மீசைக்காரர் பங்களா
– பிரியா ரஞ்சன்,
மதுரை
காலையிலிருந்து அழுதுக்கொண்டிருக்கும் குழந்தையை சமாதானம் செய்ய
முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் சரோஜா.
“இன்னாமே கொயிந்த
வீச்சு வீச்சுனுக்கீது எதுனா துண்ணுச்சா இல்லியா…?” பக்கத்து வீட்டு கனகா கேக்க,
“அத்த ஏமே கேக்குற… ரெண்டு நாளா ஒரே ஜுரம்…. பெரியாசுப்பத்திரிக்கே இட்டுக்கினு
போய் பாத்தாச்சு… அந்த கிறுக்குப்பய டாடரு இன்னாத்த படிச்சானோ…. புள்ளைக்கு ஜுரம்
அமுங்கவே இல்லை…. பத்து கூட போட்டு பாத்தாச்சு…. இன்னா பண்றதுனே ஒன்னியும் புரிலமே….”
வருத்தத்தோடு சொன்னாள் சரோஜா
குழந்தையின் நெற்றியில்
கை வைத்துப்பார்த்த கனகா, “ஐயோ இன்னாமே இந்த ஜூடு ஜூடுது… தர்மாசுப்பத்திரிலா சரிவராதுமே
அங்க ஒன்னியும் பாக்கமாட்டானுங்க…. நீ பேசாம முக்கு தெருவாண்டகீர ஆசுப்பதிரி போமே…
அந்த டாடரு போன மாசோ எம்புள்ளைய சோக்கா பாத்தாருமே…”
“அதுக்கெல்லாம் என்னான்ட
பணம் எங்ககீது கனகா… புள்ளய ஒரு ஆசுபத்திரிக்கி கூட இட்டுக்கினு போ முடியல என்னால…”
கண்ணை கசக்கிகொண்டாள் கணவனை இழந்து தனி ஆளாய் எட்டு மாத குழந்தையை வளர்க்கும் சரோஜா.
கண் கலங்கிய சரோஜாவை
பார்த்து மனது தாளாமல், “இந்தாமே சரோசா நா ஒன்னு சொன்னா கேப்பியா..?” என்றாள் கனகா.
இன்னாமே… என்ற சரோஜாவிடம்
“அந்த பங்களா மீசைக்காரு இருக்காருல” என்று ஆரம்பித்து அவள் காதில் கனகா
ஏதோ கிசுகிசுத்தாள்.
“நீ சரினு சொன்னா
நா கருப்பையாவ வந்து இட்டுக்கினு போ சொல்றேன்… ஒரு மணி நேரம் தான்… வரும்போது புள்ளிய
ஆசுப்பத்திரில காட்டிரலாம் கை மேல காசு வந்துருமே…”
அவள் சொன்னது புரிந்த
சரோஜா துக்கம் தாங்காமல் மேலும் அழுக, “யோசிக்காதமே… புள்ள விஷயம்…”
“இல்ல கனகா…. இத்த
செய்ய என் மனசு கேக்கல… மாடி வீட்டு ஆயாவாண்ட கேட்டு பாத்துக்கினு வாரேன்… நீ புள்ளய
பாத்துக்கோ…”
மாடி வீடு மட்டும்
இல்லாமல் சுத்தி பணம் படைச்ச எல்லாரிடமும் கேட்டுவிட்டாள் சரோஜா. ஏற்கனவே குடித்துவிட்டு
அனைத்து உறுப்புகளும் பழுதான அவள் கணவனைக் காப்பாற்ற அவள் வாங்கிய கடன்கள் கட்டாமல்
இருக்க, மேற்கொண்டு பணம் தர யாரும் முன் வரவில்லை என்பதே உண்மை.
கணவன் இறந்த பின்
பெரிய வீடுகளில் பாத்திரம் தேய்த்து கடனையும் கட்டி வயித்தையும் கழுவி கொண்டிருந்தாள்….
இதில் குழந்தை வேறு. இந்த மாதிரி திடீர் எதிர்பாராத செலவுகள் தான் அவளுக்கு மிகுந்த
கஷ்டத்தை தருவதாய் அமைந்து விடுகின்றன. விரக்தியுடன் வீடு வந்து சேர்ந்தாள்.
“இன்னாச்சுமே…”
ஆவலாய் கேட்ட கனகாவை வெறுத்த முகத்துடன் பார்த்தாள் சரோஜா.
“பாவம் கொயிந்த அழுதுகினேகீதுமே”
என்ற கனகாவைப் பார்த்து மிகுந்த யோசனையுடன் திணறித்திணறி தலையை தொங்கவிட்ட படி…”கருப்பையாவ
வந்து இட்டுக்கினு போவ சொல்லு கனகா” என்றாள் சரோஜா.
“இதுக்கு இன்னாதுக்கு
நீ இப்ப மூஞ்ச தொங்கவிட்டுக்கின்னுகீற ஒன்னியும் கவலப்படாத புள்ளிய கொணமாக்கிப்புடலாம்…
இரு அவனக் கூட்டியாறே…” என்றபடி அங்கிருந்து சென்றாள் கனகா.
அவள் மீண்டும் கருப்பையாவுடன்
வரும்பொழுது தன் கணவன் புகைப்படம் பார்த்து ஏதேதோ புலம்பிக்கொண்டிருந்தாள் சரோஜா.
“இந்தாய்யா வேல முடிஞ்சா
போதும்னு வந்துறாத… புள்ளைய ஆசுப்பத்திரிக்கு இட்டுக்கினு போகணும்.”
“இந்த கருப்பையாவ
யாருனு நினைச்ச… அதெல்லாம் தொழில் சுத்தமா இருப்பேன்… மீசக்காரரு பங்களாக்குள்ள சரோஜா
போய்ட்டு வார வரைக்கும் நானே புள்ளைய பாத்துக்கிறேன்… வந்ததும் ஆசுபத்திரிக்கு கூட்டிக்கினு
போயிட்டு மறுக்கா இங்கயே இட்டாந்து வுட்ருறேன்… சரிதானமே..” கருப்பையா கூற…. “சரிதான்…”
என அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு, சரோஜாவைப் பார்த்து “சரி நீ பாத்து போய்ட்டு வாமே”
என்றாள் கனகா.
கண்ணீருடனும் குழந்தையுடனும்
சரோஜா, கருப்பையா சைக்கிளில் அமர, கருப்பையா பங்களா மீசைக்காரர் வீட்டை நோக்கி பெடலை
மிதித்தான்.
சரோஜாவின் எண்ணம்
மாறலாம்; கருப்பையா பிள்ளையின் மருத்துவச் செலவுக்குப் பணம் கொடுத்து சரோஜாவின் முடிவை
மாற்றலாம்; சரோஜாவின் நிலை அறிந்து மீசைக்காரர் கூட மனம் மாறி மருத்துவத்துக்கு உதவலாம்.
இதில் எதுவும் நடக்கலாம்… அது காலத்தின் கையில்.


