காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய “இம்மைத் துறக்கம் எழில் மிகு துபை” நூல் வெளியீட்டிற்குப் பிறகு, அவர் நமக்குத் தந்த பேட்டி.
காப்பியக்கோ ஜின்னாஹ் ஷெரிபுத்தீன்
பள்ளிச் சிறுவனாக இருந்த போது, எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்று விரும்பினீர்கள்?
சிறு வயதில் மருத்துவனாக வேடமிட்டு மற்றவர்களை பரீட்சித்து சிவப்பு ”க்ரேப்” தாள்களைத் தண்ணீரில் கரைத்து மருந்தாகவும், குன்றி மணிகளை வில்லைகளாகவும் பாவித்து மருந்து கொடுப்பேனாம் அதுவே நிஜமாகிப் போயிற்று. இப்போது எனதுவாரிசாக எனது பேரன் மருத்துவம் படிக்கின்றார்.
உங்கள் பெற்றோர் ,உடன் பிறந்தவர்கள் பற்றி சொல்லுங்கள்.
புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் எனது தந்தையார் ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி பின்னர்பாடசாலைக் கல்வியதிகாரியாக ஓய்வு பெற்றார். புகழ்பெற்ற புலவர் பன்னூலாசிரியர். தாயார் குடும்பப்பெண் எங்கள் குடும்பம் பெரிது.நான்கு சகோதரர்கள். ஒன்பது சகோதரிகள்
நீங்க அப்பா செல்லமா? அம்மா செல்லமா? யார் அதிகமாக கண்டிப்பார்கள்?
நான் கண்டிப்பாரற்ற சுதந்திரப் பறவை. யாருக்கும் செல்லம் கிடையாது. சுருங்கச் சொன்னால். ஒரு ”அடங்காப் பிடாரி”.
மருத்துவராக முதல் பணி எங்கே? எப்போது?
படிப்பும் பயிற்சியும் முடிந்ததும், தலைநகரை அண்டிய புறநகர் பகுதியில். தனித்துவமாக.
மலைக்கிராம மனிதர்களுக்கு செய்த மருத்துவ சேவை தந்த மனநிறைவு என்ன? எதும் மறக்க முடியாத அனுபவங்கள் உண்டா?
மலைக்கிராமமல்ல. மலையும் உள்ள கிராமம். ஆசிரியத் தொழிலும், மருத்துவத் தொழிலும் முழுமையான மனநிறைவைத் தரும் தொழில்கள். நான் என் தொழிலில் முழு மனநிறைவு பெற்றபின்னர்தான் இருதய சத்திர சிகிச்சையின்பின் அதிலிருந்து ஓய்வு பெற்றேன். என் கரங்களால் பிரசவங் கண்டவர்கள் பலர். சிறப்பான வாழ்வதைக் கண்டுள்ளேன். உவமைக்கொன்று. ஒருவர் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர். மறக்கமுடியாத ஆனுபவங்கள் எண்ணிலடங்கா. நினைக்கும்போது அவையே எனக்கு ஆத்ம திருப்தியை இன்றுந் தருகின்றன.
மருத்துவர் ஜின்னாஹ், எழுத்தாளராக காப்பியக்கோவாக மாறியது எவ்வாறு?
தந்தை புலவர்மணியிடம் இருந்தே தமிழ் கற்றேன் இளமையிலிருந்தே தந்தையின் வற்புறுத்தலால் இடைக்காலப் புலவர்களின் கவிதைகளை அக்காவோடும், அண்ணனோடும் மனனம் செய்ததோடு, எனது சிறிய தந்தையிடமிருந்து இராமாயணத்தின் இரண்டு காண்டங்களில் பரிட்சயமானேன். இளமைக்காலத்தில் பள்ளிப் படிப்போடு வாசிப்பும் கைவந்தது. கல்கியும், அகிலனும், சாண்டில்யனும், பார்த்தசாரதியும், மு.வ. வும் எனக்குத் தமிழ்ப்பாலூட்டினர். அதற்கு முன்னர் பி.எஸ்.ஆர், தமிழ்வாணன், சிரஞ்சீவி போன்றோரின் துப்பறியும் நாவல்கள். ஆரம்பப் படிகள்.
பின்னர் உள்ளுறைந்துகிடந்த தமிழுணர்வு கவிதையில் காலூன்ற வைத்தது. தந்தையார் தந்த ஊக்கமும், பத்திரிகை ஆசான் ஐயா. எஸ்.டி.சிவநாயகம் அவர்களின் அரவணைப்பும் என்னை கவிஞனாக சமைத்தெடுத்தன. அதன்பின் எனது வழிகாட்டியான ஐயா எஸ்.டி.சிவநாயகம் போன்ற பலரது தூண்டுதல்கள், சிறப்பாய் இந்திய அறிஞர்கள் தந்த உற்சாகங்கள் என்னை காவியங்கள் பாடவைத்தன. காப்பியக்கோவாக்கியதும். அந்தப் பட்டம் வழங்கியதும். உங்களவர்கள்தாம்.
35 நூல்கள் 16 காவியங்கள் படைத்த நீங்கள் இன்றைய எழுத்தாளர்களுக்கு சொல்லும் சேதி என்ன?
தமிழைத் தலைதாங்க இன்றைய படைப்பாளிகள் அனைவரும் நிறையவே நூல்களைத் தேர்ந்து வாசிக்க வேண்டும். கவிஞராக வரவிரும்புபவர்கள் கவிதை யாப்பினை ஓரளவேனும் கற்று பரிட்சயமாக வேண்டும். மொழி வாலாயமின்றி படைப்பிலக்கியம் செய்யமுயல்வது.”கல்லில் நாருரிப்பதொக்கும். கல்லாதான் கவிசெய்வதும் அவ்வாறேதான்.
வாசிப்பு என்பது எழுத்தாளர்க்கு எந்த அளவுக்கு முக்கியம்? முக்கியமா?
வாசிப்பே ஒருவரை முழுமனிதனாக்குகின்றது. இது எல்லோருக்கும் பொருந்தும். என்னை உருவாக்கியது எனது வாசிப்புத்தான்.
எழுதுவதற்கு என்ன பயிற்சி செய்யலாம்?
தமிழறிஞரிடம் ஆக்கங்களைத் தந்து திருத்தம் பெற வேண்டும். மீண்டும்மீண்டும் ஓய்வில்லாமல் படைப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
சமுதாயத்தில் எழுத்தாளரின் பங்கு என்ன?
சமுதாயத்தை வழிநடத்துவதில் எழுத்தாளனின் பங்கு அளப்பரியது. உவமைக்குச் சொல்வாதாயின். வள்ளுவனின் குறளே இன்றும் மக்களை வழிநடாத்துவதில் பங்களிப்பதை நாமறிவோம்
உங்கள் குடும்பம் பற்றி கூறுங்கள்.
மனைவி, ஆண் மக்கள் மூவர். பெண்மகள் ஒருவர். பேரர்கள் பதின்மூன்று.
தற்போது ஏதேனும் படைப்பு எழுதிக்கொண்டிருக்கிறீர்களா?
ஆயிரம் குறட்பாக்கள் எழுதிக் கொண்டுள்ளேன்.
அடுத்து வரும் காலங்களில், எப்படியானவராக நினைவு கூரப்பட விரும்புகிறீர்கள்
ஒரு நல்ல மனிதனாக


