நந்தனின் நாலு கட்டு வீடு
தொகுப்பு: WriterSCafe – எழுத்தாளர் சங்கமம்
WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் நடத்திய உலகளாவிய சிறுகதை போட்டியில் பங்கு பெற்று, நடுவர்களால் பரிசுக்குரிய கதைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து கதைகள் ‘நந்தனின் நாலு கட்டு வீடு’ என்ற சிறுகதை தொகுப்பாக வெளிவந்துள்ளது.. கதைகள் மாறுபட்ட கோணங்களில், வித்தியாசமான கருப்பொருட்களை மையப்படுத்தி எழுதப்பட்டவை.
www.pustaka.co.in பதிப்பித்த இந்தப் புத்தகத்தை மின்புத்தகம் மற்றும் காகித புத்தகமாக வாங்கி படிக்கலாம்.
சிறுகதைகளை பற்றிய என்னுடைய பார்வை;
ஈரம் – முதல் பரிசு பெறும் சிறுகதை – எழுதியவர் – திரு அறிவு செல்வன்
கட்டிடம் வேலை நடக்கிறது. தொழிலாளிகளின் சிரமங்களை உணர்ந்து அவற்றை போக்கும் வகையில் வீடு கட்டுபவர் காட்டும் கருணை பற்றிய கதை. மனதை நெகிழவைக்கும் நடையில் எழுதப்பட்ட கதை
கோழிக்கூத்து – இரண்டாம் பரிசு பெறும் கதை – எழுதியவர் – திருமதி ரா.சண்முகவள்ளி
வேலையில்லாமல் சிரமப்படும் ஒரு கூத்து கலைஞனின் கதை. கணவன் மனைவிக்கு இடையில் நடைபெறும் சம்பாஷணைகள் மற்றும் கிராமத்து வசனங்கள். நேரில் பார்ப்பது போன்று எழுதியது எழுத்தாளரின் திறமை. மனம் கவர்ந்த கதை
ஊன்றுகோல் – மூன்றாம் பரிசு பெறும் சிறுகதை – எழுதியவர் – திருமதி மஞ்சுளா ஸ்வாமிநாதன்
குழந்தை Special Child என்று வரும்போது அதன் பெற்றோர் மனதளவில் படும் பாட்டை சொல்லும் சிறந்த கதை. கதையின் பயணம் அற்புதம்
சவக்காரம் – ஆறுதல் பரிசு பெறும் சிறுகதை – எழுதியவர் – திரு சந்துரு மாணிக்கவாசகம்
திருநம்பிகள் என்ன தான் உழைத்து வாழ முயற்சி செய்தாலும், சமூகத்தில் பல வகையில் ஓரம்கட்டப்படுகிறார்கள் என்பது பற்றிய கதை. சிறந்த கதை மற்றும் நடை
அன்புள்ள அக்கா – ஆறுதல் பரிசு பெறும் சிறுகதை – எழுதியவர் – திரு கு உதயசூரியன்
சிரமப்பட்டாலும், தன்னை நம்பி வாழும் வயதில் சிறிய தம்பி தங்கைகளுக்காக சிரமப்படும் ஒரு அக்காவின் கதை..
மதுமதி – ஆறுதல் பரிசு பெறும் சிறுகதை –எழுதியவர் – திரு இந்திரநீலன் சுரேஷ்
சூழ்நிலை காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்ட தம்பதிகளின் பெண் வயது வந்த பின்னர் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள். மகளுடன் வாழும் அம்மா – தனியாக வாழும் அப்பா – இந்த வகையில் சமூகத்தில் வாழும் பெண்களின் மன வேதனையை மௌனமாக வெளிப்படுத்தும் கதை. அருமையான நடை மற்றும் வசனங்கள்.
கிராண்ட்மா – ஆறுதல் பரிசு பெறும் சிறுகதை – எழுதியவர் – திருமதி சுதா திருநாராயணன்
இந்தியாவில் வசிக்கிறார் பாட்டி. வெளி நாட்டில் வசிக்கும் மகன், மருமகள் மற்றும் பேத்தி இந்தியாவிற்கு வருகிறார்கள். பேத்தியுடன் இறுதி காலத்தில் வாழவேண்டும் என்று நினைக்கும் பாட்டியின் விருப்பத்தை உணர்ந்து நிறைவேற்றி வைக்கிறார் பெயர்த்தி. இன்றைய காலத்திற்கு தேவையான சிறுகதை.
கானல் நீர் – ஆறுதல் பரிசு பெறும் சிறுகதை –எழுதியவர் – திருமதி உஷா சிவமணி
குழந்தைகள் வெளிநாடுகளில் வேலை பார்ப்பதை பற்றி பெருமை பேசிய காலம் முடிந்து குடும்பத்தாருடன் வாழும் வாழ்க்கையை எதிர்பார்க்கும் முதியவர்களை பற்றிய ஒரு கதை
கரி எஞ்சின் – ஆறுதல் பரிசு பெறும் சிறுகதை – எழுதியவர் – திரு வி. கே. சங்கர்
செய்யும் தொழிலே தெய்வம் என்று கருதி கரி எஞ்சினோடு வாழ்ந்து ஓய்வு பெற்று மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவர் மனநிலையறிந்து அவருக்கு எஞ்சினின் மாடலை தந்து சுகமான மரணத்தை ஏற்றுக்கொள்ள உதவும் மகனை பற்றிய ஒரு சிறுகதை. எளிமையான நடை.
வேண்டுதல் – ஆறுதல் பரிசு பெறும் சிறுகதை – எழுதியவர் – விஜி ரவி
ஆசையோடு சிறிய ஆட்டுக்குட்டியை வளர்க்கிறாள் ஒரு சிறு பெண். ஆட்டுக்குட்டி கோவிலுக்கு தரப்பட குழந்தையின் மனம் வாடுகிறது. குழந்தையின் மன வலியை பற்றி சொல்லும் கதை. அருமையான நடை மற்றும் மனதை ஈர்க்கும் கதை.
மனசே மனசே – ஆறுதல் பரிசு பெறும் சிறுகதை – எழுதியவர் – திருமதி லலிதா சங்கர்
ஏற்கனவே பெண் குழந்தையுடன் தனியாக வாழும் பெண் தனக்கு விருப்பமான ஒருவருடன் திருமணம் செய்து கொள்ளுகிறாள். மாமியார் மருமகளுக்கு குழந்தை உண்டு என்பதை சொல்ல மறுக்கும் நிலையில் மருமகள் மாமியாரை உண்மையை பகிரங்கமாக மற்றவர்களிடம் சொல்ல வைக்கும் சிறுகதை. நல்ல நடை.
மெழுகு மனது – ஆறுதல் பரிசு பெறும் சிறுகதை – எழுதியவர் – திரு விஜயகுமார் ஜெயராமன்
வயதான ஒரு பாட்டி துடைப்பம் விற்று நேர்மையாக ஜீவனம் நடத்துகிறாள். ஆரம்பத்தில் அவளை உதாசீனம் செய்யும் வாலிபன், சிரமப்பட்டு வாழும் நிலையிலும் நேர்மையாக வாழ்ந்து பாட்டி மரணம் அடைவதை அறிந்து எப்படி மனம் பதைக்கிறான் என்பது பற்றிய கதை. இன்றைய இளம் வயதினருக்கான சிறுகதை.
மாமரத்தின் அடியில் – ஆறுதல் பரிசு பெறும் சிறுகதை – எழுதியவர் – திரு ஏ.வி.ராஜகோபாலன்
90 வயதான ஒரு பெரியவர் அபார்ட்மெண்ட் வளாகத்தில் இருக்கும் ஒரு மாமரத்திற்காக வாதாடும் கதை. ஆனால் அதற்கு பின்னால் வளைய வரும் ஒரு சோக கதை.
நந்தனின் நாலு கட்டு வீடு – ஆறுதல் பரிசு பெறும் சிறுகதை – எழுதியவர் – குமரி உத்ரா
பல வருடங்கள் கழிந்து வெளிநாட்டில் இருந்து தன்னுடைய சொந்த கிராமத்திற்கு வரும் இளைஞன் தனது கிராமத்து வீட்டை பகுதி பகுதியாக நோட்டம் விடுகிறான். நினைவுகள் பின்னோக்கி சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கின்றன. நினைவோட்டங்களை பிசிறு இல்லாமல் தந்து இருக்கிறார் எழுத்தாளர். அருமையான நடை. .
பல்லக்கு தூக்கி – ஆறுதல் பரிசு பெறும் சிறுகதை – எழுதியவர் – சுசி கிருஷ்ணமூர்த்தி
ஒரு பெண் என்றுமே ஒரு பல்லக்குத் தூக்கியாக இருக்கத்தான் விரும்புகிறாள். அவள் இல்லாவிட்டால் அந்த பல்லக்கு நகராது என்ற நம்பிக்கைதான் அவளை நலமுடன் வாழ வைக்கிறது. முற்றிலும் உண்மை.


