கேட்டதெல்லாம்
தரும் பூதம்
வெகு சிலரிடம்
மட்டுமே இருந்தது.
தனக்கும் அந்த
பூதம் வேண்டுமென ஆசைப்படாதவர்
யாருமில்லை.
சொந்தமாக பூதம் வாங்க போராடியவர்கள் ஒரு புறம்.
அடுத்தவர் பூதத்தை அபகரிக்க திட்டமிட்டவர்களும் ஏராளம்.
பூதம் கிடைத்ததும்
ஆட்டமாய் ஆடினர்
ஆரம்பத்தில் விதவிதமாய்
வரம் கேட்டு மகிழ்ந்தனர்.
இன்னும் பூதம்
கிடைக்கப் பெறாதவர்களின்
பெருமூச்சு பொறாமையெனக் கொள்ளப்பட்டது.
கேட்ட வரம்
எல்லாம் தந்தாலும்
பூதத்தால் தர முடியாத
வரங்களும் இருக்கின்றன
என்பதை உணர்வதற்குள்
பூதம் அதன் எஜமானர்களை அடிமையாக்கி விட்டது.
வெகு சிலருக்கு மட்டுமே
சரியான நேரத்தில் ஜீபூம்பா சொல்லி வரவைத்து
வேலை முடிந்ததும் மீண்டும்
குடுவைக்குள் அடைக்கும்
வித்தை தெரிந்திருக்கிறது.
அந்த பூதத்தின் பெயர்
பணம்


