விருதுகள்
நம்மைப் பொறுத்தவரை தமிழுக்கென விருதுகள் சரியானபடி கொடுக்கப்படுவதில்லை என்று புலம்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம். இந்தப் புலம்பல் உன்மையிலேயே தமிழ் இலக்கியத்தின் மீதான காதலால் எழுவதா என்றால் அதுதான் இல்லை. விருது பெறுபவர் யார் என்பதைப் பொறுத்து நமது புலம்பல் என்பது வருத்தத்தையும் வேதனையையும் கொட்டுவதாக மாறக் கூடும்.
இன்றைய நிலையில் விருதுகளைப் பெறுவதற்கு ஆளும் அரசினைச் சார்ந்தோ அல்லது அதற்கான லாபியை உருவாக்கி வெற்றி கொள்ளும் வல்லமையோ கொண்டிருக்க வேண்டும். இந்த லாபி என்பது அரசு விருதுகள் தவிர்த்து தனிப்பட்ட விருதுகள் கொடுக்கும் பெரும்பாலான அமைப்புகளில் இருக்கத்தான் செய்கிறது. இதெல்லாம் இல்லை விருதுகள் தகுதியின் அடிப்படையில்தான் கொடுக்கப்படுகின்றன எனச் சொல்வோரைச் சிறுபுன்னகையுடன் கடந்து செல்வது நல்லது.
இங்கே விருதுகள் என்பது எனக்கோ அல்லது என்னைச் சார்ந்தவர்களுக்கோதான் கிடைக்க வேண்டும் என்பதே அவரவர் எண்ணம். அது உடையும்போது கிடைத்தவன் எழுத்தாளனே இல்லை என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு சமூக வலைத தளங்களில் அலற ஆரம்பித்து விடுகிறார்கள்.தமிழுக்கு விருதில்லை என்ற புலம்பலை இவருக்கு விருது? என்ன சாதித்தார் என்ற விவாதமாக மாற்றி மகிழ்வார்கள்.
விருது பெற்றவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், விருதுகளை ஆட்களைப் பிடித்து வாங்கி விடுவார் என்பது உலகுக்கே தெரிந்தாலும் தமிழுக்கான விருது காலங்களைக் கடந்து கிடைக்கும் போது வசவுகளைத் தவிர்த்து வாழ்த்தலாம்.
முதலில் நான்தான் தமிழின் சிறந்த எழுத்தாளன் என்ற லாபியை, ஒரு படைப்பு எழுதிவிட்டு தனக்கு முன்பே எழுத்தில் ஏதோ சாதித்திருப்பவரை சாடும் மனிதர்களை தவிர்த்தால்தான் தமிழ் எழுத்துலகம் மேன்மை பெறும். மேலும் சரியான நபருக்கு, சரியான முறையில் விருது கிடைக்கும் போதுதான் விருதுகள் மகுடம் சூடும்.


