தொலைந்த சாவி
–
பாலமுருகன்.லோ,
சிட்லபாக்கம், சென்னை
ஓங்கி தலையில் சம்மட்டியால் அடித்தது போல ஒரு வலி. தலையைப் பிடித்தவாறே அந்தக்
கடிதத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தான் தருண்.
“நான் என்ன தவறு செய்தேன்?
ஏன் அவர் இப்படி எழுதியிருக்கிறார்? ஒருவேளை நான் எழுதத் தகுதியானவன்தானா, இல்லையா?”
அவனது மனம் வெந்து வெம்பிக்கொண்டிருந்தது.
தருண் இப்படி இருப்பதற்குக்
காரணம், அவனுக்குக் கிடைத்த அந்த விமர்சனக் கடிதமே. தண்ணீரில் விழுந்தவன் தத்தளிப்பதைப்
போல, அவனது மனம் குழப்பத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தது.
“இலக்கிய நடையில்
எழுதுவதுதான் சிறந்த கதை என்றால், ஒரு சராசரி மனிதன் படிப்பதற்கு எப்படி எழுதுவது?
சாமானியர்கள் இலக்கிய நயமுள்ள கதைகளைத்தான் விரும்புவார்களா?”
கேள்விகள் அவன் மனதில்
ஓடிக்கொண்டிருந்தன.
படுக்கையில் புரண்டு
புரண்டு படுத்தான். தலையணையில் முகத்தைப் புதைத்து குப்புறப் படுத்துப் பார்த்தான்.
ஆனால் அவனால் தூங்க முடியவில்லை. அவனது தற்போதைய மனநிலை ‘பூட்டிய வீடு மற்றும் தொலைந்த
சாவி’ என்ற விளையாட்டைப் போலவே இருந்தது.
பூட்டிய வீட்டுக்குள்
அடைக்கப்பட்டு, பல புதிர்களை எதிர்கொண்டு, சாவியை மீட்டு, கடைசியில் கதவைத் திறந்து
வெளியே வர வேண்டும். தருணும் அப்படியொரு மன விளையாட்டில் மாட்டிக்கொண்டு போராடிக்கொண்டிருந்தான்.
அன்றைய இரவு அப்படியே
முடிந்தது.
அடுத்த நாள் அதிகாலையில்,
அம்மா அவனை எழுப்பும் சத்தம் காதில் விழுந்தது.
“தருண், நேத்து அம்மாகிட்ட
சொல்லிட்டுத்தானே படுத்த? இன்னைக்கு ஆபீஸுக்கு சீக்கிரம் போகணும்னு… எழுந்திரு” என்றாள்
மீனா.
“ம்மா… தெரியும்,
எழுந்துட்டேன். இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பிடுவேன். நீங்க காலைக்கும் மதியத்துக்கும்
சாப்பாடு ரெடி பண்ணிட்டீங்களா?”
“ஸ்ஸ்… ஸ்ஸ்… ஸ்ஸ்…”
என்று குக்கரின் சத்தம் வீடெங்கும் ஒலித்தது.
மீனா அடுப்பங்கரையில்
மும்முரமாகச் சமைத்துக்கொண்டிருந்தாள். காலைக்கு பூரியும் உருளைக்கிழங்கு மசாலும்,
மதியத்திற்கு முருங்கைக்காய் சாம்பாரும் பாகற்காய் வறுவலும் அவன் கேரியரில் எடுத்து
வைத்திருந்தாள்.
“தருண், எல்லாம் ரெடி
பண்ணிட்டேன்டா. நீ இப்போ இந்த வேளைக்குச் சாப்பிட்டு, மதியத்துக்கு பையில் இருக்கிறதச்
சாப்பிடு,” என்றாள்.
“சரிம்மா… பூரிக்கு
உருளைக்கிழங்கு மசால் சூப்பர். ரெண்டு பூரி இன்னும் எக்ஸ்ட்ராவா வேணும்.”
“ஏன்டா, ரெண்டு போதுமா?
இன்னும் ஒண்ணு சேர்த்து வைச்சுக்கோ?”
“இல்லம்மா, ரெண்டு
போதும். நிறைய சாப்பிட்டு அப்புறம் ஆபீஸ்ல போய் தூங்கச் சொல்றியா?”
“சரிடா, ஆசையா கேட்டயேன்னு
சொன்னேன். வேணாமுன்னா விடு” என்றாள்.
மாநகரப் பேருந்தை
அவசரமாகப் பிடித்து, கூட்ட நெரிசலில் இடிபட்டும் மிதிபட்டும், ஸ்டெர்லிங் ரோட்டில்
இருக்கும் தனது அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான் தருண். வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு,
ஒரு கப் காபிக்காக பேன்ட்ரிக்குச் சென்றான். அங்கு அவன் நண்பர்களும் கூடியிருந்தனர்.
அவர்களுக்கு காலை வணக்கம் சொல்லிவிட்டு, தன் இருக்கைக்குச் சென்று அன்றாட வேலையைத்
தொடங்கினான்.
மதிய இடைவேளையில், அம்மா கொடுத்த பையை எடுத்துக்கொண்டு அலுவலக
கேன்டீனுக்குச் சென்றான். மேசையில் அமர்ந்து, ஒரு கையில் புத்தகத்தைப் பார்த்தபடியே
உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவனுடைய தோழி நிகிதா, அவனுடன் சேர்ந்து சாப்பிட
அமர்ந்தாள்.
“என்ன தருண், ரொம்ப
மும்முரமா எதையோ படிச்சுட்டு இருக்கே போல! கொஞ்சம் என்னன்னு சொல்லலாமா?” என்றாள்.
தருண் பதில் சொல்லவில்லை.
சாப்பிடுவதிலும் படிப்பதிலும் கவனமாக இருந்தான்.
அவளுக்கு எரிச்சல்
வந்தது. ‘நாம் கேட்டால் பதில் சொல்லாமல் அப்படி என்ன படிக்கிறான்?’ என்று எண்ணியவள்,
திடீரென்று அந்தப் புத்தகத்தை அவன் கையிலிருந்து பிடுங்கினாள்.
புத்தகத்தினுள் மடித்து
வைத்திருந்த ஒரு வெள்ளைக் காகிதம் கீழே விழுந்தது.
“தருண், மன்னிச்சுக்கோ.
நான் உன்னைக் கூப்பிட்டேன். நீ திரும்பியோ நிமிர்ந்தோ பார்த்திருக்கலாம். அதை நீ செய்யாததால்
நான் இதைச் செய்ய வேண்டியதா போயிடுச்சு”
அவள் கீழே விழுந்த
காகிதத்தை எடுத்தாள்.
“இதில் என்ன இருக்கு?
பார்க்கலாமா?”
“எனக்கு வந்த ஒரு
கடிதம்”
“யாரிடமிருந்து? வாசகரிடமிருந்தா?”
“இல்லை. அவரும் ஒரு
எழுத்தாளரே”
“உன் சம்மதத்துடன்
படிக்கவா?”
“சரி, படி” என்றான்
தருண்.
இரண்டு நிமிடம் படித்தவுடன்,
அவளது கண்கள் விரிந்தன.
“என்ன தருண், அவர்
ஏதேதோ எழுதியிருக்காரு! அவர் சொல்லற மாதிரி ஒண்ணும் நீ அந்தக் கதையில் சொல்லலையே! பிறகு
ஏன் அவர் அப்படி எழுதியிருக்காரு?”
தருண் அமைதியாக இருந்தான்.
“இப்ப என்ன செய்யப்போற?”
என்றாள் நிகிதா.
“நீ எனக்கு ஒன்று
சொல்ல முடியுமா? இப்பொழுது இருக்கும் இந்த நவீன யுகத்தில் இலக்கிய நடையில் கதைகளைப்
புனைவது சரியா? அல்லது அன்றாடப் பழக்கத்தில் உள்ள சொற்றொடர்களை வைத்தே கதை சொன்னால்,
படிப்பவர்கள் விரும்புவார்களா?”
“தருண், உன் கேள்வியிலேயே
பதிலும் அடங்கி இருக்கிறது”
“என்ன சொல்கிறாய்,
நிகிதா?”
“தருண், எல்லாரும்
ஒரே மாதிரி படிக்க மாட்டாங்க. சிலருக்கு இலக்கிய நடை பிடிக்கும். சிலருக்கு நேரா சொல்லும்
கதை பிடிக்கும். அதனால ஒருத்தரின் கருத்தை வைத்து உன் எழுத்தையே சந்தேகப்படாதே”
தருண் அவளைப் பார்த்தான்.
“நிகிதா, நான் ஒரு
வரையறை வைத்துக்கொண்டுதான் எழுதுகிறேன். மக்கள் இதை எழுதினால் விரும்புவார்கள் என்று
நான் எதையும் எழுதுவதில்லை. நாம் முன்வைக்கும் கருத்து நல்ல விதத்தில் உள்ளதா, பலருக்கும்
அந்தச் செய்தி போய்ச் சேருமா என்று எண்ணித்தான் எழுதுகிறேன். படிப்பவர் மனம் கோணாதவாறு
பார்த்துக்கொள்கிறேன். இருந்தும் அவர் ஏன் அப்படிச் சாடி எழுதினார் என்று தெரியவில்லை”
“தருண், நான் ஒன்று
உனக்குச் சொல்ல விரும்புகிறேன்”
“என்ன? சொல்லு”
“உன் எழுத்தை நீ நம்புகிறாயா?”
“பின்னே! என் எழுத்தை
நான் நம்பாமல் வேறு யார் நம்புவது?”
“அப்படியென்றால் இதையெல்லாம்
ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதே. உன்னுடைய படைப்பு ஒரு இதழில் வெளிவந்திருக்கிறது
என்றாலே, அதில் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கிறது என்றுதானே அர்த்தம். அதை நீ உணர்கிறாயா?”
“நிச்சயமாக, நிகிதா.
நான் அதை உணர்கிறேன்”
“சரி தருண், நமக்கு
இப்ப நேரம் ஆகுது. பிறகு சந்திப்போம்” என்றாள் நிகிதா.
மதிய உணவை முடித்தவுடன்,
தருண் தன் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு மாலை வீடு திரும்பினான்.
அன்று இரவு, ‘நாம்
ஏன் அந்த எழுத்தாளருக்கு ஒரு பதில் கடிதம் எழுதக்கூடாது?’ என்று எண்ணியவன், உடனடியாக
ஒரு கடிதம் எழுதினான்.
அன்பு எழுத்தாளர் நண்பருக்கு வணக்கம்,
உங்கள் கடிதம் கிடைத்தது. நேரத்தை ஒதுக்கி, கதையைப் படித்து,
உங்கள் கருத்தைத் தெரிவித்ததற்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கதைகள் இலக்கிய நடையில் எழுதப்பட்டால்தான் சிறந்த சிறுகதையாகும்
என்ற கருத்தை நீங்கள் முன்வைத்திருக்கிறீர்கள். ஆனால், சிறுகதை என்றால் இப்படித்தான்
இருக்க வேண்டும், இந்த நடையில்தான் எழுத வேண்டும் என்று யாரும் வரையறைப்படுத்தவில்லை.
சாமானியனும் படிக்கும்படி எழுத வேண்டுமென்றால், முழு இலக்கியத் தரத்தில் மட்டுமே எழுத
வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாசிப்பவர் மனம் கோணாதவாறு, சொல்ல வேண்டியதைச் சொல்ல
முடிந்தால் அதுவே முக்கியம்.
உங்கள் கருத்து உங்களுடையது; அதை நான் மதிக்கிறேன். ஆனால்,
அதை நான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்கள் விரும்புவார்கள் என்பதற்காக எழுதுவதை விட,
மக்களுக்கு அது அவசியம் என்பதை உணர்ந்து, அதை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற
நோக்கத்துடன்தான் நான் எழுதுகிறேன். நல்லதைச் சொல்ல வேண்டும்; படிப்பவரின் முகம் சுளிக்காதவாறு
சொல்ல வேண்டும். அவ்வளவுதான்.
நன்றி.
– தருண்
கடிதம் எழுதினானே
தவிர, அதை அடுத்த நாள் அஞ்சல் அலுவலகத்தில் சேர்க்காமல் தன் மேசை இழுப்பறையிலேயே வைத்துவிட்டான்.
ஏதோ உத்வேகத்தில்
எழுதுவது சரியாகாது என்று தோன்றியது. அன்று இரவு படுக்கைக்குச் சென்றவுடன் நினைவில்
ஓடியது அந்தக் கடிதமே.
‘நாம் பதில் எழுதிவிட்டோம்.
ஏன் எழுதினோம்? அவரது கருத்தைக் கண்டு வெகுண்டு, உடனே அவருக்கு ஒரு பதில் அனுப்பியாக
வேண்டும் என்று எண்ணியதால் எழுதியாகிவிட்டது. ஆனால், ஒருவருக்கு ஒருவர் தர்க்கம் செய்துகொண்டு,
போட்டி போட்டுக்கொண்டு கடிதம் எழுதி என்ன சாதிக்கப் போகிறோம்?’
அந்த எண்ணம் தருணை
அமைதியாக இருக்க வைத்தது. நிகிதா சொன்னதும் நினைவிற்கு வந்தது.
ஒரு படைப்பு தேர்வாகி
பத்திரிகையில் பிரசுரம் ஆகிறது என்றால், அந்தப் படைப்பில் ஏதோ ஒன்று புதைந்திருப்பதால்தான்.
நல்ல கருத்துக்கு விவாதம் செய்யலாம். ஆனால், முடிவில்லாத ஒன்றுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க
முயல்வது சரியா?
அவர் அவர் வழியில்
நடைபோடட்டும். நாம் நம் வழியில் நடப்போம். இவ்வாறு எண்ணியவாறு ஜன்னல் வழியாக வெளியே
பார்த்த தருணுக்கு, எதிரே இருந்த கட்டிடத்தின் சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஒரு விளம்பரப்
பலகை அவன் கண்களில் பட்டது. பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது:
“இது பரந்துபட்ட உலகம்”
அந்த வாசகத்தைப் பார்த்தவுடன்
அவனது மனதில் ஒரு எண்ணம் மேலோங்கியது.
‘நாம் ஏன் ஒரு குறுகிய
வட்டத்திற்குள் மாட்டிக்கொள்ள வேண்டும்? பறவையைப் போல பறந்து செல்வோம்—அந்தப் பரந்துபட்ட
உலகில்!’
அந்த இரவு, அவன் மனதிற்குள்
பூட்டியிருந்த கதவு மெதுவாகத் திறந்தது. தொலைந்த சாவி கிடைத்திருந்தது.


