வாசிப்பும்
எழுத்தும்
‘யார் வேண்டுமானாலும் எழுதலாம்’
என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. இந்த வாசகம் ஒருமுறை எங்களது ‘கதைப்போமா’ நிகழ்வில்
எழுத்தாளர் ஜெசிலா பானு அவர்களால் மறுக்கப்பட்டது. அதெப்படி எல்லாரும் எழுத முடியும்.
நல்ல வாசிப்பனுபவம் இருந்தால்தான் எழுத முடியும் என்று சொன்னார். அதுதான் உண்மையும்
கூட. வாசிப்பே எழுத்தைச் செம்மையாக்கும்.
நாங்கள்
இந்த வருடம் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்திருந்த கதைகளில் பலர் சமூக வலைத்தளங்களில்
பகிரப்பட்ட செய்திகளை வைத்து கதை எழுதியிருந்தார்கள். இது தவறென்று சொல்லவில்லை, ஆனால்
அப்படி எழுதும் போது அந்தச் செய்தி நம் கண் முன் விரியாமல் கதையாய் விரிந்தால் இன்னும்
சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது. மேலும் வாசிப்பு அனுபவமே இல்லாமல் எழுதிய எழுத்து
என்பதை அது அப்பட்டமாக நமக்குக் காட்டியது. அப்போதுதான் ‘யார் வேண்டுமானாலும்…’ என்ற
வாசகத்தை ‘புத்தக வாசிப்பு இருக்கும் யார் வேண்டுமானாலும்…’ என்று மாற்றிக் கொள்ள
வேண்டும் எனத் தோன்றியது.
நானும்
கல்லூரி முதலாம் ஆண்டு இறுதியில் எழுத ஆரம்பித்து இப்போது வரை தொடர்கிறேன் என்றாலும்
அப்போது எழுதியதற்கும் இப்போது எழுதுவதற்கும் எனக்கு நிறைய வித்தியாசம் தெரிகிறது.
அப்போதும் புத்தக வாசிப்பு இருந்தது என்றாலும் அது வார, மாத இதழ்கள், ஐயா வீட்டிலும்,
நூலகத்திலும் இருந்தும் எடுத்துப் படிக்கும் புத்தகங்கள் என்ற நிலையில்தான் இருந்தது.
அபுதாபி வந்த சமயத்தில் உலகமும் சமூக வலைத்தளங்களுக்குள் வந்து சேர, சேர்ந்த நட்பு
வட்டமும் நிறைய, நிறைவாய்ப் படிக்கும் வாய்ப்பை அமைத்துத் தந்தது. மேலும் நிறையப் புதியவர்களைப்
படிக்கவும் வாய்த்தது. வாசிப்பு நம் எழுத்தை மாற்றும் என்பதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்.
நான்
ஊருக்குப் போகும் போது ஐயா என்னிடம் ‘நிறைய வாசிங்க… அப்பத்தான் எழுத்து இன்னும்
சிறப்பாகும்’ எனச் சொல்லி, சில எழுத்தாளர்களைக் கண்டிப்பாக வாசிக்கணும் எனச் சொல்லி
அவர்களின் புத்தகங்களைத் தருவார். இந்த இதழின் சிறப்புப் பேட்டிக்காக, ஐயாவிடம் கேள்விகள்
கேட்டபோது அவர் சொன்ன பதிலில் ‘ஒவ்வொரு மனிதனின் மனதுக்குள்ளும் ஆயிரம் ஆயிரம் அனுபவ
அலைகள் தத்தளிக்கின்றன; அவற்றுக்கு எழுத்து வடிவம் கொடுங்கள் போதும்’ என்று சொல்லியிருக்கிறார்.
அதுதான் உண்மை, என்னிடம் கூட ‘சுற்றியிருப்பவர்களை, உங்கள் ஊர் மக்களை வைத்து உங்களால்
நிறைய, நிறைவான கதைகளைத் தரமுடியும்… எழுதுங்கள்’ என்பார்.
இதைத்தான்
எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு பேட்டியில் ‘என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சினைகளே.
என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாக அமைய வேண்டியது
மனித வாழ்வின் பிரச்சினைகளே’ என்று சற்றே மாற்றிச் சொல்லியிருப்பார். இரண்டின் கருத்தும்
ஒன்றுதான். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ‘அடுத்தவரின் பாராட்டிற்காக மட்டும் ஒரு போதும்
எழுதாதீர்கள். அது போலவே எழுத ஆரம்பித்தவர்கள் எதற்காக எழுதுகிறேன், எதை எழுத விரும்புகிறேன்
என்பதைத் தானே தேடி கண்டறிய வேண்டும். விரும்புவதை எல்லாம் எழுத்தில் கொண்டு வருவது
எளிதில்லை’ என்று சொல்லியிருக்கிறார். உண்மைதான் பாராட்டுக்காகவோ, என் எழுத்து சிறப்பானது
என்ற மார்தட்டலுக்காகவோ எழுதாதீர்கள். நல்ல எழுத்து அதற்கான இடத்தை அதுவே பெற்றுக்
கொள்ளும். நாம் தள்ளிக் கொண்டு போய் நிறுத்தத் தேவையில்லை, அப்படி நிறுத்தி மகிழும்
போது அது நம்மை அந்த நிறுத்தத்திலேயே நிறுத்திவிடும். மேலும் நம் எழுத்தின் மீதான விமர்சனம்
வரும்போது ஏற்றுக் கொண்டு அதை மாற்றிக் காட்டும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
இவன் என்ன சொல்வது..? இவனுக்கு என்ன தெரியும் எனப் பகையை வளர்க்காதீர்கள். அது எழுத்தை
விழுங்கிவிடும்.
தனது
முகநூல் பக்கத்தில் ‘யாரும் கதைகள் எழுதுவதற்குச் சொல்லித் தர மாட்டார்கள். சொல்லித்
தரவும் முடியாது. நீங்கள் ஓரளவிற்கு எழுதப் பழகிக் கொண்டால் நுணுக்கங்கள் சொல்லித்
தருவார்கள்’ என்று எழுத்தாளர் நாராயணி கண்ணகி அவர்கள் சொல்லியிருந்தார்கள். உண்மைதான்,
என்னிடம் பணம் கட்டுங்கள் சொல்லித் தருகிறேன் என வகுப்புக்கள் நடத்தும் எவராலும் வாசிப்பவரை
ஈர்க்கும் எழுத்தைச் சொல்லித்தர முடியாது. உங்களின் வாசிப்பும், வாழ்வின் மீதான நேசிப்பும்
மட்டுமே அதைச் சாத்தியப்படுத்தும்.
இன்று நாம் எழுத நிறைய வாய்ப்புக்கள் இருக்கு. அதிகமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. சமூக வலைத்தள குழூமங்களில் எழுத வாய்ப்பு அமைகிறது. நாம் தொடர்ந்து எழுதலாம். போட்டிகளுக்கெல்லாம் வெற்றி பெற வேண்டும் என எழுதுவதைவிட, எனக்கு நல்லதொரு கதை எழுதும் வாய்ப்பு என்பதாய் நினைத்து எழுதலாம். வெற்றியாளர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஒருநாள் அந்த இடத்தில் நம் படைப்பும் இருக்கும் என்பது நிச்சயம். எழுதுவதை எவ்வளவு ரசித்துச் செய்கிறோமோ அதேபோல் வாசிப்பதையும் செய்ய வேண்டும். வாசிப்பே எழுத்தை மேம்படுத்தும்.


