மாணிக்கம் தினமும் காலை 4:00 மணிக்கு அலாரம் வைப்பது வழக்கம் ஆனால் அதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பே எழுந்து விடுவார்..
வயது எழுபது, ஐந்து அடி உயரம், மாநிறம். பெயருக்கு ஏற்றார் போல் அவர் மாணிக்கம் தான்.. உற்றார் உறவினர்கள் எல்லாம் மாணிக்கம் ஒரு வெள்ளந்தியான மனுஷன்ப்பா.. என்பார்கள்.
மாணிக்கம் தான் வெள்ளந்தியான மனிதன் என்றால் அவர் மனைவியோ வெகுளி.
தாமதமாக திருமணம் செய்து கொண்ட மாணிக்கத்திற்கு 20 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.. அவனுக்கோ மூளை வளர்ச்சி கொஞ்சம் குறைவு.
மாணிக்கம் ஒரு பொறுமையான மனிதன்.. வறுமையில் இருந்தாலும் தனது நேர்மையை கைவிடாதவர்.. ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும் எதற்கும் யார் முன்னேயும் போய் நிற்காத ஒரு வைராக்கியக்காரர்.
இந்த வயதில் இவ்வளவு வைராக்கியம் உனக்கு ஆகாது என்று ஏசுபவர்களும் உண்டு.
இதற்கு முன் மாணிக்கம் ஒரு நூல் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தார்.. வயது முதிர்வு காரணமாக அங்கே இருந்து ஓய்வு பெற்றார்.. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனது நூல் மில்லின் மூலமாக கிடைத்த பிஎஃப் பணத்தை வைத்து சிறியதாக ஒரு கடையை வாடகைக்கு எடுத்து.. தக்காளி சாதம், லெமன் சாதம், புளியோதரை, தயிர் சாதம் மற்றும் வெள்ளை சாப்பாடுகளை இவரே சமைத்து வியாபாரத்திற்கு எடுத்துச் செல்வது வழக்கம்..
அதற்காக காலை 4:00 மணிக்கு முன்கூட்டியே எழுந்து மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கி வந்து வைத்துவிடுவார்..
சமைப்பது ஒரு சவாலாக இருந்தாலும் அதை வியாபாரம் செய்வது அதைவிட பெரிய சவால்.. என்னதான் பம்பரம் போல சுழன்று சுழன்று வேலை செய்திருந்தாலும்.. வியாபாரம் என்பது நம்ம கையில் இல்லை.. கடை திறந்த நாளில் இருந்து இன்று வரை காற்று வாங்கிக் கொண்டுதான் இருந்தது..
வழக்கம் போல கடையில் காற்று வாங்கிக் கொண்டிருந்தார் மாணிக்கம்.
அந்த ஊரின் முக்கிய சாலையும் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் தான் மாணிக்கத்தின் கடை உள்ளது.
அருகில் ஒரு கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது..
மதியம் 1:30 மணி இருக்கும் சுத்தமாக வியாபாரமே இல்லாமல் மாணிக்கம் சோர்வாக அமர்ந்திருந்தார்..
அந்த வழியாக வந்த நான்கு இளைஞர்கள்..
மச்சான், இந்த வழியில இந்த தாத்தா கடைய விட்டா வேற கடையே கிடையாது போல பேசாம இங்கேயே சாப்பிட்டுருவோம்டா..மச்சான்.
ஆமாண்டா.. இதுக்கு மேல அலைஞ்சோம்னா கிடைக்கிற ஒரு மணி நேரம் ரெஸ்ட்டும்.. வீணா போயிடும்.
தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு மாணிக்கத்தின் கடையில் வந்து அமர்ந்தார்கள்..
தாத்தா சாப்பிட என்ன இருக்கு?
தக்காளி லெமன் புளியோதரை புதினா தயிர் சாதம்.. இருக்குப்பா..
ரெண்டு தக்காளி. மச்சான் உனக்கு.. மச்சான் எனக்கு தயிர் போதும்டா..
மச்சான் எனக்கும் தான்..
தத்தா ரெண்டு தக்காளி இரண்டு தயிர்..
சாப்பிட்டு முடித்து, மாணிக்கத்திடம் பில்பணத்தை கொடுத்துவிட்டு..
டேய் மச்சான், இங்கே நல்லா இருக்குடா.. பேசாமா இங்கே தினமும் வந்து சாப்பிட்டுருவோம்டா..
தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு சென்றனர்..
அந்த நான்கு பேரும் அங்கே கட்டிட வேலை செய்து கொண்டிருந்த மற்றவர்களிடம் போய் கூற.. சுற்றும் முற்றும் இருந்த வேலை ஆட்கள் எல்லாம் மாணிக்கத்தின் கடையை தேடி வந்தனர்.
மாணிக்கத்தின் கடை சூடு பிடித்தது. இரண்டு மாதங்களில் நல்ல வியாபாரம் கண்டார் மாணிக்கம்..
இதைக் கண்ட மாணிக்கத்தின் கடையின் உரிமையாளர்.. வாடகையை உடனே சேர்த்து கேட்க..
ஐயா சம்பாதிக்கிற காசு செலவு போக என் கைக்கே சரியா இருக்கு.. உடனே வாடகை சேர்த்து கேட்டா எப்படிங்கயா..
கொஞ்ச நாள் போகட்டும்யா..
அதெல்லாம் எனக்கு தெரியாது, வாடகையை சேர்த்து கொடுக்க முடிஞ்சா இருங்க இல்லைன்னா கடையை காலி பண்ணிக்கோங்க..
என்று கடையின் உரிமையாளர் சொல்ல..
வேறு வழி இல்லாமல்.. அங்கே இருந்து கடையை காலி செய்து.
எதிரே உள்ள புத்து மாரியம்மன் கோயிலில் உள்ள காலி இடத்தில்..
தள்ளுவண்டி கடை போட்டார்..
மாணிக்கத்தின் முகத்திற்காக அங்கேயும் வியாபாரம் சிறப்பாகவே இருந்தது.. வழக்கமாக வியாபார நேரத்தில் மாணிக்கத்தின் மனைவியும் மகனும் அங்கே வந்து நிற்பார்கள் அவர்களுக்கு செலவுக்கு பணம் கொடுத்து அனுப்புவார்.
வியாபார நேரத்தில் சமாளிக்க முடியாமல் கொஞ்சம் சிரமமாக இருந்ததால் ஒரு வயதான அம்மாவையும் துணைக்கு வைத்துக் கொண்டார்..
சில நாட்களில் அந்த அம்மா இங்கே நடக்கும் வியாபாரத்தை பற்றி தனது வீட்டில் போய் மகன் மருமகளிடம் கூறுவது வழக்கம்.
மகன் தனக்கும் அங்கே வேலை கிடைக்குமா என்று கேட்க.. அந்த அம்மாவும் மாணிக்கத்திடம் வந்து அதை கூற.. மாணிக்கமும் வேலைக்கு ஒப்புக்கொண்டார்..
வந்த புதிதில் தனது விசுவாசத்தை காட்டிய அந்த அம்மாவின் மகன்..
போக போக தனது கைவசத்தையும் காட்டினான்..
அதை அறிந்த மாணிக்கம் அவனை திட்டி வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.. அந்த அம்மாவோ கெஞ்சி தனது வேலையை மட்டும் தக்க வைத்துக் கொண்டார்..
ஆனால் மகனோ தன்னை வேலையை விட்டு நிறுத்தி விட்ட அந்த ஆத்திரத்தில் மாணிக்கத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோபத்தில்..
அந்த ஊர் முன்னாள் கவுன்சிலரிடம் போய் உங்க ஊர்ல இப்படி பொது ஜனங்களுக்கு இடையூறா ஒரு சாப்பாடு கடை இருக்கு நீங்க யாரும் கண்டுக்க மாட்டீங்களா என்று கேட்க..
அந்த முன்னாள் கவுன்சிலர் புத்து மாரியம்மன் கோயிலின் தர்மகர்த்தாவிடம் அதை கூற..
தர்மகர்த்தா மாணிக்கத்திடம் வந்து..
ஐயா, தயவுசெஞ்சு இந்த கடையை காலி பண்ணிக்கோங்க.. இல்லைன்னா எனக்கு தான் தலைவலி.. என்று கெஞ்சி கேட்க..
வேறு வழி இல்லாமல் மாணிக்கம் அந்த கடையை காலி செய்தார்..
அதன் பிறகு மாணிக்கம் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்று யாருக்குமே தெரியாமல் போனது..
சில நாட்களுக்கு பிறகு வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்த ஒரு நபர் மாணிக்கத்தை தேடி புத்துமாரியம்மன் கோயில் அருகே உள்ள அந்த உணவகத்திற்கு வந்தார்..
இங்கே ஒரு பெரியவர் இருந்தாரு , அவர் இல்லையா..
இல்லைங்க சார், அவர் எப்போவோ கடையை காலி பண்ணிட்டு போயிட்டாரு..
ஏன் என்ன ஆச்சு..
அதெல்லாம் எனக்கு தெரியாது சார்..
என்ன விஷயமா அவரை பார்க்க வந்தீங்க..
அது வந்து.. இல்லை, நான் அவர்கிட்டயே பேசிக்கிறேன்.. அவர் அட்ரஸ் தெரியுமா..
இல்ல சார், நானே இந்த ஊருக்கு புதுசு எங்க மாமா தான் இந்த ஹோட்டல் உடைய ஓனர் இந்த இடமும் அவரோடதுதான். அவர்தான் என்னை இங்கே அழைச்சிட்டு வந்தார்.. ஏதோ முக்கியமான விஷயமா இருந்தா சொல்லுங்க என் மாமாவிடமே போன் போட்டு கொடுக்கிறேன்..
இல்லை வேணாம் விடுங்க..
தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.. அந்த பெரிய மனுஷன்.
நாட்கள் ஓடின..
கோடைக்கால உச்சிவெயிலில் ஒரு பெரியவர் கடை கடையாக வீடு வீடாக ஏறி இறங்கி பட்டை சாதம் விற்றுக் கொண்டிருந்தார்..
எப்படியோ வெள்ளை வேட்டிசட்டை அணிந்த அந்த பெரிய மனிதன் கண்ணில் பட..
ஐயா, சன்னியாசி குண்டு மெயின் ரோட்ல புத்துமாரியம்மன் கோவில் பக்கத்துல ஒரு ஹோட்டல் வச்சிருந்தீங்களே அது நீங்க தானே..
ஆமாம்.. எப்படி கண்டுபிடிச்சீங்க..
என்னை ஞாபகம் இருக்கா..உங்கள் ஹோட்டலுக்கு நான் சாப்பிட வருவேன்..
அப்படியா, சரியா ஞாபகம் இல்லைங்களே..
பரவாயில்லைங்கயா.. உங்கள் சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்..
அதனாலயே உங்க ஹோட்டலுக்கு நான் அடிக்கடி வருவேன், ஆனா நீங்க
வேலையில ரொம்ப பிஸியா இருப்பீங்க..
ஓ.. அப்படிங்களா..
ஆமாங்க ஐயா, ஏன்
ஹோட்டலை எடுத்துட்டீங்க..
எல்லாம் விதி..
உங்க சூழ்நிலை எனக்கு புரியுது வருத்தப்படாதீங்க ஐயா..
நான் இப்போ புதுசா ஒரு கேட்டரிங் வச்சு நடத்திட்டு இருக்கேன்..
அதற்கு ஒரு நல்ல மாஸ்டரை தேடிக்கிட்டு இருந்தேன் அப்போதான் உங்க ஞாபகம் வந்தது..
உங்களை பார்க்கிறதுக்காக அந்த ஹோட்டலுக்கு உங்களை தேடி வந்தேன்..
ஆனா அங்க வேற யாரோ இருந்தாங்க..
திரும்பி வந்துட்டேன்..
நல்ல வேலையா இப்போ என் கண்ணுல பட்டீங்க..
சாரிங்க எனக்கு வயசு ஆயிடுச்சு நீங்க நினைக்கிற அளவுக்கு என்னால ஓடி ஆடி வேலை செய்ய முடியாது..
அதெல்லாம் நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம்..
உங்களுக்கு கீழ நான்
ரெண்டு அசிஸ்டெண்ட் கொடுத்துடுறேன்..
நீங்க மேனேஜ் பண்ணா மட்டும் போதும்..
மாணிக்கம் தயங்கி நிற்க..
என்ன யோசிக்கிறீங்க ஐயா, ஆண்டவனே உங்களை என்கிட்ட அனுப்பி வச்சிருக்கான்..
இந்தாங்க 5000 அட்வான்ஸ்..
நிம்மதியா வீட்டுக்கு போங்க.. இதோ இதுதான் என் ஆபீஸ் திருத்தணி முருகன் கேட்டரிங் சர்வீஸ்ன்னு போட்டிருக்கு பாருங்க.
நாளைக்கு காலையில ஒரு 9:00 மணிக்கு இதே இடத்துக்கு வந்துருங்க மத்ததை நான் பார்த்துக்கிறேன்..
உங்கள் உழைப்பு இனி ஒருபோதும் வீண் போகாது.
நல்லபடியா போயிட்டு வாங்கய்யா.. நல்லதே நடக்கும்.
எப்பவோ எங்கேயோ போட்ட விதை தான் இப்ப முளைச்சி செடியா வந்திருக்கு போல… என்று பெருமிதத்தோடு மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு திரும்பி சென்றார் மாணிக்கம்..


