தமிழ்
தமிழ் அழகான மொழியல்லவா… அதையேன்
என் பிள்ளை தமிழ் பேசமாட்டான் என அருவெறுப்பான மொழிபோல் பேசுகிறோம்..?
பிள்ளைகளுக்குத் தமிழ் பேச, வாசிக்கத் தெரியாது என்று சொல்வதை இன்று பலர் பெருமையாகச் சொல்வதை கேட்கும் போது பெருமைமிகு தமிழ் மொழி இப்போது எதை நோக்கிப் போகிறது என்ற எண்ணம் மனதில் எழுந்து வேதனைப்படுத்தும். மகாகவி பாரதி தனது ‘கன்னிப் பருவத்திலே அந்நாள்…’ என்ற கவிதையில் ‘மெல்லத் தமிழினிச் சாகும்‘ என்பதை எதற்காகச் சொன்னார் என்பது தெரியாமலேயே பலர், தமிழ் செத்தே போகும் என்று பேசுவதைப் பார்க்கும் போது சிரிக்கத்தான் தோன்றும். அதிலும் தமிழ் செத்தே போகும் எனப் பேசுபவர்களில் பலர் தங்கள் வீட்டில் தமிழ் பேசுவதே இல்லை என்பதையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
இன்றைக்கு வாசிப்பு என்பது இளைய தலைமுறையிடம் மட்டுமல்ல, பெரியவர்களிடமும் குறைந்துதான் போயிருக்கிறது. இளைய தலைமுறைக்கு தமிழ் வாசிக்கத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துவிட்டு, நாம் புத்தக வாசிப்பில் இருந்து மெல்லமெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இன்று இணையத்தில் பல
குழுமங்கள் வழி வாசிப்புப் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றாலும் புத்தகக் கண்காட்சிகளில் புத்தக விற்பனை என்பது வருடா வருடம் குறைந்து கொண்டே வருவதாகத்தான் பதிப்புத்துறையில் இருக்கும் நண்பர்கள் சொல்கிறார்கள். யாரைக் கேட்டாலும் ‘செல்போன்ல வாசிச்சிடுறேன்’ என்றோ, ‘யாருங்க வாசிச்சிக்கிட்டு இருக்கது அதுதான் கதைகளை ஆடியோவாய் இணையம் கொடுத்துடுதே அதைக் கேட்டாப்போச்சு’ என்றோ சொல்வதுதான் இப்போது அதிகமாகியிருக்கிறது. என்னதான் இருந்தாலும்புத்தகமாய் வாசிக்கும் போது கிடைக்கும் மனதிருப்தி இவற்றில்
சத்தியமாகக் கிடைக்காதுதானே.
தொன்னூறு காலகட்டங்களில் கிராமங்களில் சில வீடுகளில் நிறைய வார, மாத இதழ்கள் வாங்குவார்கள். அந்தப் புத்தகங்கள் எல்லாம் எல்லாருடைய வீட்டுக்கும் சுற்றி வரும். இப்போது கிராமங்கள் ஆட்களே இல்லாத நிலை, அதேபோல் கிராமம்,
நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் இதழ்கள் வாங்குவதும் குறைந்துவிட்டது. பெரும்பாலான அச்சு இதழ்கள் இணைய இதழ்களாகிவிட்டன. இப்படி இணைய, மின்னிதழ்கள் அதிகமாய் இருப்பதில் ஒரே ஒரு நன்மை நடந்திருக்கிறது, நடக்கிறது. ஆம்… நிறைய புதிய எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். அப்படி எழுதுபவர்களில் பலர் வாசிப்பு இல்லாமல் இருப்பதுதான் வருத்தமே. வாசித்தால் இன்னும் சிறப்பாக எழுத முடியும். எழுத்தாளர்களான நாமே வாசிக்காமல் இருக்கும் போது பிள்ளைகள் வாசிப்பதில்லை என எந்த
விதத்தில் குற்றம் சுமத்துகிறோம்..?
பிள்ளைகளை நாம் வாசிக்க வைக்க முடியும் என்பதை எங்களின் கேலக்ஸி கலை இலக்கியக் குழுமம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறது. எங்களின் மாதாந்திர ‘கதைப்போமா?’ நிகழ்வில் பெரியவர்கள் வாசித்ததை பகிர்வதைப் பார்த்து, தாங்களும் பேசுகிறோம் எனத் தானக குழந்தைகள் முன்வந்தார்கள். ஆரம்பத்தில் ஆங்கிலக் கதைகளோடுதான் வந்தார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது, இங்கு தமிழ் பயில்வதென்பது அரிதான விஷயம். ஊரில் இருப்பவர்களே என் பிள்ளை ஆங்கிலம்தான் பேசுவான் எனச் சொல்லும் போது வேறொரு நாட்டில் இருக்கும் குழந்தைகள் தாய்மொழியை தனியே கற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தால் மட்டுமே வாசிக்க முடியும் இல்லையா..?.
சரி விஷயத்துக்கு வருவோம். ஆங்கிலக் கதைகளில் ஆரம்பித்த குழந்தைகள், சில மாதங்களிலேயே தமிழ் கதைகளை வாசித்து பகிர ஆரம்பித்தார்கள். இதில் முக்கியமாகச் சொல்ல வேண்டியது எட்டு வயதுப் பையன் கதை சொல்வதைப் பார்த்து நாலு வயதுக் குழந்தை நானும் சொல்வேன் என மழலை மொழியில் சொல்லியதைத்தான். அதேபோல் இப்போதெல்லாம் எங்களின் நிகழ்வுகளில் குழந்தைகள்தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுகிறார்கள். மேலும் எங்கள் கலை
இலக்கியக் குழுமம் மற்றொருமொரு
மைல்கல்லாக குழந்தைகள் தமிழ் படிப்பதற்கான முன்னெடுப்பை எடுத்திருக்கிறது. அதற்கான
நேரம் விரைவில் வரும், அப்போது இங்குள்ள குழந்தைகள் தமிழ் பேச, எழுத, வாசிக்கச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எப்பவுமே நம்ம பிள்ளைகளை நாம் வளர்க்கும் விதத்தில்தான் அவர்கள் பயணிப்பார்கள் என்பதற்கு ஒரு சான்று, வீண்மீன் இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதும் பதினோராம் வகுப்பு மாணவி சௌம்யா இராஜாராம். நிறைய வாசிக்கிறார். இவரின் பெற்றோரும் படிப்பு இருக்கு, புத்தக வாசிப்பைக் குறை என்றெல்லாம் சொல்லாமல் நல்ல நல்ல புத்தகங்களை எல்லாம் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்கிறார்கள். அவரின் தீவிர வாசிப்பின் காரணமாக விண்மீனில் தொடர்ந்து புத்தகப்பார்வை எழுதி வருகிறார். இது மகிழ்ச்சியான விசயம்தானே. ஆரம்பத்தில் எழுதியதற்கும் இப்போது எழுதுவதற்கும் அவரின் எழுத்தில் எத்தனை வித்தியாசம் இருக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். அதுவும் சென்ற இதழில் அவர் கட்டுரையில் பயன்படுத்திய வார்த்தைகள் எல்லாம் அத்தனை சிறப்பு. மகிழ்வும் வாழ்த்துக்களும்.
‘என் பிள்ளைக்குத் தமிழ் பேசத் தெரியாது. எப்போதும் செல்லமாய் செல்போனில்தான் இருப்பான்‘ என்று சொல்வதை விடுத்து தமிழ் வாசிக்கப் பழக்காவிட்டாலும் பேசவாவது சொல்லிக் கொடுப்போம்.
நன்றி.
–பரிவை சே.குமார்.


