முதுகுத் தண்டு சற்றே
வளைந்ததாய் உணர்கிறேன்
நிமிராத் தலை அடையாளமாகிறது
தெருமுனையில் நிற்கும்
துரத்தப்பட்ட நாயாய்
என் மனம் வாழ்க்கையைப்
பார்த்துக் கொண்டிருக்கிறது
எத்திக்கிலும் அவமானம்
அடியெல்லாம் அடியெனும் நிலையில்
நாடித்துடிப்பை நசுக்க எண்ணுகிறேன்
கால்போன போக்கை கட்டிப் போடுகிறது
கனத்துப் பெய்யும் மழை
மரத்தடியில் அண்டி
மரணத்திற்கு வழிதேடுகிறேன்
அருகிருந்த பாறையில்
அடிக்கடி இடியிடிக்க
மரம் விட்டு பாறைக்கு நகர்கிறேன்
கேட்டதும் எது தான்
கிடைக்கும் எனக்கு
இடியும் இடம் மாறியது
நிலத்தலையிலிருந்து
மொத்தமாய் வீழ்கிறது மரம்
“தோற்றகடித்துவிடுவாயா”
மரணத்திடம் வீராப்பு பேசுகிறேன்
ராத்திரி முழுதும்
அழுது தீர்க்கும் இம்மழை
அம்மாவைவேறு நினைவூட்டுகிறது
மழையோடு இருளும் அகல
மரணக்குழி தேடியெழுகிறேன்
விழுந்த மரத்தின்
பிளந்த வேர்களருகே
கொத்தாய் முளைத்திருக்கின்றன காளான்கள்
நாற்பதடி மரத்தை முட்டித்தள்ளி
தன் வாழ்வை தொடங்கியிருப்பதாய் காட்சி தந்த
காளான்களை நின்று திரும்பிப் பார்க்கிறேன்
வெண் தேவதைகளாய் அவை என் மனதினுள்
ஏதோ ஒன்றைக் கொன்று
ஏதோ ஒன்றை உயிர்ப்பித்துக்கொண்டிருந்தன!


