அஞ்சலியில் அரசியல்
இறந்தவர்களுக்கான அஞ்சலிக் கட்டுரை / கவிதைகளை பிரபலங்கள்தான் எழுதுவார்கள் என்றில்லை, சாமானியர்களும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய சமூக வலைத்தளங்களினால் பிரபலங்களின் அஞ்சலிகள் பெரும்பாலானவர்களின் பார்வைக்குக் கிடைக்கின்றன.
சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் டி.ஐ.அரவிந்தன் அவர்களுக்கு எழுதிய அஞ்சலிக் கட்டுரை ஒன்று விவாதத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது. இறந்தவர் குறித்து எழுதியதில் தனக்கும் அவருக்குமான பிணக்கு குறித்தும் எழுதியிருந்தார். இறந்த ஒருவருக்கான அஞ்சலிக் கட்டுரையை எழுதும் போது அவருக்கும் தனக்குமான நட்பு குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டால் போதுமே… எதற்காக இருவருக்கும் இடையிலான வருத்தங்களையோ, பிரச்சினைகளையோ அதில் சொல்ல வேண்டும்..? அப்படிச் சொல்லித்தான் ஆகவேண்டும் என நினைத்தால் அந்த அஞ்சலிக் கட்டுரை எதற்கு..?
கிராமங்கள்ல ‘மொறப்பாடு’ என்ற ஒன்று இருக்கும். தலைமுறை கடந்தும் அது இன்றும் தொடரத்தான் செய்கிறது. அதாவது இரு குடும்பங்களுக்கு இடையே ஏதோ ஒரு பிரச்சினையில் ‘நீ இருந்தாக் கேளு’ன்னு ஏதாவது ஒரு கோவில்ல சொல்லியிருப்பாக, அதனால பேசாமல் அன்னந்தண்ணி புழங்காமல் இருப்பார்கள். அவர்கள் வீடுகளில் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் கலந்து கொண்டு கை நனைக்க மாட்டார்கள். இதெல்லாம் இரண்டு, மூன்று தலைமுறைக்கு முன்பு என்றாலும் மொறப்பாடு என்பது இன்றும் தொடரத்தான் செய்கிறது என்றாலும் இப்போது நல்லது,கெட்டதுக்குப் போய் நிற்பார்கள், உறவு முறை சொல்லிப் பேசிக் கொள்வார்கள். யாரும் எந்தப் பிரச்சினையையும் பற்றிப் பேசிக் கொள்வதில்லை. குறிப்பாக இறந்தவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரைப்பற்றி தரம் தாழ்ந்து பேசமாட்டார்கள்.
நானே பெரியவன், நான் எழுதுவதே எழுத்து, அதை எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற மமதையே பல பிரபலங்களின் அஞ்சலிக் கட்டுரைகள் / கவிதைகளில் தெரிகிறது. ஆஹா செத்த ஆளு இவருக்கிட்ட இப்படி நடந்திருக்கான் பாருன்னு வாசிக்கிறவங்க செத்தவனுக்கு அஞ்சலிங்கிறதைவிட எழுதுனவனைப் புகழனுங்கிறதுதான் இப்படியான படைப்புக்களின் நோக்கம். படிக்காதவனுக்கு இருக்கும் பண்பு கூட படிச்சவனுக்கு இருப்பதில்லை என்பதுதான் உண்மை.
எனக்குப் பிடிச்ச கட்சியே உனக்குப் பிடிக்கணும், நான் ஆதரிக்கிற கட்சிக்கு எதிரா நீ எழுதக்கூடாது, பேசக்கூடாது என்ற மனநிலையில் சில நட்புக்கள் நம்மோடு இருப்பார்கள்… அப்படியான ஆட்கள்தான் அஞ்சலி எழுதுகிறேன் எனப் புழுதியை வாரியிறைத்து அதன் வழி தன்மீது பூக்கள் விழ வேண்டும் என நினைப்பவர்கள்.
அவர் நம்மிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதைப் புதைத்து விட்டு இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தக் கற்றுக் கொள்வோம்.


