சாகுல் ஒரு சிறு நகரத்தில் வசித்து வரும் எளிய குடும்பத்தலைவர், உணவுப் பொருள் சார்ந்த வியாபாரமே அவரது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் வருவாய் ஈட்டும் வாய்ப்பாக கொண்டு இருந்தார். அன்று வெள்ளிக்கிழமை மாலைப் பொழுது அரசு உதவிபெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மகன் ரசூல் வீடு திரும்பியதை கண்டதும் அவனை அருகே அழைத்து, ஏலே நாளை நாம பக்கத்துல இருக்க காயங்குளம் வரை போய்ட்டு வரணும் சீக்கிரமா தூங்கு அப்பத்தான் வெயில் ஏறு முன்னே காலையிலே போயிரலாம் என்று சொல்லியிருந்தார்.
காயங்குளம் என்ற சிறிய கிராமத்துக்கு ரசூல் சிறுவயது முதல் அடிக்கடி அங்குள்ள உறவுகள் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். அங்குள்ள தனது நண்பர்களை பார்க்க கிடைக்கும் வாய்ப்பு மற்றும் மிதிவண்டி பயணம் என்பதால், எதுக்கு அங்கு செல்கிறோம் என்ற எண்ணமே இன்றி தந்தை சொன்னவுடன் சரிப்பா! என்று உற்சாகமாக கூறிவிட்டு உறங்கச்சென்றான்.
மறுநாள் சாகுல் சற்று முன்பே எழுந்து ஏழு மணிக்கு முன்பாக ஊர் எல்லையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ரசூலை எழுப்பி கிளம்ப சொன்னார்.
காயங்குளம் சிறிய கிராமம் என்பதால் அங்கு பேருந்து வசதிகள் எதுவும் இன்று வரையும் இல்லை; அங்குள்ளவர்கள் தங்கள் வாய்ப்புக்கு ஏற்றவாறு பயணங்களை திட்டமிட்டு கொள்வார்கள் ,
நடை ,மிதிவண்டி, மோட்டார் சைக்கிள் , என்றவாறு…
சாகுலிடம் உள்ளது மிதிவண்டி, அதில் மகன் ரசூலை முன்புறம் உள்ள கம்பியில் அமர வைத்து ஏழு மணி அளவில் பயணத்தை துவங்கி விட்டார். சிறிது குளிர்ந்த வாடைக் காற்றுடன் மெல்ல மேல் எழும் சூரியன் வெளியிடும் ஒளி கீற்றுகள் உடன் பயணம் துவங்கியது. ஊர் எல்லை தாண்டி பிரதான ஊர்ச் சாலையில் இருந்து கிராமம் செல்லும் சாலையில் பயணம் திரும்பியது.
மிதிவண்டியை அழுத்தியவாரே மகனிடம் சாகுல், “ நம்ம ரசாக் மாமா அப்பா மரணம் அடைந்துவிட்டார் , அவரது இறுதி சடங்குக்குத்தான் செல்கிறோம்” என்றார். ரசூல் “என்னப்பா ஒரே கூட்டமாக இருக்குமே அங்கே எதுக்கு என்னை கூப்பிட்டு போறீங்க முதலே தெரிந்து இருந்தால் வரலை என்று சொல்லிருப்பேன்” என்று சலித்து கொண்டான்.
“அப்படி சொல்லக் கூடாதுல நாலு மனிதர்கள் கூடும் இடத்துக்கு போய்ட்டு வரணும்., நல்லது கெட்டதில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் உன்னை மெனக்கெட்டு அப்பா எங்கு போனாலும் கூட கூப்புட்டு போறேன்” என்று மகனிடம் விளக்கம் கொடுத்து கொண்டே மிதி வண்டியை , அடிக்கும் எதிர்காற்றில் செலுத்தி கொண்டு இருந்தார். ரசூலும், “ஆமா போங்க எப்பவும் இதே சொல்லுங்க” என்ற சலிப்புடன் சுற்றத்தை கவனிக்க துவங்கினான். வயலின் தோற்றம் அங்கு என்ன பயிரிடப்பட்டுள்ளது இப்படி….
சாலை மேடும் பள்ளமும் கற்கள் சிதறியும் பயண இடையூறாக இருந்ததையும் கவனித்தான், எப்பதான் இங்கலாம் நல்ல சாலை போடுவாங்களோ என்ற எண்ணத்தில் இருந்த ரசூலை அப்பா சாகுலின் திடீர் செயல் இயல்புக்கு கொண்டு வந்தது.
சாகுல் தங்களுக்கு முன் மிதிவண்டியை உருட்டியவாறு நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெரியவரை கண்டதும் ,
“என்னத்தா… எப்படி இருக்கீங்க?” என்று சத்தம் கொடுத்துக் கொண்டே மிதிவண்டியில் இருந்து இறங்கினார்.
அந்த பெரியவரோ குனிந்து தனக்கு முன் இருந்த சற்று பெரிய கல்லை காலால் எட்டி மிதித்து சாலை ஓரம் ஒதுக்கும் செயலை செய்தவாறே “யாருயா..?” என்று திரும்பி பார்த்தார்.
அப்புறம் அவர்கள் விசாரிப்பு பேச்சை துவங்க , ரசூலுக்கோ சலிப்பும் எரிச்சலும் வர கன்னத்தில் கை வைத்தவாறு சைக்கிளின் இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தான். அப்பா கிளம்புவோமா அன்று அப்பப்ப நச்சரித்தான். ஒரு வழியாக அப்பாவும் பேச்சை முடித்து கிளம்ப ஆயத்தம் ஆகும் போது ,
ரசூல் தனது அப்பாவிடம் “ஏம்பா இந்த தாத்தாட்ட தான் மிதி வண்டி இருக்கே ஏறி அழுத்தி வெயிலுக்கு முந்தி ஊர் போய் சேராமல் ஏன் இப்படி உருட்டிட்டே வரார்” என்றான். அதை நீ தாத்தாட்டே கேளு என்றவாறு , உரக்க மகன் சொன்னதை அந்த பெரியவரிடம் சாகுல் சொல்ல…
அந்த தாத்தாவோ, அசட்டாக “ஆமா ஊர்ல நான் வருவேன் என்று தான் எல்லாம் காத்து கிடக்காக வேகமா போயி கலக்ட்டர் வேலையை முடிக்க போறேன் ” என்று சொல்லிக் கொண்டே சாலையில் இடையுறாக கிடந்த பெரிய கற்களை ஒதுக்கியவாறு இருந்தார்.
(இந்த பதில் ரசூலுக்கு திருப்தியாக இல்லை புரியவும் இல்லை)
நாம் என்ன தவறாக கேட்டுவிட்டோம் இப்படி முகத்தில் அறைந்தது போல் சொல்றாரே , அப்பாவுக்கு இது போன்ற ஆள்களிடம் தான் பேச பிடிக்குது… என்று மனதில் எண்ணிக் கொண்டான்.
சாகுல் அந்த பெரியவரிடம் , “சரிய்யா… இறப்பு காரியம் சீக்கிரம் போயிட்டு நான் வியாபாரத்துக்கு போகணும். நாங்கள் வாரோம்” என்று சொல்லிட்டு காயன்குளம் நோக்கி விரைந்தார். போகும் வழியில் சாலை போட என்று சில ஆண்டுகள் முன் ஆங்காங்கே குவித்து வைத்து இருந்த கற்கள் சிதறிக் கிடக்க மிதிவண்டி அதில் ஏறி, இறங்கி குதித்து குதித்து செல்லும் நிலை….
காயன்குளம் சென்ற வேலைகள் முடிந்து அப்பாவும் மகனும் கிணற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பத் தயார் ஆனார்கள். அப்போது சாகுல், “என்ன ரசூலே.. நண்பர்களை பார்த்தியா என்ன” என்று விசாரித்து கொண்டே அவனை மிதிவண்டி முன் பக்கம் தூக்கி அமர்த்தி புறப்பட்டார்கள்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் வழியில் கண்ட பெரியவர் மிதிவண்டியை உருட்டிக் கொண்டு எதிரில் வருவதை கண்டனர் அவரிடமும் சொல்லிட்டு கிளம்பினார்கள், இப்ப ரசூல் கூறினான் அப்பா நாம் எப்ப வந்தோம் இங்கு நம் வேலை முடிந்து திரும்ப போறோம் இப்ப தான் இந்த தாத்தா ஊர் பக்கமே வறார் என்று சொல்ல ….
தந்தை, ம்ம்…. என்று மட்டும் சொல்லி மிதிவண்டியை செலுத்தினார் .
சற்று வேகமாக மிதிவண்டி செல்வதையும் வரும் வழியில் முன் இருந்த கற்கள் எல்லாம் இப்போது இல்லாது பயணத்துக்கு எளிதாக இருப்பதையும் ரசூல் கவனிக்க துவங்கினான்.
ரசூல் தன் அப்பாவிடம் , “ ஏம்பா நாம வரும் போது கல்லா கிடந்தது இப்ப அப்படி இல்லையே கவனிச்சீங்களா ?” என்றான். “ம்ம்…. ஆமாம் கவனிச்சேன்”.
“எப்படிப்பா ? “ என்றான், ரசூல்.
சாகுல் சொன்னார் “நாம பார்த்தோமே ஒரு தாத்தா , நீ கூட கேட்டியே மிதிவண்டி வைத்துக் கொண்டு உருட்டிட்டு வறாரே என்று அந்த தாத்தா தான் காரணம்” என்றார். (ரசூலுக்கு அப்பா கூறியது புரியவில்லை)
“அவரா..?” என்று ஆச்சரியத்துடன் கேட்ட ரசூலுக்கு சாகுல் விளக்கினார். “நாம் வரும் வழியில், எதிரே கண்டே தாத்தா அந்த ஊர்க்காரர் தான். அவர் ஒரு விவசாயி. அவர் குடும்பத்தை இப்ப அவரது பிள்ளைகள் பொறுப்பாக கவனித்து கொள்கிறார்கள். இவர் சும்மா இருக்கக் கூடாது என்று யாருக்காவது பயன் பெறட்டும் என்று போற வழியில் அவரால் முடிந்த செயல் என்று இதை செய்கிறார். இது மட்டுமில்லை சாலையின் ஓரம் பாரு ஆங்காங்கே மரமும் நட்டு வைத்து இருப்பார்.
அவரது காலத்தில் பொழுதை இப்படி பயனாக எதிர்வரும் பிள்ளைகளுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று தொடர்கிறார்” என்று அப்பா சொல்ல பயணத்தை தொடர்ந்தார்கள்.
ரசூலின் அந்த சிறு வயது அனுபவம் பசு மரத்து ஆணியாக அவனது மனதில் பதிய அவ்வப்போது அந்த அனுபவம் அந்த தாத்தாவின் சுய தம்பட்டம் இல்லாத செயல் நற்சிந்தனைகளை அவனுக்கு கொடுத்தது, ரசூல் தாத்தாவிடம் கேட்கும் போது அவர் சொன்ன பதில் கோபத்தை தந்தாலும், அவர் மிக இயல்பாக போகின்ற போக்கில் நல்லவைகளை தான் வாழும் சமூகத்துக்கு சேர்த்து செய்தது, ரசூலை பெரிய மற்றும் நற் சிந்தனைகளுக்கு தூண்டிய நிகழ்வாக அமைந்தது.


