இருளின் சேயாய்
சத்தமின்றி வலம்வர
விளைந்த எனை
செய்ததற்கும் செய்யாததற்கும்
இதயத்தைச் சுரண்டி நீதி கேட்க
நீள் பாதையிட்ட பாதகனென்போர்
எவரும் அறிவரோ..?
ஈரைந்து அகவையும் எட்டா ஒருவன்
என் இதயத்தில் ஏறி அழுத்தும் வலியினை
காதல் போர்வையில் காமச் சுளையில்
உருவாகி மகவானவனவன்
உயிர்த்துளியும் உதிரக்கமலமும்
சேர்ந்து சிலையானவனவன்
பேரம்பேசப்பட்டான் உனக்கு பாதி
எனக்குப் பாதியென
அண்டமும் அணுவும் திசை மாறியதில்
இழுபட்டுக் கிழிந்தது அவன் இதயமாகிப்போனது
ஆறுநாளுக்கு சுமந்தவளோடாம்
மிஞ்சியபொழுது சுமத்தியவனோடாம்
மிட்டாயோடு அலைபேசியும்
கூடித்தான் போனது லஞ்சமாய்
வரிந்து கட்டிய வாய்கள் அவன்
துயிலை ரட்சிக்க மறந்தது ஏனோ!
விழிமூட விட்டம் கண்டபோதெல்லாம்
ஒற்றைத் தோளைத் தொடும் அணைப்பில்
வெம்புகிறதே அப்பிஞ்சுமனம்
இடுக்கிப் படுத்து திரும்புகையிலிருந்த
சுகத்தைத்
தேடித் தவிக்கிறதே தளிருள்ளம்
கிளைவிடாக் கன்று
கடனாளியாய் இன்று கண்விழிக்கின்றதே
யாரேனும் வரம் தராரோ
இடக்கால் போட அவளும்
வலக்கால் போட அவனும்
ஒரே ஓர் உறக்கத்திற்கேனும்
விழித்துகிலகற்றி விடியலுக்கு
காத்திருக்கும் அக்குட்டிக்
கண்களின் கருமைக்கு
காரணமாய் நீளாதிருக்க
பிறந்ததும் இறந்து பிணமாகி
மறுமுனை எய்த ஏதேனும்
வழியுண்டோ எனக்கு ?


