VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: உலை வாய்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • சிறுகதைகள்
  • புத்தகப் பார்வை
  • கட்டுரைகள்
  • விண்மீன் மின்னிதழ்
  • கவிதைகள்
  • தொடர்கள்
  • எழுத்தாளர்கள்
  • நேர்காணல்
  • திரைப் பார்வை
  • நிகழ்ச்சிகள்
  • ஆசிரியர் பக்கம்
  • About
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > உலை வாய்
சிறுகதைகள்

உலை வாய்

உலை வாய்

பால்கரசு
Last updated: May 24, 2026 3:38 pm
By
பால்கரசு
Published: June 18, 2025
3 Views
Share
9 Min Read
உலை வாய்
SHARE

 

எப்பவும் வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கும் கந்தசாமியைத்தான் அந்த ஊர் பார்த்திருக்கிறது. அவரும் அதே மிடுக்கோடுதான் ஊருக்குள் வலம் வருவார். உலக விசயங்கள் எல்லாம் தெரிந்த அறிவாளியாகவே அவர் அந்த ஊர் மக்களிடம் தன்னைக் காட்டிக் கொள்வார். எதைச் சொன்னாலும் இந்த வருடத்தில், இந்த மாதத்தில் எனச் சொல்லித்தான் ஆரம்பிப்பார். அவரின் பேச்சும் மிடுக்குமே ஊருக்குள் ‘அவனுக்கு எல்லாம் தெரியும்… அவன் சொன்னால் சரியாக இருக்கும்’ என அவர் மற்றும் அவருக்கு முந்தைய தலைமுறையாட்களும், ‘அவர் விபரமானவர்’ எனப் பிந்தைய தலைமுறையும் சொல்ல, தானே பெரியவன் என்ற எண்ணம் அவருக்குள் மெல்ல மெல்ல வளர்ந்து ஊர்த் தலைவன் என்ற கர்வம் மெல்லத் தலை தூக்கி இருந்தது.

கம்பீரமான தோற்றம், கணீர்க்குரல், மிடுக்கான நடை எனக் கிளியூருக்குள் எப்பவும் கெத்தாக நடமாடும் கந்தசாமி, ஊர் நிகழ்வுகள் எல்லாம் உற்சவசாமியாகத்தான் இப்போதுவரை இருக்கிறார். ஊரும் அப்படித்தான் நினைத்தது, அவரும் அப்படியே ஆகிப் போனார். அது பதவி ஆசை கொண்ட மயக்கநிலை என்றும் சொல்லலாம்.

அந்த ஊரைப் பொறுத்தவரை அவரின் பேச்சுக்கு எப்போதுமே மறுபேச்சுஇருந்ததில்லை. ஊரில் நடக்கும் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் அவர் அனுமதி கொடுத்தால் மட்டுமே நடக்கும் என்பதுபோல் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தார், அதை அப்படியே ஏற்றுக் கொள்ள ஒரு கூட்டமே இருந்தது. ஏன் இன்னும் சொல்லப் போனால் சிலர் வடக்குத் தோட்டத்தில் என்ன விதைக்கலாம், தெற்குத் தோட்டத்தில் என்ன விதைக்கலாம் என்று கூட அவரிடம் அனுமதி கேட்பதுண்டு. என்னடா இதைக்கூட இந்தாளுக்கிட்ட கேக்குறானுக எனச் சிலருக்கு சிரிப்பு வருவதுண்டு என்றாலும் எதிர்த்துச் சொல்ல எப்போதும் தயக்கம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது. தன்னை எதிர்க்க ஆளில்லை என்ற எண்ணமே கந்தசாமி ‘சாமி’யாக மாறக் காரணமாகவும் இருந்தது.

இப்படி ஊருக்குள் எது செய்வதென்றாலும் அவரிடம் கேட்டே செய்ய வேண்டுமெனத் தினமும் விடியல் முதல் இரவு வரை ஆட்கள் அவர் வீட்டு வாசலில் காத்திருக்க ஆரம்பித்ததால் நாந்தான் சாமி என்ற அதிகார போதை மேலும் கூடிக் கொண்டே போனது.

கந்தசாமி காலையில் எந்திரிச்சுக் குளித்து, வெள்ளை ஜிப்பாவுடன் வீட்டு வாசலிருக்கும் வேப்ப மரத்தடியில் போட்டிருக்கும் நாற்காலியில் ஒரு தோரணையுடன் உட்கார்ந்து வெள்ளையம்மா கொடுக்கும் காபியைக் குடித்தபடி அமர்ந்து வீதியை வேடிக்கை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

அப்படியான ஒரு காலைவேளையில் “அடியே வெள்ளையம்மா… தேத்தண்ணி என்னாச்சு..? சீக்கிரம் கொண்டா…” என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்த போது பின் பக்கம் செருமியபடி கோவிந்தன் வந்தார்.

“அடடா… கோவிந்தா வாப்பா வா… வந்து உக்காரு… என்னது காலங்காத்தால வந்திருக்கே?” என்றவர், “வெள்ளையம்மா… அப்படியே இன்னொரு டம்ளர் சேத்துப்போடு… கோவிந்தன் வந்திருக்கிறார்” என்றார்.

“அதெல்லாம் வேண்டாம்ப்பா… நம்ம வீட்டுக்காபிய எப்ப வேணுமின்னாலும் குடிச்சிக்கலாம்… இப்ப எங்கூட வாங்க” என்றார் கோவிந்தன் பதட்டமாய்.

அவரின் பதட்டம் சாமியையும் பற்றிக் கொள்ள, நாற்காலியில் இருந்து எழுந்து வேஷ்டியை அவிழ்த்துக் கட்டியபடி “ஏய்… என்ன பதறுறே… என்னாச்சுப்பா..? வீட்டுல யாருக்கும்…?” என்றபடி எழுந்தார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல… நடக்கக் கூடாதது நடந்திருச்சு… நம்ம குருவம்மா மக கடசிப் புள்ள பேச்சியம்மா இருக்குல்ல… அது மருந்தக் குடிச்சுட்டு செத்துப் போச்சுப்பா… அந்தத் தெருவே அங்கதான் கூடி நிக்கிது.” பதட்டத்தோடு சொல்லி முடித்தார் கோவிந்தன்.

“அடக் கூறுகெட்ட பயவுள்ள அடுத்த மாசம் அம்மனுக்கு காப்புக் கட்டனும் இப்பப் போயி இப்படியொரு காரியத்தப் பண்ணித் தொலச்சிருக்கு…?” என ஆத்திரமும் ஆதங்கமுமாய் சொன்னவர், “குருவம்மா மவ மருந்தக் குடிச்சிட்டாலாம். நா முன்னால போறேன்… நீயும் கெளம்பி வா” என உள்பக்கம் பார்த்துக் கத்திவிட்டு, வெள்ளையம்மாளின் பதிலுக்குக் காத்திராமல் நடக்க, கோவிந்தனும் பின்னாலயே நடக்க ஆரம்பித்தார்.

இருவரும் அந்த நிகழ்வுக்கான காரணம் என்ன என்பதைப் பேசியபடி குருவம்மாள் வீட்டை அடைந்தார்கள்.

அங்கு ஊரே கூடியிருந்தது.

தனது வருகைக்கான காத்திருப்புதான் அது என்பதை அவர் உணர்ந்து, அம்மனத் தூக்குறதுக்கும் செத்தவளப் பொதக்கிறதுக்கும் நாந்தான் அனுமதி கொடுக்க வேண்டியிருக்கு என்ற பெருமிதப் பார்வையோடு வீட்டுக்குள் போனார்.

இவரைப் பார்த்ததும் குருவம்மா ‘பாத்தியளா… பாவி இப்படிப் பண்ணிட்டாளே… எனக்கு இனி யாரிருக்கா…’ என அவள் கதறி அழ, எத்தனையோ முறை அணைத்த கைகள் இப்போது அணைக்க முடியாமல் அவரின் மனசு தவிக்க, பார்வையைத் தாழ்த்திக் கொண்டு ‘விடு… இனி அழுது… கண்டிக்க வேண்டிய நேரத்துல கண்டிக்கல… அது போக்குல போச்சு… எத்தன தடவை நான் கண்டிச்சிருப்பேன். நீதான் கேட்டியா இல்ல அவதான் கேட்டாளா… இந்தா அவன் உசுரோடதானே இருக்கான்.’ எனச் சத்தமாகச் சொன்னார்.

கலங்கிய கண்களைத் துடைத்தபடி அங்கு நின்றவர்களைப் பார்த்து “சரி… ஆனது ஆயிப்போச்சு… இப்புடியே நின்னு… சட்டுப்புட்டுனு ஆகவேண்டிய காரியத்தப் பாருங்கப்பா… அப்பறம் இந்த விசயம் வெளிய யாருக்கும் தெரியக் கூடாது. காதோடு காது வச்சாப்ல இருக்கட்டும்…” என்றார் சற்றே மிரட்டும் தொனியில்.

சாமியின் உத்தரவிற்காக காத்திருந்த ஊர் மக்கள் வேகவேகமாக காரியத்தில் இறங்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் பேச்சியம்மாள் நடுக்குடியிருப்பு சுடுகாட்டில் சாம்பலானாள்.

பேச்சியம்மாள் செத்த சேதி அறிந்து வந்த பெருமாள் அவள் சாம்பலாகிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் இருந்து மீளாது தவித்தான்.

‘நாம சொந்தமின்னாலும் முன்ன உள்ள பகையில ஒத்துக்கமாட்டானுக நாளைக்கு ரெண்டுபேரும் ஊரை விட்டே ஓடிப் போயிடலாம்னு சொன்னேனே? இப்படி செஞ்சிட்டியே பாவிச் சிரிக்கி’ என மனசுக்குள் புலம்பி, பேச நினைத்த வார்த்தைகளையும் கரை புரண்ட கண்ணீரையும் வெளியே வரவிடாமல் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு குருவம்மாவின் வீட்டுக்கு வந்தான்.

அங்கு இருந்தவர்களைப் பார்த்துப் பொத்தாம் பொதுவாய் ’யோவ்… அதுக்குள்ள ஏய்யா அவசர அவசரமா எரிச்சீங்க..? ’ கோபத்தோடு கத்தினான்.

“அடே பெருமாளு… சாமி சொன்னதுக்கு மறுபேச்சு இங்க உண்டா? அதுபோக அவச்சாவுல போனவளப் போட்டா வச்சிருக்க முடியும்..? சரி விடு… அந்தப் பயபுள்ளக்கி ஆயுசு அம்புட்டுத்தான்…” என்றார் கோவிந்தன்.

“என்ன கத விடுறிய… இதுவரைக்கும் இப்புடிச் செத்தவுகளப் போட்டே வச்சதில்லையாக்கும். இருக்கவனுக்குன்னா ஒண்ணு இல்லாதவனுக்குன்னா ஒண்ணு… சாமி சொன்னாவளாம் இவுக செஞ்சாகளாம். யோவ் அந்தாளு புள்ளயாயிருந்தா இப்படிச் செய்வாரா…?” என்று பெருமாள் கேட்டதை ஊர் முழுக்க வாயை மூடி ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்தது.

‘அவம்புள்ளதானேடா…’ என வாய் வரை வந்ததை வெளியில் சொல்லாமல் ‘விடுடா… என்ன பேசுறே..?’ என அதட்டினார் சீனிச்சாமி.

“இப்ப என்னவாம்…? அவ சாகுறதுக்கே இந்தப் பயதானே காரணம். போட்டு வச்சிருந்தா இவனையும் ஒண்ணாப் போட்டு எரிச்சிருக்கலாம்” எனக் கோபமாய் கத்தியபடி சாமி எழ, “நீங்க விடுங்க… சின்னப்பய… ஏதோ பேசணுமின்னு பேசுறான்.”

“இப்பல்லாம் சின்னப்பயக ஆட்டமாத்தானே போச்சு… அந்தப் புள்ளக்கி சித்தப்ப மக்க, பெரியப்ப மக்க இந்தக் கூட்டத்துல இருக்கியதானே… பேசவிட்டுட்டு வேடிக்கை பாக்குறிய… இவனாலதான் அவ செத்தா. தூக்கிப்போட்டு மிதிங்கடா…” கந்தாசாமி கர்ஜித்தார்.

“என்னய தூக்கிப் போட்டு மிதிச்சிருவியளோ..? எவன் மிதிக்கிறான்னு பாக்கிறேன். யோவ் சொன்ன நீயே கை வச்சிப் பாரேன்… பெரிய மனுசன்னு பாக்கமாட்டேன்…. டேய்… வாங்கடா… வந்து கை வச்சிப் பாருங்கடா… இவன் ஏத்தி விடுறான்… இவன் பேச்சைக் கேட்டியன்னா நல்லாயிருக்க ஊரும் நாசமாப் போயிரும்” எனப் பெருமாள் குதிக்கவும் அவனைச் சிலர் இழுத்துப் போனார்கள்.

ஊர் சாமியின் பக்கம் நின்று பெருமாளைத் திட்ட ஆரம்பித்தது. தன்னை எல்லார் முன்னிலும் ஒருவன் அசிங்கப்படுத்திட்டானே என்ற ஆதங்கம், வலி கந்தசாமி முகத்தில் தெரிந்தது.

எழுந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

எப்போதும் கம்பீரமாக நடக்கும் கந்தசாமியின் நடை, பெருமாளின் கேள்விக்குப் பின் செம்மறியாட்டு நடையாகிப் போனதை ஊரும் உணர ஆரம்பித்தது.

என்ன இருந்தாலும் ஊருக்குள் நானே தலைவன் என்ற சாமியின் அகங்காரத்துக்கு விழுந்த முதல் அடியாய் பெருமாளின் கேள்வி இருந்தது என்பதை அதன் பின்னான நிகழ்வுகள் சொல்லாமல் சொல்ல ஆரம்பித்தது.

நாட்கள் போகப் போக, கந்தசாமி வீட்டிற்கு வரும் ஆட்களின் வருகை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது, ஊருக்குள் நடக்கும் எல்லாவற்றிற்கும் சாமி அனுமதியை கேட்டுக் காத்திருந்தவர்கள் ‘எதுக்கு இதுக்கெல்லாம் சாமிக்கிட்ட கேட்டுக்கிட்டு’ என்று சின்னச்சின்ன விசயங்களில் அவர்களாகவே முடிவெடுத்து, இப்படிச் செய்யலாம்ன்னு இருக்கோம் எனத் தகவலாக அவரிடம் சொல்ல ஆரம்பித்தார்கள்.

பெருமாள் எதிர்ததில் என்ன தப்பு என நினைத்த இளவட்டங்கள் அவனின் பேச்சைக் கேட்க ஆரம்பித்தார்கள்.

அடுத்த மாதம் முளக்கொட்டுக்கு எப்பவும் சாமி ஏற்பாடு செய்யும் வழக்கமான கரகாட்டம் வேண்டாம், அரிச்சந்திரன் நாடகம் போடணும், புதுக்கோட்டைச் செட்டக் கொண்டு வரணும் என்று பெருமாளுடன் சேர்ந்து இளைஞர்கள் முடிவெடுத்தார்கள்.

எல்லாச் சனிக்கிழமையும் ஊரே கூடி நல்லது கெட்டது பேசுவது தலைமுறைகளாய் தொடரும் வழக்கமாக இருந்தது.

அன்றைய ஊர் கூட்டத்தில் பெருமாளும் இருந்தான். ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

” ஏப்பா… நல்லதோ கெட்டதோ நடந்தது நடந்து போச்சு… இப்ப ஏன் எல்லாரும் காலக் கட்டிக்கிட்டு உக்காந்திருக்கீங்க..? என்ன பேசணுமோ அதப் பேசுங்கப்பா… ஆகாவரி பேச்ச விட்டுட்டு ஆக வேண்டியதப் பாப்போம்” என்றார் கோவிந்தன்.

“அடுத்த வாரம் முத்துப் பரப்புறோம்… அதுக்கு அடுத்த வாரம் மொளக்கொட்டு, புதுக்கோட்டைச் செட்டத்தான் கொண்டு வரணும்… அம்புட்டுத்தான். அதுக்கான வேலைகளை நீங்கதான் பாக்கணும் சித்தப்பு’ என கோவிந்தனைப் பார்த்துச் சொன்னான் பெருமாள்.

“டே …சாமிக்கிட்ட கேக்காம நீங்களே முடிவெடுத்தா எப்படி.. எதுவா இருந்தாலும் சாமி சொல்லட்டும்… எளவட்டங்க கொஞ்சம் பேசாம இருங்க” என்ற குரல்கள் கூட்டத்தின் எல்லாப் பக்கமும் இருந்து வந்தது.

“என்னப்பா சாமி கம்முனு இருக்கீங்க…. எதாவது சொல்லுங்க” என்றார் கோவிந்தன்.

“ஊரு இப்பத்தான் மாறிப் போச்சே… அவுக சொல்றதுதான் நல்லதுன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாக. பட்டாத்தான் தெரியும். மாற்றம் வேணும்ன்னு நிக்கிறவுககிட்ட நாஞ்சொல்லி… அவுக எண்ணப்படியே இந்த வருசம் நடக்கட்டும்” சற்றே குரலை உயர்த்தி, கடுகடுப்புடன் சொன்னார்.

எப்போதும் சாமி வார்த்தைக்கு கொக்கு மீன் பிடிக்க காத்திருப்பது போல் காத்திருந்தவர்கள் இன்று கழுகு இரைதேடுவதைப் போல் முடிவெடுக்கிறார்கள் என்பதை நினைத்து சாமியின் மூச்சுக் காற்று சற்று சூடாகவே வெளியேறியது.

திருவிழாவின் மொத்தப் பொறுப்பையும் பெருமாள் தலைமையில், இளைஞர் சங்க உறுப்பினர்கள் மேற்பார்வையில் யாருக்கும் எந்தக் குறையும் வராதவாறு பார்த்துக் கொண்டார்கள்.

எப்பவும் கரகாட்டத்தைப் பார்த்த கிளியூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு புதுக்கோட்டை சரசின் ஆட்டமும், கருப்புச்சாமியின் பாட்டும் நடிப்பும் புதுமையாகவும் உற்சாகத்தையும் கொடுத்தது.

நாடகக் கொட்டகைக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கந்தசாமிக்கு மனது ஒரு நிலையில் இல்லை. பேருக்கு நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய, கவனம் சிதறியிருந்தது.

‘எடுத்ததுக்கெல்லாம் நம்மகிட்ட கேட்ட பயலுக இப்ப எதையுமே கேட்க மாட்டேங்கிறானுங்க… பெருமாளு மட்டுமில்லாம எல்லா எளவட்டங்களும் இப்ப நம்மள மதிக்க மாட்டேங்கிறானுங்க… எல்லாத்துக்கு நீ சொன்னா சரியா இருக்கும்ன்னு நின்ன ஊரும் அவனுக பின்னாடி நிக்க ஆரம்பிச்சிருச்சுக… காரணம் என்னவாயிருக்கும்..? இல்லை குருவம்மா அடிக்கடி நம்ம தோட்டத்துக்கு வர்றதை இந்தப் பயளுக பார்த்துப்புட்டானுகளோ…? இல்ல அந்தப் பனங்குட்டிப் பிரச்சனையில மொங்காருக்கு ஒருதலைப்பட்சமா நடந்து கொண்டதால நமக்கு எதிராத் திரும்பிட்டானுங்களா..?” என அவரின் மனசுக்குள் விவாதம் நடத்திக் கொண்டிருக்கையில் நாடகத்தில் லோகிதாசன் இறந்த காட்சி வந்துவிட்டது…!

மொத்தத்தில் ஊர் தன்னை நிராகரிப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் நினைத்துப் பார்த்த ஒவ்வொன்றும் கருக்கருவா நெல்லுத்தாளை அறுப்பது போல நெஞ்சுக்குள் அறுத்தது.

லோகிதாசன் செத்த சோகத்தில் ஊரே அமைதியாக நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.

கந்தசாமி துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு எழுந்து கூட்டத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேட்டியை அவிழ்த்து உதறிக் கட்டிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானார்..

“சாமி என்ன கிளம்பிட்டீங்க…? இனித்தானே நாடகம் நல்லாயிருக்கும்” என்றார் கோவிந்தன்.

“வீட்டு வரைக்கும் போய்ட்டு வர்றேன்…” என்றார் சாமி.

நாடகத்தில் சந்திரமதி, லோகிதாசனின் பிணத்தைத் தூக்கி மடியில் கிடத்திக் கொண்டு என் சாமி என கத்திக் கதறிக் கொண்டிருக்கையில்…

கந்தசாமி போய்க் கொஞ்ச நேரத்தில் வெள்ளையம்மாளும் தூக்கம் வருதெனச் சொல்லி வீட்டிற்குக் கிளம்பினாள்.

அவள் கிளம்பிப் போனச் சிறிது நேரத்தில் ‘அய்யோ…. சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே… நா என்ன செய்வேன்..’என ஊருக்குள் இருந்து உடைத்துக் கொண்டு வெளிவந்த வெள்ளையம்மாளின் அழுகைச் சத்தம் சந்திரமதியின் அழுகைச் சத்தத்தை மிஞ்சிக் கேட்டது.

நாடக மேடையில் இருந்து பதறி எழுந்த ஊர்ச்சனம் என்னமோ ஏதோவென கந்தசாமியின் வீட்டை நோக்கி ஓடியது.

PrevPreviousதோரணமும் மாக்கோலமும்
Nextகாதல் பெருகட்டும்Next

You Might Also Like

பாண்டியன் பொற்கிழி
ஜாடை
காஃப்டா
இலக்கியன்
நேசம்
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் ஜூன் 2025
Previous Article தோரணமும் மாக்கோலமும் தோரணமும் மாக்கோலமும்
Next Article காதல் பெருகட்டும் காதல் பெருகட்டும்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

கட்டுரைகள் (14) கவிதைகள் (12) சிறுகதைகள் (46) திரைப் பார்வை (6) தொடர்கள் (9) நிகழ்ச்சிகள் (3) நேர்காணல் (6) புத்தகப் பார்வை (18) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • May 202616
  • April 20261
  • March 20261
  • February 20261
  • January 20261
  • December 202511
  • November 202515
  • October 202517
  • September 202513
  • August 202515
  • July 202517
  • June 202517
  • August 20211

பிரிவுகள்

articles (14) essays (14) Interview (6) Poems (12) Series (9) Short Stories (46) இளையராஜா (1) கட்டுரை (5) கட்டுரைகள் (14) கவிதைகள் (12) குறுங்கதை (14) கேலக்ஸி (1) சினிமா (6) சிறுகதைகள் (52) திரை விமர்சனம் (6) துபை (1) தொடர்கள் (9) நாவல் (7) நிகழ்ச்சி (3) நிஸ்வா (5) நூல் அறிமுகம் (18) நூல் வெளியீடு (2) நேர்காணல் (6) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (18) புத்தகம் (18) பேட்டி (6) மதுரை (1) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (1) விண்மீன் அக்டோபர் 2025 (17) விண்மீன் ஆகஸ்ட் 2025 (15) விண்மீன் ஏப்ரல் 2026 (1) விண்மீன் செப்டம்பர் 2025 (13) விண்மீன் ஜனவரி 2026 (1) விண்மீன் ஜுலை 2025 (17) விண்மீன் ஜூன் 2025 (17) விண்மீன் டிசம்பர் 2025 (11) விண்மீன் நவம்பர் 2025 (15) விண்மீன் மார்ச் 2026 (1) விண்மீன் மே 2026 (1) விமர்சனம் (24) வெண்பா (2)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?