எனக்கு 62 வயது ஆகின்றதாம். பேசிக் கொண்டிருக்கின்றார்கள். 62 வயது ஆகிடுச்சா எனக்கு, அதுக்குள்ள?
சமீபகாலமாக வராதவவங்க எல்லாம் வந்திருந்தாங்க. எல்லாம் எஜமானி அம்மாவின் சந்ததிங்கதான்.
என்னென்னவோ நினைவுகள் வரிசைகட்டி வருது. என் எஜமானியம்மாவும் அவங்க கணவர் ஐயாவும் அப்ப சின்னவங்க. என்னை எஜமானியம்மாவோட அப்பாதான் பாத்து பாத்து செதுக்கின்னாரு.
அவங்க மூத்த மகள் கல்யாணம் இப்பதான் நடந்தது போல் இருக்கு. கொள்ளுப் பேரனே பொறந்தாச்சு. பெரிசா பந்தல் போட்டு அமர்க்களமா நடந்துச்சு. இப்பலாம் அப்படி நடக்குமா?
அதுக்குப் பிறகும் நல்ல நிகழ்வுகள் பல, துக்கம் சில நடந்திருந்தாலும், எனக்குப் பல நல்லதுதான் நினைவுக்கு வருது. அப்படி ஒரு நல்ல அதிர்வு எனக்குக் கிடைச்சிருந்துச்சு.
எஜாமானியம்மா, ஐயாவோட மகளுங்க, மகனுங்க கல்யாணம், புதுவரவுங்க, சீமந்தம், குழந்தைங்க, அதுங்க பிறந்தநாள் அது இதுன்னு எப்பவும் ஏதாச்சும் நடக்கும். நானும் குஷியா இருப்பேன், இளமையா பொலிவோடு.
ஒவ்வொரு பண்டிகைக்கும், வெளியூர்ல இருந்த பசங்க, குழந்தைங்க குடும்பத்தோட வந்துடுவாங்க. வீட்டுல இருக்கறவங்களும் எல்லாரும் சேர்ந்துதான் தீபாவளி, பொங்கல்னு கொண்டாடுவாங்க. நான் அமர்க்களமா இருப்பேன். அப்பப்ப எனக்கும் பூசிவிடுவாங்கல்லா!
பண்டிகை மட்டுமா? கோடை விடுமுறையிலயும் வெளியூர்க் குழந்தைங்க வந்துடும். இங்க இருக்க குழந்தைங்க, உள்ளூர் மகன் மக, குழந்தைகளும் சேர்ந்துக்கும்.
என்னைச் சுத்தி மாமரம், வேப்பமரம், தென்னை மரம், கொய்யா, சப்போட்டா, மாதுளை, வாழை, நெல்லி, அடுக்கு மல்லி, மல்லி, கனகாம்பரம், செம்பருத்தி, மஞ்சள், இஞ்சி, கறிவேப்பிலை, எலுமிச்சை, பவழமல்லி, தித்திப்பூ, பன்னீர்பூ, மருதாணி… கிணத்துல வத்தாத தண்ணி, இப்பவும் கூட கிணறு தண்ணி இருக்கு… சேந்துவார்தான் இல்லை. போதுமா? பொறாமையா இருக்கா? இப்படித்தான் என் மேல திருஷ்டி விழுந்து போச்சு.
குழந்தைங்க என்னைத் சுத்தி, தோட்டத்தைச் சுத்தி ஓடியாடி விளையாடும். கிணத்தை ஆச்சரியமா எட்டிப்பாக்கும்.
மரங்கள்ல ஏறி விளையாடும். ஜூஸ் எல்லாம் எடுத்துக் குடிச்சுட்டு பாட்டில்ல தண்ணிய ரொப்பி வைச்சுடும். ஓடி ஒளிஞ்சு விளையாடறோம்னு தலையணைகள், மெத்தைகள், போர்வைகள் எல்லாம் கலைச்சு விடறதும், வாசல்ல இலைகள், மண், தீப்பெட்டி, விளையாட்டுச் சாமான் எல்லாம் பரப்பி அதகளப்படும். தாத்தாவுடன் சீட்டு விளையாட்டும், கேரம் போர்டும் கூச்சலும் கும்மாளுமுமா இருக்கும்.
அதுங்களோட, சேட்டைகளைப் பெரியவங்க சமாளிக்கறதும், கண்டிக்கறதும், சிரிப்பும், கும்மாளமும்னு பொழுது போறதே தெரியாது. எப்பவும் கலகலப்பாவே இருக்கும். எனக்கும் மிகவும் மகிழ்வாக இருக்கும். குழந்தைகள் அனைவரும் ஒரே குடும்பம் போலத்தான் இருந்தார்கள். எல்லோரும் கிளம்பியதும் எனக்கும் வெறிச்சென்று இருக்கும். களை இழப்பேன்.
எல்லா குடும்பங்களிலும் இருப்பது போல, மாமியார், மருமகள்கள், மகன்கள் குடும்பத்திற்கிடையில் சின்னச் சின்ன சண்டை உண்டுதான். யார் வீட்டிலதான் இல்லை சொல்லுங்க?
அவ்வப்போது ஏதாச்சும் வந்தாலும் எல்லோரும் பிள்ளைங்களால சந்தோஷமாதான் இருந்தாங்க. வருவோரும், போவோரும்ன்னு.
நவராத்திரி கொலுவே திருவிழா போல நடக்கும். பெரிய கோலம் போட்டு, பொங்கல்னா கலர் கோலம் எல்லாம் போடுவாங்க. நான் ஜொலிப்பேன். அலங்காரத்துடன் மிக அழகாக இருப்பேன். எல்லோரும் என்னை அப்படி ரசிப்பார்கள். வாஞ்சையுடன் இருப்பார்கள். இப்படி இருந்தால் கண் பட்டுவிடும் போல. அவங்களுக்குள்ள சுத்திப் போட்டுக்குவாங்க. எனக்கும் சுத்திப் போட்டிருக்கலாம்ல?
குழந்தைகளும் வளர்ந்தாங்க. பெரிய வகுப்புகளுக்குப் போனாங்க. படிப்பு அது இதுன்னு, மகன்களும் வேலை மாறி, ஊர் மாறி, பதவி அது இதுன்னு கூடுவது குறைஞ்சுச்சு. ஆனாலும் பெரிசா குழப்பங்கள் ஏதும் இல்லாம்தான் இருந்துச்சு.
தனித் தனிக் குடும்பங்களா இருந்ததாலயோ என்னமோ, எல்லாரோட சிந்தனைகளும், பழக்கவழக்கங்களும், அவங்கவங்க இருந்த ஊரு அனுபவம்னுட்டு சூழலுக்கு ஏற்ப மாறிப் போச்சு. குழந்தைகளும் வளர வளர மாறிடிச்சுங்க.
வருஷம் போகப் போக வீட்டு நிகழ்வுகள்ல பெரியவங்களுக்குள்ள மனஸ்தாபங்கள் வரத் தொடங்கிருச்சு.
4, 5 வருஷம் இருக்கும்….எஜமானியம்மாவோட ஒரு மகன் திடீர்னு போய்ட்டாரு. மெதுவா பிரச்சனைகள் தலை தூக்கிச்சு. அப்பதான் எனக்குத் தெரிஞ்சுச்சு, இவங்க மனசுல இத்தனை வருஷம் எரிமலை போல இருந்த எண்ணங்கள் குழம்பா வெளிவரத் தொடங்குதுன்னு.
“வீட்டை பங்கு போடணும்“
“அதெப்படி முடியும்? அம்மா, அப்பா காலத்துக்குப் பிறகுதான் அது…”
“ரியலெஸ்டேட்காரங்ககிட்ட சொன்னா ஃப்ளாட் போட்டுக் கொடுத்துடுவாங்கல்ல. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரு ஃப்ளாட்ல வைச்சு பார்த்துக்கிடலாம்ல“
“யாரு?”
எல்லாரும் அமைதியானாங்க. இங்க ஒரு மகனைத் தவிர எல்லாரும் அங்கங்கலா இருக்காங்க. என் மனதிற்குள் பயம் வந்தது.
“தங்கம், வெள்ளி எல்லாம் பிரிச்சிடலாம். அந்தப் பொண்ணுக்கும் பாகம் கொடுக்கணும்ல? வயசான கிழவிக்கு இன்னும் காதுல, மூக்குல, கழுத்துல இத்தனை நகை எதுக்கு? பிரிச்சுக் கொடுக்கலாம்ல?”
இறந்து போன மகனின் சம்சாரத்தை மையமா வைச்சு மத்தவங்களும் தங்க பங்கைப் பேசத் தொடங்கினாங்க.
“பெம்பிளைப் பிள்ளைங்க இருக்க குடும்பத்துக்குத்தான் நகை நட்டு எல்லாம்“
விவாதிச்சாங்க. ஒருத்தரை ஒருத்தர் குத்தம் சொல்லிச் சாடினாங்க.
இன்னொரு மகன் குடும்பத்துல பிரிவினை வர, குடும்பங்களுக்குள்ள ஆளாளுக்குப் பேச. இடைவெளி வந்திடுச்சு. பிரிய நினைச்ச அந்தப் பெண் குட்டையில கல்லை எறிஞ்சுட்டுப் போய்ட்டா.
எதிரிக்கு எதிரி நண்பன்ற சொல்லுப்படி, எதிரும் புதிருமா பிரிஞ்சாங்க குடும்பத்துக்காரங்க. எஜமானியம்மாவை எல்லாரும் திட்டினாங்க. சரியா பிள்ளைங்களுக்குள்ள ஒத்துமைய வளக்கலைன்னு.
இதுக்கிடையில ஐயா கண்ணை மூடிட்டாரு. எரிமலை மாதிரி உள்ளார இருந்த பிரச்சனைகள் வெளிய வந்து வெடிக்கத் தொடங்கிச்சு. குடும்பங்களுக்குள்ள இடைவெளி கூடிப் போச்சு.
எல்லாத்தையும் பார்த்துட்டு நான் செவனேன்னு இருக்கதானே முடியும்? என் எஜமானியம்மாவுக்குச் சதம் அடிக்க இன்னும் 10 வருஷம் இருக்கு. யாரு பாத்துக்கிடுவான்னு எனக்குக் குழப்பம்.
இந்தப் பங்குப் பிரிப்பில் எல்லாம் சேராத மருமகளை எஜமானியம்மா கூப்பிட்டாங்க.
“நீ பல வருஷத்துக்கு முன்ன, எதிர்காலத்தில இந்தக் குடும்பத்துல பிரிவினை வரும். வராம இருக்க என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்க, கடவுள்கிட்ட வேண்டிக்கங்கன்னு சொன்னியே அது இப்ப நடக்குதே. எப்படிக் கணிச்ச?”
“இது ஒன்னும் பிரம்ம சூத்திரம் இல்ல. மனித மனங்கள், எண்ணங்கள் வெளிய வரப்ப அதை படிக்கத் தெரிஞ்சா போதும்.”
இது இப்பதான் எனக்குத் தெரியவருது அப்பவே தெரிஞ்சிருந்தா மட்டும் நான் என்னத்த செய்ய முடியும்? என் எஜமானியம்மா ராணி போல கம்பீரமா எல்லாரும் அவங்க சொல்றதத்தான் செஞ்ச காலம் அது.
என் ஐயா உயிரோடு இருந்தப்ப அவங்களைப் பார்த்துக்க மாட்டோம்னு சொன்னவங்க ஐயா போன பிறகும் எஜமானியம்மாவைப் பார்த்துக்க விருப்பம் இல்லாதவங்க இதுவரை வராதவங்கதான் இப்ப வந்திருக்காங்க.
எஜமானியம்மாவோட பொருட்களைப் பிரிச்சுக்கிட்டாங்க. ஐயாவோட பணத்தையும் பிரிச்சுக்கிட்டாங்க. என் எஜமானியம்மா பேச்சற்று பரப்பிரம்மம் போல பார்த்துக்கிட்டிருந்தாங்க.
அடுத்து என்னைப் பத்திப் பேசினாங்க.
ஒரு மகனும், கணித்துச் சொன்ன மருமகளின் குடும்பமும் மட்டும் இதுலருந்து தங்களை விலக்கிக்கிட்டாங்க. எதுவும் வேண்டாம்ன்னுட்டு.
பொலிவிழந்து, களையிழந்து மயான அமைதி மாதிரி யாருமில்லாமல் அனாதையா இருக்கும் என் மரணம் இதோ நெருங்கிடுச்சு. நல்ல நினைவுகளை அசைபோட்டுக்கிட்டிருக்கேன். என் மீது அவங்களுக்கு வாஞ்சை அல்ல. என்னால் வரும் பணம்தான் முக்கியம்னு புரிஞ்சு போச்சு. எனக்கும் உணர்வுகள் உண்டுன்னு அவங்களுக்கு ஏனோ புரியலை. என்னால சொல்ல முடியுமா?
எல்லோரும் போன பிறகு, என் எஜமானியம்மா மெதுவாகக் கேட்டாங்க.
“எல்லாரும் எல்லாத்தையும் எடுத்துட்டுப் போறாங்களே. இந்த வீட்டையும் வித்துடுவாங்களோ? அப்ப யார் என்னைப் பார்த்துக்குவாங்க? அதைப் பத்தி யாரும் பேசலையே”
என் எஜமானியம்மாவையும், அவங்க குடும்பத்தையும் காத்து வந்த, இப்ப எனது ‘மதிப்பால்‘ காக்கப்போகும் வீடு நான் அமைதியா காத்திருக்கேன். என் மேல் இறங்கப் போகும் புல்டோசரின் கரங்களை எதிர்நோக்கி.


