பாரதியார் தமிழ்ச் சமூகத்தில் சுதந்திர உணர்வையும் சமத்துவ சிந்தனைகளையும் விதைத்த பெரிய கவிஞர். அந்த சிந்தனைகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டவர் பாரதிதாசன். பாரதியாரின் கவிதைகளும் கருத்துகளும் பாரதிதாசனின் வாழ்க்கையையும் இலக்கியப் பயணத்தையும் மாற்றியது. அதனால் பாரதிதாசனுக்கு பாரதியார் மீது மிகுந்த பற்று உருவானது.
பாரதிதாசனின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.
புதுச்சேரியில் வாழ்ந்த சுப்புரத்தினம் சிறுவயதிலிருந்தே தமிழ்மொழி மற்றும் இலக்கியங்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். அந்த காலத்தில் புதுச்சேரி தேசிய உணர்வு வளர்ந்த ஒரு முக்கிய நகரமாக இருந்தது.
இந்தியா , ஆங்கிலேயரின் ஆட்சியில் இருந்ததால் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் புதுச்சேரிக்கு வந்து தங்கியிருந்தனர். அவர்களில் ஒருவர் பாரதியார். அவர் எழுதிய கவிதைகள் மக்களிடையே சுதந்திர உணர்வை ஏற்படுத்தின.
இளம் வயதில் இருந்தே சுப்புரத்தினம், பாரதியாரின் பாடல்களையும் உரைகளையும் கேட்டு மிகவும் கவரப்பட்டார். பாரதியார் பாடிய கவிதைகள் நாட்டுப்பற்று, வீர உணர்வு, மனிதநேயம் போன்றவற்றை எடுத்துரைத்தன. “நம்முடைய நாடு சுதந்திரமாக இருக்க வேண்டும்”, “அனைத்து மனிதர்களும் சமம்” போன்ற கருத்துகளை அவர் தனது பாடல்களில் வலியுறுத்தினார்.
இந்த உயர்ந்த சிந்தனைகள் இளம் கவிஞரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
பாரதியார் பற்றி பாரதி தாசனின் பாடல்:
“பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில் இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
நீடு துயில்நீக்கப் பாடிவந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!”
புதுச்சேரியில் கனகசுப்புரத்தினத்திற்கு பாரதியாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்திப்பு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.
பாரதியார் பேசும் விதம், அவருடைய தைரியம், சமூகப் பற்றுள்ள சிந்தனைகள் ஆகியவை சுப்புரத்தினத்தை மிகவும் ஈர்த்தன.
பாரதியார் சாதி வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்தார்.
“சாதி களைந்திட்ட ஏரி – நல்ல
தண்டமிழ் நீரினை ஏற்கும்!
சாதிப் பிணிப்பற்ற தோளே – நல்ல
தண்டமிழ் வாளினைத் தூக்கும்!”
பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்றும், பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அந்த காலத்தில் இது மிகவும் முன்னேற்றமான சிந்தனையாக இருந்தது.
அவரது ‘குடும்ப விளக்கு’ நூல், ஒரு பெண் கல்வி கற்று அறிவாற்றலுடன் குடும்பத்தையும் சமூகத்தையும் உயர்த்தும் விதத்தை அழகாகச் சித்தரிக்கிறது.
‘கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்” என்ற வரிகள் பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் அவரது மிகப்பிரபலமான பாடல் வரிகள்.
பாரதியாரின் கவிதைகளின் எளிமையும் வலிமையும் பாரதிதாசனை மிகவும் கவர்ந்தன. சிக்கலான கருத்துகளையும் அவர் எளிமையான தமிழில் அழகாகக் கூறினார்.
“தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்”
என்கிறார். அவர் பாடிய வரிகள் பாரதிதாசனுக்கும் பொருந்தும். பாரதிதாசனால் தமிழுக்குப் பெருமை.
பாடல்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை பாரதிதாசன் பாரதியாரிடமிருந்து கற்றார். இதனால் பாரதிதாசனும் சமூக மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”
பாரதியாரின் சிந்தனைகள் பாரதிதாசனின் மனதில் ஆழமாக பதிந்ததால் அவர் தனது வாழ்க்கையை அந்த சிந்தனைகளுக்கே அர்ப்பணிக்க முடிவு செய்தார். பாரதியாரின் மீது கொண்ட அன்பும் மரியாதையும் காரணமாக சுப்புரத்தினம் என்ற தனது பெயரை “பாரதிதாசன்” என்று வைத்துக் கொண்டார். “பாரதியின் தாசன்” என்று பொருள் தரும் இந்தப் பெயர் அவருடைய குருவின் மீது கொண்ட பற்றை வெளிப்படுத்துகிறது.
பாரதிதாசன் தனது படைப்புகளில் சமூக சீர்திருத்த கருத்துகளை வலியுறுத்தினார். பெண்கள் கல்வி பெற வேண்டும், சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும், தமிழ்மொழி வளர வேண்டும் என்று பல கவிதைகள் மற்றும் நாடகங்கள் எழுதினார்.
அவர் எழுதிய படைப்புகள் தமிழ்ச் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தின. இதனால் பாரதிதாசன் “புரட்சிக் கவிஞர்” என்று அழைக்கப்பட்டார்.
பாரதியார் விதைத்த சிந்தனை விதைகள் பாரதிதாசனின் படைப்புகளில் வளர்ந்து பெரிய மரமாக மாறின. அவர் தனது குருவின் பாதையில் நடந்து தமிழுக்கும் சமூகத்திற்கும் பெரும் சேவை செய்தார். பாரதியாரின் தாக்கம் இல்லையெனில் பாரதிதாசன் என்ற பெரிய கவிஞர் உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்று பலர் கூறுகின்றனர்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் புரட்சித் தலைவர் பாரதிதாசன் காலத்தை வென்றவராக வாழ்கிறார்.


