விண்மீன் ஆரம்பம்
வணக்கம்.
ஒரு கனவு… அதுவும் நீண்டநாள் கனவு ஒன்று நிறைவேறியிருக்கிறது. நமக்குள் எத்தனையோ கனவுகள் இருக்கும், அத்தனை கனவுகளையும் நம்மால் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதுதான் என்றாலும் சில கனவுகளை நாம் நிறைவேற்ற தூண்டுகோலாய் ஒரு உறவோ, நட்போ நாம் எதிர்பாராத நேரத்தில் நம்மோடு கைகோர்த்து, தோளோடு தோள் நிற்கும். அப்படித்தான் ஓராண்டுக்கு மேலான கேலக்ஸியின் கனவை நாம் இப்போதே நிறைவேற்றுவோம், நான் இருக்கிறேன் எனக் கைகொடுத்தார் மருத்துவர் சென்பாலன். விண்மீனைப் பிரசவித்தவர் இவர்தான்.
கடந்த இரண்டு வருடமாக பேசும் போதெல்லாம் ‘நாம ஒரு மின்னிதழ் கொண்டு வரணும் தம்பி, அதுக்கான வேலையை உடனே ஆரம்பிக்கணும்‘ என்று சொல்வார் பாலாஜி அண்ணன். அப்படி ஒரு எண்ணத்தை நிறைவேற்ற இயலாமல் வேலையும் சூழலும் ‘இந்தா… அந்தா…’ என இழுத்துக் கொண்டே சென்றது. ‘உடனே செய்வோம். நான் பார்த்துக் கொள்கிறேன்‘ என மருத்துவர் முன்நிற்க, இந்த ஒரு வாரத்துக்குள் எல்லாம் முடிவாகி, இதோ எங்கள் கேலக்ஸியின் ‘விண்மீன்‘ காலாண்டிதழ் மின்னிதழாய் மலர்ந்திருக்கிறது.
நான் எப்போதும் இந்த வருடத்தின் ‘நிறைவு விழா‘ என்று சொல்வதை விட அடுத்த ஆண்டின் ‘துவக்க விழா‘ என்று சொல்வதையே விரும்புவேன். நிறைவைவிட துவக்கம் சிறப்பாக இருந்தால் மனநிறைவு மகிழ்வாய் நமக்குக் கிடைக்கு. எங்களின் ஒவ்வொரு துவக்க விழாவிலும் புத்தக வெளியீட்டுடன் ஏதாவது ஒரு புதிய துவக்கதத்தை ஆரம்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அந்த வரிசையில் இந்த நான்காம் ஆண்டு துவக்க விழாவில் எங்களின் காலாண்டிதழ் ஆரம்பமாகிறது. இந்த ஆரம்பம் சிறப்பான ஆரம்பமாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.
விண்மீனைப் பொறுத்தவரை சாதாரண நட்சத்திரமாக பத்தோடு பதினொன்றாய் மின்னி மறையாமல், பெயர் சொல்லும் நட்சத்திரமாக, தனித்த நட்சத்திரமாக, உச்ச நட்சத்திரமாக வலம் வரச் செய்ய வேண்டும் என்பதே எங்களின் எண்ணமும் ஆசையும். ஆரம்பம் என்பது தொடர்ந்து செல்லத்தானே… நாங்களும் தொடர்ந்து பயணிப்போம். அதே சமயம் இது மின்னிதழாகத் தொடருமா அல்லது அச்சு இதழாக மாறுமா என்பதை எல்லாம் காலம் முடிவு செய்யும்.
வாசிப்புத்தான் நம்மை மேம்படுத்தும் எனபதை நாங்கள் உணர்ந்து இருப்பதால்தான் மாதாமாதம் ‘கதைப்போமோ‘ என்றொரு நிகழ்வை நடத்துகிறோம். அதேபோல் எங்கள் இதழில் எழுதும் எழுத்தாளர்கள் சிறுகதை, கவிதைகளை விட கூடுதலாய் நூல் விமர்சனம் எழுத வேண்டும் என்பதே எங்கள் ஆவா. அதனால்தான் அதிகப் பக்கங்களை நூல் விமர்சனங்களுக்கு ஒதுக்கி இருக்கிறோம். அதேபோல் ஒவ்வொரு இதழிலும் ஒரு எழுத்தாளரின் பேட்டியையும் கொண்டு வரலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. புதிது புதிதாய் வரும் இதழ்களில் செய்வோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
எங்களைப் பொறுத்தவரை முன்னணி, பிரபல, வளர்ந்த, புதிய என்ற பிரிவுகளைக் கொண்டெல்லாம் எழுத்தாளர்களைப் பார்ப்பதில்லை. எங்கள் பதிப்பகத்தில் கூட நிறையப் புதியவர்களின் புத்தகங்களையே பதிப்பித்து வருகிறோம். இன்றைக்கு எழுதும் ஒவ்வொரும் எழுத்தாளரும் எங்களுக்குப் பிரபலம்தான். ‘என் எழுத்து என்னைப் பொறுத்தவரை சிறந்ததே… அதை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் முடிவு செய்யுங்கள் அதன் தரத்தை‘ என்று சொல்லும் ஒவ்வொருவரும் முன்னணி எழுத்தாளர்தான்.
எனவே எல்லாருடைய எழுத்துக்களுக்கும் எங்களால் முடிந்த வாய்ப்பை வழங்க இருக்கிறோம்.வரும் இதழ்களில் உலகின் எந்த மூலையில் இருந்தும் எங்களுக்குப் படைப்புக்களை அனுப்பலாம். அதிகமான படைப்புக்கள் வரும்பட்சத்தில் எங்களின் தேர்வுக்குழு மூலமாகத் தேர்வு செய்து படைப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறோம். விருப்பம் இருப்பவர்கள் எங்களுக்கு உங்கள் படைப்புக்களை அனுப்பித் தரலாம்.
தொடர்ந்து பயணிப்போம்.
‘விண்மீன்‘ உச்ச நட்சத்திரமாய் வலம் வரும் என்ற நம்பிக்கையோடு…
–பரிவை சே.குமார்


