தற்போது படித்த ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – ஜான் பெர்க்கின்ஸ் என்ற நூலிலிருந்து உங்களுடன் பகிர உண்மைகளும், என் உணர்வும் இங்கே தமிழில் தருகிறேன்.
நாம் வாழும் புவியில் வளர்ந்த நாடுகளின் (வல்லரசுகள்) பொருளாதார நிலைத்தன்மையை நீண்டகாலம் நீட்டிப்பதற்கும், பொருளாதாரத்தின் மூலங்களாக திகழும் முதலாளித்துவமும் கைக்கோர்த்துக் கொண்டதன் விளைவாக இந்த உலகம் எந்த வகையான சூழலுக்கும், இழிநிலைக்கும் தள்ளப்படும் சூழ்ச்சிக்குள் சிக்கி இருக்கிறோம் என்பது தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இயற்கை வளங்களுக்காவும், உலகின் 10% மேட்டுக்குடிகளின் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் பேரரசு எவ்வாறு கொடூரமாக திட்டமிட்டு, உலக தலைவர்களின் கொலைகள், சொந்த மண்ணுக்காக போராடுபவர்களின் தலைமறைவு, அல்லது கொலைகள், பொம்மை அரசாங்கங்கள் உருவாக்கப்படுதலும், உலக மக்களை தொடர்ந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளி, உழைப்பாளர்களாகவே வைத்து அவர்களின் உழைப்பை சுரண்டுவதையும், நாடுகளுக்கு கடன்களை கொடுத்து மீளமுடியா அடிமைத் தன்மைக்குத் தள்ளி அதன் மூலம் வளங்களைச் சுரண்டி பெரும் இலாபத்தை அடைவதைத் துல்லியமாக உலக பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் குறிக்கோளாக வைத்துக்கொண்டு செயல்படுகின்றன என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறார்.
சமூக வாழ்வியல் பண்பாடுகளின் மீது நவீனம் என்ற பெயரில் கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகளை தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தி மக்களின் வாழ்வியலை சிதைத்து, சிந்திக்க முடியாதவண்ணம் தொடர்ந்து பொருளாதாரத்தை நோக்கி மக்களை ஓட வைக்கும் சதிகளையும் தோலுரித்துக் காட்டியுள்ளார். மொத்த உலகையும் அடிமைபடுத்துவதே பேரரசின் பெரும் நோக்கமாக இருக்கிறது.
மக்களுக்கு இயற்கையாக கிடைத்துக் கொண்டிருந்த வாழ்வாதாரங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றின் கதவுகளை அடைத்து எல்லாவற்றுக்கும் விலை வைத்து விற்பதன் மூலம் கொள்ளையடிக்கும் நுட்பத்தையும், அறிவியல் வளர்ச்சி என்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளின் மூலம் மக்களை முட்டாளாக்கும் திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்ற சதிவலையையும் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். நம்மை விழிப்படைய வைக்கும் வாக்குமூலத்தை நீங்களும் படித்து நல்ல உலகம் உருவாக உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன்


