2025 ஆம் வருடம் படித்தவை கொஞ்சம் குறைவுதான். அரியர்ஸே ஏராளம் இருக்க, சென்ற வருடம் புத்தகக் கண்காட்சி சென்று மேலும் சில புத்தகங்கள் வாங்கி வந்தபோது அரியர்ஸ் கிடக்கட்டும் அப்புறம் பார்க்கலாம், இவற்றை முதலில் படித்துவிட வேண்டும் என்று நினைத்துதான் வைத்தேன். இதுவரை தொடவில்லை. ஆயினும் அண்ணன் மூலம் வந்த சில புத்தகங்களும், உறவின் மூலம் வந்த சில புத்தகங்களும் காலக்கெடுவுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் படித்து முடித்தாலும் மனதில் எதுவும் நிற்கவில்லை.
உளவுக்கு 1000 கண்கள், மயிலங்கியின் மரகதப்பெட்டி, சிவாஜி கணேசன் மூன்று பாகம் ஆகியவை இதில் அடங்கும். சிவாஜியின் புத்தகம் படிக்க சுவாரஸ்யம். எனினும் மீள் வாசிப்பாய் வாசித்த முத்து காமிக்ஸ் மாயாவி புத்தகங்களும், தேவனின் துப்பறியும் சாம்புவும் மனதில் நிற்கிறார்கள். துப்பறியும் சாம்புவை விட ஸ்ரீமான் சுதர்சனம் இன்னும் நன்றாயிருக்கும் என்று தோன்றியது. சாம்பு கொஞ்சம் போர் அடிக்க காரணம் காலம். டூ மச் ஆஃப் கோயின்ஸிடன்ஸ்!
ஏதோ ஒரு ரீல்ஸில் பர்வீன் சுல்தானா பரிந்துரைத்த ‘வாடியது கொக்கு’ கவிதைப் புத்தகம் வாங்கினேன். கவர்ந்தது. அந்த ஆர்வத்தில் நானும் சில முயற்சித்தேன். சமீப காலமாக கவிதைப் புத்தகங்கள் பக்கம் பார்வை போகிறது. வாடியது கொக்கு புத்தகத்திலிருந்து சாம்பிள்.
காற்றுக்கு சலிப்பதேயில்லை
ஒரே புத்தகத்தை
ஓராயிரம் முறை புரட்டுகிறது
பனி நிறைந்த கண்ணாடியில்
கண்கள் வரைந்தேன்
கண்ணீர் வழிகிறது.
தூண்டிலில் சிக்கிய
மீனின் கண்களில்
விடைபெறும் நதி
எந்தக் கிளி
ஏமாற்றிச் சென்றதோ
தாடியுடன் ஆலமரம்
அந்த மயானத்துக்கு
உயிர் தந்தது
ஒரு பிணம்


