சொல்லக் கூச்சப்படும் விஷயங்களைக் கதையாக்கும் தைரியம் பார்த்து அதிர்ந்து போனேன். எதைக் கழிவு என்று ஒதுக்கி அதைச் சுத்தம் செய்பவர்களை இழிவாகவும், ஏளனமாகவும் நோக்குகிறோமோ அதைப்பற்றி உரக்கப் பேசுகிறார் ஆசிரியர் பெருமாள் முருகன்.
இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் பெண்களின் சில உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. ‘பீ வாங்கியின் ஓலம்’, ‘பிசாசுக்குப் போதுமான விஷயம்’ போன்ற கதைகள் நடுத்தர, இளம் வயது பெண்களின் மன உளைச்சல்களாகவும், ‘வேக்காடு’, ‘மஞ்சள் படிவு’, ‘கருதாம்பாளை’ ஆகிய கதைகள் உடல் தளர்ந்த மூதாட்டியர் இயலாமையால் அடுத்தவரை சார்ந்து நிற்கும் அவலத்தின் உணர்வுகளாகவும் வெளிப்படுகிறது.
‘கருப்பனார் கிணறு’ கதை சிறுவர்களைக் குளிக்க அனுமதிக்காத வெள்ளைக் கவுண்டரின் கிணற்றில் திருட்டுத்தனமாய் குளிக்கும் சிறுவர்கள் ஒவ்வொருவரும் பேசிக்கொள்ளும் காட்சி, அவர்களின் எதிர்ப்பை புரிய வைக்கிறது. ஒருவன் சளியைச் சிந்திப்போட்டேன் என்றும், ஒருவன் எச்சிலைத் துப்பினேன் என்றும், கடைசியில் ஒருவன் மலம் பேண்டேன் என்றும் உரைக்க அது பேசு பொருளாக மாறுகிறது. சலவைத் தொழில் செய்யும் தாய் தண்ணீரை தெய்வமாக மதிக்க, கருப்பசாமி தண்ணீர் குடிக்கும் கிணறு என்று ஊர் சொல்ல இறுதியில் மனதை பிசையும் முடிவு.
தலைப்பைப் பார்த்தவுடன் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது என்று யோசித்தேன். ஆசிரியர் ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையில் படித்தேன். ஆம் ஏமாற்றவில்லை. ஒவ்வொரு கதையிலும் நம்முடன் நெருங்கிய ஒருவர் நினைவுக்கு வந்து போனார்.
‘பிசாசுக்குப் போதுமான விஷயம்’ கதை புதிதாகத் திருமணமான சரசு தன் புகுந்த வீட்டில் கழிவறை இல்லாததால் படும் அவஸ்தையே. இதில் நேரடியாக என் அக்கா பாதிக்கப்பட்டிருந்தார். அவர் புகுந்த வீட்டிலும் இதே கதை. நல்லவேளை அவர் வேலை பார்க்கும் இடத்தில் குடியிருந்தார். ஏதாவது விசேஷம் என்றால் மட்டுமே மாமியார் வீடு வருவார். கழிவறை இல்லாததாலயே இரவு தங்க மாட்டார்.
சரசு போலவே கழிவறை இருக்கிறதா இல்லையா என்று கூட விசாரிக்காமல் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டீர்கள் என்று சண்டையிட்டார். சரசு படும் அவஸ்தை படிக்கும் போது பெண்ணாக வேதனையாக இருந்தது. விடிகாலையில் இதற்காகவே சீக்கிரம் எழுந்து மூக்கை மூடிக்கொண்டு அவள் காட்டுக்குச் செல்வது அப்படியே கண்களில் விரிந்தது. இதுபோல ராஜீமுருகன் ‘ ஜோக்கர் ‘ படம் எடுத்திருந்தார்.
இப்போது இதையெல்லாம் எழுத வேண்டுமா? என்ற கேள்வி எழுமாயின், தூங்கும் அறைக்குள்ளே கழிவறை இருக்கிற தலைமுறையினருக்கு இதெல்லாம் புரியாது தான் என்றாலும், இப்படியும் இருந்தார்கள் என்று விடாமல் ஆவணப்படுத்தி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அத்தியாவசியம் வேறு, ஆடம்பரம் வேறு என்பது முந்தைய தலைமுறையினர் உணரவே இல்லை.
‘மஞ்சள் படிவு’ கதை மனதை நெகிழச் செய்து விட்டது. நாம் யாருக்கும் எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் இறந்து போக வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவோம். அப்படி வாழ்வில் யாருடைய துணையையும் விரும்பாத பாட்டி இரும்பு மனிஷியாய் வாழ்கிறார். பிள்ளைகள், மகள் எல்லோருக்கும் நல்ல வாழ்வு அமைத்துக் கொடுக்கிறார். ஆனாலும் யாருடனும் சேர்ந்து வசிக்காமல் தனியே வசிக்கிறார். மகளை மட்டும் அவ்வப்போது பார்த்து வருவார். மகன் வீடுகளுக்கு சென்றது இல்லை. பேரன் ஒருவன் மட்டுமே வந்து பார்த்துவிட்டு செல்வான்.
அப்படி இருக்க ஒருநாள் பாட்டி படுக்கையாய் மாறிவிட மகள் வந்து பார்த்துக்கொள்கிறார். புடவையில் அவள் அறியாமல் கழிவு இருக்க மகள் ஒரு வார்த்தைக் கோபமாகச் சொல்லி விடுகிறார். அன்றிலிருந்து பாட்டி பச்சைத் தண்ணீர் கூட அருந்தாமல் பத்து நாள் கிடந்து உயிர் துறக்கிறார். இதே போல் எனக்குத் தெரிந்த பாட்டி தன்னுடைய சாவைத் தானே எழுதிக் கொண்டார். யாருக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாது என்று எண்ணித் தன் ஜீவனைத் தானே போக்கிக் கொள்கிறார். மகள் அழுது கெஞ்ச,அவர் எதுவும் சாப்பிடாமலே உயிர் துறக்கிறார். நிஜ வாழ்வையே கதையும் பிரதிபலிக்கிறது.
‘சந்தன சோப்’ கதை சிறுவன் ஒருவன் படும் அவஸ்தையை பற்றியது. கிராமத்தில் இருந்து வேலைக்கு வரும் சிறுவன் பேருந்து நிலைய கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வேலைக்கு விருப்பமில்லாமல் வருகிறான். தன்னுடைய ஊர் ஆள் ஒருவனைப் பார்க்க எப்படியாவது ஊருக்குக் கூட்டிட்டு போங்க என்று அழுகிறான். பல வேலைகளில் உழலும் அவன் அந்தப் பையனுக்கு என்ன சொல்லிச் சமாதானம் சொல்வது என்று பொய் சொல்கிறான். மறுமுறை அந்தப் பையனைப் பார்க்கும் பொழுது அவன் அங்கேயே வேலை செய்வதையும், அவன் வாங்கிக் கொடுத்த சந்தன சோப்பை பயன்படுத்துவதையும் நெகிழ்ச்சியாகச் சொல்கிறான். எத்தனையோ வேலை செய்யும் சிறுவர்கள் படும் துன்பம் கோடிட்டு காட்டி உள்ளார். அதுவும் கழிவறைச் சுத்தம் செய்வது என்பது எல்லோருக்கும் கஷ்டம் தரக்கூடியது. நாம் கற்பனையிலும் சந்திக்காத இன்னொரு உலகம் இருக்கிறது என்பதைச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
‘கருதாம்பாளை’ என்ற கதையில் வயதான பாட்டி நகரத்தில் உள்ள மகன் வீட்டுக்கு செல்கிறார்.அடுப்படிப் பக்கத்தில் இருக்கும் கழிவறையைக் கேலி செய்கிறார். அருவருப்பு கொள்கிறார். கொஞ்ச நாள் பழகியவுடன் கிராமத்திற்கு வந்து தனக்காக கழிவறைக் கட்டத் தீர்மானிக்கிறார். அவள் செய்யும் வேலைகள் அதற்காக சேர்த்து வைத்த காசுகளை செலவு செய்ய நினைப்பது, ஊரில் உள்ளவர்கள் யாவரும் வந்து கழிவறையை வேடிக்கை பார்ப்பது என்று சுவாரசியமாகச் சொல்லப்பட்ட கதை. நாங்கள் சிறுவயதில் இருந்த போது வீட்டின் கொல்லையின் கடைசியில் கழிவறை இருந்தது அதன் பிறகு அறைக்குள்ளேயே கழிவறை வைத்து கட்டினார்கள்.
இன்னும் சில கதைகளை நான் உள்வாங்கியபடி சொல்ல எனக்குத் தெரியவில்லை என்பதே உண்மை. சமூகத்தால் ஒதுக்கப்பட்ட விஷயங்கள் பற்றிய கதைகள் இது. பேச வெட்கப்பட்டும்,கூச்சப்பட்டும் பேசாமல் விட்டக் கதைகள் இது. சில கதைகளில் அருவருப்பு வந்தது.
——————————————
நூல்: பீக்கதைகள்
ஆசிரியர்: பெருமாள் முருகன்
பக்கம்: 136
விலை : 60/-


