எதாவது ஒரு பாடல் அல்லது இசைத்துணுக்கு, அதையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் எத்தனையோ எத்தனையோ பேர்… ஏன் இப்படி இருக்கிறீர்கள் சலிக்காதா? என்று கேட்டீர்களேயானால், அவர்களிடம் நேரடியான பதில் இருக்காது… “பிடிக்கும்” என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் பதிலாகத் தந்து விட்டு மீண்டும் அதே இசையைக் கேட்கப் போய் விடுவார்கள்… ஏனெனில் அந்த இசை அவர்களுக்குள் நிகழ்த்தியிருக்கும் விந்தையை, தளர்த்தியிருக்கும் அழுத்தங்களை ஆற்றியிருக்கும் ரணங்களை, பெருக்கியிருக்கும் மகிழ்ச்சியை சொற்களால் எப்படி விளக்கிச் சொல்ல முடியும்… மனதின் எல்லா உணர்வுகளையும் சரியான சொல் கொண்டு விளங்க வைக்க இன்னும் மொழியில் பஞ்சம்தான்… கேட்டா மனசு ஒரு மாதிரி ஆகிருதுங்க, திரும்பத் திரும்ப கேட்கணும் போல இருக்குனு வேணா சொல்ல முடியும். ஏனெனில் தின்னத் தின்னத் திகட்டாத தீஞ்சுவை இளையராஜா…
பயணங்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட்டத்தோடு பயணிக்கும் பயணிக்கு வேடிக்கைப் பார்க்கவும், வேறேதும் செய்யவும், பேசிச் சிரிக்கவும் இயலும்… ஆனால் தொடர்ந்து வண்டி ஓட்டுபவனுக்கு அடைய வேண்டிய இலக்கும், போக்குவரத்தில் கவனமும் மட்டுமே இருக்கும்… வண்டி ஓட்டுவதை ஒரு கட்டத்திற்குப் பிறகு உடல் தானாகச் செய்யத் தொடங்கிவிடும்… ஆனால் இந்த மனசு மட்டும் கட்டற்று எங்கெங்கோ சுற்றித் திரியும்… அன்றைய அந்த வேளையில் இருக்கும் மனநிலைக்கேற்ப பாடலை மாற்றிக் கொண்டு சுற்றும் போது எல்லா அலுப்பையும் இளையராஜா தளர்த்தி விடுவார்… ஆற்றல் தருவார்… துள்ளி ஆட வைப்பார்… தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருக்கலாம்.. இன்னும் சொல்லப்போனால் வண்டி ஓட்டும் வேகத்தைக் கையாள்வதே இளையராஜாதான்…
ஏன் இந்த இளையராஜாவை எப்போதும் உயர்த்திப் பிடிக்கிறீர்கள் என்றால் சொல்வதற்கு ஒவ்வொருவருக்கும் பல காரணங்கள் உண்டு. என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு மனிதனும் பல வேசம் போடுகிறான் இந்த வாழ்வில்… கருத்தாச் சொல்லணும்னா பல பொறுப்புகள் வகிக்கிறான்னும் சொல்லலாம்.. மகனாக அப்பாவா அண்ணனா தம்பியா கணவனா குடும்பத் தலைவனா நண்பனா இப்படி என்ன வேசம் போட்டாலும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருத்தரும் தனிமனிதனே…. அவன் எல்லாவற்றையும் முழுக்க முழுக்க எல்லாரிடத்திலும் சொல்லி விட முடியாது… என்னதான் நட்பும் உறவும் நெருக்கமாக இருந்தாலும்… எல்லாவற்றையும் எல்லாரிடத்திலும் பகிர்ந்து கொள்ள முடியாது… தன்மானம் தடுக்கும்,… அவமானத்தை வெளியே காட்டிக்கொள்ள முடியாது… நெருக்கமானவர்கள் என்று நாம் பகிர்ந்து கொண்டாலும், நெருக்கமில்லாத இன்னொரு நாளில் குத்திக் காட்டிவிடுவார்கள் என்ற அச்சம் கொஞ்சம் தயங்க வைக்கும்…
அப்படியானால் நாம் எதுவுமே சொல்லாமல், நம்மை எதுவுமே கேட்காமல் நமக்கு ஆறுதல் தருகிற ஒரு அணைப்பு வேண்டும்… அந்த அணைப்புதான் இளையராஜா… அந்தக் குட்டை மனிதன் கட்டியணைத்து ஆறுதல் தேறுதல் தருவது எத்தனையோ கோடித் தமிழர்களுக்கு நாள்தோறும்… ராஜாவின் இசைமட்டும் ஏன் ஈர்க்கிறது என்றால் அது நெற்றியில் முத்தமிட்டு இழுத்தணைக்கிறது… அது என் மொழியில் இருக்கிறது… என் பேச்சை என் குரலை என் மண்ணை இசையின் வழியாக என்னிடமே இனிமையாகத் தருகிறது… அங்கே என் தேடல்கள் எல்லாவற்றிற்கும் தீர்வு இருக்கிறது…
இளையராஜா என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை, குற்றச்சாட்டும் வைப்பதில்லை ஆனால் எனக்கான எல்லாவற்றிற்கும் பதில் மட்டும் தந்து எல்லாவற்றையும் இலகுவாக்கி விடுகிறார், தென்றல் போல…. தேவையான மகிழ்ச்சி, கொண்டாட்டம், புத்தாண்டு என எந்தவொரு இன்பமாக இருந்தாலும் இளையராஜாவைப் பிரித்தெடுக்க முடியாது… இவைகளோடு இரண்டறக் கலந்து நிற்கும் இயற்கை இளையராஜா…
காதல்… எல்லோருக்கும் ஒரு பாடல் இருக்கும்… கேட்கும் போதே கண் முன்னே அவரவர்க்கான காட்சிகள் விரியும்… பாடல் தொடங்கும் முன் உண்டாக்கி வந்திருக்கும் 10 நொடிகள் 30 நொடிகள் இசையிலேயே பட படனு மனச பரவசப்படுத்திருவார்… அப்புறம்தான் பாட்டே கேட்கப் போறோம்… அதற்குள்ளாகவே இருந்த இடத்திலிருந்து இறக்கை கட்டிப் பறக்க வைப்பது ராஜாவின் இசை… அப்போது சந்தனக் காற்றே என்றால் இப்போது சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது… அடடா இளையராஜா… எல்லாரையும் கிறுக்குப் பிடிக்க வைத்து விடுவார்… எல்லாருடைய வாழ்விலும் ஒவ்வொருவரும் கடந்து போகும் எல்லாவித உணர்வுகளுக்கும் பின்னனி இசை ராஜாவின் இசைதான்…
உயிர்வாழ தண்ணீர், காற்று முக்கியம் என்பது போல, ஓடிக்கொண்டிருக்கும் போட்டியான இந்த உலகில் மனசு தன்னிலை பெற்று வாழ இளையராஜா தேவை.. அவர் நம்மை மீட்டெடுக்கும் ஒரு பேராற்றல் , என்னென்னவோ ஆகி அன்றைய பொழுது சிக்குமுக்காகக் கிடந்தாலும், ஒரு பாட்டில் இரண்டு நொடி இசையில் எல்லாவற்றிலிலுமிருந்து நம்மை மீட்டுக் கொண்டு வந்து விடுவார்…. இளையராஜா ஒரு நல்ல நண்பன், எப்போதும் கூட இருக்கும் துணைவன்…
பொதுவாக ஒரு உலக நாள் வரும் போது, குறிப்பாக அன்னையர் தினம் வரும் போது , ஒரு கூட்டம் வாழ்த்துச் சொன்னாலும், இன்னொரு கூட்டம் எல்லா நாளும் அன்னையர் நாளே, என்ன புதுசா வாழ்த்துச் சொல்ல என்பார்கள், ஆனால் அங்கே அது சொல்லளவில் இருந்தாலும், எல்லா நாளும் இளையராஜா நாளே என்று உறுதியாகச் சொல்ல முடியும், தமிழரின் வாழ்வியலில் இளையராஜா இல்லாத நாள் என்று ஒன்று கிடையாது… அவரும் ஒரு அரவணைக்கும் அம்மா, எம் வாழ்வின் ஓர் அங்கம்…
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இசையே…