நீளிரா
–
பரிவை சே.குமார்
நீளிரா-
ஒரு
நீண்ட நெடிய இரவு.
போர் என்பது எவ்வளவு கொடுமையானது
என்பதை சமீபத்திய ட்ரோன் தாக்குல்கள் மூலம் நாம் பார்த்திருக்கிறோம். அதுபோக உலகின்
சில இடங்களில் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் மக்களையும், பசியோடு கையேந்தி நிற்கும்
குழந்தைகளையும் செய்திகளில் பார்த்துக் கடந்து போகின்றோம். எப்பவுமே பாதிப்பு என்பது
நமக்கு இல்லாதபோது நாம் அதைப் பற்றி அதிகம் யோசிப்பதுமில்லை, ரொம்ப வருந்துவதில்லை.
இலங்கையில் நடந்த போரும்,
அங்கு இந்திய ராணுவம் சென்று செய்த செயல்களும் பள்ளிக்காலத்தில் செய்திகளாக அறிந்தவைதான்.
அன்றைய போர்ச்சூழலில் அந்த மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள்..? தினம் தினம் செத்துத்
செத்து வாழும் வாழ்வு எப்படியானதாக இருந்திருக்கும்..? என்பதையெல்லாம் அந்த வயதில்
நானெல்லாம் யோசித்ததே இல்லை. ஊருக்குப் பக்கத்தில் அகதிகள் முகாம் – இப்போதும் இருக்கிறது
– வந்தபின் அந்த மக்களின் வாழ்வியல் வலிகளைக் கதைகளாய் கேட்டபோதுதான் போர் எத்தனை கொடுமையானது
என்பதை உணர முடிந்தது.
ஒரு திருமண வீட்டில் திருமணத்துக்கு
முந்தைய இரவில் மகிழ்வான நிகழ்வுகள் நடக்கலாம் ஆனால் ராணுவத்தின் பிடியில்
அந்தக் குடும்பம் இருந்தால்… ஒவ்வொரு காட்சியையும் நாம் அடுத்து என்னாகுமோ எனப் பயந்தபடி
பார்க்கும் வண்ணம் தான் பார்த்து வளர்ந்த வாழ்க்கையில் இருந்து ஒரு துளியை நம்முன்னே
‘நீளிரா’வாக விரித்திருக்கும் இயக்குநர் சோமிதரன்.
திருமணம் செய்வதற்கு இந்திய
ராணுவத்திடமும் இலங்கை ராணுவத்திடமும் அனுமதி பெற வேண்டும் என்பதே மிகக் கொடுமையான
செயல். அப்படி அனுமதி வாங்கி திருமணம் செய்ய இருக்கும் வீட்டுக்குள் வேறு ஒரு இடத்துக்குக்
செல்ல வேண்டிய சூழலில் மாறி வந்துவிடும் இந்திய ராணுவம், அவர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள்
எனத் தெரிந்து வீட்டைச் சுற்றி வளைக்கும் விடுதலைப் புலிகள் என அந்த இரவை நீண்ட நெடிய
இரவாக (நீளிரா) இறுதிவரை ஒரு பதட்டத்தோடு பார்க்கும்படி கொடுத்திருக்கிறார்கள்.
1988-ல் இலங்கையின் வடக்குப்
பகுதியில் ஒரு கிராமத்து திருமண வீட்டில் நடக்கும் கதை இது. அந்த மக்களுக்கும் புலிகளுக்குமான
உறவு படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படுகிறது. இயக்கத்துக்குப் போன மணப்பெண்ணின் அப்பா
என்ன ஆனார்…?
என்பது தெரியாமல் இருக்கும் குடும்பத்தில் பெண்ணின் தாத்தாவை வைத்துக்
கொண்டு, மனநிலை பாதிக்கப்பட்ட மூத்த பெண்ணையும், வயிற்றுப் பிள்ளைக்காரியான நாத்தனார்,
இன்னும் சிலருடன் எப்படியும் மகளின் திருமணத்தை நல்லபடியாக முடித்து விடவேண்டுமென
இரவெல்லாம் போராடும் மணப்பெண்ணின்
தாயரைப் பார்க்கும் போது அந்த மக்களின் வலி நம்மை ஏதோ பண்ணுகிறது.
இராணுவத்துக்குத் தலைமை தாங்கும்
நேர்மையான வீரராக நவீன் சந்திரா, தனது குழுவில் இருக்கும் ஒரு வீரர் எல்லை மீறும் போதெல்லாம்
பொறுமையுடன் கையாள்கிறார். படத்தின் இறுதியில் அவர் எடுக்கும் முடிவு மிகச் சிறப்பு.
அதேபோல் புலிகளின் பக்கம்
அந்தக் குழுவை வழிநடத்தும் சனத்தும், மகளின் திருமணம் பாதிக்கப்பட்டு விடக்கூடாதென
எல்லாவற்றுக்கும் தானே பதில் சொல்லிக் கொண்டு குடும்பத்தைப் பாதுகாக்கத் துடிக்கும்
குடும்பத் தலைவியாக கபிலா வேணு, படத்தில் தீடீரென பயத்தையும் பதட்டத்தையும் உண்டாக்கி
இறுதிக் காட்சிக்கு வலு சேர்க்கும் ரூபா கொடுவாயூர், மணப்பெண்ணாக மகிழ்வைச் சுமந்தாலும்
வலியையும் சேர்ந்தே சுமக்கும் சிது குமரேசன், இராணுவ வீரரிடம் தான் யார் என்பதை நீண்ட
வசனமாகப் பேசி, வலியைச் சொல்லும் பெரியவராக நமச்சிவாயம், அடாவடி இராணுவ வீரராக ரோஹித். இவர்களுடன் ‘கயல்’ வின்சென்ட், ஸ்வாதி
கிருஷ்ணன், விது, நவயுகா குகராஜா என அனைவரும் தங்களது கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
துப்பாக்கி தூக்கி சண்டை இட்டு
விளையாடும் குழந்தைகள், புலிகளைத் தேடி பொதுமக்களைத் தொந்தரவு செய்யும் இராணுவம், விஜயகாந்த்
படங்கள், டெக்கில் படம் போடும் போது இடையில் ஒளிபரப்பாகும் இயக்கக் காட்சிகள், சின்னதாய்
ஒரு காதல், இராணுவம் வீட்டின் முன்னே நிற்கிறது என்றதும் நாலைந்து சட்டைகளை
எடுத்துப் போட்டுக் கொள்ளும் பெண் பிள்ளைகள் என படம் நம்மை அன்றைய இலங்கையின் சூழலுக்குள்
இழுத்துச் செல்கிறது.
படத்தின் இறுதிக் காட்சி உண்மையில்
ரொம்பவே உறைய வைத்துவிட்டது. அந்தத் திருமணம் நம்மைக் கலங்கச் செய்கிறது. இப்படித்தானே
அந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் வலியைப் பார்த்த போது எனக்கு சுவிச்சர்லாந்தில் இருக்கும்
இலங்கையைச் சேர்ந்த நிஷா அக்கா தனது 12 வயதில் தரைமார்க்கமாய் பெரும்பாலும் நடந்தே
நாடு கடந்து வந்த கதையைச் சொன்னது ஞாபகத்தில் ஆடி வலியைக் கொடுத்தது.
செல்வரத்னம் பிரதீபனின் கேமராவும்
கேயின் பின்னணி இசையும் இரவு நேரக் காட்சிகளை நம்மை பதட்டத்துடன் பார்க்க வைக்கிறது.
ராதா ஸ்ரீதரின்
படத் தொகுப்பும், சிவாவின் இசையில் வரும் பாடலும்
படத்துக்கு மகுடம்.
கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன்
சந்தானத்தின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோவும் நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனமும்
இணைந்து தாயாரித்திருக்கிறது.
வீரப்ப வேட்டையில் தமிழக,
கர்நாடகா காவல்துறை என்ன செய்ததோ அதைத்தான் இலங்கை சென்ற இந்திய ராணுவமும் செய்தது
என்பதை வசனங்கள் வழி சொல்லிச் சென்றாலும் இந்திய ராணுவ வீரர்கள் நடந்து கொண்ட விதத்தை,
அவர்களுக்குள்ளும் மனிதாபிமானமுள்ள வீரர்கள் இருந்தார்கள் என்பதை மிகச் சிறப்பாக காட்சிவழி
கடத்தியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் இயக்குநரான
ஈழத்துப் படைப்பாளி சோமிதரன் ஒரு உண்மைக் கதையை உலகறியச் சொல்லியிருப்பதற்கு வாழ்த்துகள்.
நீளிரா மிகச் சிறப்பான படம்.


