலையாளிகளைப் போல் நாமும் இறங்கி வேலை பார்த்தால் தமிழ்ப் பதிப்பகங்களின் எண்ணிக்கையும், புத்தகத்தை வாங்குவோரின் எண்ணிக்கையும் கண்டிப்பாக உயரும்.
நடக்குமா..?
–பரிவை சே.குமார்.


