உதாரணம்
கமலா ராகவேந்திரன்
ஒரு செயலை கையாள்வதற்கு முன்பே அதன் வடிவங்களை எடுத்துரைப்பதன் பெயர் உதாரணம் எனலாம். ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகப் புரிய வைப்பதற்காகச் சொல்லப்படும் ஒரு சான்று அல்லது முன்மாதிரியே உதாரணம் என அழைக்கப்படுகிறது. ஒரு கடினமான கருத்தை எளிமையாக்க நாம் ஒரு கதையையோ அல்லது நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு செயலையோ சுட்டிக்காட்டும்போது அது உதாரணமாகிறது.
இந்த உதாரணத்தின் பல வடிவங்கள் உவமை, எடுத்துக்காட்டு, நிகர், காட்சி, சாட்சி, ஆதாரம், உருவகம், ஒப்புமை, மாதிரிக்காட்டு, விளக்கக்காட்சி, நிகழ்வுக்காட்டு என்ற கோணங்களில் சூழலுக்கேற்ப வரிகளுடன் உறவாடுகின்றன.
வார்த்தைகள் சில நேரங்களில் மனதைத் தொடாமல் போகலாம். ஒரு நல்ல உதாரணம் மனதில் ஆழமாக பதிந்து விடும். பாடங்களில் பயன்படுத்தப்படும் சூத்திரங்கள் மற்றும் வழிமுறைகள் இந்த சூத்திரம் நிஜ வாழ்க்கையில் இப்படிப் பயன்படும் என்று சொல்லும் ஒரு செயல்முறைதான் உதாரணம். இது புரிதலை மேம்படுத்துகிறது.
ஒரு பொருளின் அழகையோ அல்லது குணத்தையோ விளக்க மற்றொரு பொருளோடு ஒப்பிடுவது. இந்த ஒப்பிடுதலின் நூலில் பயணமாகும் அறிவின் விளிம்பில் உதாரணத்தின் சரியான பொருளை நம்மால் உணர முடிகிறது.
சமூக மாற்றங்களும் உதாரணங்களால் தான் உருவாகின்றன. ஒரு நபர் தன்னலமின்றி செயல்பட்டால், மற்றவர்கள் அதனால் ஈர்க்கப்பட்டு அதே பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு ஒரு சிறிய உதாரணம் கூட பெரிய மாற்றத்திற்கு விதையாக அமையும்.
ஒரு சிறந்த உதாரணம் ஆயிரம் உபதேசங்களை விட மேலானது. மனிதன் சொல்லால் கற்பதை விட, செயலைப் பார்த்து கற்பதே அதிகம்.
வழி தவறும் மனதிற்கு சரியான வழிகாட்டியாக சரியான உதாரணங்கள் அமையும். அது வீட்டில் இருந்து அப்பா, அம்மா இப்படி துவங்கலாம். ஒரு குருவிடமிருந்தும் துவங்கலாம். “வார்த்தைகள் தூரத்திலிருந்து பேசும், உதாரணங்கள் இதயத்திற்கு மிக அருகில் பேசும்.”
உலகம் இன்று போற்றும் மகாத்மா காந்தி, அன்னை தெரசா, அப்துல் கலாம் போன்றவர்கள் வெறும் பேச்சால் உயர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் தங்களை ஒரு உதாரணமாக மாற்றிக்கொண்டார்கள். காந்தியடிகளின் ‘அகிம்சை’ ஒரு சொல்லாக இருந்தபோது யாரும் அதைக் கவனிக்கவில்லை; ஆனால் அவர் அதையே தன் வாழ்க்கையாக மாற்றியபோது, அது ஒரு தேசத்தையே விடுதலைக்கு இட்டுச் சென்றது.
மனிதர்கள் மட்டுமன்றி, இயற்கையும் நமக்குச் சிறந்த உதாரணங்களை வழங்குகிறது.
மரம்: கல்லெறிபவர்களுக்கும் அல்லது வெட்டி சாய்ப்பவர்களுக்கும் கனிகளைத் தந்து ‘சகிப்புத்தன்மைக்கு’ உதாரணமாகிறது.
எறும்பு: விடாமுயற்சிக்குச் சான்றாகத் திகழ்கிறது.
சூரியன்: பிரதிபலன் பாராமல் கடமையைச் செய்வதற்கு உதாரணமாகிறது.
நாம் ஒவ்வொருவரும் ஒருவருக்கு முன்மாதிரியாக இருக்கிறோம். ஒரு அண்ணன் தம்பிக்கும், ஒரு ஆசிரியர் மாணவனுக்கும், ஒரு நண்பன் இன்னொரு நண்பனுக்கும் உதாரணமாகத் திகழ்கிறான். எனவே, நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது.
வாழ்க்கைப் பயணத்தில் நாம் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழலாம், அல்லது ஒரு சிறந்த வழிகாட்டியின் நிழலில் நடக்கலாம். இரண்டுமே அழகானதுதான். வெறும் வார்த்தைகளால் ஆன கோபுரங்களை விட, அமைதியான செயல்களே உலகை அதிகம் வசீகரிக்கின்றன. நம்முடைய அன்றாடச் செயல்பாடுகள் ஒருவருக்கு மெல்லிய நம்பிக்கையைத் தந்தால் கூட, அதுவே நாம் இந்த உலகிற்கு விட்டுச் செல்லும் ஆகச்சிறந்த அடையாளமாகும்.
*


